"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Wednesday, June 29, 2005

பசுவதை

கட்டாக்காலி மாடு
நடுவீதியில் -
இரைமீட்டிக் கழிக்கும்.
பிளாட்பாரத்து வாசி
வாழ்க்கையைப் போல.

மடிவற்றிய மாடுகள்
நடுத் தெருவில் சோரமுற்று
சுமந்து கொண்டு வந்தால்
வீட்டுக்குள் அன்பாக சேர்ப்பு.

மடியில் கனமுள்ள மாடுகள்
நன்றாகக் கவனிக்கப் படும் -
சத்து ஊசிகள் குத்தப் பட்டு.
இல்லையென்றால் -
அனாதை ஜீவனம்.

சுவரொட்டி உரித்து...
பந்தக்கால் வாழை திருடி...
எச்சில் தொட்டியில் பிச்சையெடுத்து...
ஏதோ ஓர் வகையில்
வாழ்க்கை ஜீவனம்...

இங்கு....
பசுவதையென்பது
கழுத்தை அறுப்பது
மட்டும் தான்.

Saturday, June 25, 2005

நேர்துருவ காதல்.....

இல்லாத உறவை
நமக்குள் நட்டு
காதலுக்கும்
நட்புக்குமான
எல்லைகளை
ஆக்ரமித்தான்
மிகை கண்டிப்புகளால்

பூதாகரமாய்
பூத்து சொறியும்
மலர்களின் கீழே
நட்பு கிடக்கிறது -
காதலின் மணத்துடன்.

பகிர்வதற்கியலா
நேர் துருவமாய்
பிறந்து தொலைத்தோம் -
வெந்து வெந்து
மடிந்து கொண்டிருக்கும்
ஊனை
உண்டு கொண்டிருக்கிறான்
அவன்....

Tuesday, June 14, 2005

இறந்த காலத்திற்கு வயதில்லை....

சுனாமி பொங்கிய கடலின் கரையாய் மனதினுள்; சிதைந்த எண்ணங்கள் எழுந்தது அவனுள். வருடங்கள் கடந்த பின்பும், அவளைப் பார்க்கும் ஆசையில் புறப்பட்ட இந்த பயணம் குடைந்து கொண்டே இருந்தது.

பையில் முகவரி எழுதிய தாள் கனத்தது.

“எவிடயானு சாரே?”

தன்னை யாரும் கவனித்தார்களா என்ற முனைப்பில் அவன் இயங்கிக் கொண்டிருக்க மீண்டும் ஒருமுறை கேட்டு கவனம் கவர்ந்தான் வாகன ஓட்டி.

பதில் சொல்வதை விட எளிதான வழியாக முகவரி தாளை அவனிடம் கொடுத்து விட்டு இன்னும் சரிவாக தன்னை இருக்கையில் பதித்துக் கொண்டான். உடலைத் தளர்த்தி சாய்ந்து கொண்ட தருணத்தில், மனம் கிளர்ந்தெழுந்து தன் போக்கில் பிரயாணப்படத் தலைப்பட்டது.


‘நீயும் நானும் பயணித்த சாலைகள்
பயனற்றுப் போக
பக்கத்திலே புதிய சாலைகள்
கன்யாகுமரியையும், காஷ்மீரையும்
இணைப்பதற்கு...
நீ பூப்பறித்த தோட்டங்கள்
இன்று,
வாகனங்களுக்கு எரிபொருள்
ஊற்றும் நிலையமாக
புன்முறுவலுடன் நிற்கிறது.. ..
நீ சிலாகித்து பரவசப்பட்ட
கர்த்தரின் சிலையோ
மறைந்து விட்டது -
பலமாடி வணிக வளாகத்தின்
பின்னே. . . .
நீ குதூகலித்துப் பார்த்த
தாமிரபரணி ஆற்றுப் பாலத்தின் வழியே
பேருந்துகள் பயணிப்பதில்லை
இப்பொழுதெல்லாம்...
அவை மாற்றுப் பாதையில்
வழுக்கிக்கொண்டு
விலகிப் போகின்றன. .
நீ கவிதை எழுதிய
காய்ந்துபோன மரம்
வெட்டப்பட்டு விட்டது. .. .. ..’

“சாரே, ஸ்தலம் வந்நூ”

ஒரு கவிதை மனதினுள் புரண்டெழுவதற்குள் அவள் வீடு வந்துவிட்டதா?

புறப்பட்ட வேகம் இப்பொழுது தளர்ந்து, தான் செய்வது சரியா என்ற மறுவிசாரணையில் மனம் அல்லல்பட்டுக் கொண்டிருந்தது. கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி சமாதானம் செய்து கொள்ள அவகாசம் தேவைப்பட்டதாக சொல்லிக் கொண்டே, வெண்சுருட்டைத் தேடினான்.

“சாரே, வேறெந்து வேண்ட?”

வெண்சுருட்டைப் பற்ற வைக்க நெருப்பு கொடுத்துக் கொண்டே, பெட்டிக்கடைக்காரன் பேச்சுக் கொடுத்தான். மீண்டும் முகவரித் தாள் சட்டைப்பை விட்டு விடுதலையடைந்தது தற்காலிகமாக.
‘பேசாமல் செல்வியையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்...’ முகவரி விசாரிப்புகளைத் தவிர்த்திருக்கலாம் - மனைவியை அழைத்து வந்திருந்தால். இத்தனைக்கும் அவர்கள் நெருங்கிய தோழிகள். அதுவே கூட காரணமாக இருக்குமோ, அவளைத் தவிர்த்தது?

“இங்க பாருங்க, எங்காயாச்சும் போகணும்னா, சொல்லுங்க, மாமா பையனைக் கூட்டிக்கிட்டுப் போச்சொல்றன்”

“எனக்கெங்கயும் போவேண்டியதில்லை. ஆளை கொஞ்சம் தனியா வி;டறீயா?” காரணமற்ற எரிச்சல். எதனால்?

கேள்விகளுக்கு எப்பொழுதும் விடைதேடுவது வழக்கமல்ல என்பதால் கோபங்களைச் சுமந்து திரிவதில்லை. அவ்வப்பொழுது ஒரு கத்தலோடு கரைந்து போய்விடும். முதுகிற்க்குப் பின்னால் குசுகுசுவென இயங்கிக் கொண்டிருப்பார்கள் மனைவியும் பிள்ளைகளும். சட்டென்று திரும்பினால் நாக்கை கன்னத்தினுள் திணித்து இளக்காரப் புன்னகையை மறைப்பார்கள். அது தான் எல்லை. தாண்டக்கூடாது.

மனைவியையும் அழைத்து வந்திருக்கலாம். கொஞ்சம் இளக்காரப் பேர்வழிதான் என்றாலும், நேராக இந்நேரம் அவளுடைய வீட்டிற்கே கூட்டிட்டுப் போயிருப்பாள். ஓருவேளை அவளுடைய கணவன் இருந்திருந்தால் கூட தவறாகப் பட்டிருக்காது. தவறாக நினைக்கக் கூடுமோ? இத்தனை காலத்திற்குப் பின்னும் மனம் புகைமூட்டம் நீங்கி ஒளி பெற்றிருக்காதா?

இருக்காது.

இத்தனை வருடங்களுக்குப் பின்னும், அவள் எப்படி இருப்பாள் என்று பார்க்கும் ஆவல் தன்னிடத்திலே தோன்றும் பொழுது, அவன் மட்டும் தன் சந்தேகங்களை மாற்றிக் கொண்டிருக்க முடியுமா?

‘உன்னை எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் நீ என் மகளைத் தொடர்பு கொள்ளாதே - எந்த வகையிலும்...’

அவளின் அம்மாவின் கடிதம்.... கடிதம் பிரிக்கப்படும் வரை ஒரு படபடப்பு இருந்தது. ஆவல் இருந்தது. படித்த பின் இறுக்கம். என்ன நடக்கிறது? அவள் அம்மா கடிதம் எழுதுகிற அளவிற்கு என்னாயிற்று? நகர மறுத்த சிந்தனைகளைக் கட்டி இழுத்து வந்தவனிடம் “என்னடா திகிலடிச்சு நிக்கற?” என்ற மனைவிக்கு அக்கடிதத்தைப் பதிலாகக் கொடுத்தேன்.

“அடடா, நமக்கு உதவ வந்தவளுக்கு இப்படி ஒரு நிலையா?” ஒரு பெருமூச்சோடு முடித்துக் கொண்டாள். திருப்தியோ?

அத்துடன் அந்த உறவிற்கு ஒரு இடைவெளி விடப்பட்டது. கடைசியாக ஒருமுறைப் பார்த்து சொல்லிக் கொண்டுகூட பிரிய முடியவில்லை. திருமண நாளில் விடைபெற்றதே கடைசி சந்திப்பாகிவிட்டது. அப்பொழுது பார்த்த அவள் உருவம் மனதில் நிலைத்து உறைந்து போனது.
பெட்டிக் கடைக்காரன் முனைப்புடன் சொல்லிய வழி காதில், மனதில் உள்வாங்கப் பட்டதா என்ற பிரக்கியம் இல்லாமலே, அந்த இடம் விட்டு நகர்ந்தான். எங்கும் அதிகம் நில்லாதே என்ற மனப்பிராண்டல். இப்பொழுது அவள் வீட்டிற்குப் போகவேண்டும் என்ற ஆவல் பெரிதும் வடிந்து போயிருந்தது.

மெதுவாக நடக்க ஆரம்பித்தான். இன்னும் கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். தப்பில்லை. அவசரமுமில்லை. புகை வலிப்பு தெம்பைக் கூட்ட பழைய நினைவுகள் திமிறிக் கொண்டு நிலத்தகடுகளாய் அசைந்து பொருந்தின.

இப்பொழுதும் அவள் கவிதை எழுதுவாளா?

‘எத்தனை கூட்டத்தின் நடுவேயும்என் மீது ஒரு கண் வைத்திருப்பாய் -என் மௌனங்களோடுநான் பேசாமல் அமர்ந்திருப்பதைக் கண்டுபுன்னகை ப+ப்பாய் -நான் நானாக இருக்கிறேன் என்று..’
கடைசியாகப் படித்தது. அவள் எழுதியது. இப்பொழுது அவளுக்கு இந்த கவிதை எழுதும் சுதந்திரம் இருக்குமா?

அவள் வீடு எதிரே வந்து, வெண்சுருட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்தது. தயங்கிய சில விநாடிகளி;ல் இதயம் ஒரு மராத்தான் ஓட்டமே ஓடி முடித்திருக்கும்.

“யார் வேண்டும்?”

தட்டுதலுக்காகவே காத்திருந்தது போல கதவு அவள் குரலில் பேசிக் கொண்டே திறந்தது.
நான் அவளைப் பார்த்த கடைசி தினத்தினின்றும் கூடுதலாக ஒரு தினம் கூட கழிந்திராது போன்று அதே பழைய அவளாக என் முன் நின்றாள்.

இது அறிவு பூர்வமாக சாத்தியமில்லையே என்ற மனதர்க்கத்தை வெட்டிக் கொண்டு, நிதானிக்க அவகாசம் கொடாது கடந்த காலத்தினுள் தூக்கி எறியும் குரலில் கேட்டாள்

“யார் வேண்டும் உங்களுக்கு?”

“அம்மா? ”

“அம்மா இல்லை. அப்பாவை கூப்பிடுகிறேன். ஓரு நிமிடம்...”

அவள் திரும்பி உள்ளே சென்றாள். ஓரு நிமிடத்திற்கும் குறைவான கணத்தில் மனம் முடிவெடுத்தது.

திரும்பி நடந்தேன் தயக்கமின்றி. தங்குமிடம் திரும்பியதும், மனைவியின் - கோபமா, ஆதங்கமா என்று இனம் பிரிக்க அவசியமில்லாத - கண்டனக் குரல் எழும்பியது

“எங்க போயிட்ட, சொல்லாம, கொள்ளாம? கொஞ்சம் கூட பொறுப்பில்லையே, வந்த இடத்தில கூட.. இங்க உனக்காக எத்தனை மணி நேரம் அவளை காக்க வைத்திருந்தேன் தெரியுமா?”

அதிக நேரம் அவஸ்தையாக்;காமல் மகனிடமிருந்து விடை கிடைத்தது “கமலா ஆண்ட்டி வந்திருந்தாங்கப்பா...”

நான் ஆடிப் போவேன் என்று எதிர்பார்த்த மனைவி அசந்து போனாள் என் அமைதியைக் கண்டு.

“ மகனே, அவள் அங்கிளைத் தான் பார்த்திருப்பாள், நான் இருந்திருந்தால்;. இப்ப அவள் என்னையேப் பார்த்துப் போயிருப்பர்ள் - நான் அவளைப் பார்த்து வந்த மாதிரி...”

அவனுக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை.

அப்படியே இருக்கட்டும்...

Saturday, June 11, 2005

குழு இயக்கத்தில் சுயம் இழந்தவனே....

நான் கர்வப்படவில்லையென்றால்
நான் நாமாக இருப்பதில்
நான் என்ன பயன் பெறும்.......?

நான் நாமுடன் இணைகையில்
நான் நமக்கு அடக்கம்......!
நான் நாமில் அடங்கியதால்
நான் இல்லையென்று
நாம் கூறினால்,
நாமினால்
நான் என்ன பயன் பெறும்?

நான் நானை மறந்து
நான் நீயை
நான் ஆக நினைப்பதுவா
நான் நாமில் அடங்கிய பயன்?

நான் நீயாக இருக்கும் நாம்
நான் நானை இழந்து
நான் நாமாகும்.

நான் நானாக இல்லையென்றால்
நான் நாமாகவும் இல்லை.
நான் நானாக இருக்கையில்
நான் தான் நாம்.

மீண்டும் -

நான் கர்வப்படவில்லையென்றால்
நான் நாமாக இருப்பதில்
நான் என்ன பயன் பெறும்.......?

கன்னிமேரியும், கவிக்கோவும் - ஒரு பார்வை...

கன்னி மேரியும், கவிக்கோவும் - ஒரு பார்வை...

சமீபத்தில் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்த பொழுது, மரத்தடி யாஹு மடலாடற் குழுவில் நடக்கும் சில விவாதங்களை வாசிக்க நேர்ந்தது. அதில் கவிக்கோ அவர்கள் எழுதிய கஜல் கவிதைகள் என்ற தொகுதியிலிருந்து ஒரு கவிதையை எடுத்து சடையன் சாபு மரத்தடி நண்பர்களின் இலக்கிய ரசனைக்கு வைக்க, விளைவு எதிர்பார்த்ததற்கு நேரிடையானது. அந்தக் கவிதையை சொற்குவை என்றும், ஆபாசமானது என்றும், ரசனையற்றது என்றும் விமர்சித்தனர் மரத்தடி நண்பர்களுள் சிலர். கவிதையைப் புரிந்து கொள்ள மறுத்து அல்லது இயலாது - குறுகிய உள்நோக்கோடும், நேர்மையற்ற முறையிலும் விவரித்து எழுதிய நண்பர்களுக்கு விளக்கம் அளிப்பது தமிழ்க் கவிதைகளின் ஆர்வலன் என்ற முறையில் எனது மற்றும் கவிதை நேச நெஞ்சங்களின் கடமையும் ஆகிறது. மரத்தடி நண்பர்களுக்காக எழுதிய விரிவான விளக்கம், மரத்தடியிலே முடங்கிப் போய்விடக் கூடாது என்பதனால், துவக்கு வாசகர்களுக்காக கீழே தருகிறோம்...

(துவக்கு இதழ் ஆசிரியரின் அனுமதியோடு.....)

ஐயா! ஆணி, முள்
ஏதாவது பிச்சை போடுங்கள்
கர்ப்பமாயிருக்கிறேன்
என்ற குரல் கேட்டது
வெளியே வந்து பார்த்தேன்
கன்னி மேரி !
*******************

இது தான் அந்தக் கவிதை....

இனி இந்தக் கவிதை என்ன சொல்ல வருகிறது...

இயேசுவை கட்டி வைத்து அடிக்கிறார்கள். தடுக்க முடியவில்லை. கண்ணீர் பெருகுகிறது. கை வலித்து காவலர்களே ஓய்ந்து, சோர்ந்து போகும் நேரம். ரோம் கவர்னரின் மனைவி இரக்கத்துடன் ஒரு துண்டை கொடுக்க அதனைக் கொண்டு சிந்திக்கிடக்கும் ரத்தம் முழுவதையும் துடைத்து எடுக்கிறார். அந்த கணத்தில், அந்தத் தாயின் மனம், பிரார்த்தனையில் ஈடுபடாமலா போயிருக்கும்? நிச்சயமாக ஈடுபட்டிருக்கும். அது போலவே, சிலுவையில் அறையப்பட்டு, தூக்கி நிறுத்தப்பட்ட போதும், சோகமே வடிவமாக, காலடியில் நிற்கின்றார். எத்தனை எத்தனை பிரார்த்தனைகள் மனதில் ஓடியிருக்கும்?

இது பழையது.

அந்தக் கால மனிதர்கள் எல்லோருமே காட்டுமிராண்டிகள் - நாகரீகமற்றவர்கள். அவர்களிடையே, இயேசு போன்ற ஒரு இறைத்தூதர் மாட்டிக் கொண்டது அவஸ்தை தான். ஆனால், இப்பொழுது இயேசு பிறந்திருந்தால், நாமெல்லாம் எப்படி எப்படி நல்லத் தனமாக நடந்து கொண்டிருப்போம்? எத்தனை இனிமையாக நடந்து கொண்டிருப்போம்?

பார்க்கலாமா ?

ஓர் ஓவியர் இயேசு கிறிஸ்துவை ஓவியமாகத் தீட்டினார் - ஆமாம் - நவீன யுகத்து ‘ஹிப்பி’ மாதிரி தலை முடியை பரப்பிக் கொண்டு, சிகரெட் புகைப்பது போன்று, ஒரு குறுநகையுடன் சித்தரிந்திருந்தார். கடும் எதிர்ப்பு கிளம்பிய பொழுது, அது எனது கருத்து சுதந்திரம் - இதில் தலையிட உங்களுக்கு உரிமை கொடுத்தது யார்? என்று பதில் கேள்வி எழுப்பினார்.
கன்னி மேரி இதைக் கண்டிருந்தால், அவர் நினைத்திருப்பார் முட்கிரீடம் சூட்டிய யூதாக்கள் ஆயிரம் மடங்கு மேல் என்று.

விஞ்ஞானிகள் என்ன சும்மா இருப்பார்களா? Reconstruction of Christ என்று பெயரிட்டு, ஒரு தலையை வடிவமைத்து, எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் கருணை ததும்பும் கண்களைத் தூக்கி தூரப்போட்டு விட்டு, அலை அலையான நீண்ட கேசத்தைத் தூக்கி எறிந்து விட்டு, மந்தமான, பிரகாசமில்லாத ஒரு மனித முகத்தைக் காட்டி, இது தான் இயேசு என்றார்கள். எல்லோர் மனதிலும் அன்பு ததும்பும் கண்களைக் கொண்டு நீங்கா இடம் பெற்ற அந்த நம்பிக்கைச் சித்திரத்தை சிதைக்கும் வன்முறையில் இறங்கியது - விஞ்ஞானம். உண்மையைத் தெளிவிக்கிறோம் (!!??) என்ற பெயரில் நம்பிக்கைகளைச் சிதைப்பது எந்த விதத்திலும் நன்மை பயக்காது. ஆனாலும், அதில் ஒரு உற்சாகம் - ஆனந்தம். குரூர திருப்தி.

கன்னி மேரி என்ன நினைத்திருப்பார்? சிலுவையில் அடிபட்டு சிதைந்தது உடல் மட்டும் தானே என்று...

Dan Brown எழுதிய ‘The Da Vinci Code’ என்ற புனை நாவலின் கதைக்கருவே - இயேசு மரிக்கவில்லை. தப்பிப் பிழைத்தார். மணந்து கொண்டார். சந்ததிகள் உண்டாக்கினார். இன்றளவும் அந்த சந்ததிகள் வாழ்கின்றனர் என்ற ரீதியில் கதை போகும். திகைத்துப் போயின தேவாலயங்கள். நீண்ட மௌனத்திற்குப் பிறகு அறிக்கை வெளியிட்டனர் - புனைந்து எழுதப்பட்ட அந்த புத்தகத்தை வாசிக்க வேண்டாம் என்று. எழுத்து சுதந்திரம் எந்த மட்டுக்கும் நீளலாம் என்று தங்களுக்கென எந்த ஒரு வரைமுறையின்றி இயங்கிக் கொண்டிருக்கும் கதை புனைபவர்கள் ஒரு புறமென்றால், அதை மறுத்து, எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய தேவாலயங்கள் நீண்ட மௌனம் காத்தது பலரது மனதை புண்படுத்தியிருக்கிறதென்றால், பெற்றெடுத்த ஒரு அன்னையின் மனம் எத்தனை தூரம் வேதனைப்பட்டிருக்கும்?

இது இப்படி என்றால், கிறிஸ்துவை அடித்து துவைத்து இம்சப்படுத்துவதை தரமான ஒளி-ஒலி பதிவோடு காட்டி, மக்களின் மனதை உருகச் செய்து, காசு பார்த்தது அதை விட கொடுமையல்லவா? இயேசுவின் வாழ்க்கை சித்திரவதை செய்யப்படுவது மட்டுமா? தன்னுடைய சொந்த வியாபாரத்திற்காக எல்லா மக்களும் மதிக்கும் ஒரு இறை தூதரையா அப்படிக் காட்ட வேண்டும்?

பலபேரால், அடித்து அவமானப்படுத்தப்படும் காட்சியை கண்டு மனம் களிக்கவா செய்யும் - ஒரு தாய்க்கு.? துடிக்க அல்லவா செய்யும்? ஆணி அடித்த வேதனையை விட இது கொடூரம் அல்லவா?
இவையெல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற் போன்று ஒரு ஆராய்ச்சியின் மூலம் புத்தகம் ஒன்று வந்திருக்கிறது - Is Jesus Lived in India என்று. கதையல்ல - நாவலல்ல - ஆராய்ச்சிப் புத்தகம். இயேசு இறக்கவில்லை. கொலைகார பாதகர்களின் கண்ணில் மண்ணைத்தூவி, தன் சீடர்களின் உதவியோடு, இந்தியாவின் காஷ்மீரத்திற்கு ஓடிப்போனார் என்றும், அங்கேயே மரித்துப் போனார் என்றும் அங்கு அவருக்கு கல்லறை இருக்கிறது என்றும் எழுதியுள்ளார். எல்லாம் சரித்திரத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை ஆதாரமாகக் கொண்டு, ஊகம் செய்யப்பட்டவை.

என்ன அவசியம் வந்து விட்டது - ஆராய்ச்சியை உறுதியாக செய்து, இறுதியான தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும் என்ற நிலைக்கு முன்பே அதைப் புத்தகமாகக் கொண்டு வந்து காசு பார்த்து விட வேண்டும் என்று?

இதையெல்லாம் பார்த்த மேரி அன்னை முடிவே கட்டி விட்டார் - அன்று மரண தண்டனை விதித்த யூதர்கள் எத்தனையோ மேல் என்று. இந்த நவீன யுகத்தைக் கண்டு கோபமுற்று இந்த உலகின் அநாகரிகத்தைக் கண்டிக்க முயன்று, கவிதை எழுதியவர் - ஆபாசமாக எழுதுகிறார் என்று சொன்னால், அது அதிசயமாகத் தான் இருக்கிறது. கவிதையின் சின்ன சின்ன நெளிவுகளைக் கூட காண மறுக்கச் செய்தது எது என்று தான் !? கவிக்கோவின் உண்மை பெயரும் அது சார்ந்த மதமுமா? அப்படி இருக்காது, இருக்கக் கூடாது என்றே பிரார்த்திக்கிறேன். அது உண்மையென்றால், அதனால் சிறுமை கவிக்கோவிற்கு அல்ல.

இ¦தையே வாலி எழுதியிருந்தால் - என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது - வாலி என்ன, யார் எழுதியிருந்தாலும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்து போன, உலகின் மூன்றில் இரண்டு பங்கு மக்களால் மதிக்கபெறும் ஒரு நபரை, நாகரீக உலகின் அனுகூலங்களைக் கொண்டு, அநாகரீகமாக விமர்சித்து அதன் மூலம் சம்பாதனை செய்யும் அவலத்தை சாடுவதற்கு சாதி, மதம் இதெல்லாம் தேவையில்லை அன்பரே...

ஆம், அன்று முட்களாலும் ஆணியாலும் இம்சித்து சிலுவையில் அடித்தார்கள். இன்று நாம் நாகரீகமாக கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், வியாபார உரிமை என்றெல்லாம் கூறி, அவர் நினைவுகளை கண்டம் துண்டமாக வெட்டி கூறு போட்டு விற்கிறோம்.

கன்னி மேரி இன்று நம்மிடையே பிச்சை கேட்டு நிற்கிறார் - தன் கருவிலிருக்கும் இயேசு மிகக் குறந்த துன்பத்துடன் சிலுவையிலே அறையப்படட்டும் - ஆணி , முள் கொடுங்கள் என்று.

நியாயந்தானே?

நட்புடன்
நண்பன்

(நன்றி - துவக்கு மின்னிதழ் - www.thuvakku.da.ru)

Friday, June 10, 2005

கடவுளைக் காட்டு......

கடவுளைக் காட்டு
என்று ஒரு போர் -
நண்பர்களுக்குள்...

நம்பிக்கையின்
எல்லையில் நிற்கிறார்
கடவுள்.

நம்பிக்கைகள்
உண்டாவது
முயற்சியால்!

முயற்சிக்க வேண்டுமே
ஓர் மனதின்
சிந்தனை -
அங்கே
கடவுளின் வாசம்....

சிந்தனை எழுவது
என் தலையில் -
மூளையின்
மெல்லிய திசுக்களில்....

திசுக்கள்
துடித்தால் தான்
சிந்தனை.

ஓர் துடிப்பை
தூண்டியவர்
கடவுள்...


துடிப்பது
உண்டானது
பிறப்பின்
நியதி.

பிறப்பிற்கு
நியதி
வைத்தவன் யார்?
அவர் தானே -
கடவுள்?

கடவுளைக் காட்டு
என்ற போரின் விவாதம்
சூடாக தொடர்ந்தது
நண்பர்களுக்குள்.


பக்கத்து பள்ளியில்
இறைவணக்கப் பிரார்த்தனை -
'என் மதம் எனக்கு....
உன் மதம் உனக்கு.......'

பயங்கள்....

பயங்கள். . . . . . .

வெளிச்சமற்ற இரவில்
சில நிழல்கள்
தொடர்கின்றன

இருக்காது என்றே
அமைதிப் படுத்தி
நடக்கிறேன்

நிழல்கள்
நடந்து நடந்து
சப்தமெழுப்புகின்றன -
திரும்பிப் பார்க்கச் சொல்லி.

நின்று
திரும்பிப் பார்த்து
நிழல்களை
கண்டிக்க ஆசைதான்.

எத்தனை
கோணத்தில் திரும்பினாலும்
நிழல்களை மட்டும்
காணமுடியவில்லை.

நிழல்களின்
சப்தம் மட்டும்
கேட்டுக் கொண்டே தான்
இருக்கின்றது -
மனதினுள்.

Thursday, June 09, 2005

வீடு

வீடு கட்டிய அனுபவத்தைப் பற்றியது...


வீடு

உணவிற்கும்
உயிர்பிழைத்தலுக்குமிடையேயான
துரத்தலும், விரைதலுமான ஓட்டமாக
தூக்கமும், நானும் நடத்தும்
ஒர் இடையறா போராட்டத்திற்கிடையே
நிகழ்கிறது
வீட்டுச் சுவர்களிடம்
விரல்கள் நடத்தும் விசாரணை....

அடிவாரத்தில் மூழ்கப்போகும்
ஒரு கல்லே
குங்குமம் சார்த்தப்பட்டு
மாலை போடப்பட்டு
பொரிகடலை, தேங்காய், வாழைப்பழம் தரப்பட்டு
தற்காலிகத் தெய்வமாகி
துவங்கி வைத்த வீடு அது...

அதுவரையிலும்
அறியப்படாத வாஸ்துவும்
விலாவரியாக விசாரணைக்குள்ளாகி
சகல சம்பத்துகளுக்குமிடமின்றி
கொஞ்சமே கொஞ்சமாக மாற்றி வைத்தும்
நீங்காத சிற்சில மனசஞ்சலங்களுக்கு
சமாதான சாந்திகள் பல செய்யப்பட்டு
வளர்த்தி நிற்கவைக்கப்பட்ட வீடு அது....

வகைவகை காய்கறி
இனிப்புகளுடன் தந்த விருந்தை
உண்டு களித்த சிலர்
'அப்படி இருந்திர்க்கணும்
இப்படி இருந்திர்க்கணு'மென்ற
விமர்சனங்களைப் புறந்தள்ளி
பின்னும்
என் நேசத்திற்குரிய வீடு அது....

உயிர் மூச்சைத் தவிர
மற்றவை அனைத்தையும்
மூடிக்கொண்ட உலகம் துயிலும்
இரவின் மௌனத்தில்
வீட்டுச் சுவற்றைக் கேட்டுக்கொண்டிருக்கிறது
என் விரல்கள் -
"கீறல்கள் ஏதும் விழுந்து
காயம்பட்டாயா" என்று...

என் அன்பில் நெக்குருகி நிற்கும்
அந்த சுவற்றிடம் சொல்லவில்லை -
ஒருமுறை இழந்து விட்டால்
மீண்டொருமுறை
அதனைப் போல மற்றொன்றை
கட்டித்தரும் தெம்பில்லாத
எனதிந்த இயலாமை தான்
இந்தப் பாசமென்று.....

நான்.......

நான் ...

எப்படி அறிமுகப்படுத்திக் கொள்வது?

கவிதைகளின் ரசிகன்
என்றே அறிமுகப்படுத்திக் கொள்கிறேன்...

ஆனால்
கவிதை மட்டுமே
எனது தளமென்று
எண்ணி விட வேண்டாம்....

விவாதத் தளங்களும்
பிடித்தமானவையே....

நட்புடன்.....

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்