"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Tuesday, February 27, 2007

வலைப் பதிவருக்கு சிறைத்தண்டனை


ஆமாம் - வலைப்பதிவருக்கு சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது - எகிப்து நாட்டில், ஒரு பல்கலைக் கழகம் தன் அறிவுறுத்தலையும் மீறி, அந்த மாணவன் செயல்பட்டதாகப் புகார் கொடுத்தது நீதிமன்றத்தில். அது குறித்து விசாரித்த காவல்துறை, பல மாணவர்களைக் கைது செய்து, நீதியின் முன் நிறுத்தி வைக்க, அவர்களையெல்லாம் விசாரித்த நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்தது - ஒருவரைத் தவிர.

அப்துல் கரீம் நபில் என்ற அந்த மாணவர் (22 வயது) இஸ்லாத்தையும், எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கையும் விமர்சித்து தனது வலைத்தளத்தில் எழுதி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார். அல் அசார் பல்கலைக்கழகத்தைச் சார்ந்தவர். அந்தப் பல்கலைக்கழகம் இஸ்லாமிய பல்கலைக்கழகம் ஆகும். கரீம் அமெர் என்ற பெயரிடப்பட்ட வலைத்தளத்தில் அவர் தனது பல்கலைக்கழகத்தைப் பற்றி, மோசமாக எழுதியுள்ளார். எகிப்து அதிபரின் செயல்பாடுகளையும் விமர்சித்துள்ளார். அவரை பல்கலைக்கழகத்தை விட்டு, கடந்த வருடம் வெளியேற்றி, அவர் மீது வழக்குத் தொடர வேண்டும் என்ற அந்தப் பல்கலைக்கழகம், அரசை வற்புறுத்தி வந்துள்ளது.

அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள நீதிமன்றத்தில், ஐந்து நிமிடம் வாசிக்கப்பட்ட அந்த தீர்ப்பில், இஸ்லாத்தின் மீது அவதூறு எழுதியதற்காக முன்று வருடத் தண்டனையும், அதிபரை விமர்சித்ததற்காக, ஒரு வருடமும் ஆக மொத்தம் நான்கு வருடங்கள் தண்டனை வழங்கப்பட்டார். சாதாரணமாக இவ்வகை குற்றச்சாட்டுகளுக்கு வழங்கப்படும் தண்டனையின் கால அளவு - 9 வருடங்கள். நீதிபதி தனது அறிக்கையை வாசித்த பொழுது, அமைதியாக இருந்த நபில், உடனடியாக சிறைச்சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

ஹாபிஸ் அபூ ஸாத், எகிப்து மனித உரிமை குழுவின் தலைவர், இந்த தீர்ப்பு மிகக் கடுமையானது என்று கூறியுள்ளார். என்றாலும், எகிப்து, தனது நாட்டின் வலைப்பதிவாளர்களுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கை விடுக்கும் வண்ணமாக இந்த வழக்கைக் கருதி செயல்பட்டது என்பதே உண்மை.

ஒருவர் தனது வலைப்பதிவில், தனது சொந்தக் கருத்துகளை எழுதியது குறித்த அதிருப்தி காரணமாக இத்தனை கடுமையான தண்டனை வழங்கியது தவறு என அமெரிக்காவின் செனட் உறுப்பினர் இருவர் கருத்து தெரிவித்துள்ளனர். அத்துடன் எகிப்திய தூதுவருக்கும் கடிதம் அனுப்பி உள்ளனர்.

செய்தி: The Gulf Today - Page 7 News Agency: Associated Press

வளைகுடா நாடுகளில் இருந்து வலைப்பதியும் நண்பர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். கடந்த முறை துபாய் வலைப்பதிவர்கள் சந்தித்த பொழுது, இது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்பொழுது எழுந்த ஒரு கேள்வி: இங்கு நடக்கும் நிகழ்வுகளை - அறிந்தவற்றை - தெரிந்தவற்றை - பார்த்தவற்றை அப்படியே எழுதலாமா என்று ஒரு கேள்வி முன் வைக்கப்பட்ட பொழுது, அவ்வாறு செய்யாமல் இருப்பதே நலம் என்று தான் முடிவு செய்யப்பட்டது. நான் எழுதும் செய்திகள் பெரும்பாலும், பத்திரிக்கைகளில் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பத்திரிக்கைகளில் வரும் செய்திகளே. பல்வேறு பத்திரிக்கைகளை இணையம் மூலம் படிக்க வாய்ப்பிருந்தாலும், அவையெல்லாம் வளைகுடா ஆட்சியாளர்களின் தணிக்கைக்கு உட்படுத்தப்படாததினால், அவற்றை மேற்கோள் காட்டி எழுதுவதில்லை. அவை செய்திகளாக மட்டும் தான் வாசிக்கிறேனே தவிர, அதை வைத்துக் கொண்டு, விமர்சனத்தில் இறங்குவதில்லை.

இங்கிருந்து எழுதும் நண்பர்கள் கவனத்தில் வைக்க வேண்டிய முக்கியமான விஷயமாகும். எதை வேண்டுமானாலும் எழுதுங்கள் - ஆனால், ஆட்சியாளர்களை, அல்லது ஆட்சிமுறையை விமர்சிப்பது அத்தனை நல்லதல்ல.

சரி, சரி, பின்னூட்டங்களைக் கொஞ்சம் பார்த்து எழுதுங்க. அப்புறம் வெளியிடவில்லையென்றால், கருத்து சுதந்திரம் கொடுக்க மாட்டேனென்கிறான் என்று புலம்ப வேண்டாம்.

கருத்து சுதந்திரத்தை விட, கழுத்து சுதந்திரம் மிக முக்கியமல்லவா?

எதிரியைத் தேடி...


மறைந்து கொள்ள
கிடைத்த ஒரு முதுகும்
இன்னொருவனுடையதாயிருந்தது
தற்செயல் தான்.

அந்த இன்னொரு முதுகின்
முன்புறம்
முகமேதுமற்ற
வெற்று வட்டங்களாயிருந்ததுவும்
தற்செயல் தான்

காலி பாத்திரங்களின்
குரல்களுக்கெல்லாம்
எதிரொலி வருமென்ற
நம்பிக்கை கொண்டதுவும்
தற்செயல் தான்

அநாமதேயங்களைப் புறக்கணித்து
எதிரிகளைத் தேடி
தன் தனித்த பாதையின் பயணம்
தற்செயல்களில் சிக்குண்ட
சிலரைப் போல
அவனுக்கு என்றுமே தற்செயல் அல்ல.


எத்தனை வலியவனானாலும்
எத்தனை கொடிய ஆயுதமேந்தினாலும்
முதுகிற்குப் பின் மறையாது
முகத்திற்கு நேராய் நிற்கும்
எதிரியைத் தான் பிடிக்கிறது
தன் அடையாளங்களுடன்
நேராக நிற்பதால்

எதிரியைக் கண்டு கொள்வது
என்றுமே நிகழ்வதில்லை
தற்செயலாய்.

Sunday, February 25, 2007

மைக்கேல் ஜாக்ஸன் முஸ்லிமாகிறார்?


மைக்கெல் ஜாக்ஸன் வெகு விரைவில் இஸ்லாத்தில் இணைவார் என அவரது சகோதரர் ஜெர்மய்ன் ஜாக்ஸன் ஒரு பிரிட்டிஷ் இஸ்லாமிய செய்தித் தாளில் அறிவித்துள்ளார். இதைப் பற்றிய செய்தி, இன்று கலீஜ் டைம்ஸிலும் வெளியாகியுள்ளது.

தன்னைப் பின்பற்றி, தனது சகோதரனும் தனது நம்பிக்கைகளை மாற்றிக் கொள்வார் என கூறியுள்ள அவர், தனது ஹஜ் கடமைகளை முடித்து விட்டு, திரும்புகையில் தனது சகோதரனுக்காக நிறைய இஸ்லாமிய புத்தகங்களை வாங்கி வந்ததாகவும், அவர் இஸ்லாம் மதம் பற்றி தன்னிடம் நிறைய கேள்விகள் கேட்டதாகவும், தான் அதற்கு இஸ்லாம் அமைதியான, அழகிய மார்க்கம் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

புத்தகங்கள் அனைத்தையும் வாசித்து விட்ட மைக்கேல் ஜாக்ஸன், அமைதியையும், மன வலிமையையும் தரக்கூடிய வழியைக் கண்டு கொண்ட தன் சகோதரனைக் குறித்துப் பெருமையடைந்ததாக சகோதரர் ஜெர்மய்ன் ஜாக்ஸன் (52) கூறினார். 'வெகு விரைவில் அவர் இஸ்லாத்தில் இணையக் கூடும்" என்ற ஜெர்மய்ன், மைக்கேல் இஸ்லாத்தில் இணைந்தால், தானும் அவரும் சேர்ந்து இவ்வுலகில் பெரும் மாற்றங்களைத் தோற்றுவிக்க முடியும் என்றார்.

'மைக்கேலால் நிறையச் செய்ய முடியும். நான் முயற்சிப்பதைப் போல். நான், மைக்கேல் ஜாக்ஸன், மற்றும் இறைவனின் வார்த்தைகளால் நிறையச் செய்ய முடியும்.' என்கிறார் ஜெர்மய்ன். 1989ல் தன்னை இணைத்துக் கொண்ட, ஜெர்மய்ன், சமீபத்தில் நடைபெற்ற Big Brother Celebrityயில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் - அதாவது ஷில்பா ஷெட்டிக்கு அடுத்த இடம். இன துவேஷத்திற்கு ஷில்பா ஆளான பொழுது, அவருக்கு ஆதரவாக இருந்து, நண்பனானவர்.

பல வழக்குகளில் சிக்கி மன அமைதி இழந்து, நிம்மதியின்றி தவித்தவர் - ஜாக்ஸன்.

செய்தியின் சுட்டி.
http://news.yahoo.com/s/afp/20070222/ennew_afp/afpentertainmentislam_070222184705
The Khaleej Times, 25-2-07.

செய்தியைப் படித்ததும் மற்றவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அமெரிக்காவிலிருந்து வெளியான பின்பு அவர் பஹ்ரைன் வந்தார். அங்கேயே பெரும்பகுதியைக் கழித்தவர். அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளிலெல்லாம் விடுபட்டாலும் இன்னமும் புதிது புதிதாக ஏதாவது ஒரு காரணத்தைக் கொண்டு, வழக்குகள் வந்த வண்ணம் தான் இருக்கின்றன. இப்பொழுது கூட, அவர் மீதும், ஒரு மருத்துவ மனை மீதும் வழக்குகள் போடப்பட்டுள்ளது. காரணம் - அவர் காய்ச்சலுடன் உடல் நலமின்றி வந்த பொழுது, ஒரு நோயாளிப் பெண்மணியை அகற்றி விட்டு, அவருக்கு அந்த இடத்தைத் தந்தார்கள். அந்தப் பெண்மணி, சிறிது நேரத்தில் இறந்து விட்டார். அவர் சாவிற்கு ஜாக்ஸன் தான் காரணம் என்று ஒரு வழக்கு.

ஒரு மனிதனை எத்தனை தூரம் ஒரு சமூகம் சின்னாபின்னா படுத்த முடியும் என்பதற்கு மைக்கேல் ஜாக்ஸன் ஒரு உதாரணம். மன அமைதியைக் குலைத்து, தங்கள் சுயலாபத்திற்காக எதையும் செய்யத் தயாராகி விட்ட ஒரு சமூகத்தின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள, அவர் தேர்வு செய்து கொண்ட பாதை: இஸ்லாம்.

வலுக்கட்டாயமான கருத்துத் திணிப்பினால், அவர் தன் வழியை மாற்றிக் கொள்ளவில்லை. மாறாக முற்றிலும் அறிந்து, பின் தன்னை இணைத்துக் கொள்ள விரும்புகிறார். அவர் அவ்வாறு தன்னை இணைத்துக் கொள்வாரானால், இஸ்லாம் அவரை வரவேற்கும். அவருக்கு அமைதியை வழங்கும்.

புலம்புபவர்கள் புலம்பித் திரியட்டும்.

இஸ்லாம் அமைதியாக தன்னை வளர்த்துக் கொண்டேயிருக்கும்.

Friday, February 23, 2007

கலைப்படங்கள் : At Five in the Afternoon

சமீபத்தில் ஆசிப் மீரான் எழுதிய கலைப்படங்கள் மீதான பார்வை என்ற பதிவு தந்த தாக்கம் தான் இது.

இது வரையிலும், நான் தாக்கம் பெற்று எழுதிய பதிவுகளை எல்லாம், எல்லோருமே ஒரு மிரட்சியோடு தான் படித்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன். ஆனால், இது அதிலிருந்து மாறுபட்ட ஒரு பதிவாக இருக்கும்.

கலைப்படங்களைப் பற்றிய என்னுடைய கண்ணோட்டம் இப்பதிவு.

முதலில் கலைப்படங்கள் என்ற வகைப்படுத்தலையே தவறு என்று சொல்ல வேண்டும். எவரும் கலைப்படம் எடுக்கிறோம் என்ற எண்ணத்துடன் திரைப்படம் எடுப்பதில்லை. முதல் போட்டு முதல் எடுப்பவர்களே தங்கள் படங்களைப் பற்றிய ஒரு ஜம்பத்தையும் பிம்பத்தையும் வளர்க்க தங்கள் படைப்புகளைப் பற்றிய முன்முடிவுகளை, அறிவிக்கிறார்கள்.

ஆனால் மற்றவர்கள் தாங்கள் நம்பும் விஷயங்களைப் படமாக்குகிறோம் என்ற நம்பிக்கையில் மட்டுமே, அது வரையிலும் நடைமுறையில் இருந்த திரை மசாலாக்களை ஒதுக்கி விட்டு, இயல்பான படங்களை எடுக்கின்றனர். அந்த இயல்புத் தன்மையே அவற்றை மற்ற படங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. அவற்றை என்னவென்று சொல்லி அழைப்பது என்ற சிக்கலுக்குள் நுழையும் பொழுது தான் அவற்றை கலைப்படங்கள் என்று கூறத்தொடங்கினோம்.

திரைப்படம் என்பதே ஒரு கலைவடிவமாக இருக்கையில், தீவிரமான ஈடுபாட்டுடன் செய்யப்படும் படங்களைக் கண்டு மிரண்டு போன திரைத்துறை வியாபாரிகள், பொழுதுபோக்கை மட்டுமே விரும்பும் மக்களிடத்தில் தங்கள் படங்களை மிக எளிதாக எடுத்துச் செல்ல, அவற்றை வேறுபடுத்திக் காட்ட, உண்மையான படைப்புகளை கலைப்படங்கள் என்று பெயரிட்டு, வேறுபடுத்தத் தொடங்கினார்கள். பொழுது போக்க மட்டுமே திரைப்படங்களுக்கு செல்லும் மக்கள் அதிகரித்ததும், இந்த இயல்பான படைப்புகள், ஒதுக்கப்பட, போலிகள் முன்னணிக்கு வந்து விட்டது நமது துரதிர்ஷ்டமே.

அது போகட்டும், என்னிடம் உள்ள திரைப்பட சேகரிப்பில் இருந்து உங்களுக்காக ஒரு படம் -

At Five in the Afternoon.



இது பிரபலமான ஸ்பானிஷ் கவிஞர் எழுதிய ஒரு கவிதையில் வரும் வரி. ஃபெடரிகோ கார்சியா லோர்கா என்பவர் எழுதியது. இந்தக் கவிதைக்கு இந்த திரைப்படத்திலும் ஒரு மிக முக்கியமான பாத்திரம் உண்டு. அதை பின்னர் பார்ப்போம்.

முதலில் படத்தின் கதை:

தாலிபான்கள் ஆட்சி முடிவுற்று, பாகிஸ்தானிலிருந்து தாயகம் திரும்பும் ஆஃப்கானிஸ்தானிய அகதிகள் தான் இந்தப் படத்தின் கதைக்களம்.

சிதிலமடைந்த கட்டிடங்களுக்கு நடுவே தங்க இடம் கிடைப்பதில் போட்டியில் தொடங்கி, சிறு சிறு சச்சரவுகளுடன், தொல்லை மிகுந்த அந்த துரதிஷ்ட வாழ்க்கையை மக்கள் எதிர்கொள்ளும் விதத்தைப் பின்னணியாக வைத்துக் கொண்டு, ஆஃப்கானிஸ்தானின் அதிபராக வேண்டும் என்ற கனவுகளுடன் தன் கல்வியைத் தொடரும் ஒரு பெண், அவளது பழமைவாத தந்தை, காணாமல் போன தன் சகோதரனைத் தேடிக் கொண்டே இருக்கும் அவனது மனைவி, இத்துடன் வருங்கால ஆஃபானிஸ்தான் அதிபரைக் காதலிக்கும் ஒரு கவிஞன் என்ற அகதிகளான இவர்களளுடன் கை கோர்த்து கொண்டு, கதையும் நடக்கிறது. அவர்கள் மூலமாக பெண்களின் நிலையை, குறியீடுகள் மூலம் நமக்குப் புரிய வைக்க முயல்கிறது கதை.


நோக்ரா - கதை நாயகி. ஆஃகானிஸ்தானத்தின் அதிபராக வரவேண்டும் என்ற தீராத ஆசையை உள்ளுக்குள் வளர்த்துக் கொள்கிறாள். அவள் பள்ளியில் நடக்கும் ஒரு சிறு விவாதத்தில் கவனம் பெற்று, அந்த ஆசை உண்டானது. தீவிரவாதத்தை எதிர்த்து அழிக்க வேண்டுமென்றால், ஒரு பெண்ணே அதிபராக வேண்டும் என்ற கருத்தை உதிர்க்கும் மினா என்ற அவள் வயதையொத்த பெண், நோக்ராவின் கண் முன்னே, சாலையில் என்றோ புதைத்து வைக்கப்பட்ட கண்ணி வெடிகுண்டில் அடிபட்டு இறந்து போகிறாள். அதைக் காணும் நோக்ரா இன்னும் உறுதி கொள்கிறாள்.

அவள் தந்தைக்கோ வாழ்க்கையில் உள்ள ஒரே பிடிப்பு, தொலைந்து போன தன் மகனைத் தேடிக் கண்டுபிடித்து தன் மருமகள் கையில் ஒப்படைக்க வேண்டும். தொழில்: குதிரை வண்டியோட்டுவது. முகத்திரை அணியாத பெண்களை வண்டியில் ஏற்ற மாட்டார். தவறிப் போய் பார்த்து விட்டாளோ, இறைவனிடம் அதற்காக மன்னிப்பு கோருவார். மற்றொரு கவலை: தங்குவதற்கு - குளிரிலிருந்து தப்புவதற்கு இடம் பார்ப்பது. ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு போட்டி வந்து விடுகிறது. முதலில் தங்கி இருந்த ஒரு இடத்தில், அவரது மகளே, அகதிகளாக வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க அவர்களால் அவளது சிதிலமடைந்த கட்டிட வீடும் ஆக்கிரமிக்கப்பட, அமைதியாக தொழுவதற்கும், பெண்களை மறைவாகப் பாதுகாக்கவும் வீடு தேடி அலைவதே மீதி நேரத்தில் அவருக்கு இருக்கும் பணி.

இந்த எளிமையான கதையில் வரும் ஒரு அசாத்தியாமான குறியீடு - தூய வெள்ளை நிறத்தையுடைய குதிங்கால் உயர்ந்த காலணி. The high heel shoe. அதை அணிவதற்கு தந்தையிடமிருந்து தடை. புதுமையை ஏற்க மறுக்கும் தந்தையின் கண்களிலிருந்து மறைத்து வைத்திருக்கிறாள். தந்தை இல்லாத இடங்களில் அதை எடுத்து அணிந்து, தன் அதிபர் ஆசையின் கனவுகளைச் சுமந்த படி, கம்பீரமாக நடக்கிறாள். பெண்கள் எழுச்சி பெற வேண்டும் என்பதற்கான குறியீடாகவே, அந்த காலணி படத்தில் உயிர் பெறுகிறது. அதே சமயம் பழமைவாதியான ஆண்கள் முன்னால், அது மறைக்கப்படுகிறது. அதுவே அந்தக் கதையின் மையக் கருத்தும். பெண்கள் கல்வி பெறுகின்றனர் என்பதை உணர்த்த செய்தித் தாள் வாசிப்பவளாகக் காட்சி அமைக்கப்படுகிறது. அதுவும் பழமைவாதிகளின் கண்களுக்குத் தெரியாமல் இரவின் தனிமையில் மறைத்து மறைத்து வாசிக்கப்படுகிறது.

மற்றுமொரு குறியீடு, அவளது குடை. அதிபராகும் எண்ணம் வரும்பொழுதெல்லாம், அந்தக் குடை விரிகிறது. தலையைச் சுற்றிய ஒரு ஒளிவட்டம் போல அதை உயர்த்திப் பிடித்துக் கொண்டு, உறுதியுடன் வீரநடை நடக்கிறாள். குடை தரும் பாதுகாப்பிற்காக, அதை உயர்த்திப் பிடிக்க முனைவதும் அவளது அதிபராகும் ஆசையின் நோக்கத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது. எல்லோருக்கும் பாதுகாப்பு, எல்லோருக்கும் ஆதரவு...
இத்தகைய குணங்கள் கொண்ட, இவளை அகதியாகத் திரும்பும் ஒருவன் நேசிக்கிறான். காதலைக் குறித்தான வசனங்கள் எதுவும் கிடையாது - ஊர் பழிச்சொல் பேசுமே என்ற கவலையை அவள் சொல்வது தான் காதலைக் குறிக்கிறது. தவிர தந்தையின் பழமைவாதம் அவளுக்குத் திரையிடுகிறது. அவன் அவளுக்கு செய்தித்தாள் சேகரித்து கொடுக்கிறான். ஒரு பிரஞ்ச் படை வீரனுடன் அவள் பேசும்பொழுது, அவளுக்கு மொழி பெயர்ப்பவனாகும் அவன், தன் மூன்று சகோதரர்களை யுத்தத்தில் இழந்தவன் - ஒருவன் ரஷ்யாவிற்கு, மற்றவன் அமெரிக்காவிற்கு, இன்னுமொருவன் தாலிபான்களுக்கு. அந்நிய சக்திகளால் ஆஃப்கானிஸ்தான் எப்படி சீரழிந்தது என்பதை எளிதாக, ஒரு அங்கத உணர்வோடு சொல்லி, அதனால் தான் யுத்தத்தைக் கைவிட்டு கவிஞனாகிவிட்டேன் என்று கூறுகிறான். அவர்கள் போகுமிடமெல்லாம் அவனும் இடம் பெயர்கிறான். அவளோ தன் தந்தைக்கு அஞ்சுகிறாள். அவனோ, அவளுக்கு பிரபலமான ஸ்பானிஷ் கவிதை ஒன்றை வாசித்துக் காட்டுகிறான்.

At five in the afternoon,
It was exactly five in the afternoon
The rest was death and death alone
With sweet mists, and deep shores
Which will carry away the bull’s body
The bull does not know you,
Nor the fig tree, nor the horses
Nor the ants in your house
Because you have died forever
Ah, That terrible five in the afternoon!
It was five by all the clocks, it was
Five in the shade of the afternoon

(இந்தக் கவிதை மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது. இந்தக் கவிதையை எழுதிய கவிஞனைப் பற்றிய முழுமையான தகவலைப் படிக்க விரும்புபவர்கள் எஸ்.ராம்கிருஷ்ணன் எழுதிய விழித்திருப்பவனின் இரவு என்ற புத்தகத்தைப் படியுங்கள்: லோர்கா எனும் ஜிப்ஸி பக்கம் 101.)

படம் உச்ச கட்டத்தை நோக்கி நகர்கிறது - காணாமல் போன தன் மகன் இறந்து விட்டான் என்ற செய்தியைக் கேட்டு - இங்கு தான் படத்தின் கவித்துவமான காட்சி வருகிறது - மிகப்பழமைவாதியான அந்த தந்தை, தன் மருமகளிடமிருந்து அந்தச் செய்தியை மறைக்கிறார். அவரால் சொல்ல முடியவில்லை. அந்தப் பெண்ணை ஒரு விதவையாக மாற்ற விரும்பவில்லை. அதனால், அவள் என்றென்றும் கணவனைத் தேடுபவளாக இருக்கட்டும் என்று விஷயத்தை தன்னுள்ளே புதைத்து மறைக்கிறார்.

செய்தியைப் புதைத்து விட்டாலும், மனம் ஓலமிடுகிறது. தனிமையில் தன் குதிரையிடம் புலம்புகிறார்.




'உனக்குப் புல்லைத் தவிர,
எவற்றையும் அறியும்
ஞானமில்லையென்றாலும்
துணை இறந்த அன்று
உதிர்த்தாயே ஒரு கேவல்
அதைக் கூட செய்ய இயலவில்லை
என்னால்
இனி என்றென்றுமே
அத்தகைய ஒரு கேவலை
உதிர்த்துவிடாதே என் முன்னால்...'

(வசனத்தைக் கவிதையாக மாற்றியது நான்)

தந்தையின் புலம்பலை மறைந்து இருந்து கேட்கும் நோக்ராவிற்கு புரிகிறது. என்றாலும் அவளும் மௌனம் காக்கிறாள் தன் தந்தையினுள் மாற்றத்தை விளைவித்த மௌனத்தைப் பங்கிட்டவளாய்.

இந்த ஊரில் இருந்தால், யாராவது அவளிடம் செய்தி சொல்லி விடுவார்களோ என்று பயந்து, மீண்டும் இடம் பெயர முடிவெடுக்கிறார் - அந்த ஊரை விட்டு நிரந்தரமாக. அவரின் பழமைவாதம் மொத்தமாக அமிழ்ந்து போக, புது மனிதனாக தன்னையுமறியாமலே உருவெடுக்கிறார்.

பயணத்தின் ஊடே, தன் மகனின் ஒரே குழந்தை குளிரினால் மிகவும் நோயுற்று விட,
ஒரே சிகிச்சையாக தன் குதிரை வண்டியை தீ வைத்து, குளிர் நீக்க முயல்கிறார். நாளைய பிழைப்புக்கு வழி? - அதை நாளை பார்ப்போம். இப்பொழுது குழந்தையைக் காப்போம். பற்றி எரிகிறது குதிரை வண்டி.

மறுநாள் பகல் முழுவதும் பாலைவனத்தில் நடக்கிறார்கள். இறந்து கொண்டிருக்கும் ஒரு கழுதைக்கு அருகே ஒரு வயதான மனிதன் அமர்ந்து கொண்டிருக்கிறான். இவர்களைப் பார்த்ததும் அவன் வழி கேட்கிறான் காந்தகாருக்குப் போக. கையிலிருக்கும் குழந்தையும் இறந்து விடுகிறது. தண்ணீர் எடுத்து வர இரு பெண்களையும் அனுப்பி விட்டு, இறந்த குழந்தையைப் புதைக்க குழி தோண்டிக் கொண்டே, அவனிடம் பேச்சுக் கொடுக்க, அவன் காந்தாகாருக்கு சென்று, முல்லா உமரை சந்திக்க வேண்டும் - அறிவு மிக்க மனிதர்களை எல்லாம் அவர் அழைத்திருக்கிறார். பின்லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டுமா இல்லையா என்பதைப் பற்றி கருத்தறிய. அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு ஈமான் உள்ள முஸ்லிமை என்றுமே அமெரிக்காவிடம் ஒப்படைக்கக் கூடாது என்று அவரிடம் சொல்லத் தான் போகிறேன் என்கிறான்.

'போ, முட்டாளே, காந்தகாருக்கு அல்ல, உன் ஊருக்கு. அமெரிக்கர்கள் ஏற்கனவே வந்தாகிவிட்டது. திரும்பி போ' என்று ஆத்திரத்துடன் பதிலுரைக்கிறார். That summarizes the change from a fundamentalist to a liberated man - the Afghan man.

தண்ணீர் எடுக்கச் செல்லும் நோக்ராவோ, இரவில் ரகசியமாக தான் வாசித்து வந்த தன் காதலனின் கவிதையை இப்பொழுது வாய்விட்டே பொல்கிறாள். அவளுக்குத் தெரியும் - இனி தன் தந்தை ஒரு பழமைவாதி அல்ல. தன் காதலுக்குத் தடை இல்லை என்று.

புதிய நம்பிக்கைகளை விதைக்கிறது படம்.

பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால், தவற விடாதீர்கள்.


இனி வாசிக்கப் பொறுமையிருந்தால், தொடருங்கள்:

இந்தப் படம் இரண்டு விருதுகளைப் பெற்றிருக்கிறது

1. Golden Peacock International Film Festival of India.
2. Prix Du Jury - Cannes Film Festival

படத்தை இயக்கிவர் : ஸமீரா மக்மல்பாஃப். அவரது தந்தை - மொஹ்சென் மக்மல்பாஃப். ஈரானைச் சேர்ந்தவர்கள்.

ஸமீரா இயக்கிய மற்ற படங்கள்:

1. The Apple
2. Blackboards

தந்தை இயக்கிய பிரபலமான படம் : Kandahar

Film Credits



Director Samira Makhmalbaf


Screenplay S. Makhmalbaf, M. Makhmalbaf
Photo
Editing Mohsen Makhmalbaf
Decor
Music Mohamad Reza Darvishi
Cast Agheleh Rezaie Abdolgani Yousefrazi Razi Mohebi Marzieh Amiri

படத்தின் முன்னோட்ட காட்சிகள் சிலவற்றிற்கு:

http://www.filmfestivals.com/cgi-bin/fest_content/festivals.pl?debug=&channelbar=&fest=cannes2003&partner=&page=films&year=2003&lang=en&film_id=6901

Tuesday, February 20, 2007

இந்த வார நட்சத்திர வலைப்பதிவருக்கு ஒரு வேண்டுகோள்

வஜ்ரா,

// நண்பன் இந்த ஹோலோகாஸ்டையே குப்பைத் தொட்டியில் போடவேண்டும் என்று பதிவு போட்டு இந்த ஹோலோகாஸ்டை மறுபரிசீலணைக்கு உட்படுத்த வேண்டுகிறார்.

என்னைப் பொருத்தவரை, அவர் பதில் சொல்லவேண்டிய கேள்வி ஒன்றை ஒரு அனானி கேட்டு அது அப்படியே இருக்கிறது, அது ஹோலோகாஸ்ட் நடந்து அதில் ஆறு மில்லியன் (யூத) மனித உயிர்கள் பலியானதாகக் கூறப்படுவதை அவர் ஏற்கிறாரா ? என்பது தான்.

ஆம் என்றால் மறு பேச்சு, இல்லை என்றால் மறு பேச்சில்லை.

நடுவில் சென்று இல்லை, அதைத் தான் ஆராய்ச்சி செய்யனும் என்பது என்று ஜல்லியடிப்புகள் இருக்கக் கூடாது.
//

நீங்கள் குறிப்பிட்ட அநாநி, மூசா என்று நினைக்கிறேன். முன்பு அநாநிகளை உள்ளேயே விட அனுமதிப்பதில்லை என்று ஒரு நியதி வைத்திருந்தேன். ஆனால், ஒரு சில நண்பர்கள், 'உங்கள் பதிவில் பின்னூட்டமிட்டால், எங்களுக்கும் முத்திரை குத்திவிடுவார்கள். அதனால், எங்களையும் கொஞ்சம் அநாநியாக அனுமதியுங்கள்' என்ற வேண்டுகோளின் பேரில் தான் இந்த அனுமதியே.

நிற்க, நான் மூசா என்பவருக்குப் பதிலிறுக்கவில்லை என்ற வார்த்தைகளை மறுக்கிறேன். அவருக்குப் பதில் சொல்லி இருக்கிறேன். அவர் ஹோலோகாஸ்ட் விவாதத்திற்கு எங்குமே தடை விதிக்கப்படவில்லை என்று தடாலடியான ஒரு வாக்கியத்தை சொல்லி விட்டு, பிறகு தான் யூதர்கள் கொல்லப்பட்டார்களா என்ற கேள்வியை வைக்கிறார்.

அதனால் தான் அவரிடத்தில் சொன்னேன் - முதலில் அடிப்படை சங்கதிகளைத் தெரிந்து கொண்டு வாருங்கள். பிறகு பேசுவோம் என்றேன். ஹோலோகாஸ்ட் மறு ஆய்விற்கு சில நாடுகளில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிவர். ஏன், அவர் உங்கள் பதிவையோ அல்லது அதற்கு முந்தைய எனது பதிவையோ வாசித்து விட்டு வந்திருந்தாலே இந்த உண்மை புரிந்திருக்கும். கொஞ்சம் கூட home work செய்யாமல், ஏனோ தானோ என்று எகத்தாளம் செய்யும் நபர்களிடத்தில் என்னால் உரையாட முடியாது.

மேலும், நீங்கள் அவரை அநாநி என்று குறிப்பிடுகிறீர்கள். ஆனால் நான் அவரை அவ்வாறு கருதவில்லை. நான் அவரை ஒரு போலி என்று தான் கருதுகிறேன். அதனால் தான் அவரிடத்தில் பதில் அளிக்கும் முதல் வாக்கியத்திலே தெளிவு படுத்தி விட்டேன் - ஒரு பெயரை தாங்கியதால், ஏதோ ஒரு அந்தஸ்து வந்து விடும் என்பதல்ல என்று சொன்னேன்.

சில சமயங்களில் நண்பர்களுக்கு குறிப்பால் தான் உணர்த்த வேண்டும். அதே ரீதியில் அவருக்கு ஒரு எச்சரிக்கையும் வைத்தேன் - இது நீங்கள் வாந்தி எடுக்கும் இடமும் அல்ல என்று. அதை அந்த நபர் புரிந்து கொண்டதினால் தான் மேற்கொண்டு எதுவும் பதில் சொல்லவில்லை.

ஒரு போலியுடன் உரையாடி என் மதிப்பை நான் தாழ்த்திக் கொள்ள முடியாது. ஏதோ ஒரு சிலருக்குத் தான் போலியால் தொந்தரவு இருக்கிறது என்று எவரும் எண்ணிவிடக்கூடாது. எனக்கும் அநாமதேயங்களால் தொல்லைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை நான் பொருட்படுத்துவதில்லை. பிரஸ்தாபிப்பதில்லை. வெளியில் சொல்வதில்லை. என்னைத் தாக்குகிறார்கள் என்று சொல்லி ஒப்பாரி வைப்பதில்லை. அதை கொண்டு, மற்றவர்களின் பரிதாபத்தைச் சம்பாதித்து, என் இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள முயற்சிப்பதில்லை.

போலிகளுக்கு எடுக்கும் அரிப்பை சொறிந்து விட நான் தயாராக இல்லை. இதை குறித்து யாரும் என்னிடம் கேள்வி கேட்க முடியாது. இயல்பாக உரையாடும் சக வலைப்பதிவர்களுடன் - அவர்கள் என் கருத்து நிலைக்கு எத்தனை கோணத்திற்கு அப்பால் நின்றாலும் என்னால் உரையாட முடியும். என்னிடத்தில் எந்த மனத்தடைகளும் இல்லை. ஆனால் ஒரு போலியுடன் மன்றாடிக் கொண்டு உரையாடி, அவர்களது இருப்பை நியாயப்படுத்த முடியாது.

நீங்கள் எவ்வாறு, ஒரு போலிக்கு நான் பதில் சொல்லவில்லை என்பதை ஒரு வாதமாக வைக்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. இந்த கேள்வியில் பெரிதான பிரச்சினைகள் இல்லை. இத்தகைய ஒரு சாதாராண கேள்வியை நேரிட்டு முன் வைக்கவே தயக்கம் காட்டுபவர்களிடத்தில், போலிகளிடத்தில் எனக்கு எந்த பரிதாபமும் கிடையாது.

என்னுடைய இந்த நிலைபாட்டை நீங்கள் ஆதரிக்காவிட்டாலும் மதிப்பீர்கள் என்று எண்ணுகிறேன். மற்றபடிக்கு என்னைப் பொறுத்தவரைக்கும் போலிகள் என்பவர்கள் 'part of the occupational hazard' அவர்களை அப்படி புறந்தள்ளிவிட்டுத் தான் நான் இங்கு இயங்கிக் கொண்டிருக்கிறேன்.

அந்தக் கேள்விக்கு உங்களுக்குப் பதில் வேண்டுமா, கண்டிப்பாகத் தருகிறேன் - அதை நீங்களே ஒரு பின்னூட்டமாக வையுங்கள். கேட்கப்படாத கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அதனால், கேளுங்கள் - எந்த நிபந்தனையுமின்றி. I will not accept any precondition for any dialogues.


இத்துடன், ஒரு சிறு வேண்டுகோள் - இதற்கு முன்னர் நட்சத்திரப் பதிவர்களாக இருந்தவர்களில் பெரும்பாலோர் ஒன்று அல்லது இரண்டு பதிவுகளாவது தங்களைப் பற்றிய உள்ளார்ந்த விமர்சனத்திற்கும், ஒரு சுய தேடுதலுக்கும், உட்படுத்தி பதிவுகள் இட்டிருக்கிறார்கள். அதுபோல, நீங்களும் ஒரு பதிவாவது உங்களை ஒரு சுயவிமர்சனத்திற்கு உட்படுத்திக் கொண்டு கேட்டுப் பாருங்கள் - ஒரு போலிக்கு ஏன் பதில் சொல்லவில்லை என்று நண்பனைக் கேட்டது சரிதானா என்று.

Sunday, February 18, 2007

கவிதைத் தருணங்கள்....

வருண் காந்தி எழுதிய இந்தக் கவிதை, அவருடைய The Otherness of Self என்ற அவருடைய முதல் கவிதைத் தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டது. மிக நேர்த்தியாக செய்யப்பட்ட அந்த புத்தக வடிவமைப்பில், பெருமளவில் ஆக்கிரமித்திருப்பது அடர்ந்த கறுப்பு அல்லது சாம்பல் வண்ணங்கள் தான். தனிமை, மரணம் பற்றிய சிந்தனைகள் மிகுந்த கவிதைகளுக்கு, துயரத்தின் சாயல்களைக் கொடுக்கின்றது இந்த கறுப்பு அல்லது சாம்பல் வண்ணங்கள்.

தன்னை நேரு குடும்ப பாரம்பரியக்காரன் என்று சொல்லிக் கொள்ளாமல், ஒரு மாணவன் என்று மட்டுமே அறிமுகப்படுத்திக் கொள்கிறார். நான்கே வரிகள். மற்றபடி எந்த குறிப்புகளும் இல்லாமல், பெரும் பிரபலங்களின் வாழ்த்தொலிகள் இல்லாமல், இயல்பான ஒரு கவிதைத் தொகுதியாக வெளிக் கொண்டு வந்திருக்கும் இந்த கவிதைத் தொகுதியின் மற்றுமொரு சிறப்பு - ஓவியங்கள். அஞ்சோலி இளா மேனோன், மஞ்சித் பாவா, மனு பரேக், ஹுஸைன் இவர்களின் ஓவியத்திற்கு இடையில் நடக்கிற கவிதைகளுள் என்னைக் கவர்ந்த கவிதை ஒன்று கீழே:





மனநல காப்பகங்களும்
மருத்துவ மனைகளும்
இன்று சற்றேனும் மதிக்கப்பட்டன.


எனக்கு,
அவைகள் தாம் யதார்த்தங்கள்.


இசையின் அடிநாதமாய் ஒலிக்கும்
யதார்த்தங்கள்......

வலுவில் அமரச் செய்து
அருந்திச் சுவைக்கச் செய்யும்
யதார்த்தங்கள்......

நாளை
எனக்கு நினைவூட்டுகிறது -
இன்று எத்தனை இனிய நாள் என்று.

இப்பொழுது,
சிறிதாக தூரவிலகி ஓடும்
அல்லது வலிதாக விரைந்தருகே வரும்
பொருட்களைக் காட்டும் எனது கண்கள்,
என்மீது காட்சிகளை
அசுர வேகத்தில் மோத விடுகின்றன.

தாமரை இலை நீராக
தத்தளிக்கும் காட்சிகள்
என்னைத் தாமதப்படுத்துகிறது -
என் கவிதைக்கு கரு
என்ணுள்ளில் கலந்து போவதை.

எனக்குத் தான் தெரியவில்லை -
என்னைக் கவிஞனாக்கியது,
அமர்ந்து சிந்திக்க வைத்த
அந்தத் தருணங்கள் தானே தவிர
சிந்தனையில் தோன்றிய எண்ணங்கள் அல்ல,

Thursday, February 15, 2007

ஹோலோகாஸ்ட் - குப்பைத் தொட்டியில்..

வஜ்ரா, டோண்டு, ரவி இவர்கள் தங்களுக்குள்ளாகவே சிலாகித்து பேசிக் கொண்ட, ஹோலோகாஸ்ட் என்ற அறிமுகத்தை ஏற்கனவே படித்தாகி விட்டது. ஆனால், அவர்களால், அதை விளங்கிக் கொள்ளத் தான் முடியவில்லை. என்றாலும் அவர்களது உரையாடலில் உருப்படியாக வெளிப்பட்ட ஒரு விஷயம் - ஹிட்லர் ஒரு அயோக்கியன், கொடுங்கோலன், கொலைகாரன்.

மிக்க நன்றி.

இதைத் தானே நானும் எதிர்பார்த்தேன். குஜராத்தில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் இதே ஹிட்லருக்குத் தான் கூட்டமாகக் கூடி பஜன் பாடினர் என்பது பத்திரிக்கைகளில் வந்த செய்தி. ஒரு இஸ்லாமியனை எதிர்க்க வேண்டும் என்பதற்காக, தங்களது அபிமான அமைப்பு பஜன் பாடி வாழ்த்திய ஹிட்லரை எதிர்த்து இத்தனை வெளிப்படையாக கருத்து வெளியிட்டிருப்பது மிகவும் சிறந்த பண்பாடல்லவா?

அதை பாராட்டத் தான் வேண்டும்.

இவர்கள் தங்கள் பதிவின் ஒரு நகலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அதை குஜராத் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு அனுப்பி வைத்து அத்துடன் அவர்கள் செயலுக்கும் ஒரு கண்டன அறிக்கையும் கூடவே அனுப்பி வைத்தால் இன்னமும் அவர்களைப் பாராட்டுவேன். அத்துடன் நாஜிக்களின் சின்னமான ஸ்வதிக்காவை தடை செய்ய ஜெர்மன் எடுத்த முயற்சிகளுக்கு எதிராக கூக்குரலிடும் - இந்த neo-nazi அமைப்புகளுக்கும் ஒரு நகல் அனுப்பி வையுங்கள்.

மேலும் வஜரா கூறுகிறார் - // சில ஐரோப்பா நாடுகளிலும் பெரும்பான்மை இஸ்லாமிய நாடுகளிலும் படு தீவிரப் பிரச்சாரம் செய்யப் பட்டு கடைபிடிக்கப் படுகின்றது. ஐரோப்பிய கூட்டு நாடுகளில் சட்டப்படி தடை செய்யப் பட்டது இந்த புதிய நாஜிக் கொள்கையும் (neo-nazism) மற்றும் அதன் வளர்ப்பு மகனான ஹோலோகாஸ்ட் மறுப்பும்.//

ஒரு திருத்தம் வஜ்ராவின் செய்தியில் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் முழுவதிலும் இது தடை செய்யப்படவில்லை. இதற்காக இன்னமும் ஜெர்மானிய நாடு போராடிக் கொண்டு இருக்கின்றது என்பது தான் உண்மை. இத்தாலி இத்தகைய தடை ஏற்படுத்துவதற்கு மறுத்து விட்டது. வன்முறை அல்லது கலவரத்தை தூண்டும் விதத்தில்லோ அல்லது பிற இனத்தவரின் மீது வெறுப்பு ஏற்படுத்தும் வகையில் எழுதினாலோ, பேசினாலோ தண்டனை வழங்கப்படும். அதாவது, ஹோலோகாஸ்ட் பற்றி பேசுவது விவாதிப்பது இதெல்லாம் தண்டனைக்குரியது அல்ல. ஆராய்ச்சியாளர்களுக்குத் தடை இல்லை. பொறுப்பற்ற தன்மையில் எழுதுவதற்கு மட்டுமே தடை. ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய தண்டனை. ஆனால் ஒரு வரலாற்று நிகழ்வை ஏன் முற்றிலுமாக மூடி மறைக்க வேண்டும்? எதன் காரணமாக? இந்த கேள்விக்கு வஜ்ராவால் மட்டுமல்ல, யாராலும் பதில் சொல்ல முடியாது.

இந்த உலகத்தை இன்று இயக்கிக் கொண்டிருப்பது - post modernism - இந்த உலகில் எதுவுமே புனிதப் பிம்பம் அல்ல, எல்லாமே ஒரு மறுபார்வைக்குட்பட வேண்டியதிருக்கிறது. என்ற தத்துவத்தை முன்வைத்ததோடு மட்டுமல்ல, பல மரபுகளை உடைத்தெறிந்து ஒரு மறுபார்வையில் அவைகளைப் புறந்தள்ளியிருக்கிறது.

இந்த மரபுடைப்புக்கு மதங்கள் அதன் நபிமார்கள், புனித வேதங்கள் என்று அனைத்தும் உட்படுத்தப்பட்டிருக்கின்றது. மனித மகான்களின் வாழ்க்கையை மறுபரிசீலனைக்குட்படுத்தி இருக்கிறது.

மகாத்மா என்று புகழப்பட்ட காந்தியை அவர் பேரனே மறுபரிசீலனைக்குட்படுத்தி, அவருள்ளிருந்த மனித ஆசாபாசங்களை வெளிப்படுத்தி இருக்கிறார். ராஜ்மோஹன் காந்தி கொடுத்த ஒரு பேட்டியில், என் தாத்தா ஒரு மாகாத்மா என்பதை விட, அவர் ஒரு மனிதர் என்பதை நிறுவவே முயற்சித்திருக்கிறேன் என்கிறார்.

இந்தியாவின் துயரமான 1947 பிரிவினையைப் பற்றி பேசவோ அல்லது எழுதவோ ஏதேனும் தடை உண்டா? இல்லை! இன்னமும் அதைப்பற்றிய நினைவுகள், கவிதைகள், கதைகள் எழுதப்படுகின்றன. பேசப்படுகின்றன. அன்றைய உணர்ச்சிவசப்படுதலின்றி, இன்று பெரும்பாலான மனக்காயங்கள் ஆறிவிட்ட பின்பு, அவை புதிய ஒளியில் பார்க்கப்படுகின்றன.

இந்த உலகின் நிகழ்ந்த ஒவ்வொரு சம்பவத்தின் மீதுமான புரிதலும், கருத்தாக்கங்களும், காலகாலத்திற்கும் மறுபரிசீலனை செய்யப்படுகின்றன. இந்த உலகின் ஒவ்வொரு புனிதங்களும் தன்னை சோதனைக்குள்ளாக்கி வெற்றி பெற்ற பின்னரே நிலைத்திருக்கிறது. ஆனால், இந்த ஹோலோகாஸ்ட் என்பது மாத்திரம் அப்படியென்ன புனிதத்திற்கும் அப்பாற்பட்ட புனிதம். விவாதத்திலிருந்தும் விலக்கப்பட்டும், தடை செய்யப்பட்டும் பாதுகாக்கப்பட்டு போற்றப்பட வேண்டிய அவசியம்?

இந்த கேள்வியைக் கேட்டுத் தான் அந்தப் பதிவும். சரியாக வாசித்தவர்களுக்குப் புரிந்திருக்கும். எப்பொழுதுமே காக்காப் பார்வையுடன் காரியங்களைப் பார்த்து பேசுபவர்களுக்கு அது புரிந்திராது. இதே கேள்வியை ரவி ஸ்ரீனிவாஸ் மற்றொரு பதிவில் என்னிடம் வைத்த பொழுது அவருக்கு சொன்ன பதில் இதோ கீழே:

ரவியின் வார்த்தைகள் //you deny the genocide of Jews and you talk of history. If you have some respect for history and truth, you would not have denied the holocaust. //

எனது பதில்:

// Ravi Srinivasji,

Thanks for affording your time to read and make a comment.

You know, any human would always have a tendency to divert the topic of the discussion, when they find the subject matter too hot to handle.

And your comment was one such.

But alas, see, I do not have any intention to let you hijack this post from its intended course of discussion.

You talk about history.

Before that, why not let me raise a question to you - whether you do really have the required comprehensive capability to understand and assimilate the subject matter written under Holocaust?

Historians of American and European origins wrote the subject matter and I had provided the names of all those books by them.

The article clearly stated that the Holocaust to be debated and should not be construed as a matter of patriotism by those countries, which had imposed a ban on discussion.

The ban is an oppression and violation of the fundamental rights of a human being and such a law exists in the most civilised world of Europe and America - not in any other third world countries.

I closed that article with a statement that if not publicized by the Iranian President, I too would have considered that it’s true - without even questioning the veracity of the claim by the democrats in so many countries. Now it is the responsibilty of those countries and their historians to prove that the Holocaust had really happened. Proove again. Or consider the evidences and re-open the debate.

Secondly, since you opened the issue - I say this for your information and knowledge since you seemed to have short supply of those things - I do not need to exonerate Hitler.

There is no purpose to that as far as I am concerned.

Hitler had claimed that he was the purest of all the Aryans and had more rights to live than any other human in the world. He was as good any of the present day Parpanism thinkers / intellectuals / supporters and I am fully aware of this when I was writing that the Holocaust to be reviewed - to give Hitler the justice, if he was innocent.

I do not know, whats your stand with respect to Hitler - but, I know, the RSS and Associates sang hymns in favour of Hitler in Gujarat. (ஹிட்லருக்கு தரவாக குஜராத்தில் பஜனை பாடியவர்கள் தான்ஆர் எஸ் எஸ் இயக்கத்தினர். )

It is not in my agenda to protect Hitler. (May be RSS)

If injustice had been imposed on Hitler, because he lost the war, then every just human had the right to get the historic facts corrected and Hitler be given the justice. Europeans and Americans wrote most of the letters to 7 Days Newspaper, expressing wonder and shock on the ban on the discussion.

I am a human being!!! You?

Any further discussion and clarification on this subject would be entertained only under the article and not elsewhere.

My Sincere Thanks to :

பாக்கிஸ்தானை நோக்கிய ஒரு பயணம் - சமுத்ராக்களுடன். //


குறுகிய நோக்கத்துடன் வாசிப்பவர்கள் - ஒரு விவாதத்தின் முழுவீச்சையும் அறியாமலே, பேசிவிடுகின்றனர். பாவம்.

ஹோலோகாஸ்ட் நடந்தது, நடக்கவில்லை என்பதைப் பற்றிய கவலை எனக்கில்லை. ஆனால், அதை காரணம் காட்டி, ஹிட்லரின் பாவகாரியத்தின் புண்ணியத்தை பாலஸ்தீன மக்களின் தலையில் கட்டி, இல்லாத ஒரு தேசத்தை, தாங்கள் வெற்றி பெற்று விட்ட ஒரே காரணத்திற்காக, உருவாக்கி, நிரந்தரமாக இந்த உலகை தீராத தலைவலிக்குட்பட்த்தினார்களே, அவர்களைத் தான் இன்று கேட்க வேண்டும் - எந்த வகையில் இது நியாயம் என்று.?

குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறார் வஜ்ரா. தானே எல்லாம் என்ற தொனியில். ஆனால், அவருக்கு நன்றாகத் தெரியும், குப்பை மேட்டில் வரலாற்றைப் புதைத்து விட்டு, தாங்களே ஆதிகுடிகள் என்று சொல்லிக் கொண்டவர்களின் வழித்தோன்றல்கள் தாம் என்பது. அத்தகைய மனிதர்களிடத்திலிருந்து எந்த நியாயத்தை விவாதிக்க முடியும்? - இயல்பாகவே குப்பைத் தொட்டியில் தான் அவர்கள் வரலாற்றை மறைத்து வைக்க முயற்சிப்பார்கள்!!!

Monday, February 12, 2007

பர்ஸானியா - எழுதப்படாத தடை

திடமான நம்பிக்கைகளின் வழியாக படைக்கப்படும் திரை வடிவங்கள் மிகவும் குறைவு நமது நாட்டில். வேறு வழியில்லாது பார்த்து தொலைக்க வேண்டிய நிலையில் தான் இந்தியாவின் பல திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கிறது. இடுப்பசைவுகளுக்கும், மார்பு குலுக்கல்களுக்கும் நடுவில், வெகு அபூர்வமாய் ஒரு சில நல்ல திரைப்படங்கள் வந்து விடும் பொழுது, பெரும்பாலும் அவை சிக்கலில் போய் சிக்கிக் கொள்கின்றன. அந்த வரிசையில் புதிதாக சேர்ந்திருக்கும் திரைப்படம் - பர்ஸானியா.

குஜராத்தில், அரசினால் அல்லாமல், திரை அரங்கு உரிமையாளர்களால் மறுக்கப்பட்டிருக்கிறது திரையிடப்படுவதற்கு. அதற்கு காரணமாக திரை அரங்கு உரிமையாளர்கள் கூறுவது - மீண்டும் பழைய ஞாபகங்களைக் கிளறி விடும் வகையில் அமைந்த திரைப்படத்தை வெளியிட விரும்பவில்லை என்று.

பர்ஸானியாவின் கதை - ஒரு உண்மைச் சம்பவம். மோடி குடும்பத்தைச் சார்ந்த சிறுவன், கலவரத்தின் போது கடத்தப்பட்டு பின்னர் காணாமல் போய்விடுகிறான். (இந்த மோடி குடும்பத்தினருக்கும், குஜராத் முதல்வர் மோடிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.) குஜராத் கலவரத்தின் பின்னணியில், இந்தக் கதையை அமைத்து, ஆங்கிலத்தில் படமாக்கி வெளியிட்டிருக்கிறார் - ராகுல் தொலாக்கியா.

தணிக்கை குழு படத்தை வெளியிட ஒப்புதல் கொடுத்து விட்டார்கள். ஆனால், இந்தியாவில் அதிகாரப்பூர்வமற்ற தணிக்கைக் குழுவினர் பலர் இயங்குகின்றனர் என்பது எல்லோருக்கும் தான் தெரியுமே. அத்தகைய வடிவத்தில் ஒன்று தான் இப்பொழுது 'திரும்பிப் பார்க்க விரும்பவில்லை' என்ற வடிவத்தில், நேரிடையாகவோ, மறைமுகமாகவோ திரையரங்கு உரிமையாளர்களைக் கொண்டே மறுப்பு வரச் செய்துள்ளனர்.

தான் சார்ந்த நம்பிக்கைகளின் மீது கொண்டுள்ள உறுதியான நிலைபாட்டின் வழியாக படைப்புகளை உருவாக்கம் செய்வது குறைந்து வருகிறது. வாழ்க்கை சரிதம் என்ற பெயரில், லஞ்ச லாவண்யங்களை, வன்முறைகளை பீடத்தில் ஏற்றி வைக்கும் வகையில் திரைக்கதை வடிவமைத்து, திரைப்படத்தை உருவாக்கி வெளியிட்டு விட்டு, பின்னர் இது கற்பனைக்கதை என்று கூறிக் கொண்டே, பின்னணியில், பத்திரிக்கை சமுதாயத்தின் துணைகொண்டு, இது இன்னாரின் கதை என்று வதந்தி கிளப்பி, தன் வியாபாரத்தை சரிவர கவனித்துக் கொள்ளும் படைப்பாளிகளே இன்று பெருகி வருகின்றனர்.

சமூக நிகழ்வுகளை விமர்சன கண்ணோட்டத்தில் வித்தியாசாமான கோணத்தில் பார்க்கும் திரைப் படங்களை வெளி வர அனுமதிக்காததன் மூலம் - ஒரு சிறு கும்பல், தன்னை அதிகாரத்தை நிலை நிறுத்தம் செய்யும் சக்தியாகக் காட்டிக் கொள்கிறது. இவர்கள் மூலமே - நாம் நம் கலாச்சாரத்தை, பண்பாட்டை படைப்பு வடிவத்தில் கண்டடைய வேண்டும் என்னும் பொழுது, இந்தப் பண்பாட்டின் மீது படிந்துள்ள தூசுகளை கசடுகளை விமர்சிக்க - களைய முயற்சி எடுக்கும் எந்தக் கலைஞனும் இந்த சிறு கும்பலின் தயவை நாடி நிற்க வேண்டும் - தங்கள் எண்ணுபவற்றை சொல்வதற்குக் கூட. நல்ல திரைப்படங்களைத் தேடியலையும் குறைந்த எண்ணிக்கையளவே உள்ள இந்திய ரசிகர்களின் பாடு தான் திண்டாட்டம்.

எப்பொழுதும் பெண்களின் உடைகளைக் களைவதிலே, நாம் படைப்பாளிகள் காலந்தள்ள வேண்டியது தான் - துச்சாதனர்கள் போல, இந்தக் கலாச்சாரப் பாதுகாப்பு கும்பலின் முழு ஆதரவோடு.

சிந்திப்பது மட்டும் தான் இவர்களைப் பாதிக்கிறது. மற்ற எதுவுமல்ல.

Thursday, February 01, 2007

சண்டை போடலாம் வாங்க....


சண்டை போடலாம், வாங்க..


சும்மாவாச்சும் இல்லீங்க, காசுக்குத் தான்.

ஆட்டோ பிடிச்சு, காசு கொடுத்து ஆளை அடிச்சிட்டு வரச்சொல்வாங்கல்லீயா, அது மாதிரி தான் இதுவும். ஆட்டோ அடியாள் மீதாச்சும் காவல்துறை வழக்கு போடும் - ஆள் அகப்பட்டாலும், படாவிட்டாலும்.

ஆனால், இங்கே அப்படியில்லை.

கூலிப்படையா போறவன் பிடிபடறதுக்கு வாய்ப்பே இல்லை. என்ன, கொஞ்சம் - கொஞ்சமோண்டு செத்துப் போகறதுக்கு வாய்ப்புண்டு. அந்த probability ரொம்ப ரொம்ப கம்மி. மாசத்துக்கு 1:33,000 தான். சாகாமல் பிழைத்துக் கொண்டாச்சுன்னு வச்சுக்கிட்டா - உங்களுக்கு கொடுக்கப்படும் கூலில, நம்மூர் பணத்துக்கு கோடீஸ்வரனாகி விடலாம்.

ஆமாம். சண்டை போட தயாராகிச்சுன்னா ஒரு நாள் சம்பளம் எத்தனை தெரியுமா? $1000!!! ஆமாம் ஒரு நாளைக்கு ஆயிரம் டாலர். அப்புறம், நம்மூர் மாதிரி வீச்சரிவாள், வேல்கம்பு இதெல்லாம் ஆயுதங்கள் இல்லை. இவையெல்லாம் வைச்சுக்கிட்டா, ஆட்களை நெருங்கி மோத வேண்டி வரும். உங்களை எளிதா போட்டுத் தள்ளிடுவாங்க. இவங்க கொடுக்கறதெல்லாம் - எந்திர துப்பாக்கி வகையறாக்கள். தள்ளி நின்னுகிட்டு, சும்மா சுட்டுத்தள்ள - போட்டுத் தள்ள வேண்டியது தான்.

உங்களுக்கு விருப்பமா?

அப்படியானால், நீங்கள் அணுக வேண்டிய இடம் :

திருவாளர். G.W.புஷ், பிரசிடெண்ட், வாஷிங்க்டன், அமெரிக்கா.







சொந்த நாட்டுப் படையை (Official military) அனுப்பி, மனுஷன் நொந்து நூலாகி கெடக்கிறார். இருக்கிற அமைப்புகள்லாம் போராட வேற ஆரம்பிச்சிட்டாங்க. அதனால், யுத்தத்தையே மனுஷன் காண்ட்ராக்ட்ல விட்ருக்கார். செத்துப் போறவன் கணக்கில வரமாட்டான். சும்மாங்காட்டியும் கொடி பிடிக்கற கொஞ்ச நஞ்ச தேசவிரோதிகளுங்களுக்கு பதில் சொல்ல வேண்டாம். கூலிப்படையா போனவன் செத்தா, தனியார் சவமா திரும்ப வர வேண்டியது தான். அதிகாரபூர்வமா, சாவு ரொம்ப குறைச்சல் தான். பாருங்க, நம் படையோட சேதாரம் கம்மின்னு மார் தட்டிக்கலாமே!


சரிங்க, புஷ் இத்தனை கில்லாடியா? மக்காச்சே! எப்படி இந்த மாதிரி யோசனைல்லாம் பண்றாருன்னு யோசிக்கிறீங்களா - அது வந்து, அவரோட தேர்தல் பொருளாதாரத்தைக் கவனிச்சிக்கற எரிக் பிரின்ஸ்-ன்ற கோடீஸ்வரரின் மூளைதான் இது. (புஷ்ட்ட இல்லாதது).


இந்த பிரின்ஸ் இருக்காரே, அவரு, ஒரு ராணுவத் தொழிற்சாலை வச்சிருக்கார் - தளவாடங்கள் செய்யும் தொழிற்சாலை இல்ல, ஆட்களைப் பிடித்துப் பயிற்சி கொடுத்து, அண்டை அயல் தேசங்கள்ல கூலிப்படையா சண்டை போட அனுப்பி வைக்கத் தான். முதல் பரிசோதனை - இராக். பாவம், இராக், பரிசோதனைக் கூடத்து எலியாய் முழிச்சிக்கிட்டு இருக்குது. அப்புறம் குவைத், ஆ•ப்கான்லாம் கூட இந்த கூலிப்படை இருக்காம். கூலிகளை எதிர்த்து கூலிகள் - சண்டை போட. சபாஷ், சரியான போட்டி (யுத்தம்..) அப்புறம் என்ன பெரிய முக்கல் முனகல் வேண்டி கெடக்கு, தீவிரவாதத்தை எதித்துன்னு சொல்லிக்கிட்டு ?

இதெல்லாம், அமெரிக்க மக்களோட முதுகுக்குப் பின்னாடியா நடக்கற கூத்து. ஆனாலும் எப்படியாச்சும் ஒருநாள் சொல்லத்தானே வேணும் - அதனால்ல, ‘State of the Union’ பேச்சுல இதப்பத்தி ஒரு கோடு போட்டுக் காட்டிருக்கார் - ‘Civilian Reserve Corps’ன்னு ஒண்ணு உண்டாக்கணும்னு. அதோட நோக்கமா அவரு சொல்றது - அந்நிய தேசத்தில இருக்கற அதிகாரபூர்வ துருப்பிற்கு துணையா இருக்கும்னு சப்பைக் கட்டு. இந்த கூலிப்படையாட்கள் சிறப்பு துறையில் பயிற்சி எடுத்துக்கிட்ட பொதுஜனம் என்கிறார். ( hire civilians with critical skills to serve on missions abroad when America needs them )

கொஞ்ச காலத்துக்கு முன்ன அறிமுகமாயி, இன்னைக்கு ரொம்ப பிரபலமாகிப்போன வார்த்தை - outsourcing business. அதுக்கே அப்ப எல்லாரும் பெரும் கூப்பாடு போட்டாங்க. ஆனால், இப்போ, யுத்தத்தையே, அவுட்சோர்ஸாக்கிட்டாங்க அமெரிக்கக்காரங்க. ஏன் யாரும் கூப்பாடு போடலை?

இந்த கூலிப்படை நிறுவனத்தின் பெயர் - பிளாக்வாட்டர் யு.எஸ்.ஏ. (Blackwater USA.) இத விட சிறப்பா பேர் வைக்க முடியாது. என்ன ஒரு கறுத்த சிந்தனை? இராக்ல்ல இருக்கற கறுப்புத் தண்ணீ கூலிப்படையின் எண்ணிக்கை எத்தன தெரியுமா? 100,000. ஆமாம், அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ ராணுவத்துக்கு அதிகப்படியா, தோழன் பிளேய்ர் ராணுவத்தை விடவும், மத்த யூரோ படைகள விடவும், அதிகமா, ரெண்டாவது எடத்துல இருக்கறது - இந்த கூலிப்படை தானாம்.

இந்த கூலிப்படைக்கு தலைமை? யாரும் கிடையாது - தாந்தோன்றித்தனமான படை. சட்டபூர்வமான நடைமுறைகள் எதுவும் கிடையாது. இவர்கள் ஒரு எதிரியைக் கொன்றால் - அது யுத்த தர்ம விதிகளில் வராது. மத்தபடி அது படுகொலை. உம், எந்த மக்களை ஒரு கொடுங்கோலனிடமிருந்து விடுவிக்கிறோம்னு பந்தா காட்னாங்களோ, அதே மக்களைக் கொல்வதற்கு கூலிப்படையை அனுப்பி வைக்குது - ஒரு அரசாங்கமே! அதுவும் மனித உரிமையின் உச்சமே நாங்கன்னு கோஷம் போட்டுக்கிட்டே!!!
போதாக்குறைக்கு காண்ட்ராக்ட் விட்டதுல்ல, காசு கைமாறிய குற்றச்சாட்டுக்கு விசாரணை வேற தொடங்கியாச்சு..

ஏதோ, தீவிரவாதம் தீவிரவாதம்னு கத்துனாங்களே, பின்னே இது என்னவாம்?

அமெரிக்கன்னா புனிதப் பசு. மத்தவங்கன்னா, demons. இந்த கறுப்புத் தண்ணீ மனுஷங்க, நாளைக்கு அமெரிக்க மக்களுக்கே போக்கு காட்ட மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்.?

These crooks and thugs, thus developed as mercenaries are a Frankenstein monster in the making.

The American public should CRY FOUL now - to shun this evil.

இதுவரையிலும், நமக்குப் பாட புத்தகங்களில் சொல்லித்தருவாங்க - நாகரீகத்தின் தொட்டில் - சிந்து சமவெளி நாகரீகம், நைல் நதி பள்ளத்தாக்கு நாகரீகம், சுமேரிய நாகரீகம்னு. ஆனால், ஒரு நாட்டை அல்லது இடத்தக் கூட இதுவரைக்கும் - அநாகரீகத்தின் தொட்டில்னு சுட்டிக் காட்டி, சொல்லித் தந்ததில்ல.

வருங்காலத்தில, இதுவும் நடக்கலாம் - அமெரிக்கா, இருபத்தோராம் நூற்றாண்டில் அநாகரீகத்தின் தொட்டிலாக விளங்கியது என்று.
தூக்கிலிட்டபோதும் தலை தொங்காது செத்துப் போனவர்களைப் பார்த்தோம். கழுத்தில் கயிறு மாட்டாமலே தலை தொங்கி விட்டது இந்த அமெரிக்கன்களுக்கு. இந்தத் தலை நிமிர வேண்டுமானால், please stand up and CRY FOUL now.

ஆண்டவன் காப்பத்தட்டும் இவர்களை, ஆமீன்.

கொசுறு:

From Gulf News dated January 29, 2007 - page 22

From high dollar fraud to conspiracy to bribery and bid rigging, Army investigators have opened up 50 criminal probes involving battlefield contractors in the war in Iraq and the US fight against terrorism. Senior contracting officials, government employees, residents of other countries and in some cases United States military personnel have been implicated in millions of dollars of fraud allegations.

And from

“Bush’s mercenaries in Iraq” article from Los Angeles Times - Washington Post via Gulf News.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்