"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Sunday, July 24, 2005

வார்த்தைகள்

வார்த்தைகள்
கை தேர்ந்த
முகமூடியாளர்கள்.

ஒரே சமயத்தில்
ஒன்றாக, பலவாக
பிறப்பெடுக்கும்.

நுகர்வோர் தரமறிந்து
சேவகம் செய்யும்
கை கட்டி.

தடுக்கினால்
குழியும் பறித்து விடும்
பலர் முன்னிலையில்.

இந்த வார்த்தைகளிடம்
கொஞ்சம் எச்சரிக்கையோடு இருங்கள்.
தனியே ஒன்று;
கூடினால் இன்னொன்று -
வேடமிடுவதில்
இவைகளும் மனிதர்ககள் தான்.......

Friday, July 22, 2005

ஞானம்

எனக்கு
எல்லா முகங்களும்
தெரியும்.

எனக்கு
எல்லா பெயர்களும்
தெரியும்.

ஆனாலும்
எல்லோரையும்
'நண்பனே' என்றுதான்
விளிக்கிறேன்.

மரியாதையின்
பொருட்டு மட்டுமே
அல்ல.

எந்தப் பெயருக்கு
எந்த முகம் என்ற
ஞானம்
இல்லாததினாலும் தான்.....

Saturday, July 09, 2005

கால்கள்

சாலையோரம்
கழிவோடு கழிவாக
அமர்ந்திருக்கிறான் -
அங்கு வந்து செல்லும்
பல கால்களையும்
பார்த்துக் கொண்டே.....

வளர்ச்சியை முடித்ததும்,
இன்னும் வளருகின்றதும்,
வளராமல் சூம்பிப் போனதும்
எனப் பலப்பல
கால்கள்
அவன் கவனம் கருகின்றன.....

சாதியைத் தேடாத
பார்வையால்
கால்களைப்
பார்த்துக் கொண்டிருக்கிறான்.

சில கால்களின்
வசீகர அழகு
அவன் உத்தேசத்தை
மறக்கடிக்கும் -
பசியை மறக்க வைக்கும்
புகை வலிப்பைப் போன்று...

எல்லாக் கால்களையும்
கவனிப்பது
அவன் உத்தேசமில்லை -

நீர் வற்றிய குளத்து
கொக்கைப் போல
அவன் கவனமெல்லாம்
அணி செய்யப்பட்ட
கால்களைத்
தேடிக் கொண்டிருக்கும்....

இன்றைய
இரவுப் பொழுதிற்கு
இரை கிடைக்குமா -
இந்தக் கால்களில்
ஒன்றிலிருந்து?

அரக்கப் பசியுடன்
கால்களை
கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் -
பக்கத்தில்
வேலையற்றுக் கிடந்தன
ஊசியும், நூலும்.....

Friday, July 08, 2005

காதலியாகிவிடு மனைவியே.......

எனக்குப் பிடிக்குமென்று
கசங்காத
பருத்திப் புடவைகளையே
எப்பொழுதும் கட்டி வருவாய் -
காதலித்த காலத்தில்.

இன்றுமெனக்கு
பருத்திப் புடவைகளையே
பிடிக்கிறது -
உனக்குத் தான்
வியர்வை படிந்த நைட்டியே
உலகமாகி விட்டது
எப்பொழுதும்.

மனைவியாக
ஏவல் செய்கிறாய் -
தேநீரும், செய்தித்தாளும் தலைமாட்டில்,
இட்டிலியும், சட்டினியும் மேசை மீது.
காதலியாக செய்த
கடமைகள் மட்டும்
குளிர்சாதனப் பெட்டியின் ஆழத்திலே.

நீ
காலையில் உடுத்திப் போகும் ஆடை
மாலையில் வந்து பார்க்கும் முன்னே
அழகாக மடித்து
அலமாரி உள்ளே போய்விடும்
நினைவுப் பெட்டகங்களில் தொங்கும்
நம் கல்லூரிக் காதல் நாட்களைப் போல...

காதலியாக இருந்த பொழுது -
ஒருநாள் மறந்தாலும்
சினந்து காதைத் திருகுவாய்
'இன்று ஏன் என்னை நேசிப்பதாக'
சொல்லவில்லையென்று.

இன்று வருடத்திற்கு
ஒருமுறையேனும் சொல்லப் போகையில்
நெற்றிக்கண் திறக்காத குறையாய்
கடிந்து பேசுகிறாய்
'பொறுப்பில்லாத மனுஷ’னென்று.

மனைவியாக
நீ
இருந்தது போதும் -
பருத்திப் புடவை கட்டிய
காதலியாக இன்று மட்டும் வா.

உன் காதோரத்தில்
'நான் உன்னை நேசிக்கிறேன்'
என்பதாகக் கிசுகிசுக்க வேண்டும் -
உன் பிறந்த நாளான
இன்று மட்டுமாவாது.....

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்