"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Sunday, January 29, 2006

வை.கோ.வின் நண்பருடன் ஒரு சந்திப்பு.

வை.கோ.வின் நண்பருடன் ஒரு சந்திப்பு.

இந்த வருடம் துபாயில் நிகழ்ந்த எதிர்பாராத சோகத்தினால், மிகவும் பாதிக்கப்பட்டது துவக்கு இலக்கிய அமைப்பின் வழியாகவும், தாய்மண் வாசகர் வட்டம் சார்பாகவும் ஏற்பாடு செய்திருந்த பல நிகழ்வுகள் தான்.

விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் அவர்கள் வருவதாக இருந்த ஜனவரி 6ம் தேதிக்கு இரண்டு தினங்கள் முன்பாக துபாயின் ஆட்சியாளர் மரணமடைந்து விட, அவர் வருகை தள்ளிப் போய்விட்டது - பிப்ருவரி 24ம் தேதிக்கு.

அடுத்து கவிஞர், பாடலாசிரியர் நா.முத்துகுமார் அவர்களின் திட்டமிட்ட வருகையையும் தள்ளிப் போட வேண்டியதாயிற்று. அவரது சமீபத்திய மூன்று நூல்கள் மற்றும் கவிதைக்காக அண்ணன் அறிவுமதியால் தொடங்கப்பெற்ற ‘தை’ கவிதை இதழையும் துபாயில் அறிமுகப் படுத்தி வெளியிடும் விழாவும் பிப்ருவரி இறுதிக்கு தள்ளிப் போட வேண்டியதாயிற்று.

இவ்வாறு சோர்வு தரும் வண்ணமாக அமைந்து விட்ட இந்த ஜனவரியை வெறும் நண்பர்கள் கூடிப் பேசியும், எங்களது கவிதைகளை வாசித்து திருத்தி அச்சுக்குத் தயார் செய்து கொண்டும் மட்டுமே காலத்தைப் போக்கிக் கொண்டிருந்த பொழுது, கடந்த வாரம் ஒரு தொலைபேசி.

பேசியவர் - திரு. வ.மா.குலேந்திரன் அவர்கள். இவரை இங்கிலாந்தில் அகதிகளாக குடியேற்ற உரிமைக்காகப் போராடும் இலங்கைத் தமிழர்கள் அதிகமாக அறிந்திருக்கக் கூடும் - ஒரு வழக்கறிஞராக.

அந்த வழக்குரைக்கும் தொழிலுக்குப் பின் அவருக்கென ஒரு இலக்கிய முகமும் உண்டு என்று எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புண்டா என்று தெரியவில்லை.

அவர், சென்ற முறை துபாய் வந்த பொழுது, அவருக்கு ஒரு சிறிய வரவேற்பு அளித்திருந்தோம். அதன் பின் அவர் நண்பர் இசாக்குடன் தொடர்பு வைத்திருந்தார். எப்பொழுது வந்தாலும் எங்களை சந்தியாது செல்லக் கூடாது என்று கட்டளை இட்டிருந்தோம் என்றே சொல்ல வேண்டும்.

அவர், இந்தியா வந்து, நெடுமாறன், சுபவீ, வைகோ அவர்களை சந்தித்து விட்டு, பின்னர் லண்டன் செல்லும் வழியில், துபாயில் எங்களைச் சந்திப்பதற்காக நான்கு நாட்கள் பயணத்தில் விடுப்பு விட்டிருந்தார். அவர், அவரது துணைவியார், மற்றும் மாமியார் ஆகியவர்களுடன் வந்திருந்தார்.

துக்கம் அனுஷ்டிப்பின் போது, விழாவாக கொண்டாட கூடாதென்பதால், ஒரு கலந்துரையாடல் அமர்வாக அந்த நிகழ்ச்சியை அமைத்தோம். அவர் தங்கி இருந்த விடுதியில் இருந்து நண்பர் தமிழன்பு அவர்களை அழைத்து வந்தார் தெய்ராவிற்கு.

தமிழ் உணவகத்தின் மாடியில் அமர்ந்து அவரது கவிதைத் தொகுதியைப் பற்றிய ஆய்வாகத் தொடங்கினோம் அண்ணன் செ.ரா.பட்டணம் மணி அவர்கள் தலைமையில்.

அவரது அகராதி கவிதைகள் என்ற குறுங்கவிதைகளிலிருந்து நண்பர்கள் குழாமின் ஒவ்வொருவரும் வாசித்து தங்கள் எண்ணங்களை வெளியிட்டனர்.

சில கவிதைகள் மிக விரிவான விவாதத்திற்கு இட்டு சென்றன என்றால் மிகையாகாது. சில எளிய கவிதைகள் சிந்தனைக்கு மிகப் பெரிய சவாலாகவும் இருந்தது.

கீழ்க்கண்ட ஒரு கவிதையைப் பாருங்கள்:

கருணாநிதி.

தமிழும் பணம் சேர்க்கும்
அமிழ்தம் என்று
உலகிற்கு அறிவித்த - சிறந்த
கலைஞர் இவர்.

தமிழ் மீது கொண்ட பற்றை மிகத் திறம்பட இவர் பயன்படுத்திக் கொண்டதை வேறு எந்த தமிழகக் கவிஞர்களாவது சொல்லி இருப்பார்களா என தெரியவில்லை. சந்தேகம் தான். ஆனால், ஈழக்கவிஞர்களுக்கு அத்தகைய சிக்கல்கள் எதுவுமில்லை என்றே சொல்ல வேண்டும். எளிதாக சொல்லி விட்டார்.

இந்தக் கவிதையை ஒட்டிய சிந்தனையாக அன்று காலையில் தான் வாசித்துக் கொண்டிருந்த ஒரு சிறுகதையும் எண்ணத்தில் எழுந்தது. அது மாலன் சிறுகதைகள் என்ற புத்தகத்தில் ‘இதெல்லாம் யாருடைய தப்பு’ என்ற சிறுகதை தான்.

ஒரு பெண் - தமிழ் சிரியரால் உந்தப் பெற்று, தமிழார்வம் கொண்டு, தமிழ் கற்று, வேசமும், விசையும் பெற்றவளாய் கல்வி கற்று வெளி வருகிறாள். அந்தப் பெண்ணிற்கு வேலையே கிடைக்கவில்லை. அதற்கு மாற்றாக சாதாரண அறிவுள்ள தங்கை பாத்திரம் ஒன்று படைக்கப் பெற்று வாழ்க்கையில் ஜெயிப்பதாகக் கதை போகிறது.

எப்படி?

// நான் எம்.ஏ முடித்தபோது திலகவதி டிகிரி வாங்கினாள். காலையில் ஜெர்மன், மாலையில் டிராவல் ஏஜென்சி என்று ஏதேதோ படித்து, கூடவே இரண்டு மூன்று சர்டிபிகேட்டுகள் வாங்கினாள் //

இந்தக் கதை குமுதம் இதழில் வெளியாகி இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கின்றனர்.

சரி, இப்போது கேள்வி.

படிப்பு என்பது வேலைக்குப் போவதற்காகத் தானா? சிந்தனைத் தெளிவைத் தர, பகுத்தறிவைப் பெற என எந்த ஒரு தகுதியையும் கல்வி நமக்கு அளிப்பதில்லையா? தமிழ் கற்றால் வேலை தரப்பட்டே ஆக வேண்டும் என்ற கட்டாய எதிர்பார்ப்புகளை ஏன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்? ஜெர்மன் கற்றால், அல்லது வேற்று மொழி கற்றால் வேலை வாய்ப்புகள் உறுதி என்பது நிஜம்மா அல்லது மாயையா? மாலன் எதனால் கல்வி பெறுவதையும் வேலை வாய்ப்பு பெறுவதையும் ஒரு தட்டில் வைத்து எடை போட முயற்சிக்கிறார் என்று தெரியவில்லை. அப்படி செய்வது கூடாது என்பது என் எண்ணம். கல்வி வேலை வாய்ப்பு பெற்றுத் தர வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கப்பட கூடாது.

ஆனால், இங்கே விவாதம் - எப்படி சிலர் தமிழால் பிழைத்தார்கள் - செல்வந்தர்கள் ஆனார்கள் என்பது தான். தமிழ் மொழி கற்பது உதவாது என்பது மாலன் வாதமானால், அதற்கு நேர் மாறான, தமிழால் வெற்றி பெற்றவர்களையும் காட்ட முடியும்.

ஏன், மாலனின் வெற்றி கூட அவருடைய தமிழ் தான்.

இன்று புத்தக கண்காட்சியில், பல மக்களும் வரிசையில் நிற்கின்றனர் - உள் நுழைவதற்கு என்னும் பொழுது இனி தமிழில் எழுதுபவர்களுக்கும் - தமிழால் பிழைக்கும் ஒரு வழி இருக்கிறது என்று தெளிவாக, உறுதியாக சொல்ல வைக்கிறது தானே?

மாலனின் இன்றைய சிந்தனைகள் எவ்வாறு இருக்கின்றன இதில் என்பதை அறிய ஆவல் தான் - மாலன் தன் எண்ணங்களை மீண்டும் ஒரு முறை சொல்வாரா?

தமிழால் பணம் சேர்க்க முடியும் என்பதன் மீதான தன் எண்ணங்களை.!!!

ஒரு சின்ன கவிதை தான் - ‘அகராதி’ கவிதை தான். ஆனால், அந்த தொடர்புகள் வழியாகப் பயணித்தால், எத்தனை சிந்தனைகள் விரிகின்றன.!

இந்த சிந்தனை தொடர்புகள் வழியாக மேலும் ஒரு கவிதையையும் சொல்லத் தான் வேண்டும். அது அப்துல் ஹமீத் பற்றியது:

அப்துல் ஹமீத்

உலகத் தமிழர்
அறிவர் இவரை
இவர் தமிழால்.

அப்துல் ஹமீதை அறியாதவர் யாரும் இருக்க முடியாது. கடந்த 30.05.05 அன்று துபாய் வந்திருந்தார். அவருக்கு தமிழிணைய நண்பர்கள் சார்பாக ஒரு வரவேற்பு வழங்கப்பட்டது. அப்பொழுது அவர் சிறப்புரை ஆற்றினார். அவருடயை இனிய எளிய தமிழை கேட்க ஆவலுடன் காத்திருந்த எங்களுக்கு சற்று ஏமாற்றமே மிஞ்சியது.

யாரோ ஒருவர் அப்படி பேசியிருந்தால் அது வருத்தத்திற்குரியதாக இருந்திருக்காது. ஆனால், பலரது அபிமானத்தையும், அன்பையும் தமிழால் பெற்ற அப்துல் ஹமீது அவர்கள், அன்று பேசிய பேச்சு, தமிழ் ஆங்கிலக் கலப்பிற்கு வக்காலத்து வாங்குவதாகவே இருந்தது. விருந்தினராக வந்தவரை விமர்சிக்க வேண்டாம் என்று அமைதியாக இருந்து விட்டோம். பின்னர் விழாவில் முக்கியப் பங்கு வகித்த நண்பரிடம் அது குறித்து வருத்தம் தெரிவித்தோம்.
இதையும் இந்தக் கலந்துரையாடலில் குறிப்பிட்டோம். தமிழால், பிழைக்க முடியாது என்று பேசுபவர்கள் - இந்த இருவரையும் மறந்து விடக் கூடாது என்றே வலியுறுத்தினார்கள் அனைவரும்.


இது மாதிரி, நிறைய கவிதைகள் - அதைத் தொடர்ந்த அனுபவங்கள் - இவற்றையெல்லாம் பகிர்ந்து கொண்டு இருக்கையிலே பேச்சு மற்றவற்றைப் பற்றியும் திரும்பியது. இலங்கை அரசியல் - இந்திய அரசியல் என்றெல்லாம் திரும்பியது. ராஜபக்ஷவைப் பற்றி குறிப்பிட்டு, எதனால் ஜெ அவரை சந்திக்க மறுத்தார் என்பது குறித்த அவரது கருத்தைக் கேட்டோம். அவர் சொன்ன பதில் - தமிழக தேர்தலைக் குறித்தான கவலை கொண்டுள்ள ஜெ, தன் அணிக்கு இரு நபர்களை எதிர்பார்த்தார். ஒருவர் பாமகவின் ராமதாசு மற்றவர் மதிமுக வைகோ. இருவருக்குமே ராஜபக்ஷவின் சந்திப்பு வேம்பாக இருக்குமென்பதால், அந்த சந்திப்பைத் தவிர்த்தார் என்றும் மற்றபடிக்கு அவர் தன் நிலைபாட்டை மாற்றிக் கொண்டிருப்பார் என்று நம்பத் தகுந்த ஆதாரங்கள் எதுவுமில்லை என்றும் தெரிவித்தார்.

வைகோவை அவர் சந்தித்தது பற்றி கேட்டோம் - மிக குறைந்த நேரமே அவருடன் உரையாட முடிந்தது. தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக நம்பப்பட்டதால், பலரையும் நேரிலே பார்த்துப் பேசுவதாக ஏற்பாடு. அதனால், ஒவ்வொருவருக்கும் மிகக் குறைந்த நேரமே. மேலும், வீட்டைச் சுற்றிலும், ரகசிய ஒற்றர்கள் வேறு. வருகை தருபவர்களைப் பற்றிய குறிப்புகளும் தொகுக்கப்படுகின்றன என்பதால், அவருடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை என்றார். (2.1/2 மணி நேரம் மட்டுமே) அந்த குறைந்த நேரத்திலும், அவர் வீட்டிலிருந்து, தட்டச்சு செய்து வைக்கப்பட்டிருந்த பெரியார் திடலில் ஈழத்தமிழர் தரவு மாநாட்டில் வை.கோ ஆற்றிய உரையின் தொகுப்பையும், அவர் பிரதமருக்கு எழுதிய கடிதங்கள் சிலவற்றையும் தொகுத்துப் புத்தகமாக்கிக் கொண்டு வந்திருந்தார்.

‘ஈழத்தமிழரைக் காப்போம்’ என்ற புத்தகம் அந்த வகையில் மிகக் குறைந்த காலத்தில் புத்தகமாக்கப்பட்டது என்றே சொல்ல வேண்டும். வைகோவின் மற்றுமொரு புத்தகத்தையும் எடுத்து வந்திருப்பதாகவும் - கூட்டணி தெளிவாக அமைக்கப்பட்டவுடன் மட்டுமே அதை நண்பர்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று வைகோ கூறியிருக்கிறார் என்ற தகவலையும் தெரிவித்தார். அந்தப் புத்தகம் லண்டன் சென்று அங்கிருந்து தான் வரவேண்டும் போலிருக்கிறது.

கூட்டணி பற்றி என்ன மனநிலையில் இருக்கிறார்?

கருணாநிதி தான் தீர்மானிக்க வேண்டும்.

இந்தத் தேர்தலில் தன் கட்சிக்காரர்களுக்குக் கணிசமான அளவு தொகுதி வைகோ எதிர்பார்க்கிறார்.

ஜெயுடன் இணைவது பற்றி எந்த மனநிலையில் இருக்கிறார்?

தன் மனநிலையை விடவும் - தன் கட்சிக்காரர்களின் மனநிலையைத் தான் இந்த முறை முக்கியத்துவப் படுத்துவேன் என்கின்றார் வைகோ.

அப்படியானால் ஜெவுடன் உறவு வைத்துக் கொள்ள அவர் தயாராகிவிட்டாரா?

அதை கருணாநிதி தான் தீர்மானிப்பார்.

குழப்பமான பதில் தான். என்றாலும் அதற்கு மேலாக அவரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அந்தப் புத்தகத்தைப் பற்றிக் கேட்டோம். அது வைகோவின் மனம் திறந்த கடிதம் தான். இப்பொழுது அதை வெளியிடுவது உசிதமல்ல - ஆனால், கூட்டணி முடிவானதும், அந்தப் புத்தகத்தை அனுப்பித் தருவேன் என்று உறுதி கூறினார்.

பின்னர் வழக்கமான தமிழக தலைவர்கள் பற்றிய விசாரிப்புகள். அப்பொழுது தான் தகவல் சொன்னார் - சுபவீ விபத்துக்குள்ளான செய்தியை. தற்போது மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி ஓய்வில் இருக்கிறார் என்று குறிப்பிட்ட அவர், தொலைபேசியில் தொல்லை தர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். என்றாலும், அனைவர் சார்பிலும், சுபவீயிடம் இசாக் நலம் விசாரித்தார்.

நெடுமாறன் ஐயா அவர்களைச் சந்தித்ததைக் குறிப்பிட்டு, அவர் மிகவும் மெலிந்து காணப்பட்டது கண்டு தன் வருத்தத்தையும் தெரிவித்தார்.

பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபாலையும் சந்தித்தார். நக்கீரன் இதழில் தொடராக வந்த ‘இந்துமதம் எங்கே போகிறது’ என்ற புத்தகம் புத்தகக் கண்காட்சியில் மிக அதிகமாக விற்பனையான புத்தகங்களில் ஒன்றாக இருப்பது குறித்து நக்கீரன் கோபால் தன் மகிழ்வை தன்னிடம் பகிர்ந்து கொண்டதை தெரிவித்தார்.

பின்னர் துவக்கு இலக்கிய அமைப்பின் சார்பாக நடைபெற இருக்கும் நிகழ்வுகளைக் குறிப்பிட்டோம். கவிதைப் போட்டிக்கு கிட்டத்தட்ட 800 கவிதைகள் வந்து சேர்ந்திருப்பதையும், நடுவர்களுக்கு அதைத் தெரியப்படுத்தி விட்டதையும் அறிவித்தோம். இப்பொழுது, அந்தக் கவிதைகளுக்கு எண்களிட்டு, அந்த எண்களையும் பெயர்களையும் தனியாக எடுத்து விட்டு, கவிதைகளை மட்டும் திரட்டி, மூன்று பிரதிகள் எடுத்து, நடுவர்களுக்கு அனுப்பி வைக்கும் வேலை நடைபெறுவதையும் குறிப்பிட்டோம்.

துபாயில் இருந்து எழுத்துலகில் இயங்கி வரும் ஐந்து நண்பர்களின் புத்தகங்களை இந்த ஏப்ரல் / மே மாத வாக்கில் வெளியிட முனைந்திருப்பதையும், அவ்விழாவிற்கு துபாய்க்கு கவிக்கோ, இன்குலாப், மேத்தா, அண்ணன் அறிவுமதி அவர்கள் அனைவரையும் அழைத்து வர ஏற்பாடுகள் செய்ய முனைந்திருக்கிறோம் என்பதையும் தெரிவித்தோம்.

எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டுமென்றால், பெரும் பொருட் செலவு ஆக கூடும். எவ்வளவு முடியும் என்று தெரியாது. ஆனால், இதுவரையிலும் விரும்பியவற்றை நிறைவேற்றிக் கொள்ள எங்களால் முடிந்திருக்கிறது என்ற அனுபவமே துணையாகி இருக்கிறது.

அனுபவ பகிர்வாகவும், அரசியல் விமர்சனமாகவும், உலக நடப்பாகவும், கவிதை விமர்சனமாகவும் என்று பல தளங்களில் இயங்கிய இந்த கலந்துரையாடலை மாலை 6.30 மணி அளவில் முடித்துக் கொண்டோம். கிட்டத்தட்ட 2.30 மணி நேரம் போனதே தெரியவில்லை.

அவர் எழுதிய புத்தகம் - அகராதிக் கவிதைகள். மணிமேகலைப் பிரசுரம். விலை ரூ.25.

Thursday, January 26, 2006

தியானம்

தியானம்


ஒன்று... இரண்டு... மூன்று...

கடன் அட்டைக்கு
பணம் அனுப்பி விட்டாயா...?

நான்கு... ஐந்து... ஆறு...

காலை சந்திப்புக்கு
அறிக்கை தட்டச்சு ஆகியிருக்குமா...?

ஏழு... எட்டு... ஒன்பது...

பையன் பள்ளியில்
முதலாவது இடத்தை
தக்க வைப்பானா...?

பத்து...

போதும் தியானம்
எழுந்திருப்போம்...

முட்டி மோதி
வாகனங்கள் அலையும்
சாலையில்
மறந்தே போனேன்
எண்ணுவதற்கு...

ஒன்று, இரண்டு, மூன்றென...

மனம் சாலையில்
குவிந்து நின்ற தருணத்தில்...

Monday, January 23, 2006

நேர்மையே உன் விலை என்ன?

எக்ஸிஸ்டென்ஷியலிசம்-எஸ்.வி.ராஜதுரை- ஒரு பதில்

இந்தப் பதிவை இப்பொழுது தான் பார்க்கின்றேன். தலைப்பிலே இதைப் பற்றி கொஞ்சமாவது ஒரு குறிப்பு கொடுத்திருந்தால், உடனே பார்வையில் பட்டிருக்கும். ஆனால், நண்பனின் பார்வையில் படவேண்டாம் என்று நினைத்து விட்டீர்கள் போலிருக்கிறது. ரகசியமாக உள்ளே கிசுகிசுப்பாய் பேசிக் கொண்டால் யாருக்குத் தெரியும்?

ரவி இன்று ( 22/01/06) கொடுத்திருந்த, அல்-கொய்தா, உலகமயமாதல், இஸ்லாம் என்ற தலைப்பின் வெளியான கட்டுரையைப் படிக்கும் ஆவலில் உள்ளே நுழைந்த பொழுது, எக்ஸிஸ்டென்ஷியலிசம்-எஸ்.வி.ராஜதுரை- ஒரு பதில் என்பதைப் படித்து ஒரு கவிதை அல்லது ஓவிய விமர்சனம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்களாக்கும் என்று எதேச்சையாக உள்ளே நுழைந்தால் என்னைப் பற்றிய பேச்சு தான்.... எத்தனை நேர்மை!!! பேசப்படுபவனுக்கு ஒரு தகவலும் சொல்லாமல், தாங்களாகவே பேசிக்கொள்வது.!!!

இது குறித்து ஏற்கனவே என்னுடைய பதிவிலே குறிப்பிட்டுவிட்டேன் - என்னைப் பற்றிய விமர்சனங்களாக இருந்தால் ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள் ஐயா - உங்களுக்குப் பதில் சொல்வதற்கு ஏதுவாக இருக்குமென்று. இதிலேயே தெரிகிறது - யாருடைய நேர்மை எத்தகையது என்று!!!

சரி போகட்டும் - தகுதியைப் பற்றி ரோஸா வஸந்த் பேசுகிறார். தகுதி எதுவாம்? அவர்(நண்பன்) இணையத்தில் இயங்காத பொழுதே நாங்கள் இருக்கிறோம் - ஐயோ, இது தான் தகுதியா? ரவி ஸ்ரீநிவாஸ் இதற்கு முன் எத்தனை பேருடன் சண்டை போட்டிருக்கிறார் தெரியுமா? அதனால் நீ எப்படி விமர்சிக்கலாம்? என்று கேட்கிறார், ரோஸா - அவர் நேற்று என்னவாக இருந்தார், நாளை என்னவாக இருப்பார் என்பதெல்லாம் எனக்குத் தேவையில்லாத சமாச்சாரம். இன்று அவர் யார் - அவர் சிந்தனை என்ன? எப்படி இயங்குகிறார் என்பதைக் கொண்டு தான் என்னால் விமர்சிக்க இயலுமே தவிர, நேற்று அவர் புனிதராக இருந்தார் என்பதனால், நாளை அவர் நல்லவராக இருப்பார் என்ற அனுமானங்களைக் கொண்டு விமர்சகன் இயங்குவதில்லை. இன்று ரவி என்னவாக இருக்கிறார்? அவர் (ரவி) சிந்தனை எந்த தரத்தில் இருக்கிறது? அவரின்(ரவியின்) படைப்பின் லட்சணம் என்ன? இவை பற்றி தான் விமர்சிக்க முடியுமே தவிர, சம்பந்தமற்ற பதிவுகளைக் கொண்டல்ல.

இதிலே நேர்மையற்ற தனம் எங்கிருந்து வந்தது?

// இந்த பின்னூட்டத்தை இங்கே எழுதுவதன் முக்கிய காரணம் நண்பனின் நேர்மையற்ற தாக்குதலுக்கும், ரவியின் கருத்தை நேர்மையாய் எதிர் கொள்ளாதற்கும் (அதை நீக்கியதற்கும்) எதிராக ரவிக்கு ஆதரவாக எழுதுவது மட்டுமே.//

ரவிக்கு ஆதரவாக நீங்கள் வரிந்து கட்டிக்கொண்டு வருவதைப்பற்றிய கவலை எனக்கில்லை. ஆனால், உண்மை என்னவென்று தெரியாமல், எத்தனை காலம் இயங்கி என்ன பயன்? நேர்மையற்ற தாக்குதல் என்று கூறிவிட்டு, நீங்கள் என்ன எழுதி இருக்கிறீர்கள்?

// ஆனாலும் கூட ரவியின் மேற்படி (iisc தாக்குதலை முன்வைத்த) பதிவு மோசமானது. இந்தியா இஸ்ரேலிடம் இருந்து பாடம் கற்கவேண்டும் என்ற தொனிப்பட எழுதியுள்ளது, ஒரு தீவிரவாத தாக்குதலை மட்டும் முன்வைத்து, அவசர குடுக்கைதனமாய் எழுதியுள்ள, ஒரு பொதுபுத்தி சார்ந்த ஒரு எதிர்வினை மட்டுமே. அதில் விவேகமோ, அரசியல் நேர்மையோ கூட இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இது தவிரவும் முழுமையாய் வேறுபட்டு அந்த பதிவு மீது கடுமையான விமர்சனம் எனக்கு உண்டு.//

ஆக, நீங்கள் (ரோஸா) மோசம் என்று சொல்லலாம் - ஆனால், நான்(நண்பன்) சொன்னால் அது நேர்மையற்றது. காரணம் - ரவி இதற்கு முன் வேறாக இருந்தார்.

ரோஸா விமர்சிக்க முற்பட்டது ரவியைத் தெரியும் என்பதால்.

நான் விமர்சிக்க முற்பட்டது, ரவியின் எழுத்துகளில் இருந்த எதிர்மறை உணர்வுகளை. தீவிரவாதத்தை எதிர்த்து நிற்பதற்கு யாருக்கும் நான் சளைத்தவனல்ல - ஆனால், தீவிரவாதம் என்றால், அது அனைத்து வகை தீவிரவாதங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று உரத்து குரல் எழுப்பியதால், அது நேர்மையற்ற தனம் என்றால், ரோஸா, உங்களுடைய நேர்மை, சந்தையில் கிலோ என்ன விலை?

// ரவியின் கருத்தை நேர்மையாய் எதிர்கொள்ளாததற்கும் (அதை நீக்கியதற்கும்)//

மீண்டும் கேட்கிறேன் - உங்கள் நேர்மை கிலோ என்ன விலை?

ரவி அனுப்பிய கருத்து, ஹோலோகாஸ்ட் என்ற தலைப்பில் வந்த பதிவிற்கு எழுதியிருந்தார். எங்கு? பாக்கிஸ்தானுக்குப் போவோம் - சமுத்ராக்களுடன் என்ற பதிவிற்கு!!! எந்த பதிவிற்கு எந்த கருத்தை எழுத வேண்டும் என்ற அடிப்படை கூட இல்லாமல் ஒருவர் இயங்குவார். அந்த திசை திருப்புதல் நியாயம் ஆகிவிடுகிறது. ஆனால், திசை திருப்பும் விதமாக வரும் பதிவை பதிப்பிக்காமல் விட்டால், அவர் நேர்மையை சந்தேகிப்பீர்கள் இல்லையா?

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், எதையும் வாசிக்க வேண்டாம் - தங்கள் கருத்திற்கு எதிரான தளத்தில் நிற்பவன் தானே - அவனைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதிவிடலாம் என்று தான். ரொம்ப உயர்ந்த உள்ளம் ஐயா - உம்முடையது!? அப்படி இருந்தும், ரவிக்கு, மிக மென்மையாகப் பதில் சொல்லியிருந்தேன் - கீழே உள்ளேது - இது இன்னமும் பாக்கிஸ்தான் போவோம் என்ற என் பதிவில் உள்ளது. படிக்க நேரமற்றவர்கள் -மெல்லமாக நேரம் கிடைக்கும் பொழுது படித்துத் தெளிவாகிக் கொள்ளுங்கள்.


//ரவி ஸ்ரீநிவாஸ்

உங்கள் பதிவு கிடைத்தது. பதிந்து நீக்கி விட்டேன்.

மீண்டும்,

உங்களுக்கு holocaust பற்றி விவாதிக்க விருப்பமென்றால் அங்கு இந்தப் பதிவை இடவும்.

இங்கு பேசப்படும் பொருளை பற்றி மட்டும் எழுதவும்.

பதிந்து நீக்குவதற்குக் காரணம் - to acknowledge your time and effort you are spending on my posts and also to keep the post alive on top for many to read. Thank you and continue to read my posts.

No hard feelings!!!Bye, Bye!!! //

அந்தப் பதிவை சரியான இடத்தில், சரியான தளத்தில் விவாதிப்போம் என்று அன்புடன் கூறி அழைத்ததைப் புறக்கணித்து ஓடி விட்டு, மறைவிடத்தில் நின்று அடிபட்டகாயங்களை சொறிந்து கொண்டிருப்பது தான் - உண்மையை நிரூபிக்கும் முறை என்பதை பிறருக்கு சொல்லிக் கொள்ள 'தகுதி' இருக்கிறது - ரவிக்கு.

நான் முந்தி வந்துட்டேன் - அதனால எனக்கு அதிக தகுதி இருக்கிறது என்று புலம்புபவர்களுக்கு -

தகுதியை நிர்ணயிக்கத் தகுதி யாருக்கும் இல்லை.

அது அவரவர் கையில் இருக்கிறது. இன்னும் யாராவது தங்களுக்குத் தான் தகுதி இருக்கிறது - அடுத்தவர் தகுதியை நிர்ணயிக்க என்று முனகினால், அவர்களை ஒரு மருத்துவமனையில் தான் சேர்க்கவேண்டுமேயன்றி, வாதம் புரியும் இடத்தில் வைத்துக் கொள்வது நல்லது அல்ல.

ரோஸா, நன்றி.

யார், எப்படிப்பட்டவர் என்பதை நான் அறிந்து கொள்ள தாங்களாகவே முன்வந்து தங்கள் 'தகுதி'யை நிரூபித்துக் காட்டிக் கொண்டமைக்காக.

neo,

// அந்த 'இஸ்ரேல்' போன்ற எதிர்வினை செய்யவேண்டும் இந்தியா என்கிற கருத்தைத்தான் நான் ஆதரிக்கவில்லை. //

அன்பின் நியோ,

உங்கள் எழுத்தின் தரம் என்னவென்று எனக்குத் தெரியும்.

பதற்றப்படவேண்டாம் -

யாரிடமும் சொல்ல மாட்டேன்.

thangamani

// I completly agree with Rosavasanth. Thanks. //

arul. // he should first realise that a stand against nationwide majority terror will naturally translate as opposition to other global terror networks.//

ரோஸா வசந்த் சொன்னது தெய்வ வாக்காக இருக்கலாம் நண்பர் தங்கமணி. ஆனால், சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் திறன் என்று ஒன்று உண்டு. அது ஒன்றே மதிக்கப்படும்.

அருள், வாசித்து விட்டு பதில் சொல்லுங்கள் - கிழிந்து போன முகத்திரைகளை ஒட்டுப் போடும் வேலையை விட்டுவிட்டு, நேர்மையாக பார்த்து பதில் எழுதுங்கள்.

இறுதியாக,

நண்பர்களே - உங்களுக்கு ரவியின் மீது அளவு கடந்த பற்றுதல் இருக்கலாம். கடந்த காலத்தில் அவர் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம். ஆனால், இன்றுஅவர் மாறிவிட்டார் என்ற நிஜத்தைத் தான் நான் தொட்டிருக்கின்றனே தவிர, கடந்த கால அவர் முகத்தை அல்ல. அதனால், எதைப் பேசுகிறோமோ அதைப் பற்றி மட்டுமே - பேசுங்கள். அவ்வாறு பேசியவற்றில் நியாயம் இருக்குறதா என்பதைப் பாருங்கள்.

விமர்சனம் செய்ய எங்களுக்குத் தான் தகுதி இருக்கிறது என்று இறுமாப்பு கொள்ள வேண்டாம்.

தகுதிகளைத் தேடி அலைய வேண்டிய கட்டாயத்தில் இல்லை நான். அது என்னுடைய பிறப்பிலே என்னிடத்தில் இருக்கிறது. எவரிடத்திலிருந்தும் அங்கீகாரம் வாங்கித் தான் என்னுடைய சிந்தனைகளை புனிதப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்திலோ, கட்டாயத்திலோ நான் இல்லை.

நன்றி.

Friday, January 20, 2006

பாதுகாப்பு - ஒரு பெண்ணின் பார்வையில்.

ஜனவரி திசைகள் இதழ் துபாய் சிறப்பிதழ் போல் மின்னியது என்றே சொல்ல வேண்டும். எனக்குத் தெரிந்து மூன்று துபாய் கவிஞர்களின் கவிதைகள் வெளியாகி இருந்தன. அதில் பாதுகாப்பு என்ற தலைப்பில் சகோதரி ஜெஸிலா ரியாஸ் அவர்கள் எழுதிய கவிதை பளிச்சென்று மனதைத் தொட்டது. எது பாதுகாப்பு என்பது குறித்த தீர்க்கமான சிந்தனை இங்கே பலரும் அறிய வேண்டிய செய்தி.

இனி கவிதைக்கு -

பாதுகாப்பு
***
ஜெஸிலா ரியாஸ்
***
அமீரகம்
***

துபாய் நிலா வெளிச்சத்தில்
நள்ளிரவில்
துணையின்றி
பூச்சிகளின் ஒலிகளுக்கு நடுவே
மூடிய கடைகளை பார்த்தபடி
எங்கோ கேட்கும்
வாகன சத்தத்தை உணர்ந்தபடி
தெரு விளக்கின்
பிரகாசத்தை இரசித்தப்படி
சுத்தமான அகல தெருவில்
நிமிர்ந்த நடையுடனும்
நேர் கொண்ட பார்வையுடனும்
காசு நிறைந்த கைப்பையுடனும்
விலைமதிப்புள்ள பொருட்களுடனும்
விலைமதிப்பில்லா கற்புடனும்
சின்ன சீண்டலுக்கும் கிண்டலுக்கும்
சிக்காமல்
வீடு திரும்பும் போது
ஆதங்கம் தொட்டது
எப்போது விடியும்
என் தேசம் இப்படியென்று!

தன்னைத் தானே எழுதிக் கொள்ளாத கவிதை...

தன்னைத் தானே
எழுதிக் கொள்ளத் தெரியாத கவிதைகள் பல
என்னை நெருக்கிக் கொண்டிருக்கிறது
எழுதித் தொலை என்னையென்று
பிதுங்கி பிதுங்கி வழியும்
இந்தக் கவிதைகள்
கவனச் சிதறலைத் தந்து
தவறாது தங்களிருப்பை நினைவூட்டுகின்றன.
இவைகளை எழுதித் தொலைத்து விட
எல்லா நாட்களிலும் பொழுது கிடைப்பதில்லை.
கிடைக்கும் நாட்களில் கூட
தடதடவென வந்து நிற்பதில்லை.

மிகுந்த பிணக்குடனும் நாணத்துடனும்
மெல்ல மெல்ல அவைகளை
இழுத்து வரவேண்டியதிருக்கிறது சிரமத்துடன்.
வரமறுக்கும் இடைப்பட்ட வேளையில்
மனவெற்றிடத்தின் விருப்பவடிவமாக
தட்டித்தட்டிப் பார்த்த சொற்கூடுகளை
பின்னர் கண்டித்து வெளியேற்றும் சிரமத்தை
சுயம்புவாக எஔழுந்துவிடும் கவிதைகள் அறிவதில்லை.

கூடிக்கூடிப் பிரித்து கீழாக மேலாக நகர்த்தி
குயவனின் வட்டுச்சுழற்சியில் உயரும் பானையாக
மெல்ல மெல்ல வடிவம் பெற்று வருகையிலே
சட்டென்று சிதைந்து போய்விடும் துயரத்தை
தானாக வடியும் கவிதைகள் தருவதில்லை.
அலுத்து சலித்து விலக நினைக்கும் தருணத்தில்
கடைசியாக ஒருமுறையென்ற இறுதிப்போரில்
மெல்ல மெல்ல உதித்து விடக்கூடும்
இந்தக் கவிதைகள்.

எத்தனையோ இரவுப் பொழுதுகளைப் பாழாக்கி
எத்தனையோ காகிதங்களைக் குப்பையாக்கி
எப்படியோ தட்டுத் தடுமாறி முட்டி மோதி
எழுதி முடித்த கவிதை தந்து விடுகிறது
மலையுச்சியேறிய இன்பத்தை இறுதியாக.

ஒரு அதிகாலையில் நீ வந்தாயா?

சிலநாட்களின் அதிகாலைகள்
உன்னைக் கொண்டு வந்து
அருகே கிடத்தி விழிப்பூட்டுகின்றன

உண்மையிலேயே அருகே கிடக்கிறாயோவென
கைகள் தனியாய் அலைகின்றன.
காலியாய்க் கிடக்கும் படுக்கை
தடவி ஏமாற்றமுற்று ஓய்ந்து
கனவென உணருமுன் ஓடிப்போய்விடுகின்றன
உன் உருவம் தாங்கிய நினைவுகள்

விழித்துக் கொண்ட பின்னும்
உணர மறுக்கிற புலன்கள்
உன்னை உண்மையிலேயே உணர்ந்த
தருணங்களைப் பேசுகின்றன.
இதயம் தான் அதிகமாக துடித்ததைச் சொல்லுகிறது
இன்னும் உன் வருகையை படுகையினடியில் ஓடும்
நதியாய் உருவகித்துப் பிரவாகிக்கிறது.

உன் வருகையைப் பற்றிய
தர்க்கங்கள் நிகழ்கின்றன என்னுள்
நீ வந்தாயா இல்லையாவென

நீ வந்தாதாகவும் வரவில்லையாகவும்
என்னுள்ளே பிரிந்து கிடக்கும் நான்
மீண்டும் ஒன்றாகி என்னை உயிர்ப்பிக்க
வருகை தர வேண்டியவளாயிருக்கிறாய் நீ.

உன் வருகை நிகழும் போதிலே
உதிர்ந்த ஒன்றிரண்டு கேசங்கள்
வெண்மை கசங்கிய மல்லிகைகள்
கூடவே சிணுங்க சிறுதுண்டு வளையல் கூட்டங்கள்
இவையெல்லாவற்றையும் விட்டுச் செல்
வாழ்ந்தேன் உன்னுடன் என்பதற்கான சாட்சியாய்

Tuesday, January 17, 2006

வாழ்க்கை

அவர்கள் எல்லோரும்
ஆத்திரத்துடன் இருக்கிறார்கள்
தங்கள் உருவத்தைப் பற்றிய
என்னுடைய கண்ணோட்டத்தின் மீது

அவர்களது உருவின்
இளமை முதுமைகளைப் பற்றிய
எந்த அபிப்பிராயமும் என்னிடம் கிடையாது

அவர்களது உருவத்தை
பிறர் சகிக்கவேண்டி தடவிக் கொள்ளும்
ஆர்ப்பாட்டமான அத்தர் வகையறாக்களும்
அவசியமற்றவையெனக்கு

தங்களது உருவை மூடிக்கொள்ள
அவர்களுடுத்தும் ஆடையணிகளைப் பற்றிய
விமர்சனங்களும் என்னிடத்தில் இல்லை.

அவர்களிடத்தில் அச்சமிருக்கிறது
தங்களைப் பற்றிய முழுமையான செய்திகளும்
என்னிடத்த்லிருக்கிறதென்ற அச்சம்.

இந்த அச்சத்தைக் கொண்டு
எந்தவொரு பயன்பாடும் இல்லையெனக்கென
எத்தனை சொல்ல முயற்சித்தும்
வெருண்டோடும் பசுவாய் புழுதி கிளப்பி
நதியின் கரை பிடித்து ஓடுகின்றனர்.

ஓடியாடி நதியோடு சமுத்திரத்தில் வீழ்ந்தாலும்
இவர்களைப் பிழைப்பூட்டியெடுத்து வர
யாரும் காத்திருக்கப் போவதில்லையென்றாலும்
நீந்தி நீந்தி நானில்லாத சமுத்திரத்தின்
அக்கறையேறிவிடாலாமென்ற நப்பாசையுமிருக்கிறது.

இவர்கள் அறிவதில்லை என்றென்றும்
பிழைத்தெழுந்து கடல் தாண்டினாலும்
அங்கும் நானிருப்பேன் இவர்களறியா வகையில்
அப்பொழுது
புதிதாக என்னைப் பார்ப்பார்கள்
புதிதாக என்னைச் சலித்துக் கொள்ளுவார்கள்
புதிதாக என்னால் நிம்மதியிழப்பார்கள்
நேருக்கு நேராக மட்டும்
ஏறெடுத்தும் பார்க்கவியலாத
அச்சத்தைக் கையில் வைத்துக் கொண்டு
கண்டம் விட்டு கண்டம் சிதறி
தேடிக் கொண்டிருக்கிறார்கள் தீர்வை.

Sunday, January 15, 2006

மீட்டெடுக்கக் காத்திருத்தல்....

வீழ்ந்துவிட்ட தங்கள் நிழலை
மீட்டெடுத்து கடைத்தேற்றும் முனைப்பில்
பிணந்தின்னிப் பறவைகள் தலைசாய்த்து
தன் இறக்கையின் ஈறும் பேனும் உண்டு
விழும் பிணம் தூக்க காத்திருக்கின்றன.

ஆளரவமற்ற நாட்களின் உரிமையோடு
பறந்து திரிந்த ஆகாயத்தில்
இன்று அச்சமூட்டும் இடிமுழக்கங்களும்
கண்ணொளி பறிக்கும் மின்னொளிகளும்
நிற்கவொட்டாது விரட்டியடிக்கின்றன.

தங்கள் கழிவுகளால் நாற்றமடிக்கும்
இருண்ட குகைகளிலும்
செங்குத்துப் பாறைச்சரிவுகளிலும்
ஒளிந்து ஒளிந்து நோட்டமிடுகின்றன
இடியொலியெழுப்புபவனும்
மின்கதிர் வீசி எரிதழல் மூட்டுபவனும்
மறைந்தொழிந்தார்களாவென
மகோன்னதமிக்க மந்திரங்களைப் பேசி
மடக்கிடலாம் மந்தைமந்தையாய் மனிதனையென
காலம் பார்த்து காத்துக் கிடக்கின்றன

விரிந்த வானம் விலக்கி இருள்குகை புகுந்ததால்
நிழலிழந்தோமென்றறிதலில்லாமல்
விழிப்புற்றவனைக் கண்டஞ்சி
வீழ்ச்சிக்காய்க் காத்திருக்கின்றன
கண்காணாத முகடுகளில் காய்ச்சலோடு

மனிதன் மட்டுமென்னவோ
இன்னமும் தன்மீது ஆதிக்கம் புரியும் நிழலொன்று
தன்னையறியாமலே படிகிறதென்ற பதட்டத்தில்
பக்கத்து வீட்டு மனிதனை
கண்காணித்துக் கொண்டிருக்கிறான்
மரணம் தொட நீளும் ஒரு கலவரத்திற்காக.

Friday, January 13, 2006

நண்பனின் அமெரிக்க எதிர்ப்பும், முகமூடிக்கு ஒரு பதிலும்.....

சமீபத்திய ஒரு விவாதத்தில் என்னைப் பற்றிய இருவர் விமர்சனங்கள் வைத்தனர். வழக்கம் போல அவர்களுக்கு அதே தளத்தில் நின்று பதில் சொல்லி அந்த விவாதத்தை திசை திருப்ப விரும்பாததால், இந்த தனி பதிவு. இதில் நண்பர்கள் சன்னாசி, முகமூடி இருவருக்கும் பதில் சொன்னதோடு, அமெரிக்கர்கள் மீதான என் கடுமையான விமர்சனங்களுக்குக் காரணம் என்ன என்பதையும், இஸ்லாமிய தீவிரவாதம் என்று எழுதப்படுவது குறித்தும் என் கண்டனங்களையும் எழுதி இருக்கிறேன். இனி வாசிக்கலாம்....


சன்னாசி,

உங்களின் நீண்ட பதிவிற்கு மிக்க நன்றி.

திசை திருப்பக் கூடாதென்பதால், பெரும்பாலான கருத்துகளுக்கு நன்றி. பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதினால்.

அகராதி என்று எழுதிய பொழுது, பக்கத்திலே சூட்டைத் தணிக்க ஒரு ஸ்மைலி போட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி போடாமல் விட்டது என் தவறு தான். நம்மிடையே நடக்கும் பனிப்போரை அறியாதவர் என்னைப் பற்றித் தவறாக நினைக்கத் தூண்டும் - அதை ஒரு தனிமனித தாக்குதலாகக் கூட கருத வாய்ப்புண்டு என்ற புரிதல் வந்த பொழுது, அது பதிவாகி விட்டது. சிரமம் பாராது அதை அழித்துவிட்டு, புதிதாகவே எழுதி இருக்க வேண்டும். பிறருக்கு வலிக்கும் வகையாக எழுத வேண்டுமென்று நினைத்தால் கூட, தனிமனித தாக்குதலாக போய்விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். நீங்கள் இப்பொழுது அதைப் பற்றிக் குறிப்பிட்டதில், அது நகைச்சுவையாக ஏற்கப்படவில்லை - மனம் புண்படும் வகையாகவந்து விட்டது அறிந்து வருந்துகிறேன். மற்றபடிக்கு, உங்கள் விமர்சனங்களைப் புரிந்து தான் இருக்கிறேன். கள்ளன் போலிஸ் என்று குறிப்பிட்டது ஒரு வகை விமர்சனமே தவிர, வேறு அர்த்தம் இல்லை. எப்படி நீங்கள் டிக்ஷனரி விமர்சனங்களைக் கருதுகிறீர்களோ அதே போலத் தான் இதுவும். ஆனால், இதற்காக (கள்ளன் போலிஸ்) நான் வருந்தவில்லை.

முகமூடி,

//மத்த fill in the blanksக்கு உங்கள் அஞ்சறை பெட்டியை திறந்து சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, தமிழ், மதம், ஜாதி எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தூவி ஒரு பதிவு பல பின்னூட்டங்கள் என்று சம்பந்தமில்லா இடங்களில் எல்லாம் எழுதி வருகிறீர்கள் என்பதே...//

முதன்முறையாக உங்களிடமிருந்து விமர்சனம் - நன்றி.

என் பெயரை உபயோகப்படுத்தியதற்காக நான் பதில் எழுதுவது அல்ல. மாறாக என் பெயரோடு சேர்க்கப்படும் அடை மொழிகளுக்குத் தான் பதில் சொல்கிறேன். நிறைய இடங்களில் அல்ல - இரண்டே இடங்களில் தான்.

நண்பன் என்ற ஷாஜஹான். ஆரோக்யம் எழுதியது.

அவரது பதிவுகள் தமிழ் மணத்தில் இடம் பெற வில்லையென்பதால், அவருக்குப் பதிலாக ஒரு பதிவை என் வலைப்பூவில் எழுதினேன். ஆரோக்கியத்திற்குப் பதில் எழுதியது தவறென நீங்கள் குறிப்பிடுவதாக இருந்தால், பின்னர் உங்களின் அடிப்படை நேர்மையையே நான் சந்தேகிக்க வேண்டி வரும். சரிதானே?

நண்பன் போன்ற அற்புதமான நண்பர்கள் - அடைமொழியுடன் பத்ரி எழுதிய பொழுது, அதே வார்த்தைகளைக் கையாண்டு ஒரு பதில். ஏனென்றால், இந்த 'அற்புதமான' என்ற வார்த்தையில் ஒரு விஷேசம் இருக்கிறது. என்னைப் பற்றிய எந்த அறிமுகமும் இல்லாதவர், கொடுத்த அடைமொழி. அவருடைய பதிவை அதுவரையிலும் நான் வாசித்திருக்கவில்லை. அவரும் எங்கும் என் பதிவில் பின்னூட்டமிடவில்லை. அப்படியிருக்க அவர் உபயோகித்த அந்த அடைமொழி எந்த வித நியாயமோ?

பின்னர் எங்கிருந்து இந்த அடைமொழி வந்தது? எந்தப் பதிவிலிருந்து அவர் இந்த அடைமொழியை எடுத்துக் கொண்டார்? ஆயிஷா என்ற பதிவிலிருந்து தானே? அவர் என்னை ஷாஜஹான் என்று அடையாளம் கண்டு கொண்ட மாதிரி, நான் அவரை பத்ரி என அடையாளம் கண்டு கொண்டதில் என்ன தவறு இருக்கிறது?. அந்த அடையாளங்களைச் சொல்லி, நான் ஏதாவது தவறாகப் பேசி இருந்தால் சொல்லுங்கள் - திருத்திக் கொள்கிறேன்.

இங்கே - நான்காவது முறையாக - Let some one tell them that secularism is not a premise for denying the identity of a human - but, it’s a doctrine that accept others with different identities, as equal while you keep your identity. இது ஜனவரி 7ம் தேதியன்று ஸ்ரீகாந்தின் மனம் ஒரு குரங்கு என்ற பதிவில், எழுதினேன். தன் அடையாளங்களை மறைத்து விட்டு, மத ஒருங்கிணைப்பு என்று பம்மாத்து செய்வதை விட்டுவிட்டு, அவரவர் மத அடையாளங்களுடன் நல்லிணக்கத்திற்கு முயற்சி செய்வோம் என்று. இப்பொழுதும் என் கருத்தில் ஏதும் மாற்றமில்லை. இப்பொழுது ஞாபகத்திற்கு வருகிறது. இந்த ஒரு வாக்கியத்தைத் தான் பல்வேறு இடங்களில் எழுதி இருக்கிறேன். இது உங்களுக்கு சம்பந்தம் சம்பந்தமில்லாமல் எழுதுவதாக தோன்றுகிறதா? உங்களைப் போன்றவர்களுக்கும் இது சம்பந்தமில்லாமல் தோன்றியது குறித்து நான் வருத்தமடையப் போவதில்லை.

இங்கு நான் தெளிவு படுத்தி விடுகிறேன் - அற்புதமான நண்பர்கள் என்று விளித்ததில் வருத்தமில்லை. ஆனால், அடைமொழிகளை எப்பொழுதும் நான் விரும்புவதில்லை. அதுவும் அறிமுகமற்ற நிலையில். அது என்னை தர்ம சங்கடத்தில் ஆழ்த்துகிறது என்பதால் அதை தவிர்க்கவே முயல்கிறேன். ஆனால், மத அடையாளங்களை மறைத்து முகமூடி போட்டுக் கொண்டு சமத்துவம் பேசுவது எந்த விதத்தில் நியாயம்.? (முகமூடி - வாசிக்க :: முகத்திரை. உங்க பேரை நீங்க இப்படி வச்சுக்கிட்டா நான் என்ன பண்ணுவது :-) )

//இந்த பதிவை first person முறையில் எழுதவில்லை என்று என் சிற்றறிவுக்கு நான் புரிந்து கொள்கிறேன். மூன்றாம் மனிதரின் பார்வையில் எழுதப்பட்ட பதிவில்// முகமூடி உங்கள் தமிழ் சற்று தகராறு பிடித்தது போல் தெரிகிறது. Context என்று ஒன்றுண்டு. அதாவது, இடஞ்சுட்டி பொருள் விளக்குக என்று கேள்வி எழுப்புவார்கள் அல்லவா? அதைப் போலத் தான். சரியாக இடம் சுட்டி பொருள் விளங்கிக் கொள்ள வேண்டும். எந்த இடம் சுட்டப்பட்டதென்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். வெறுமனே first person பற்றி மட்டும் பேசக்கூடாது. பேசப்படும் பொருளாக அங்கிருந்தது - பிராமிணர்கள். அவர்களைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கையில், நான் அந்த வரிகளை எழுதினேன். நன்றாகத்தானே இருக்கிறீர்கள் - நீங்கள் என்று. பேசு பொருளாக இருந்த பொருளைக் குறித்து கேள்வி ஒன்று வைத்தேன் - பிராமிணர்கள் என்பதை குறிப்பிடாமல், ''நீங்கள்'' என்று சொன்னேன். இந்த நீங்கள் - பத்ரியை சுட்டுகிறது என்று நீங்களாக நினைத்துக் கொண்டீர்கள். என் எண்ணம் அதுவல்ல. சுட்டு பொருளாக நிற்பது பிராமிணர்கள் தான். என்றாலும் உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். பொதுவான pronounsஐ உபயோகிப்பதை இனி தவிர்த்துக் கொள்கிறேன். யாரை குறித்துகேள்வி கேட்கிறேமோ, அவர்களின் பெயர்களையும் எழுதி விடுகிறேன். அது அத்தனை எளிதல்ல. மாறாக வேறு வகையான சங்கடங்களையும் உண்டாக்கும். எப்படி என்பதை கீழே படித்து தெரிந்து கொள்ளவும்.


மேலும்

மசாலா சேர்த்து எழுதுகிறேன் என்று நீங்கள் சொன்னதற்கு நன்றி. என் சமையல் நன்றாகத் தான் இருக்கும் - சமைக்க (எழுதத்) தெரியுமென்பதால்.

தமிழ் மொழி பற்றி இதுவரையிலும் ஒரு பதிவு கூட எழுத ஆரம்பிக்கவில்லை. ஏன் திராவிட சிந்தனை குறித்தும் கூட நான் இன்னமும் எங்கும் எழுதவில்லை. ஆகையினால், உங்களது இந்த விமர்சனம் நேர்மையற்றது.
சுபவீ, அறிவுமதி, பாமரன் படங்கள் வைத்திருப்பதால், உடனே நான் தமிழ் பற்றி, திராவிடம் பற்றி எழுதி விட்டேன் என்று நீங்கள் கூப்பாடு போட்டால் அது உங்கள் தவறு. சொல்லுங்கள் - நான் இதைப்பற்றியெல்லாம் எங்கே எழுதி இருக்கிறேன் என்று. நான் இதுவரையிலும் எழுதாத ஒன்றை நான் எழுதுகிறேன் என்று கூப்பாடு போடுவதிலிருந்தே தெரிகிறது - சும்மா குன்ஸா ஒரு கமெண்ட் வைப்போம் - என்ன ஆகிறது என்று பார்ப்போம் என்று. அல்லது இத்தனை படங்களை வைத்துக் கொண்டு இயங்குவதால், கண்டிப்பாக எழுதி இருப்பான் என்று அனுமானித்து அதன் மூலம் இந்த விமர்சனத்தை அச்சமில்லாமல் வைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் இயங்கினால், அது உங்கள் தவறு தானே தவிர, என் மீதான நேர்மையான விமர்சனமாகாது.

மதம் பற்றி எழுதுவது, யாரையும் திட்டவோ, பரிகசிக்கவோ இல்லை. என் மதத்தின் மேன்மையை மட்டும் தான் நான் எடுத்துரைத்தேன். அதிலும் சிலர் இஸ்லாம் பற்றி வைக்கும் விமர்சனங்களுக்குப் பதிலாக. அதில் என்ன தவறு இருக்கப் போகிறது.? நீங்கள் பிராமினிசம் காக்க முன் வந்தால், நான் அதை தவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால், அங்கு உங்கள் சம்பந்தப்பட்ட விமர்சனங்களுக்குப் பதில் வைக்காமல், என் நம்பிக்கை சரியா, அடுத்தவர் நம்பிக்கை சரியா என்று தர்க்கங்களுக்குப் போய் விமர்சனங்களை வீசும் பொழுது - பதிலுரைக்க வேண்டி வருகிறது. (நான் இதுவரையிலும், பிற மதங்களைப் பற்றிய விமர்சனத்தில் இறங்கியதில்லை. இனியும் இறங்கப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். )

முகமூடி, தயவு செய்து, மீண்டும் ஒருமுறை என்னுடைய பதிவுகளைப் படித்துப் பார்த்து விட்டு, பொறுப்போடு விமர்சனம் வையுங்கள்.

நான் மிக அதிக பதிவுகள் போட்டது அமெரிக்காவின் உலக / இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல் - அது பற்றி ஒரு வார்த்தை கூட உங்களால் பேச இயலவில்லை - ஏன்? உங்களுக்கே தெரியும் அதில் உள்ள நியாயங்கள். சிலருக்கு நான் அமெரிக்காவைப் பற்றி எழுதியதுமே கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. உங்கள் பக்கத்து நியாயமாக அமெரிக்காவில் கிடைக்கும் - (மீண்டும் - இங்கு உங்கள் என்பது முகமூடி அல்ல. மாறாக அமெரிக்காவைப் பாதுகாக்க நினைக்கும் அங்கு வாழும் அமெரிக்கார்களைப் பற்றியதானது இந்த 'உங்கள்' இப்பொழுதாவது புரிகிறதா - என்னுடைய பாணி என்னவென்று) அதிகப்படியான வசதிகள் கொண்ட வாழ்க்கை - சம்பளம் - என்று நியாயங்கள் இருக்கலாம். அதனால், என்னை எதிர்ப்பதும் கடமையாகிறது அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு. ஒன்று செய்யட்டுமே - அமெரிக்க வாழ் இந்தியர்கள் (பாருங்கள் - எல்லோரும் அடிக்க வரப்போகிறார்கள் - ஏன் எப்பொழுதும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் என்றே எழுதிக்கொண்டிருக்கிறான் - Tell him to use a pronoun - shorter one என்று குரல் கொடுக்கப் போகிறார்கள் - ) எல்லோரும் பதிலுக்கு அமெரிக்க செய்யும் நல்ல காரியங்களைப் பற்றி எழுதட்டுமே - அப்படி ஒன்று இருந்தால் - நாங்களும் தான் தெரிந்து கொள்கிறோம்.?

அமெரிக்கர்களைப் பற்றிய என் பக்கத்து தரப்பு நியாயங்களும் உண்டு.

இந்த அமெரிக்கர்களின் கொள்கைகளோடு நேரடியாக அனுபவம் உண்டு. பிஜேபி ஆட்சியில் அணுகுண்டு வெடித்ததும், ஒரு தடை போட்டார்கள் - அதாவது, இந்தியாவின் அணுத் துறைக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது. தேவைப்படும் தொழில் நுட்பங்கள் - பொருட்கள் எதுவும் கிடைக்கக் கூடாது என்று ஒரு தடை விதித்தார்கள். அதாவது நம் அணுத்துறையையே அடக்கி மண்டி வைத்து விடவேண்டும் என்று. ஆனால், அதன் பின்னால் இருந்த hidden agenda - அணுத்துறை மட்டுமல்ல - சகல விஞ்ஞான துறைகளையும் முடக்கிப் போட வேண்டும் என்பது இந்த துறைகளோடு சம்பந்தப் பட்டவர்களுக்கு நன்கு தெரியும். நான் இந்த துறைகளில் நேரிடையாக சம்பந்தப் படாவிட்டாலும் - இவர்களுக்கெல்லாம் தேவைப்படும் தொழிலில் இருக்கிறேன். நான் ஒரு Air conditioning Engineer. அமெரிக்கா இந்த ஏர்கண்டிஷனர்களுக்குக் கூட தடை விதித்தது என்பது உங்களுக்கெல்லாம் தெரியுமா? இந்த ஏர் கண்டிஷனர்களால் - ஒரு ராக்கெட்டைப் பறக்க வைத்து விடலாம் என்றோ, அல்லது அணு உலையை ஓட்டி விடலாம் என்றோ யாரும் நம்பப் போவதில்லை. இந்த ஏர்கண்டிஷனர்களால் ஆகக் கூடிய ஒரே காரியம் - குளிர்ந்த நீரை உற்பத்தி செய்து தர முடியும் - 5 டிகிரி செல்சியஸ்ற்கு. பிறகு அதை கொண்டு, AHU மூலமாகக் காற்றைக் குளிர்விக்க வேண்டும்.

இதில் என்ன பெரிய காரியம்? இந்த மெஷின்களை ஏன் தடை செய்ய வேண்டும்.?

விஞ்ஞானிகள் குளுகுளு சூழலில் உட்கார்ந்து வேலை செய்து, அணு உலை தயாரிக்கப் போகிறார்கள் என்றா?

அந்தப் பொழுதில் இந்தியாவில் இருந்த பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்தும் - Trane, Carrier, etc உட்பட, எவருமே இந்த எந்திரங்கள் இந்தியாவிற்கு தரும் பொழுது ஒரு உறுதி மொழிப் பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொண்டு தான் தருவார்கள் - அந்தப் பத்திரம் என்ன தெரியுமா? எங்களிடம் வாங்கப் படும் இந்த இயந்திரங்கள் - ஏர்கண்டிஷனர்கள் - இந்தியாவின் அரசு தொடர்புடைய எந்த நிறுவனத்திற்காகவும் வாங்கப்படவில்லை. மாறாக எங்கள் சொந்த உபயோகத்திற்காக வாங்குகிறோம் என்ற வகையில் எழுதித் தர வேண்டும். எதற்கு? வெறுமனே குளிர்ந்த நீரை உண்டாக்கவா?

நீங்கள் ( இது இவ்வலைப்பதிவை படித்துக் கொண்டிருக்கும் அன்பர்களைப் பார்த்து) இப்பொழுதும், போய் பாருங்கள் - ISRO, GTRE, அணுத்துறை மற்றும் அரசு சார்ந்த துறைகளில் - எங்காவது அமெரிக்காவில் இருந்து, வரவழைக்கப்பட்ட எந்திரங்கள் இருக்கிறதா என்று.? அங்கு நீங்கள் பார்ப்பதெல்லாம் வெறுமனே - Kirloskar, Voltas, Bluestar, Batliboi போன்ற இந்திய நிறுவனங்கள் தயாரித்த out-dated என்று சொல்லத்தக்க reciprocating machinesஐ வைத்துத் தான் காலம் தள்ளுகின்றன. இது 2003 வரையிலும் உள்ள நிலைமை.

இந்த reciprocating இயந்திரங்களில் உபயோகப்படுத்துவது - R22 என்று சொல்லப்படும் தடை செய்யப்பட்ட halo-carbon குடும்பத்தைச் சார்ந்த freon என்னும் குளிர்விப்பான். இந்த வகை வாயு, 2020 ல் இந்தியாவில் தடை செய்யப்படும். அந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டு உள்ளது. அதாவது இன்று ஓடிக்கொண்டிருக்கும் இந்த அனைத்து வகை குளிர்மி-களையும் நாம் நிறுத்தியாக வேண்டும். அதற்குள்ளாக, மாற்று freonகளைக் கொண்டு இயங்கும் இயந்திரங்களை நிறுவாவிட்டால், அப்புறம் நமது விஞ்ஞான நிறுவனங்கள் எல்லாம் அம்பேல் தான். அப்படியில்லையென்றால், ஒசோன் வட்டத்தைத் துளையிடாத freonகளால் இயங்கக் கூடிய வகையில், இந்த அரதப் பழசான எந்திரங்களைக் கழற்றி கடாசி விட்டு, புது எந்திரங்களை வடிவமைத்து நிறுவ வேண்டும். எப்படி என்றாலும், நமக்கு பெரும் செலவு. அதை இப்பொழுதிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக செய்து கொண்டால் நலம். அதற்குத் தடையாக இருப்பது அமெரிக்கா. மாறி விட்ட சூழ்நிலையில், இந்த தடை நீக்கப்பட்டதா, நமக்கு இந்த எந்திரங்கள் எல்லாம் கொடுக்கிறார்களா என்பதை இனி தான் விசாரிக்க வேண்டும்.

இந்த நேரிடையான அனுபவம் தான் அமெரிக்காவின் அனைத்து செயல்களிலும் என்ன உள்குத்து வேலை இருக்கிறது என்பதை ஆராயத் தூண்டுகிறது. இங்கு சிலர் (இந்த சிலர் தான் இனி வரக்கூடிய நீங்கள் என்ற சுட்டிக்கு அர்த்தம்), அமெரிக்காவும் இந்தியப் பாதுகாப்பும் என்று எழுதும் பொழுது, சிரிப்பு பொத்துக் கொண்டு வருகிறது. இத்தகைய அறிவிலிகளும் இருக்கத்தானே செய்கிறார்கள் என்று. அதிலும் அவர்கள் (அந்த சிலர்) - என்னைப் போன்றவர்களை கேள்வி வேறு கேட்கிறார்கள் - தேச பக்தி இருக்கிறதா என்று. என் நாட்டிற்கு, விஞ்ஞான துறையுடன் சம்பந்தப்படாத பொருட்களைக் கொடுக்கக் கூட தடைவிதித்த செய்கையால் அமெரிக்காவை எப்பொழுதும் கண்டித்துக் கொண்டிருக்கும் என்னையெல்லாம் நிரூபிக்கச் சொல்வார்கள் - தேச பக்தியை - தங்கள் தேசபக்தியை அடகு வைத்தவர்கள்.

அணுத்துறை சார்பாக சமீபத்தில் பல முன்னேற்றங்கள் - அமெரிக்கா நமக்கு உதவப் போகிறது என்றெல்லாம் பேச்சு. அது சரி, இந்த 25 வருடங்களாக நம்மை நசுக்கனும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த அமெரிக்கா -இப்பொழுது உதவ முன் வந்த காரணம்? சில உள்குத்து வேலைகள் இருக்கத் தானே செய்யும்? எனக்குத் தெரிந்த ஒன்று - நாம் நம் அணுக்கூடங்களை - civilian என்று அறிவிக்கப்பட்ட உலைகளை - சர்வதேச கண்காணிப்பாளார்கள் வரும் பொழுது திறந்து விடவேண்டும். அந்த உலைக்கூடங்களை எக்காரணம் கொண்டும் ராணுவ பயன்பாட்டிற்கு உகந்ததாக மாற்றக் கூடாது என்ற நிபந்தனை. இது போதுமே - ராணுவத்திற்கென தனியாக நாம் வைத்துக் கொள்ளலாமே என்று நினைக்கக் கூடும்.

இந்த நிபந்தனையின்படி, இந்திய அரசு - எது சிவிலியன் - எது ராணுவ உலை என்று தங்களைத் தேர்ந்தெடுக்கும் மக்களுக்கு அறிவித்திருக்கிறதா? நம் ராணுவம் தனக்குத் தேவையான அணுகுண்டுகளைத் தயாரித்துக் கொள்ள, போதுமான உலைகள் இருக்கிறதா என்று மக்களுக்கு உறுதிமொழி கொடுக்கப்பட்டிருக்கிறதா? (ராணுவ ரகசியங்கள் முன்னிட்டு, இடங்களைக் குறிப்பிடாவிட்டாலும், ஒரு உறுதிமொழியாக, ஊக்கமொழியாக அறிவித்திருக்கிறதா? சந்தேகம் தான். ஆனால், இதே சரத்தை அணுகுண்டு வல்லரசுகளாக அறிவிக்கப்பட்ட நாடுகள் எப்படி கையெழுத்திட்டிருக்கின்றன?

'தேவைப்பட்டால், சிவிலியன் உலைக்கூடத்தை ராணுவ உலையாக மாற்றுவோம் - எந்த முன்னறிவிப்புமின்றி.' இது சீனாவுக்கும் பொருந்தும்.

போதுமா? அமெரிக்காவின் நரித்தனம்?

'சோழியன் குடுமி சும்மா ஆடாது' என்பார்கள். அமெரிக்காவின் குடுமி மட்டும் சும்மா ஆடும் என்று எதிர்பார்க்க முடியுமா? நாம் நம்ப வேண்டும் - அமெரிக்கர்கள் பொறுப்பானவர்கள் என்று! ஆனால் அவர்கள் நம் நாட்டை ஒரு பொறுப்பான நாடு என்று நம்ப மாட்டார்கள். பாக்கிஸ்தான், வியட்நாம், லிபியா போன்ற சண்டிய நாடுகள் என்ற நிலையில் தான் வைத்துப் பார்ப்பார்கள். (இந்த ரோக் ஸ்டேட்ஸ் என்று குறிப்பிட்டது அமெரிக்கர்களின் பார்வையில். என் கண்ணோட்டம் அதுவல்ல. அந்த நாடுகளுக்கு என்று நியாயங்கள் இருக்கக்கூடும். அமெரிக்கர்களுக்கென்று நியாயம் எதுவுமில்லையா என்று கேட்காதீர்கள் - அவர்களுக்கு உள்ள பயங்களை - அராபியாவில் அம்மா முலையில் பால் குடிக்கும் குழந்தை கூட நம்மை அழித்து விடும் என்ற அதீத பயத்தைப் போக்க எத்தனை முயன்றாலும் அவர்களால் அந்த பயத்தை துறந்து, நிம்மதியாக இருக்க முடியாது. இது இறைவன் அவர்களுக்குக் கொடுத்த சாபம். யாரும் இதில் எதுவும் செய்வதற்கில்லை.)

இது தான் அமெரிக்கர்கள் நமக்குக் கொடுக்கும் மரியாதை. இதை சரி என்பவர்களைக் குறித்து எனக்கு எந்த கருத்தும் இல்லை. ஒன்றைத் தவிர - தேசபக்தியின் ஏகபோக குத்தகையாளர் நாங்கள் என்று பேசுவதை விட்டுவிடுங்கள்.

முகமூடி

இந்தப் பதிவே உங்களுக்கு ஒரு பாடமாக (பாடமாக:: படிக்க - விளக்கமாக) அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் எழுதுகிறேன். அதனால் தான் வேண்டுமென்றே இந்த திசை திருப்பல் - அமெரிக்காவைப் பார்த்து. இப்பொழுது சொல்லுங்கள் - இங்கு நான் சிலர் என்று குறிப்பிட்டு பேசுவதை என்னவென்று? நன்றாகத் தெரியும் - இது உங்களை நோக்கி வைக்கப்பட்ட கேள்வி அல்ல என்று. (தேச பக்தியின் ஏக போக உரிமையாளர் என்ற சொற்றோடர்) ஆனால் மேலே உங்கள் பெயரை எழுதிவிட்டதால், எழுதப்படும் அனைத்தும் தன்னைத் தான் குறிக்கிறது என்று நினைத்துக் கொண்டால், அது உங்கள் மொழி ஆளுமையின் குறை பாடே தவிர என்னுடையது அல்ல. (உங்கள் தெளிவிற்காக, தேச பக்தியைப் பற்றி நான் குறிப்பிட்டது - கேள்வி எழுப்பியது - சமுத்ராவை நோக்கி. தொடர்ந்து நீங்கள் என் எழுத்துகளைப் படித்துக் கொண்டிருந்தால், உங்களுக்கு தெளிவு கிடைத்திருக்கும். ஆனால், முன்னரே சொன்னது போல, நிதானமாக வாசித்துப் பதில் எழுதும் பொறுமை இல்லாத நீங்கள் என் வலைத்தளத்தில் இருக்கும் படங்களைக் கொண்டு எழுந்த அனுமானத்தில் உண்டாக்கிக் கொண்ட சித்திரங்கள் தானே? அப்படி இல்லையென்றால், மிக்க மகிழ்ச்சி.)

முகமூடி, (சீக்கிரமே பேரை மாத்துங்க நன்பரே - அழைப்பதற்கு சிறிது தயக்கமாக இருக்கிறது. :-) )

சம்பந்தமில்லா இடங்கள் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் - நீங்கள் தான் சொல்ல வேண்டும். பின்னூட்டங்கள் எல்லோருக்கும் உரியன. நான் பின்னூட்டம் எழுதுவது மட்டும் சம்பந்தமில்லா இடங்களில் என்று ஆகிவிடுமா என்ன? இப்படியான விமர்சனம் இதுதான் முதல் முறை. நான் எழுதிய வலைப்பூக்காரர்கள் இதுவரையிலும் இப்படி சொன்னதேயில்லை. உங்கள் தளத்தில் ஒன்று கூட நான் எழுதியதில்லை. நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். என்ன சொல்வது? தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டுமாம்!

மேலும், இந்த சம்பந்தமில்லாமல் எழுதப்படும் எழுத்துகள் எப்படி இருக்கும் தெரியுமா? சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் தான். எப்படி மேலெழுந்தவாரியாக எழுதிக் கொண்டே போகிறார்? அந்த ஸ்டைல் தான் சம்பந்தா சம்பந்தமில்லாமல் எழுதுவது என்பது. ஏன்? நினைவிற்கு வரவர எழுதிக்கொண்டே இருக்கலாம். பலருக்கும் ஒரே இடத்தில் பதில் சொல்லலாம். மேலும் தீவிரமாக ஒரு கருத்தை எழுத வேண்டியதில்லை. கலவையாக கதம்பமாக பதில் எழுதி விடலாம். இது எத்தனை விதத்தில் வசதியாக இருக்கிறது தெரியுமா, சுஜாதாவிற்கு? ஆனால் என்னுடைய பாணி அதுவல்ல என்று இப்பொழுது தெரிந்திருக்கும் - இல்லையா?

// இப்போது உங்கள் பாணியில் பேசினால், //

என் பாணி என்ன என்று உங்களால் விளங்கிக் கொள்ள இயலவில்லை இதுவரையிலும். இப்பொழுது தான் கொஞ்சம் உணர்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். என்றாலும் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள், உங்கள் அனுமானம் என்ன என்றும் தான் பார்ப்போமே!.

// உங்கள் மதம் எனக்கு தெரியும் என்ற காரணத்தால், IISCல் நடந்த தாக்குதல்களை குறித்து உங்களிடம் விவாதித்தால் நீங்கள் ஏன் இப்படியெல்லாம் காட்டுமிராண்டித்தனமாக செயல்படுகிறீர்கள் என்று கேட்டால் ஓகேவா? //
முதலில் நான் இதுகுறித்து மேலே ஒரு பெரிய விளக்கம் கொடுத்து விட்டேன். மீண்டும் ஒரு முறை விளக்குகிறேன். நீங்கள் (முகமூடி) என்னிடம் நீங்கள் இப்படி செய்கிறார்களே இது சரியா என்று கேட்டால், தீவிரவாதத்தில் நம்பிக்கை உள்ள அந்த இளைஞர்களைப் பற்றித் தான் கேள்வி எழுப்புகிறீர்கள் என்பதை புரிந்து கொண்டு அவர்கள் (தீவிரவாதிகள்) செய்வது தவறு தான் என்று பதில் சொல்வேன். ஆனால், நீங்கள் (சில வலைப்பதிவாளர்கள் - தினசரிகள். இந்த சில வலைப்பதிவாளர்களில் நீங்கள் இருக்கிறீர்களா, இல்லையா என்று எனக்குத் தெரியாது. ) எழுதும் பொழுது எவ்வாறு என்று எழுதுகிறீர்கள் - இஸ்லாமிய தீவிரவாதி என்றல்லவா? இங்கு தன்மை, முன்னிலை, படர்க்கை என்றெல்லாம் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாமல், தெளிவாக இஸ்லாம் என்று குறிப்பிட்டு, எழுதுவதைத் தான் கேள்வி எழுப்புகிறோம். தீவிரவாதிகள் அனைத்து மதத்திலும் இருக்கையிலே அவர்கள் எல்லாம் மதம் சாராத குற்றவாளிகளாகவும், இஸ்லாமியனாக இருந்தால், அவனை மதத்தோடு இணைத்து விடுவது மட்டும் எந்த விதத்தில் நியாயம் என்று தான் கேள்வி கேட்கிறோம். இந்த தெளிவு என்னிடமிருக்கிறது. ஆனால், உங்களிடம் இல்லாத பொழுது, அதை நான் என்னவென்று சொல்வது? தீவிரவாதத்தைக் கண்டிப்பதில் அனைவரும் முன்வரவேண்டும் - அது எம்மதத்தைச் சார்ந்ததாகவும் இருந்து விட்டுப் போகட்டும். ஏன் இதை கருத்தில் வைக்க மாட்டேனென்கிறீர்கள்? உங்களுடையது எந்த விதத்தில் நேர்மையானது சொல்லுங்கள் பார்ப்போம்.?


மேலும் இப்படியெல்லாம் எழுதவில்லை என்று யார் சொன்னது? விழித்துக் கொண்டு உலகில் என்ன நிகழ்கிறது என்று பாருங்கள் நண்பரே -

எழுதத் தான் செய்கிறார்கள்.

நீங்கள் எழுதவே இல்லை இதுவரை என்று சொன்னால் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் - நியாயமாக நடந்து கொள்ளும் ஒரு மாற்று மத சகோதரர் இருக்கிறார் என்று.

உங்களைப் போன்ற அன்பர்களையும் அழைக்கிறோம் - அத்தகைய தவறான எண்ண ஓட்டத்தில் இருந்து மற்றவர்களையும் வெளிக் கொண்டு வர துணை புரியுங்கள். செய்தீர்கள் என்றால் நல்லது - இல்லையென்றால், அதனால் வருத்தமில்லை. தொடர்ந்து, பொய் பிரச்சாரங்களை எதிர்த்து எழுதுவோம்.

// மதக்கோட்பாடு எந்த சிந்தாந்தத்தில் எழுப்பப்பட்டாலும் கிறிஸ்துவ தீவிரவாதம் என்ற சொல் இல்லாத நிலையில் இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்வதும் முறையற்றது என்று வாதிடுபவன் நான். //

உங்கள் எண்ணத்திற்கு மிக்க நன்றி. இத்தகைய சிந்தனைகள் வளர வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை.

மிக்க மகிழ்ச்சி, முகமூடி.

இதே அலைவரிசையில் விவாதங்கள் தொடரும் என்றால்.

அன்புடன்
நண்பன்

Thursday, January 12, 2006

வாழ்க்கை இனிப்பாகத்தான் இருக்கிறது.

பிறந்த நாளன்று, பெங்களூரில் இருக்கும் மனைவி, மகன், மகளுக்கு ஒரு இனிய கடிதம். என் பெயரைப் பார்த்ததுமே நெகட்டீவ் ஓட்டு குத்தணும்னு கை நமநமக்கிறவங்கல்லாம் கொஞ்சம் பொறுமை காத்து அடுத்த பதிவில் போடுங்க. ரைட்?

****




அன்பின்
அன்பான மனைவியே
இரண்டாவதாகப் பிரிந்ததும் தான்
உணர்கிறேன்
உன்னை எத்தனை தூரம்
காதலிக்கிறேனென்று.

முதல் பிரிவின்
வலியைத் துடைக்க வந்து
வலி கூடிப்போய்த் திரும்பினேன்.

உன்னை மீண்டும் பார்க்க
இன்னும் வெகுதொலைவு
நடக்க வேண்டுமென்ற புரிதலில்
கூடிப்போன வலியை
சுமந்து திரிகிறேன்.

பிரிவின் நடுவேயும்
வாழ்ந்த ஒருமாத வாழ்க்கை
இன்றும் பசுமையாய் இருக்கிறது
கடலில் மிதக்கும்
ஒரு குட்டித் தீவைப் போல.

நீயும் நானுமாய்
தனித்திருக்குமிடத்தில்
பாலையும் பசுமையாயிருக்கும்.

இங்கெல்லாம்
எனக்குப் பசுமையாய்த்
தானிருக்கிறது.
உனக்கென
நான் விரித்து வைத்த
வானத்தில்
தன்னந்தனியாய்
உன் நினைவுகள்
பறந்து கொண்டேயிருப்பதால்

இன்னும் ஒரு வருடம் வாழ
போதுமான வாழ்க்கையை
எடுத்து வந்திருக்கிறேன்
மனதின்
ஏதோ ஒரு மூலையில்
மறைத்து வைத்து.

யாரும் அறியாத சமயத்திலே
நான் மீண்டும் வாழ்வேன் -
மனதின்
மறைவிடங்களின் தனிமையில்.

உன் மூச்சுக் காற்று
என் நுரையீரலில்
மோதப்போவதில்லை தான்.

நடுநிசிக் குளிரில்
இருளைத் துழாவி
உன் போர்வைக்குள்
வந்துவிட முடியாது தான்.

எந்த ஒரு கைப்பக்குவமும்
உன் சமையலின்
சுவையைத்
தந்துவிட முடியாது தான்.

என்றாலும்
இந்த நினைவுகளாலும்
தரமுடிந்தது ஒன்றுண்டு -
இத்தனை
வருடங்கள் கழித்தும்
நம்மிடையே காதல்
பூத்த தினத்தின் மலர்ச்சியோடு
இருக்கிறதென்ற உணர்வு தான்.

நடுநடுவே
வந்து போன சண்டைகளில்
காதல் தொலைந்து போனதாக
வந்த நினைப்புகள்
ஆவியாகிப் போனதே
இந்த பிரிவின் பரிசானது.


சிறுவனாய்
நான் விட்டு வந்த
நம் மகன்
இன்று
உனக்கு நண்பனாய்
வளர்ந்து விட்டது
ரசிப்பதாயிருக்கிறது.

அழாமலிருப்பேனென்று
அழுது கொண்டே
சொன்ன மகள்
தன்னைத் தானே
கவனித்துக் கொள்ளும்
ஆளாகி விட்டதை
அருகேயிருந்து
பார்த்து வியக்கவியலாத துயரம்
வற்றா நதியாய்
ஓடிக்கொண்டேயிருக்கிறது.

நானில்லாத வாழ்க்கையை
வாழக்கற்றுக் கொண்ட
உங்கள் வாழ்வில்
உள்ளே நுழையாது
விலகி நின்று பார்த்தால்
வாழ்க்கை
இனிப்பாகத்தான் இருக்கிறது

Wednesday, January 11, 2006

BOSLAN

போஸ்லான்


முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும்

முன்னம்
பக்கத்து நாடுகள் விழுங்கி
யூனியன் ஆகி
சமத்துவம் வளர்த்தது.

ரொட்டித் துண்டுகளின்
வினியோக வரிசையில்
உணவிற்கு உரிமைகள்
பண்டபரிமாற்றம்.

உண்ணத் திறக்கும்
வாயைக்கூட
அளந்தே திறக்க வேண்டும்.
ரகசிய உளவாளிகள்
நாடெங்குமுண்டு.

மீறித்திமிறும் குரல்கள்
சைபீரியப் பனிப்பாலையில்
உறைய வைக்கபடும்.

தேவாலய மணிக்கூண்டுகள்
ஊனமானது.
மசூதியின் அழைப்போசை
ஊமையானது.

அடக்கி ஒடுக்கப்பட்ட
நம்பிக்கைகள்
ஆங்கோர் அக்னிக்குஞ்சாய்
மனத்திடை மறைந்து கனன்றது.

வேடிக்கை காட்சிகள்
விண்ணிலும், மண்ணிலும்
தொடர்ந்தன.
நிலவைத் தொட்ட
ஆசையடங்குமுன்னே
ஆஃப்கன் அணங்குகளின் மீதும்
செங்கரம் நீண்டது.

பிணம் தின்னும் கழுகுகளும்
களம் புகுந்தது -
பனிப்போரின் ஆடுகளமாக
ஆஃப்கன் ஆகிப்போனது.

முரட்டுப் பத்தான்கள்
முஜாஹிதீன்கள் ஆனார்கள்
முனைந்து நடத்திய யுத்தத்தில்
மூக்குடைபட்டுப் போனது
வல்லரசுவும்

ஆயுதம், மனோதிடம் -
எந்த நாட்டையும்
உலுக்கிவிடலாம்
ஆஃப்கனில் உருவானது

வளர்த்த இரு நாடுகளும்
கூவிக்கூவி அழைக்கின்றன
அனைத்து நாடுகளையும் -
அடக்கி விடுவோம்
தீவிரவாதத்தை.

வினையின் எதிர்வினை
என்றறியாமலே
மக்கள் போராட்டங்கள்
தீவிரவாதமாயின.

சிறு குழுக்கள்
குண்டு போட்டால்
தீவிரவாதம்
பெரும் நாடுகள்
மனிதனை அம்மணமாக்கினால்
விசாரணை யுக்தி.

பயங்கரவாதமடக்க
சேனைகள் தேடித்துழாவின
கன்னிகளின் கர்ப்பக் குழிகளை.

வீசிய குண்டுகளில்
மலர்களின் மகரந்தம்
சாம்பல் துகள்களாக -
மலராத மொட்டுகளில்
புதைக்கப்பட்டது
ஆணவ விந்தணுக்கள்.

யுத்தத்தில் கொடியது -
எதிரியின்
பண்பாட்டு சின்னங்களை
சிதைத்து விடும் சிறுமை -
எத்தனை உயரம் போனாலும்
யுத்ததந்திரம் மட்டும்
ஆதிகால வாசனையைத்தான்
முகரும்.

பண்பாட்டுச் சின்னங்கள் -
வணங்கும் தலங்கள்
இசைக்கும் இசை
உண்ணும் உணவு
நாற்றங்காலில் பயிராகும்
குழந்தைகள் -
இத்துடன் பெண்ணின் பெருமிதம்

கட்டுக்கோப்பான சீருடைகள்
எதிரியின் பெண்களை
ருசிக்கையிலே
குருடாகிப் போன அரசுகள்
பாண்டவர் காலம் தொட்டு
இராக் வரையிலுமுண்டு

‘யுத்தங்களை எடுத்துச் செல்
எதிரியின் மண்ணிற்கு -
நம் பெண்கள்
நம் குழந்தைகள்
நம் வீடுகள்
அழியாதிருக்க...’

அவரவர் நியாயம்
அவரவர்க்கு...

‘ஒரு கன்னத்தில் அடித்தால்
இரு மடங்கு பலத்துடன்
மறுகன்னத்தில் அடித்து விடு’
தீவிர வாதிகள்
புதுவேதம் ஓதினார்கள்.

புதுவேதம் புரியாதவர்கள்
எதிர்வினைக்கு தொடர்வினையாக,
மயக்க மருந்துகளின் வலுவில்
மறந்து விட்டனர் -
சமரசம்
பேசுவதெப்படியென்பதை!

குரல்வளையைத் திருகியே
பழகிய தலைமை
புஜ வலிமைக் காட்டியே
காரியம் சாதிக்க நினைக்கிறது.

யார், எவரையும் விட
பாடம் கற்பதில்
உருமாறிக் கொள்வதில்
புது இடத்திற்கு
இணங்கிப் போவதில்
தீவிரவாதிகளின் வேகம்
வியப்பானது

வேகத்தைக் கணிக்க
அரசு எந்திரத்திடம்
மனம் இல்லை -
மனிதம் இல்லை.

அன்று
நீ என்னையடித்தாய் -
இன்று
நானுன்னை அடித்துவிட்டேன்
தொடரும் தீவிரவாதம்
அரசு அமைப்பிலிருந்தும்
போராடும் குழுக்களிலிருந்தும்

யுத்தவாதிகளே...!
எதை வேண்டுமானாலும்
அழியுங்கள் -
எத்தனை முறை வேண்டுமானாலும்
அழியுங்கள்
அல்லது
அழிந்தொழியுங்கள்


யுத்தங்களை மட்டும்
உங்களையொத்த
வயதுடைய வீரர்களோடு
நிறுத்திக் கொள்ளுங்கள்

உங்கள் யுத்தம்
குழந்தைகளோடும்
குழந்தைகள் துயிலும்
கர்ப்பப் பைகளோடும்
மட்டும் வேண்டாம்

Tuesday, January 10, 2006

திசைகள் இதழில்....

திசைகள் இதழில் குஷ்பு / சுஹாசினி மற்றும் அவர்களது ஆதரவாளர்களை விமர்சித்து எழுதிய கவிதை இது.

http://www.thisaigal.com/jan06/PoemShajahan.htm

பதிப்பித்த ஆசிரியர் மாலனுக்கும் அவரது குழுவிற்கும் நன்றி.

புதிதாக ஆசிரியர் பொறுப்பேற்க இருக்கும் அருணா ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

பத்ரிக்கு ஒரு பதில்....

பத்ரி,

// "நண்பன்" போன்ற அற்புதமான நண்பர்கள், சிலருடைய பெயர்களைப் பார்த்ததுமே அவர்கள் தவறு செய்யக்கூடியவர்கள்தான் என்று முன்முடிவு செய்துவிடுகிறார்கள் அல்லவா, அவர்களுக்கும் முழுவிவரங்கள் தேவை.//

மிக்க நன்றி.

என்னைப் போன்ற "நண்பர்களுக்கும்" தெளிவளிக்கக் கூடிய விளக்கம் தர வேண்டும் என நீங்கள் முனைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

நீங்கள் குறிப்பிட்டது போல பெயர்களைப் பார்த்ததும், அவர்களைப் பற்றிய குணநலன்களை புட்டு புட்டு வைக்கும் அளவிற்குஎனக்கு 'ஜாதகம்' பார்க்கத் தெரியாது. பெயர்களின் பின்னால் நூலிழையாக ஓடக் கூடிய வரலாறுகளை அறிந்திருக்கும் புலமை - கலை கை வரவில்லை. ஒரு பெயர் என்பது இன்னமும் எந்த மொழியைச் சார்ந்த பெயர் என்பதை கூட, அவர்களாக விளக்கம் சொன்னாலன்றி எனக்குப் புரியாது. நீங்கள் சொன்னவாறு அர்த்தம் செய்து கொள்ள இனி தான் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தில் இந்த பெயர்கள் மீதான என்னுடைய பலவீனமான புரிதல்களை நானே கிண்டல் செய்து எழுதிய இந்தக் கவிதையைப் படித்து பாருங்கள்.

****
http://nanbanshaji.blogspot.com/2005_07_01_nanbanshaji_archive.html

ஞானம்.

***
எனக்கு
எல்லா முகங்களும்
தெரியும்.

எனக்கு
எல்லா பெயர்களும்
தெரியும்.

ஆனாலும்
எல்லோரையும்
'நண்பனே' என்றுதான்
விளிக்கிறேன்.

மரியாதையின்
பொருட்டு மட்டுமே
அல்ல.

எந்தப் பெயருக்கு
எந்த முகம் என்ற
ஞானம்
இல்லாததினாலும் தான்.....

****
ஆமாம் - இத்தனை தான் என்னால், ஒருவரின் பெயரைப் பார்த்து புரிந்து கொள்ள முடியும். இந்தக் கவிதைக்கு இந்த கிண்டல் தொனியைத்தாண்டி வேறு ஒரு ஆழமான பொருளும் உண்டு. விளக்கம் எல்லாம் தந்து கொண்டிருப்பது என் வேலையல்ல.

இத்தருணத்தில், நான் மீண்டும் சொல்கிறேன் - Let some one tell them that secularism is not a premise for denying the identity of a human - but, it’s a doctrine that accept others with different identities, as equal while you keep your identity.

இந்த விவாதத்தில் நான் குறிப்பிட விரும்பியது, வெற்றி பெற வேண்டும் என நினைப்பவர்கள், அதற்கான தங்கள் தகுதிகளை வளர்த்து கொள்ள வேண்டும் - அதை விட்டு விட்டு, அதே போட்டியில் இருக்கும் மற்றவர்களே அதையும் நமக்கு சொல்லித் தர வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் ஏமாற்றமுறுவதாய் புலம்புவதும் நம்முடைய தகுதியின்மையே தவிர வேறல்ல என்ற வகையில் தான். அதை கொஞ்சம் வலிக்கும்படியாகவே சொல்லி இருக்கிறேன். பின்னே அது கூட இல்லையென்றால், எப்படிங்க?

இதில் நீங்கள் வருத்தப்படுவதற்கு ஏதுமில்லை.

நண்பன் சொன்னதால், அது உங்களுக்கு வித்தியாசமாகத் தோன்றுகிறது என்றால் நீங்கள் தான் அதை விளக்க வேண்டும்.

// இந்த வாக்கெடுப்பு பற்றி நான் என் வலைப்பதிவில் குறிப்பிட்டிருக்கலாம். செய்யவில்லை. அதற்கு உங்களிடமும் பிற தமிழ் வலைப்பதிவர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.//

நீங்கள் மன்னிப்பு கேட்டுக் கொண்டதாய் எழுதி இருக்க வேண்டிய அளவிற்கு அவசியமில்லை. அவ்வாறு கேட்டுக் கொண்டதாய் சொன்ன பொழுது அதை எல்லோரிடமும் மனப்பூர்வமாய் கேட்டுக் கொண்டதாய் தான் கருதினேன். இல்லை நீங்கள் சுந்தர வடிவேலுவிற்கு மட்டும் தனிப்பட்ட முறையில் சொன்னதாக நினைத்தீர்களென்றால் - வருந்துகிறேன். ஏதோ நானும் ஒரு சக வலைப்பூக்காரன் என்பதால், என்னிடமும் கேட்டுக் கொண்டதாகக் கருதி, குறுக்கே புகுந்து என் மன்னிப்பை வழங்கியதற்காக.

நண்பன் போன்ற நண்பர்கள் -

நீங்கள் ஒரு பொதுமைப்படுத்திய கூறிய கூற்றிற்கு நண்பன் என்ற என் புனை பெயர் உங்களுக்குத் துணை நின்றது குறித்து மிக்க மகிழ்ச்சி. நண்பன் தானே நட்பிற்கு உரிய ஆளுமை உடைய ஆள்.

நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் - நண்பன் என்ற மனிதன் நிச்சயமாக அற்புதமான மனிதன் தான். ஒரு எழுத்தாளானாக வளரவேண்டும் என்ற ஆவல் உடையவன் நான் - ஒரு புத்தக பதிப்பகத்தாராக நீங்கள் - என்றாவது ஒரு நாள் - ஒரு புள்ளியில் சந்திக்காமாலா போய்விடுவோம்?

அப்பொழுது உணர்வீர்கள் - நண்பன் என்ற மனிதனைப் பற்றி. மாற்று கருத்துகளை மதிக்கும் பண்புடையவன் என்று.

அதே சமயம், என்னுடைய கருத்துகளை வலிமையாக ஆழமாக வலிக்கும் படியாக எடுத்து வைப்பவன் என்றும்.

புத்தகங்கள் தேர்வு செய்வதற்காக, Anyindian. com ல் தேடுவதும், கிழக்குப் புத்தகத்தார் என்ன புத்தகம் புதியதாகப் போட்டிருக்கிறார்கள் என்று தேடும் பொழுதெல்லாம் - கிழக்கு பத்ரிக்குச் சொந்தமானது, எனி இந்தியன். காம் PKSக்கு சொந்தமானது - அதனால் இங்கே எல்லாம் வாங்க கூடாது, உயிர்மையில் தான் வாங்க வேண்டும் என்றெல்லாம் நான் கணக்குப் போட்டதில்லை. ஏனென்றால் ஷாஜஹான் என்பது எப்படி ஒரு மனிதனைக் குறிக்கும் ஒரு அடையாளமோ, அப்படித்தான் பத்ரியும், PKSம். ஒரு மனிதனை குறிக்கும் ஒரு சொல் - ஒரு அடையாளம் என்பதைத் தவிர, வேறெதையும் தோண்டுவதில்லை.

இல்லையென்றால், என் நூல் நிலையத்தில் குறிப்பிடத்தக்க அளவிற்கு கிழக்குப் புத்தகங்கள் இருக்காது. நாகூர் ரூமியின் இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம் என்ற புத்தகம் உட்பட.

ஆகையால், பத்ரி அவர்களே மன அழுத்தம் தவிருங்கள்.

திசைகள் மாலனுக்கு ஒரு கவிதை அனுப்பினேன் - பின்நவீனத்துவம் என்ற பெயரில். புது வருட இதழில் வெளியாகி உள்ளது. குஷ்பு விவகாரத்தில், மாலனுடைய நிலை என்னவென்று, எல்லோருக்கும் தெரியும். அவருக்கு அந்த கவிதையுடன் ஒரு குறிப்பும் அனுப்பினேன். அதில், குறிப்பிட்டது, மாலன், உங்கள் நிலைக்கு எதிரான கருத்து கொண்ட கவிதை இது. உங்கள் கருத்தை முற்றிலுமாக எதிர்க்கும் கவிதை இது. எப்படி ஆதரிப்பதுஉங்கள் கருத்து சுதந்திரமாகிறதோ, அதே போல ஆதரிப்பது என்னுடைய கருத்து சுதந்திரம். மாற்று கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்பளித்து பிரசுரிப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று எழுதி அனுப்பினேன். அந்த கவிதை வெளி வந்த பொழுது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. திசையில் என் கவிதை வருவது இது முதல்முறை அல்ல. மாற்று கருத்தாக இருந்தாலும் மாலன் அதை வெளியிட்டது தான் மகிழ்ச்சிக்குக் காரணம். மற்றபடி பல இணைய இதழ்களில் என் கவிதைகள் வரத்தான் செய்கின்றன.

அதுபோலத்தான் - உங்கள் நண்பர்களின் கருத்தை முற்றிலுமாக எதிர்த்து எழுதுகிறேன். ஆனால், அதற்காக பெயர் நோக்கி அரசியல் செய்பவன் அல்ல.

நன்றி....

Monday, January 09, 2006

வாய் சொல் வீரனடி - கிளியே....

//என்னமோ போங்க, நான் கூட அமீரகத்துல தான் இருக்கிறேன்.என்னுடைய பதிவுக்கு வருவாங்க, பின்னூட்டம் போடுவாங்க.ஆனா மறந்தும் + குத்திடமாட்டாங்க. இதுவரை இரண்டே இரண்டு பதிவுகள் "நட்சத்திர அந்தஸ்து" பெற்றிருக்கின்றன. அதுல ஒண்ணு அல்பாயிசு. மறுநாள் பார்த்தால் காணவில்லை. அடுத்த ஒன்று வெற்றிக்கரமான நாலாவது நாள். இருங்க இன்றைக்கு இருக்கிறதா என்று இன்னும் பார்க்கவில்லை :-)//

பூங்குழலியின் பதிவு ஒன்றில் பின்னூட்டமிட்டிருக்கிறார் சகோதரி, உஷா.

சகோதரி ராமச்சந்திரன் உஷா,

நானும் கவிதைகள், கதை, இலக்கியக் கட்டுரைகள் எல்லாம் எழுதித் தான் பார்த்தேன் - பார்க்க பழம் பெரு ஆரம்ப காலப் பதிவுகளை.
என்றாலும் ஒருவர் கூட வந்து எட்டிப் பார்க்கவில்லை. ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. என்றாலும் சரி அப்படியே இருக்கட்டும் என விட்டுவிட்டேன்.

அப்பொழுது தான் ஆயிஷா என்ற அற்புதம் தலைப்பில் எழுதினேன் - மிகுந்த வரவேற்பு. தொடர்ந்து இஸ்லாத்தின் மீதான தாக்குதலுக்கு எதிரான பதிவுகள் அனைத்திற்குமே மிகுந்த வரவேற்பு இருந்தது.

தங்களுக்கு மட்டுமே தேசமும், பக்தியும், சொந்தம் என நினைக்கும் சில தேசபக்தர்களின் முகத் திரையைக் கிழிந்தெறிந்த அந்தக் கடைசிப் பதிவிற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்வு தருகிறது. அதிலும் கனிசமான அளவிற்கு மைனஸ் குத்தத் தான் செய்திருக்கிறார்கள். அதாவது எங்களுக்கும் இந்த தேசம் உரிமை உடையது. எங்களுக்கும் இந்த தேச பக்தி எல்லாம் இருக்கிறது. தீவிர வாதிகள் என நீங்கள் சொல்லும் இனம் எல்லா மதத்திலும் இருக்கிறது. அதை எல்லாம் கண்டிக்க உங்களுக்குத் தான் திராணியில்லை என்று ஒரு இஸ்லாமியன் சொன்ன போது அதை அனைவரும் எதிர்ப்பின்றி வரவேற்றிருக்க வேண்டும்.

ஆனால், அதிலும் மைனஸ் குத்திய வக்கிரம் பிடித்த மனதுடைய உயர்தரங்கள் தங்கள் மனதின் ஊனத்தைத் தான் வெளிப்படுத்திக் கொண்டார்கள்.
மேலும் இங்கு புலம்பும் வாய்ச்சொல்வீரன் - வீரன் என்ற பெயர் வைத்துக் கொண்டு பேடி போல ஒளிந்து வாழும் இந்த மனிதன் - புலம்புகிறார் - அமீரகத்தில் தான் அறிவுள்ளவர்கள் இருக்கிறார்கள் என்று. நீர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அறிவுஜீவித்தனம் கல்வி கற்றறிந்த அனைவருக்கும் பொதுவானது தான். கல்வி, அறிவு என்பதெல்லாம் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என உரிமை கொண்டாட இனி யாராலும் முடியாது. அதற்குப் போட்டியாக இன்று பலரும் கிளம்பி விட்டனர். இந்த உண்மை தாங்காமல், இன்று அழுது அரற்றிப் புலம்பும் வாய் சொல் வீரனைப் பார்த்து கொஞ்சம் பரிதாபமாகத் தான் இருக்கிறது.

உஷா, அமீரகத்தில் இருப்பதால் மட்டும் அறிவுஜீவி என்று ஒருவர் சொன்னால் அதை அப்படியே ஏற்றுக் கொண்டதை நினத்து மனம் வருந்துகிறேன். அந்தப் பதிவில் அனைவருக்கும் உடன்பாடிருந்திருக்கிறது. இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, பிற மதத்தினர் உட்பட. ஒரு சிலரைத் தவிர அனைவருக்கும் அந்தப் பதிவில் உடன்பாடே. அதனால் மட்டுமே அத்தனைப் பதிவுகளைப் பெற்றது. இரவு ஒரு மணி தாண்டியும், சில சமயங்களில் - எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் - பார்த்தால், என் பதிவை வாசித்துக் கொண்டிருப்பார்கள் - அமெரிக்காவில் இருந்து. எனக்குத் தெரிந்து பெரும்பாலான சமயங்களில் இந்த மேலை நாட்டு நண்பர்களின் உலாவுதல் தான் அதிகமே தவிர, இஸ்லாமிய நண்பர்கள் மட்டுமே அல்ல.

அதற்கு காரணமென்ன?

தெளிவான கருத்துகள், விளக்கம் கொடுக்க முடிகின்ற தெம்பு, இயல்பான நடை, இத்துடன் இனப்பாதுகாப்பில் உறுதியுடன் நிற்பது. வாதத்தில் மாற்று மதத்தினரை இழிவு செய்யாதிருப்பது - எங்காவது ஒரு பதிவை சுட்டிக்காட்டுங்கள் பார்ப்போம் - இந்து மதத்தைப் பற்றியோ, அல்லது, பிற மதங்களைப் பற்றியோ இழித்தோ, பழித்தோ பேசியிருக்கிறேனா என்று. கிடையாது. என் மதத்தைப் பற்றிய குற்றச்சாட்டிற்கு மட்டுமே பதில் சொல்கிறேன். நீ என்னை இழிவு செய்தால், பதிலுக்கு உன்னை இழிவு செய்வேன் என்று எங்குமே நான் செயல்பட்டதில்லை. இழிவு செய்தவர்களைக் கூட பதிலுக்கு நியாயமான முறையிலே தான் அழைக்கிறேன். வெறுப்பு உமிழும் மொழியால் அல்ல. அதனால், மற்றவர்களும் மரியாதையுடன் நடந்து கொள்ளவே செய்கின்றனர். இந்த மரியாதையோடு விலகி நிற்பதை விட்டு விட்டு, விவாதங்களில் கலந்து கொள்வது எல்லாருக்குமே நன்மை பயக்கும்

எப்பொழுது மதிப்பிழந்து போவார்கள்?

பிற மதத்தினரைப் பார்த்து ஏதாவது குறை சொல்லி எழுதுவதும், பின்னர் ஜகா வாங்குவதும், எழுதும் விஷயங்களைப் பற்றிய முழுமையான ஞானம் இல்லாது இகழ்வதும், பின்னர் மற்றவர்கள் வந்து, விளக்கம் கொடுக்கும் பொழுது தனது கருத்தை மாற்றிக் கொள்வதும் வாசிப்பவர்கள் மத்தியில் நம்பிக்கையின்மையைத் தான் வளர்க்கும்.

கதைகள் மட்டும் எழுதி விட்டு, அதை மற்றவர்களுக்கு பரிந்துரைக்கவில்லையே என்றால் என்ன செய்வது? பரிந்துரைக்க வேண்டுமென்றால், அதில் ஏதாவது விஷயமிருக்க வேண்டும் இல்லையா? அப்படி இல்லையென்றால், அதைப் பரிந்துரைத்து என்ன லாபம்?

பரிந்துரைகள் கிட்டாததினால் வருத்தமடையும் நீங்கள் - எத்தனை பேருடைய கதை கவிதைகளைக் குறித்து விமர்சித்து இருக்கிறீர்கள்?

வாய்ச்சொல் வீரனின் புலம்பலுக்கு இத்தனை மெனக்கெடும் நீங்கள் - மற்ற கதை கவிதை எழுதும் அன்பர்களின் தளத்திற்குப் போய் உங்கள் விமர்சனத்தையும் பரிந்துரைத்தலையும் வையுங்கள் - பின்னர் அனைவரும் உங்கள் படைப்பிலக்கியத்தின் மீதும் கவனம் கொள்வார்கள். ஏன் உங்களுக்குத் தெரியுமா - வெறும் கவிதைகள் எழுதத் தான் நான் வலைப்பூவிற்கே வந்தேன் என்று?

பிறரை மதிக்கும் பொழுது, நம்மையும் பிறர் மதிப்பர்.

முடிக்கும் முன், ஸ்ரீகாந்த் மீனாட்சி எழுதிய சுஜாதவைப் பற்றிய பதிவுக்கு எழுதிய பின்னூட்டத்தின் கடைசி சில வரிகளை இங்கு வைத்து விடுகிறேன் உங்கள் பார்வைக்கு -

// He (சுஜதா) did not have any other option to get recognised other than by his own community and he grabbed the opportunity as it had come. Still, he was better than S.V.Shekhar and Cho.Ramasamy - who abstained for their own motives.
After all, Sujatha had gathered enough guts to show his true color whereas still lot of human (சோ மற்றும் எஸ்வி சேகர்) around try to prove that they are secular by staying away from their own people.

Let some one tell them that secularism is not a premise for denying the identity of a human - but, it’s a doctrine that accept others with different identities, as equal while you keep your identity.

Thanks and best wishes for the New Year.//

ஆம் - உங்களை உங்கள் அடையாளங்களுடன் சேர்த்தே மதிப்பு கொடுப்பேன். அதனால் பயப்படாமல் உங்கள் கருத்துகளை எழுதுங்கள். எழுதியவற்றை நீக்கவோ மறுக்கவோ வேண்டாம்.

''நான் அப்படியெல்லாம் இல்லையாக்கும்'' - என்று மறுக்க வேண்டாம்.

இல்லையென்றால் - நண்பர் ஆசிஃப் மீரானிடம் புகார் சொல்லியிருப்பீர்களா - நண்பன் ரொம்ப காட்டமா எப்பவும் பதில் சொல்றார் என்று???

(வருத்தமில்லை - ஆனால், புன்னகைக்கத் தோன்றுகிறது.)

சரி - இந்த பதிவு எதற்கு என்று கேட்கிறீர்களா? வாய் சொல் வீரனுக்கு நீங்கள் கொடுத்த முக்கியத்துவம் - போலி பெயர்களில் வருபவரின் கூற்றை இத்தனை சிரமேற் கொள்ள வேண்டுமா என்ற கேள்வி தான்.

மற்றவை - உங்கள் மனசாட்சிக்கு. ( பலரின் மனசாட்சிகளை கூர்ந்து அணுகி ஆராய்ந்து கதை எழுதும் சகோதரிக்கு தன்னுடைய மனசாட்சியை கூர் பிரித்து நோக்குவதற்கு நான் சொல்லித் தர வேண்டுமா என்ன?)

நன்றி,

அன்புடன்
நண்பன் என்ற ஷாஜஹான்.

Friday, January 06, 2006

அர்த்தமுள்ள சாஸ்திரங்கள் ???

நுனிப்புல் உஷாவின் அர்த்தமுள்ள சாஸ்திரங்கள் -

கிளறி விட்ட சிந்தனைகளின் தொடர்ச்சி தான் இது.

உஷா இரண்டு விஷயங்கள் பற்றி சொல்லி இருக்கிறார் -

ஒன்று தர்க்கம் பற்றிய அவரது கருத்து.
மற்றது இந்தியாவின் மூத்த குடிகள் கடைபிடித்து வந்த செயல்கள் அர்த்தமற்றவை என்ற தொனியில் எழுதப்பட்டவை.

முதலில் வாக்குவாதங்களைப் பற்றிய அவரது கருத்திற்குப் பதில்:

//பொதுவாக வாக்குவாதங்கள், தர்க்கங்கள் என்னை கவருவது இல்லை. காரணம் உண்மை மற்றும் பொய்கள், தவறு மற்றும் சரியான கருத்து என்பது இரண்டு பக்கமும் இருக்கும்.//

அதையும் தாண்டி ஒன்றிருக்கிறது. ஒருவன் தன் இருப்பின் நியாயத்தையும் நிலை நிறுத்த வேண்டி இருக்கிறது. குற்றச் சாட்டுகளை மறுக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிற பொழுது, தன் கருத்தை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அது தான் உண்மை.

நீங்கள் சொல்லுவது போல, பொய்யையே முழக்கமிடும் நபர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். புரிதலற்ற அவர்களுக்கு விளக்கம் கொடுக்க முனையும் பொழுது அதை தர்க்கமாக மாற்றிவிட்டால் என்ன செய்வது.?

இறுதியாக அவரவர் நியாயம், தர்மம் அவரவர்க்கு. அதைப் புரிந்து கொண்டால் சரி.

தன் இருப்பை, தன் நிலையை எடுத்து வைப்பதில் ஒன்றும் தவறில்லை.

//நல்ல நட்புகளுடன், பரஸ்பர மரியாதையுடன் ஏற்படும் விவாதங்கள், பேச, பேச எதிர் கருத்தை ஒத்துக் கொள்கிறோமோ இல்லையோ மனதிற்கு சுகமாய் இருக்கும்.//

ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பாராட்டிக் கொள்வதும், மாற்று சிந்தனைகளை ஏற்க மறுப்பதும் உங்களின் தனிப்பட்ட விருப்பங்களாக இருக்கலாம். ஆனால், அவைகளையே எல்லோரும் செய்ய வேண்டும் என்று விரும்புவது நல்லதல்ல. அதன் மூலம், நம் குறைபாடுகள் நமக்குத் தெரியவராது போய்விடலாம். உதாரணமாக, உங்கள் மீதுள்ள அன்பால், உங்கள் எழுத்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டாது நண்பர்கள் இருந்திருப்பார்களேயானால், பிழையின்றி எழுத வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்கு இருந்திருக்காது இல்லையா?
அது மாதிரி தான் - வாதங்களும், தர்க்கங்களும்.

கண்ணாடியின் முன் நிற்கும் பொழுது, நமக்குப் புலப்படாத நம் தவறுகள் -
ஒரு தர்க்கத்தின் போது, நம் எதிராளி நம் முகத்திற்கு நேராக நீட்டும் கண்ணாடியில் நம் குறைகள் தெரியவரும். அதை பொது இடத்தில் ஏற்றுக் கொள்ள இயலாவிட்டாலும், தனிமையில் சிந்திக்கலாமே - நாம் இப்படி செய்திருக்க வேண்டாமோ என்று?

இது தான் தர்க்கத்தின் வெற்றி. அந்த தர்க்கத்தை மறுக்கும் பொழுது, நம்மைப் பற்றி, நாம் அறிய வேண்டிய ஒரு சில உண்மைகளை நாம் இழக்கிறோம். நான் தர்க்கங்களை வாதங்களை அப்படித் தான் பார்க்கிறேன்.

இப்பொழுது இரண்டாவது விஷயத்திற்கு வருவோம். பழமையான பழக்க வழக்கங்கள் - சில அடிப்படை வசதியற்ற காலங்களில் ஏற்படுத்தப்பட்ட நியதிகள். குறிப்பாக குப்பை கொட்டுவது. இருளில் வெளியே சென்று குப்பை கொட்டுவதால், செல்வம் வெளியேறி விடும் என்பார்கள். இதன் காரணம் - அந்தக் காலத்தில் இருட்டிய பின் போதுமான வெளிச்சம் தரும் விளக்குகள் இல்லாத சமயத்தில், எதை வெளியே கொட்டுகிறோம் என்று பார்க்கவியலாது என்பதால், குப்பை கொட்டுவதைத் தவிர்க்கச் சொன்னார்கள். குப்பையுடன் சேர்ந்து, தங்கம், வெள்ளி, அல்லது பணமும் தவறுதலாக வெளியே போய்விட ஒரு சந்தர்ப்பம் இருந்தது என்றோ, அல்லது குப்பை கொட்டும் பணியாள் குப்பையுடன் திருட்டுப் பொருட்களையோ கலந்து கொண்டு போய் போட்டுவிடக்கூடும் - ஆகையால் வெளிச்சத்திலே இந்தக் காரியத்தைச் செய்தால் போதும் என்பது தான் காரணம், இதில் நியாயம் இருக்கிறது. இப்பொழுது வெளிச்சம் எங்கும் கொட்டிக் கிடக்கிறது என்பதால் தாராளமாக இனி இரவிலும் செய்யலாம். ஆனால், அதற்காக பழமையான, வசதிகளற்ற காலத்தில் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைகள் தவறாகிவிடாது.

இதே வீச்சில், இப்பொழுது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் தீச்சட்டி முறைமையையும் குறிப்பிட்டாக வேண்டும். அன்று காட்டில் தீ மூட்டப்படுவது சிரமம் என்பதால், வீட்டிலிருந்து, தீயையும் சட்டியில் எடுத்துச் சென்றார்கள். அந்தக்காலத்தில், தீயை அணையாது பாதுகாத்து வந்தார்கள். எனக்குத் தெரிந்தே, பக்கத்து வீடுகளில், தேங்காய்ச் சிரட்டையில் தீக்கணல்களை எடுத்து வந்து வீட்டில் அடுப்பில் தீ மூட்டிய பொழுதுகளைக் கண்டிருக்கிறேன். ஆனால், தீ மூட்ட சிரமமான அந்தக் காலம் அது. இந்தக் காலத்தில் தீ மூட்டுவது சிரமமான காரியாமா? தீப்பெட்டி இருக்கிறது. லைட்டர் இருக்கிறது. எளிதாக தீபற்ற வைக்கலாம். இருந்தும் இன்னமும் தீச்சட்டியை ஏன் தவறாது எடுத்துப் போகிறார்கள்? விட்டு விடலாம் தானே? இதைத் தான் பெரியார் கேட்டார்.

பெரியார் கேள்வி கேட்டதில் உள்ள நியாயம் உங்களிடத்தில் இல்லை. உங்களிடத்தில் எள்ளல் இருக்கிறது. பாருங்கள் இதை -

//உடனே, 'இவற்றைக் குறித்து அமெரிக்காவில் ஆராய்ச்சி செய்து நம் முன்னோர்கள் சொன்னது விஞ்ஞான ரீதியான உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது" என்றார். //

‘அமெரிக்காவின் ஆராய்ச்சியாளர்கள்’ பிறப்பதற்கு பல வருடங்களுக்கு முன்னரே, இதை நமது மருத்துவர்களும், சீனாவின் பிரபல அக்யு-பங்ச்சர் முறை மருத்துவர்களும் கண்டு பிடித்து விட்டனர்.

உஷா, ஒரு விஷயத்தைக் கிண்டலடிக்கும் முன் அதைப் பற்றிய முழு விவரத்தையும் தெரிந்து கொண்டு கிண்டல் செய்தால் - நல்லது.

நீங்கள் இந்தியன் படம் பார்த்தீர்கள் தானே? அதில் வரும் வர்மக் கலையைத் தெரியும் தானே? உடல் முழுக்க ஓடிக் கொண்டிருக்கும் நாடி நரம்புகளை அறிந்து, முறைப்படி அதை இயக்கினால், இந்த உடலின் செயல்பாடுகளை விரும்பிய வகையில் கட்டுப்படுத்த முடியும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

இந்தியன் படத்தில் காட்டி விட்டதால் அல்ல. இன்றும் இத்தகைய வர்மக் கலை சிகிச்சை முறைக்காக இந்தியா நோக்கி படையெடுக்கும் பல்லாயிரக்கணக்கான, பிற நாட்டு பிரஜைகளைப் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். (உடனே இது அலோபதிக்கு மாற்றா என்ற விவாதம் வேண்டாம். )

அதே போல உடலைச் சுற்றி ஓடிக் கொண்டிருக்கும் நரம்புகளை சரியான இடத்தில் சிறு சிறு ஊசிகளால் குத்தித் தூண்டி விடுவதன் மூலம், உடலின் நோய்களைக் கட்டுப்படுத்த / சரி செய்ய முடியும் என்பதும் நிரூபிக்கப்பட்டதே.

அதன் அடிப்படையிலேயே இந்த வகை மருத்துவமும் ஒரு சில குறிப்பிட்ட
அளவிற்கு மருத்துவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, நடை முறையில் இருந்து வருகிறது. இந்த வழிவகையில் வந்தது தான் - மசாஜ் மற்றும் பிஸியோதெரபி வகை மருத்துவ பிரிவுகளும்.

இப்படி இருக்க, காது மடல்களில் துளை இடுவது எதற்காக? எந்தக் காரண காரியமும் இல்லாமலா?

கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். -

பிள்ளையாரின் காதுகள் எப்படி இருக்கின்றன?புத்தரின் காதுகள் எப்படி இருக்கின்றன?

காது மடல்கள் எத்தனை நீளமாக இருக்கின்றன? எதற்காக அப்படி? எதைக் குறிப்பதற்காக அப்படி? நான் படித்த வரையிலும் அவை புத்திக் கூர்மையைக் குறிப்பதற்கான குறியீடுகள்.

அவற்றை முறைப்படி அழுத்தம் செய்து, அதனால் மூளையைக் கிளர்ந்து எழச் செய்ய முடியும் என்பது தான் செய்தி. இதை விஞ்ஞான பூர்வமாக மூதாதையர்கள் உணர்ந்து செய்தார்களா? அல்லது பலநூற்றாண்டுகளாக தொடர்ந்த கவனிப்பில், ஒரு statistical survey மாதிரி Data Analysis படி செய்தார்களா என்பது தெரியாது. (மதத்தை இங்கு இணைத்தது - நீங்கள் சொன்ன மாதிரி, மதத்தின் பெயரால் சொன்னால் தான் தவறாமல் செய்வார்கள் என்றிருக்கலாம். அன்றி, இவை மதரீதியான செயல்பாடுகள் அல்ல - குறிப்பாக காது மடல்கள் பிடித்து தோப்புக் கரணம் போடுவது, காது குத்துவது.)

ஆக, உங்களது எள்ளல் இங்கு முறையற்றது. அந்த வயதான பாட்டி சொன்னது சரிதான். எல்லாவற்றையும் எள்ளி நகையாடுவதால், புதுமையாளன், புரட்சியாளன் என்று கருதி விடப் போவதில்லை.

நிற்க, இந்த காது குத்துவது, மூளையை வளர்ச்சியடைய செய்யுமா? செய்யாதா என்ற debateற்குள் போக வேண்டாம். (தர்க்கம் என்றால் பயப்படுகிறீர்கள் என்பதால், இனி டிபேட் என்றே சொல்வோம்.) ஆனால், இந்த காது மடல் சமாச்சாரம் மூளையைக் கிளர்ச்சி அடையச் செய்யும், உணர்ச்சி வசப்படச் செய்யும் என்ற பாக்கியராஜின் முருங்கைக்காய் சமாச்சாரத்தை திருமணமான அனைவரும் அறிவர்.

இந்த காது குத்துவது வந்தது ஏன் தெரியுமா?

இந்தக் காது மடலில் இருந்து கிளம்பி, மூளையை நோக்கிச் செல்லும் சில நரம்புகளைத் துண்டித்து விட்டால் - காம இச்சைகளைப் பெரும்பாலும் குறைத்து விடாலாம். அதாவது, காம இச்சை கிளர்ந்தெழுவது என்பது ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது. பெண்களுக்கு அது கூடாது என்ற ஆணாதிக்க சிந்தனையின் ஏற்பாடே!!!

//அது என்னவோ பெண்களை முட்டாள் ஆக்க விதவிதமான வழி முறைகள்!//

ஏற்றுக் கொள்கிறேன் - ஆனால் நீங்கள் சொன்ன காரணத்திற்காக அல்ல.

Tuesday, January 03, 2006

ரவி ஸ்ரீநிவாஸின் இஸ்லாமிய தீவிரவாதம் - ஒரு பார்வை

ரவி ஸ்ரீநிவாஸ், தொடரும்... என்ற உங்கள் கட்டுரைக்கும், நீங்கள் கொடுத்த சுட்டிக்கும் மிக்க நன்றி.

அந்தக் கட்டுரைக்கு வழி காட்டியதன் மூலம் - ஹோலோகாஸ்ட் என்ற நிகழ்வைப் பற்றி நண்பர்கள் அனைவரும் ஒரு முடிவு செய்துகொள்ள முடியும்.

அந்தக் கட்டுரையின் நோக்கம் - ஹோலோகாஸ்ட் நிகழ்ந்ததா - இல்லையா? அதைத் தான் நான் கேள்வியாகக் கேட்டிருந்தேன்.
அந்தக் கேள்விக்கான விடை - இரண்டு தான்.

ஒன்று நடந்தது - அதாவது ஹிட்லர் ஒரு கொடுங்கோலன். 60 லட்சம் யூதர்களைக் கொன்று குவித்தான். அந்த கொடுங்கோலனை, வன்முறையாளனை - ஆரோக்யம் சொன்னது போல - Hitler is being worshipped by the Sangh Pariwar as the new Messiah of Aryans - the new prophet of the Aryans. சங் பரிவாரத்தினர் வழிபட்டார்கள் - அனைவரும் அறிந்தது. அவ்வளவு தான்.

இரண்டாவது - நடக்கவில்லை. அதாவது ஹிட்லர் - ஒரு சாதாரண முரடன். அத்தனை தான். அவன் மீது ஜோடிக்கப்பட்ட குற்றச் சாட்டுகள் வைக்கப்பட்டன - நேச நாடுகளால். யூதர்களுக்குப் பரிதாபம் தேடித்தர முயன்று, அதையே காரணம் காட்டி, பாலஸ்தீனர்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டு, அநியாயமாக ஒரு இனத்தையே தெருவில் நிறுத்திவிட்டனர்.

இப்பொழுது சொல்லுங்கள் - நீங்கள் எந்தப் பக்கம்? ஹிட்லர் நல்லவனா? கெட்டவனா?

இந்த இரண்டு வகையான தர்க்கத்திலும் ஆதாயம் உண்டு எனக்கு. அதற்காகத் தான் அந்த கட்டுரையே!!!

அதைப் புரிந்து கொள்ளாமல், இஸ்லாமியத் தீவிரவாதத்துடன் இணைத்து அனைத்து இஸ்லாமிய வலைப் பதிவாளர்களையும் பேசுவது உங்கள் அறியாமையும், வன்மத்தையும் பறை சாற்றுகிறது.

உங்களைப் போலவே(!?), வன்முறையில் நம்பிக்கை அற்றவர்கள் நாங்கள். தீவிரவாதத்தை உங்களை விட கடுமையாக எதிர்ப்பவர்கள் நாங்கள். இன்று தீவிரவாதம் மிக அதிகமாக இயங்குவது - சவுதியில் தான். கடந்த வாரத்தில் கூட, ஐந்து காவலர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். உலகின் மிக அதிகமான இஸ்லாமிய மக்கள் வாழும் இந்தோனேஷியாவும் இந்த தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுகிறது. அதே போல யூத தீவிரவாதத்தை எதிர்த்து - பாலஸ்தீனியர்கள் மட்டுமல்ல - அரபு கிறித்துவர்களும் குரல் கொடுக்கின்றனர். கிறித்துவ தீவிரவாதம் இயங்குகிறது - ஆப்பிரிக்காவில்.

சுட்டி வேண்டுமானால், கேளுங்கள் தருகிறேன்.

கொஞ்சம் தேடித்தான் பாருங்களேன் - உலகம் எப்படி இயங்குகிறது என்று. இவை அனைத்தும் தீவிரவாதம் என்று தான் சுட்டப்படுகிறது.
ஏன் சமீபத்தில், மத்திய கிழக்கிலிருந்து வந்து குடியேறிய பாலஸ்தீனர்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்ட சிட்னி கலவரங்களை எப்படிக் குறிப்பிடப் போகிறீர்கள்? தீவிரவாதம் உலகம் தழுவிய தொல்லை - அதை எதிர்ப்பது ஏதோ உங்களுக்கு மட்டுமே உரித்தானது என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்.

தீவிரவாதத்தை எதிர்ப்பதில் எங்களுக்கும் உரிமை உண்டு.
ஏனென்றால், அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள். குற்றம் செய்தாலும் செய்யவிட்டாலும் தீவிரவாதிகளாகப் பார்க்கப்பட்டு, உரிமைகள் இழந்து, வாழ்வை இழந்து பாதிக்கப்பட்ட - எந்த குற்றமும் செய்யாத - ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இருக்கத் தான் செய்கின்றனர். அதை நீங்கள் அறிய மாட்டீர்கள். ஒரு பாவமும் அறியாத இளைஞர்களைக் கைது செய்யும் பொழுது செய்தியாக்கும் நீங்கள் (வாசிக்க - பத்திரிக்கைகள்) - அவர்கள் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்படும் பொழுது அதை ஒரு வரி கூட குறிப்பிடாமல் இருட்டடிப்பு செய்வதை அறியாதவரா நீங்கள்? அந்த செய்திகளும் வெளிவரத் துவங்கி விட்டால், பின்னர் அடுத்த முறை பத்திரிக்கைகளால் பரபரப்பு செய்ய முடியாது.

இஸ்லாமியத் தீவிரவாதம் என்று சொல்லி முஸ்லிம்கள் அதைக் கண்டிக்க முன் வரவில்லை என்பதை சுட்டிக் காட்டும் நீங்கள் - பல ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை - அப்பாவிகளை - பெண்களை - வயதானவர்களை - கர்ப்பிணிகளை - அவர்கள் கருவறையில் விடியலுக்காகக் காத்திருந்த இன்னும் பிறவாத மழலைகளையும் பிடுங்கி எறிந்து கொலை செய்த - நரேந்திர மோடியை - ஆட்சிப் பீடத்தில் அமர்த்தியது எது?

அந்த இந்துத் தீவிரவாதியைக் கண்டித்தீர்களா?

எகிப்தில் - Brotherhood of Islam - சற்று அதிகமான ஓட்டுகள் பெற்று விட்டது கண்ணை உறுத்துகிறது. ஆனால் மோடி என்ன புது அவதாராமா? அவர் செய்த செயல்கள் ஏன் உங்கள் பார்வையில் புலப்படவில்லை?

எந்த ஒரு குற்றவாளியும் இன்று இப்பொழுது இஸ்லாமியத் தீவிரவாதத்தின் போர்வையில் குற்றங்கள் செய்து விட்டுத் தப்பி ஓடி விட முடியும். அப்படித் தான் பெரும்பாலான சம்பவங்கள் அமைகின்றன. அதற்குள் ரவி ஸ்ரீநிவாஸ் நீதிமன்றம் அமைத்து, இன்னும் பிடிபடாத குற்றவாளிகளை இனம் கண்டு விசாரித்து தீர்ப்பே வழங்கி விட்டார்!!!

இஸ்ரேலைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்லும் உங்கள் மனதின் வக்கிரம் எங்களிடம் இல்லை.

நீங்கள் மிக அதிகமாக வெறுக்கும் ஈரான் தான் இன்று நமக்கு எண்ணெய் மற்றும் வாயுவை வழங்குகிறது.

சில குற்றவாளிகளால், இந்தியப் பொருளாதாராம் சீர்குலையும் என்கிறீர்கள். இன்று தீவிரவாதிகளின் செயல்பாடுகள் உலகிற்கு ஓரளவிற்கேனும் பரிச்சயம் ஆகி விட்டது. முன்னே மாதிரி ஒரு குண்டு வெடித்ததும் உடனே travel banலாம் யாரும் கொடுக்கப் போவதில்லை. இந்த தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிட வேண்டிய அவசியம் - நீங்கள் சொன்னது போல தொடரும். ஏனென்றால் - இதன் மூலம் ஆதாயம் அனுபவித்த சில அடிப்படை வாதிகள் - சங் பரிவாராக இருக்கட்டும் அல்லது இஸ்லாமிய ஜிஹாதி அமைப்புகளாக இருக்கட்டும் - அவர்கள் தொடரத் தான் செய்வார்கள். ஆனால் அவர்களை எதிர்த்து போரிடத்தான் செய்ய வேண்டுமே தவிர, அவனின் சாதி, மத, இன அடையாளங்களைப் பார்த்துக் கொண்டிருப்பது - உங்கள் பார்வையின் வர்ணத்தைத் தான் வெளிப்படுத்துமே தவிர, பிரச்சினைக்கான தீர்வல்ல.

நாளை உங்கள் வீட்டில் நீங்கள் சமைப்பது ஈரானிய வாயுவாக இருக்கும். அப்பொழுதும், நீங்கள் உலையில் போடும் அரிசி வேகத்தான் செய்யும்.

காஷ்மீரம் பற்றிய உங்கள் புலம்பலுக்கு, தனியாகப் பதிவு போடுகிறேன்.

மீண்டும் சொல்லுகிறேன் - தீவிரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும் எதிர்ப்பேன். அது இஸ்லாமியப் பெயர் தாங்கிய தீவிரவாதிகளாக இருக்கட்டும். அல்லது இந்து - யூத - கிறித்துவ பெயர் தாங்கிய தீவிரவாதிகளாக இருக்கட்டும். எதிர்ப்பேன். (தீவிரவாதம் மட்டுமல்ல - இன்ன பிற அடிப்படை வாதங்களையும் தான். ஆனால், அந்த விவாதங்கள் எங்களுக்குள் மட்டுமே - We will not wash our laundry in the street. )

தீவிரவாதத்திலும் சாதி, மத, இன அடையாளங்களைத் தேடிப்பார்ப்பது உங்கள் மரபு. தீவிரவாதிகளை தீவிரவாதிகளாகப் பார்ப்பது மட்டுமே எங்களது வழக்கம்.

அணிந்திருக்கும் காவி உடையைத் தூக்கி எறிந்து விட்டு -

ஹிட்லருக்குப் பஜன் பாடிய சங் பரிவாரத்தின் அடிப்படைவாதத்தைக் கண்டித்து விட்டு -

நரேந்திர மோடியின் கொலை வெறி தாண்டவத்தையும் அதன் மூலம் இந்தியாவிற்கு ஏற்பட்ட தலைகுனிவையும் விமர்சித்துவிட்டு -

வாருங்கள் -

ரவிஸ்ரீநிவாஸ் - உங்கள் தோளோடு தோள் உரச, தொண்டை கிழிய முழக்கமிடுவேன் - தீவிரவாதிகள் ஒழிக என்று.

அது வரையிலும் - பேசாதீர்கள்.

(அப்படியே சுட்டி கொடுக்கும் முன்பு, கொஞ்சம் சொல்லி விடுங்கள் - நாகரீகம் கருதி. உங்களுக்குப் பதில் சொல்ல ஏதுவாக இருக்கும். இல்லையென்றால் - உங்களுடைய தீவிரவாத குரலுக்குப் பதில் சொல்லாமல் போனால், நாளை என்னைப் பற்றித் தவறாக பிறர் நினைக்க வாய்ப்புண்டு. இதை ஒரு வேண்டுகோளாகத் தான் வைக்கிறேன். மற்றபடிக்கு, நீங்கள் எந்தக் குற்றச்சாட்டை வைத்தாலும் பதில் சொல்கிறோம் - முறைப்படி தெரிவித்தால்.

மேலும் - இஸ்லாமியர்களின் சிந்தனை எப்படி செயல்படுகிறது என்று தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் - The Struggle within Islam என்ற புத்தகத்தை நீங்கள் வாசிக்க வேண்டும். Dr.Rafiq Zacaria என்பவர் எழுதியது. ஜின்னா, காந்தி போன்ற தலைவர்களுடன் கலந்து பழகியவர். விமர்சனங்கள் எப்படி நேர்மையாக இருக்க வேண்டும் என்பதற்கும், இஸ்லாமியர்கள் தங்களுக்குள் எதை எதை விவாதிக்க வேண்டும் என்ற குறிப்புகளோடு - நபிகள் காலம் முதல், உலகம் தழுவிய இஸ்லாமியத்தைப் பற்றி விவாதித்து விட்டு, பின்னர் இந்திய விடுதலைப் போராட்டம் வரை விவரித்து, முஸ்லிம்களின் இயல்புகளைப் பற்றி விலாவாரியாக விவரித்து இருப்பார்.

இதையெல்லாம் படித்துப் பாருங்கள் - நீங்கள் முஸ்லிம்களைப் பற்றிய மனமாற்றத்திற்கு ஆளாகி விட மாட்டீர்கள். உங்கள் விமர்சனத்தில், இப்பொழுதில்லாத நேர்மை உண்டாகும்.

விமர்சகர்களுக்கு விசாலமான அறிவு தேவை. புரிதல் தேவை. ஆர் எஸ் எஸ் பிரச்சாரக் பிரஃபுல் கொராடியா, பிஜேபியின் intellectual ஆகத் தன்னை கருதிக் கொள்ளும் அருண் ஷோரி எழுதிய அனைத்து புத்தகங்களும் என்னிடமிருக்கின்றன. அதே போல் அம்பேதகர். ஆர்ய மாயையைகளைப் பற்றிய ஆதரவு எதிர்ப்பு புத்தகங்கள். ஏனென்றால், ஒரு தத்துவத்தைப் பற்றிய புரிதல் இல்லாமல், அதைப் பற்றிய விவாதங்களில் பங்கேற்கக் கூடாது என்பதால். நீங்கள் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்காக என்ன செய்திருக்கிறீர்கள்?

ஒருவரைத் திட்டுவதாக இருந்தால் கூட, அதிலும் நேர்மை இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன். அத்தகைய நேர்மை உங்களிடமும் உண்டாவ கடவுவதாக.... ஆமீன்)

Sunday, January 01, 2006

நான் வெற்றி பெற்றவன்

என் திரிதலெல்லாம்
என் தேடுதலெல்லாம்
முயற்சித்தோமென்ற சந்தோசமன்றி
வேறொன்றும் தருவதில்லை

எல்லோரிடமும்
நான் சொல்லிக்கொள்வதெல்லாம்
நான் வெற்றி பெற்றவன்

அனைவரும்
என்னைக் கேட்பதென்னவோ -
வெற்றியை
எப்பொழுது பார்த்தாயென்று?

வெற்றியை
யார் தான் சந்தித்தது?

எத்தனை
எவரெஸ்ட்களை ஏறினாலும்
என்னுடைய
எவரெஸ்ட் மட்டும்
வளர்ந்து கொண்டே போகிறது...

உச்சியை அடையாதது
தோல்வியல்ல -
ஏறாதிருப்பது தான் தோல்வி.

இன்னதுதான் தோல்வியென்று
கண்டுகொண்ட அன்று
என் வெற்றியைச் சந்திப்பேன்.

எல்லோரிடமும்

சொல்லிக்கொள்வதெல்லாம்
நான் வெற்றி பெற்றவன்

மறுப்பதற்கு எவருமில்லை
நான் வெற்றி பெற்றவன்

***
கவிதை வாசித்த அன்பு நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்.

வெற்றி தோல்வி என்பது ஒரு Relative measurement தான்.

ஒப்பிட்டு அளக்கப்படும் செயல்பாடுகள்.

ஒப்பீடுகளை உதறித் தள்ளுங்கள்.

நீங்கள் உறுதியாக நம்புபவற்றை செயல்படுத்துங்கள் - பேசுங்கள்.


அது தான் வெற்றி.

உங்களைத் தூற்றுபவர்களைக் கண்டு ஆவேசம் கொண்டால் தோற்றுப் போவீர்கள். ஏனென்றால் அவர்கள் சீண்டுவது உங்கள் நம்பிக்கையை - தன்னம்பிக்கையை.

மீண்டும் வாழ்த்துகள்.

அன்புடன் நண்பன்.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்