"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Tuesday, February 28, 2006

அடங்க மறு:::

அடங்க மறு:::
***
திருமா துபாய்க்கு வந்த பொழுது ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் (24/2/06) வாசிக்கப்பட்ட கவிதை.
***
பிச்சைப் பாத்திரத்தில்
பிச்சையிட குனிந்தவன்
இன்னமும் நிமிரவேயில்லை
பிச்சையெடுத்தவன்
ஏறிவிட்டான் முதுகில்.

சுமையென தெரியாமல்
சுமப்பதையே வாழ்வாக்கி
ஒவ்வொரு குழந்தையுடனும்
பிறப்பிக்கிறோம் இன்றும்
சுமைகளை.

எலும்புக் குருத்துகளில்
துளையிட்டு
ரத்த நாளங்களில்
அட்டையாய் ஒட்டி
சிந்தனை செல்களில்
எண்ணங்களாய் மாறி
அடிமையானதை அறிந்தோமா?

நம் எண்ணங்களைக் கொண்டே
நம்மை சொல்ல வைக்க முயற்சிப்பான்
அடிமையென்று.
எதிர்ப்பவர்களுக்குக் காட்டுவான்
காலம் கடந்த சில வேதங்களின்
அர்த்தமற்ற வசனங்களை.

கொஞ்சம் மொழி பெயர்த்தால்
கிழிகிறது நாகரீகம்
நால்வரிடம் கெஞ்சிக் கூத்தாடி
கேட்டுப் பெற வேண்டியிருக்கிறது
தன் மனைவியைக் கூட.
ஒதுக்கி வைப்பதில்
வாழ்வின் பாதி அங்கம்
கூட தப்பவில்லை

ஆண்டவன் பெயரினால்
ஆட்டிப் படைக்க
அவன் படைத்த பிதற்றல்களை
எளிதாக ஏற்றுக் கொண்டார்கள்
தூரதூரமாய் நின்று வணங்கி.
நடுகற்களில் சுமை இறக்கி
இளைப்பாறும் பொழுது கூட
நினைவிற்கு வருவதில்லை
முன்னால் வாழ்ந்து போன
மனிதர்கள் மட்டுமல்ல -
தானமளித்த வாழ்க்கையும் தான்.

நல்லவேளையாக
எழுதப்படாத விதிகளில்
முடங்கிக் கிடந்த மனிதர்கள்
மறக்கவில்லை
தாய் புகட்டிய மொழியை.

சாம்பலினின்றும்
உயிர்த்தெழும் பறவையாக
இன்று
எழுந்து நிற்கிறதொரு குரல்
உரத்து -

அடங்க மறு, அத்து மீறு.

இன்று அடங்க மறுப்பதால்
இன்று அத்து மீற முடிவதால்
அஞ்சியவர்கள் மாற்றுகின்றனர்
யுத்தவிதிகளை.

எதிரே நிற்பவன் எதிரியல்ல
சகோதரனே.
அற்ப அங்கீகாரத்திற்கு
ஆசைப்பட்டவன் கைகளில்
அடுத்தவர் மீது
வாரி வீச மீண்டும் சேறு.
தொழில் அதே தான் -
பெயர் மட்டும்
மாற்றப்பட்டிருக்கிறது
அறிவுஜீவியென.

இந்த அறிவுகொழுந்துகளைத்
தூண்டி விடுபவன்
அறிவித்துக் கொள்கிறான்
தன்னைத் தானே நடுவனாக.

தன் நச்சுத்தலையை
நடுநிலையாகப் பாசாங்கு செய்யும்
நரம்பையே நூலாய் அணிந்த
நண்பர்களுக்குப் பதில் சொல் -
இப்படி -

அடங்க மறு அத்து மீறு

எங்கும் யாரிடமும்
படுத்தெழும் உரிமை கோரும்
கருத்து சுதந்திரத்திடம்.
அடங்க மறு அத்து மீறு

பிறப்பினால் தகுதி குறித்து
கேள்வி எழுப்பும்
தகுதியற்றவனிடத்தில்.
அடங்க மறு அத்து மீறு

அடுத்தவர் கணக்கில்
சிலபல இலவசங்களைத் தந்து
கடமை முடித்து
கை கழுவ முனையும்
சில அரசியல் தலைமையிடம் கூடத் தான்
அடங்க மறு அத்து மீறு.

Sunday, February 26, 2006

பாராட்டுகள் இராமநாதன்

// ஆணிவேர் எங்கேயிருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். பாலஸ்தீனத்திலும், ஆப்கானிலும், ஈராக்கிலும் என்று சொல்லிக்கொண்டே போகலாம். பயனொன்றுமில்லை. அதெல்லாம் உண்மை தான். அமெரிக்கா செய்வது தவறுதான். அதை பல பெரும்பான்மை ஐரோப்பிய, ஆசிய மக்களும் வெகுஜன பத்திரிகைகளும் (அமெரிக்காவில் உட்பட) மிகவும் தீவிரமாக எதிர்த்துவருகின்றன். வலுவான எதிர்ப்பு இருக்கிறது. ஜனநாயக முறையில் அமைதியாக தெரிவிக்கப்படுகின்றது. அதை செவி மடுக்காமல் இருப்பது அமெரிக்காவின் அராஜகம். இதிலெல்லாம் மறுபேச்சே கிடையாது. ஆனால் கேட்டதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? ஏனென்றால் எங்குதான் வறுமையும் சாவும் அடக்குமுறையும் இல்லை? அதற்கு பதிலடியாக கடவுளின் பெயரால் ஆயுதம் தூக்குவது விநோதமாகப் படுவதாலேயே முக்கியத்துவமும் கிடைக்கிறது ஊடகங்களில். //


உங்களின் எழுத்துகளைப் பார்த்ததும் அசந்து போய்விட்டேன். இது நீங்கள் தான் எழுதினதா? அல்லது மிகுந்த உணர்ச்சி வசப்படுதலால், நண்பனை மடக்க வேண்டும் - என்ற ஒரே ஆவல் உந்தித் தள்ள மதி மயக்கத்தில் எழுதி விட்டீர்களோ என்ற சந்தேகம். அதனால தான் உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன்.

// ராமநாதன் - இது நீங்கள் எழுதியது தானே? சந்தேகமில்லையே? எங்கு தான் வறுமையும் சாவும் அடக்குமுறையும் இல்லை? இது நீங்கள் எழுதியது தானே? இது வரையிலும் இது எங்குமே விவாதிக்கப்படாமல், இப்பொழுது எங்கிருந்து வந்தது இது? இதைப் பற்றி விவாதிக்கலாமா? அல்லது நான் வேறு எதையாவது பிடித்துத் தொங்குகிறேன் :-) என்று சொல்வீர்களா? இந்தத் தீவிரவாதிகள், வறுமையினாலும், சாவினாலும், அடக்குமுறையினாலும் தான் போராடுகிறார்கள்என்றா சொல்ல வருகிறீர்கள்? முதலில் அதை சொல்லுங்கள். இது தான் உங்கள் வாதம் என்றால், உங்கள் தீவிரவாதப் பார்வை முற்றிலும் தவறானதாக இருக்கிறது.

பிறகு மீண்டும் நாம் ஆதியிலிருந்து விவாதிக்க வேண்டும் - தீவிரவாதம் என்றால் என்னவென்று. என்ன செய்வது? But no comments on the poor igonorant souls:-) பின்லேடன் வறுமையை எதிர்த்து ஆயுதம் ஏந்துகிறான் என்று சொல்லிய முதல் ஆள் நீங்கள் தான் ராமநாதன். சொல்லுங்கள் - நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று? //

வார இறுதியில் பதில் சொல்வதாகக் கூறி சென்றீர்கள். உங்கள் பதிலைப் பார்த்த பின் தான் வேறு வேலையே செய்வது என்று முடிவு கட்டிக் கொண்டு, எதுவும்செய்யாமல், இரண்டு வாரங்களாகக் காத்திருந்தது தான் மிச்சம்.

அப்பொழுது தான் தோன்றியது.

தான் நம்புவதை உறுதிபட தெரிவிப்பவர் ஏன் மறுக்க வேண்டும்? நான் தான் தவறுதலாகக் காத்துக் கிடக்கிறேனோ?

அட ராமா!!! புரிந்து விட்டது ராமநாதன்.

பாராட்டுகள் ராமநாதன்.

உங்கள் நண்பர்கள் கூறியது தவறு. விவாதமெல்லாம் சரிப்பட்டு வராது உங்களுக்கு என்று உங்கள் நண்பர்கள் கூறியது தவறு.

வறுமையை எதிர்த்து தான் தீவிரவாதிகள் - பின்லேடன் & கோ ஆயுதமேந்துகிறார்கள் என்று கூறிய முதல் ஆள் நீங்கள் தான்.

இத்தனை பெரிய விஷயத்தை நீங்கள் ஏதோ தவறாகக் கூறிவிட்டீர்கள் என்று எண்ணித் தான் திருத்தி விடுங்கள் ராமநாதன் என்று கேட்டுக் கொண்டேன். இரண்டு வாரங்களாகியும் அதை மறுக்க உங்களுக்கு விருப்பமில்லை என்பதை அறிந்து கொண்டதும், உங்கள் வாதத்திறமையின் துணிச்சலைக் கண்டு புளகாங்கிதம் அடைகிறேன். ஏனென்றால் - என்னைப் போன்ற hardcore இஸ்லாமிய நம்பிக்கையாளர்கள் கூட தீவிரவாதி பின்லேடனின் சொல்லையும், செயலையும் ஏற்றுக் கொள்ள மறுக்கும் பொழுது, அந்த எண்ணத்திற்கு முற்றிலும் மாறான ஒரு விஷயத்தை எத்தனை அலட்சியமாக, உறுதியாக கூறிவிட்டீர்கள்.!!!

பாராட்டுகள் !

பாராட்டுகள் !!

பாராட்டுகள் !!!

Monday, February 13, 2006

முகமூடி

முகமூடி







அப்பாவின் அறைக்குள்
நான் நுழைவதில்லை

அன்றொருநாள்
நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே
ஒரு மிருகம் உறுமிக் கொண்டே
ஜன்னல் கம்பிகளினூடாக
அப்பாவின் அறையில் நுழைந்தது.

முடிநிறைந்த தேகம்.
தள்ளாடும் கால்கள்.
மாமிசமும் புகையும் நாறும் வாய்.
கடுகடுக்கும் சிவப்பு கண்கள்.

அன்றிலிருந்து
அப்பாவின் அறைக்குள்
நான் நுழைவதில்லை.

வாசனைமிக்க சோப்பால்
உடல் நாற்றம் போக்கும்.
நறுமணத் தூவாளையை பீச்சியடிக்கும்
நாகரீக உடையின் மேலே.
பின் எடுத்து மாட்டும்
அப்பாவின் முகத்தை.

சீறி சீறிப் பாயும் -
அம்மாவின் மீது.
என்னை மட்டும் பார்த்து புன்னகைக்கும்
நான் அப்பாவின் அறைக்கு
வெளியே நிற்கும் வரைக்கும்
காலையில் போகும் வேட்டைக்கு -
அலுவலகத்தில் புள்ளிமான்கள்
உண்டாம் ஏராளம்.
எதிர்க்க திராணியற்ற பிராணிகள்..

இரவில் வரும் நேரம்
எனக்குத் தெரியும்
என்னை அணைத்துப் படுத்திருக்கும்
அம்மா
தன் ஆத்மாவை என் மீது போர்த்திவிட்டு,
உடலை மட்டும் எடுத்துப்போவாள் -
முகமூடியை கழற்றி வைத்த
அப்பாவின் அறைக்கு.

Friday, February 10, 2006

நண்பனாக அறிமுகப்படுத்து.....

என் தோழியே
என்ன கோபம் உனக்கு?

ஒன்றிரண்டு மின்னஞ்சல்
தவறியதால்
மௌனப் புறக்கணிப்புகள்.

நீ அறியாததா -
மௌனத்திலே
நேசம் வளர்ப்பவன்
நானென்பதை?

சீண்டி விளையாடும்
சிறுபிள்ளை நட்பல்ல
நமது நட்பு.
இந்த மௌனச் சீண்டல்
புதிது தான்;
புரியவில்லை தான்.

இந்த கோபம் வடிந்து
வண்டல் தங்கும்
நிலங்களில்
புதிதாகப் பயிரிடுவேன்
நமது நட்பை.

எத்தனை
கூட்டத்தின் நடுவேயும்
என் மீது
ஒரு கண் வைத்திருப்பாய் -
என் மௌனங்களோடு
நான் பேசாமல்
அமர்ந்திருப்பதைக் கண்டு
புன்னகை பூப்பாய் -
நான் நானாக
இருக்கிறேனென்று.
உன் மௌனம் நடுக்குகிறது -
கரை தொடும் சமுத்திரம்
மௌனம் காப்பதில்லையே..?

உன்னைப் பார்த்த இடைவெளி
அடுத்த குறிஞ்சி மலரும்
காலத்தைத் தொடப்போகிறது.

மௌனம் உடை -
என் மௌனங்களோடு
நான் நானாக இருப்பதற்கு.

நட்பாகிய காதலா..
காதலாகிய நட்பா..
குழம்பித் தவிக்கும் கூட்டத்தில்
உன் இணைப் பிறாவும்
ஒன்றென்பதால்
முகவரி அற்றுப் போன
இந்த நட்பை
இனி நான் என்ன செய்வேன்?

இன்று வளர்ந்து நிற்கும்
உன் நிழலுக்கு
சொல்லியிருப்பாயா -
உனக்கு ஒரு அன்பான
தோழன் ஒருவன் உண்டென்று?
அந்தப் பிள்ளை அறியுமா -
பேசி பேசி அறுக்காத
இந்த நண்பனை?

எப்படி
அறிமுகப் படுத்துவாய்
என்னை?
எந்த உறவாகவும் வேண்டாம் -
நண்பனாகவே அறிமுகப்படுத்து.
ஒரு குழந்தையோடு
என் அறிவாற்றல்
ஒத்துப் போகுமாவென
கவலைப்படாதே -
அறிவாற்றல் அற்றுப்போன
நிலையைத் தான்
தேடியலைகிறேன்.

மௌனத்தைப் பேசுபவனிடம்
அறிவின் உச்சம்
அமைதியாகத் தான்
இருக்கும்.

உன்னிடத்தில் வாங்கிய கடன்
நிறைய உண்டு
திருப்பித் தருவதற்கு -
நட்பு, மதிப்பு, மரியாதையுடன்
நீ குழைத்து தந்த
தயிர்சாதமும் தான்.
வாங்கிய கடனின் முதல்
திருப்பப்படாமலே
போய்விடக்கூடாதென்பதால்
உன் மகளிடம் சொல்லிப் போ -
இந்த நண்பனைப் பற்றி;
இந்த நட்பைப் பற்றி.

வாங்கியதை
திருப்பித் தருவானென்று.

Thursday, February 02, 2006

நண்பர் ஜோவிற்கு அன்புடன் நண்பன்...

அன்புடன் நண்பர் ஜோவிற்கு - நண்பன் எழுதிக் கொள்வது,

இறைநேசன் பதிவில் உங்கள் ஆதங்கம் மிகுந்த கருத்துகளைப் படிக்க நேர்ந்தது. கவலைப்படாதீர்கள். இறைத்தூதர் நபிகளை எத்தனை மதிக்கிறோமோ அத்தனை மதிப்பும் மரியாதையும் இயேசுவின் மீதும் உண்டு.

இறைவனாக மட்டும் இயேசுவை ஏற்பதில்லை. மற்றபடிக்கு, அவருக்கு ஒரு உரிய இடத்தை முஸ்லிம்கள் எப்பொழுதும் கொடுத்தே வந்துள்ளனர். நவீன காலத்தில் கூட, இயேசுவின் மீது கிறித்துவர்களாலயே இழைக்கப்படும் அவதூறுகளை எத்தனை கிறித்துவ கவிஞர்கள் தட்டிக் கேட்டார்கள் என்று தெரியாது. ஆனால், கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தன் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார் - இயேசுவின் மீது இரைக்கப்படும் அவதூறுகளைக் குறித்து மனக்குமுறலுடன் அவர் எழுதிய கவிதையை சடையன் அமானுல்லா, மரத்தடி விவாதக்குழுமத்தில் நண்பர்கள் கவனத்திற்கு எடுத்து வைக்க, வழக்கம் போல, அதை புரிந்து கொள்ள இயலாமல் அவசரகதியில் விமர்சனத்தில் இறங்கிய சில நண்பர்களுக்காக விளக்கம் சொல்லி பதில் எழுத வேண்டியதாயிற்று - படித்துப் பாருங்கள் - இஸ்லாமிய நண்பர்களின் உள்ளம் புரியும்.

அந்தக் கட்டுரைக்குக் கீழே, ஒரு இறைவனின் சோகம் என்ற பெயரில், இயேசு பேசுவது போல நான் எழுதிய கவிதையையும் தந்திருக்கிறேன் - எப்படி ஒரு மனிதனான தன்னை இவர்கள் இறைவனாக்கி, தனிமைப்படுத்தி, துயரத்தில் ஆழ்த்தினார்கள் என்பது. இயேசுவை இறைவனாக மட்டும் தான் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையே தவிர, அவரை ஒரு இறைதூதுவராக, வழிகாட்டியாக, பின்பற்றக் கூடிய மனிதராக ஏற்றுக் கொள்வதில் எங்களுக்கு எந்த வித தயக்கமும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால், எங்களின் இதே கொள்கையைத் தான் Orthodox Christians - பின் பற்றி வருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். கிறித்துவமும், இஸ்லாமும் முரண்படுவது இந்த உருவ வழிபாட்டில் தான்.

//
இதே கோணத்தில் எனது மனதுக்குள் இருக்கும் ஒரு சிறு சந்தேகத்தை சகோதரர் என்ற முறையில் உங்களிடம் கேட்கலாம் என நினைக்கிறேன்.
அல்லாவின் இறைதூதர்களில் ஒருவரும் ,அல்லாவினால் விசேஷமாக ஆசீர்வதிக்கப்பட்டு மரியமினால் பெற்றெடுக்கப்பட்ட ஈசா நபியவர்கள் பற்றி எத்தனையோ திரைப்படங்கள் ,புத்தகங்கள் தாறு மாறாக வெளிவந்திருக்கின்றன .அவை பற்றியெல்லாம் முஸ்லீம் உலகம் கொதித்தெழுவதை விடுங்கள் ,குறைந்த படிசம் முணுமுணுப்பாவது வந்திருக்கிறதா ? //


கன்னி மேரியும், கவிக்கோவும் - ஒரு பார்வை...
(ஜூன் 11, 2005.)

சமீபத்தில் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்த பொழுது, மரத்தடி யாஹு மடலாடற் குழுவில் நடக்கும் சில விவாதங்களை வாசிக்க நேர்ந்தது. அதில் கவிக்கோ அவர்கள் எழுதிய கஜல் கவிதைகள் என்ற தொகுதியிலிருந்து ஒரு கவிதையை எடுத்து சடையன் சாபு மரத்தடி நண்பர்களின் இலக்கிய ரசனைக்கு வைக்க, விளைவு எதிர்பார்த்ததற்கு நேரிடையானது.

அந்தக் கவிதையை சொற்குவை என்றும், ஆபாசமானது என்றும், ரசனையற்றது என்றும் விமர்சித்தனர் மரத்தடி நண்பர்களுள் சிலர். கவிதையைப் புரிந்து கொள்ள மறுத்து அல்லது இயலாது - குறுகிய உள்நோக்கோடும், நேர்மையற்ற முறையிலும் விவரித்து எழுதிய நண்பர்களுக்கு விளக்கம் அளிப்பது தமிழ்க் கவிதைகளின் ஆர்வலன் என்ற முறையில் எனது மற்றும் கவிதை நேச நெஞ்சங்களின் கடமையும் ஆகிறது.

மரத்தடி நண்பர்களுக்காக எழுதிய விரிவான விளக்கம், மரத்தடியிலே முடங்கிப் போய்விடக் கூடாது என்பதனால், துவக்கு வாசகர்களுக்காக கீழே தருகிறோம்...

(துவக்கு இதழ் ஆசிரியரின் அனுமதியோடு.....)

ஐயா! ஆணி, முள்
ஏதாவது பிச்சை போடுங்கள்
கர்ப்பமாயிருக்கிறேன்
என்ற குரல் கேட்டது
வெளியே வந்து பார்த்தேன்
கன்னி மேரி !
*******************

இது தான் அந்தக் கவிதை....

இனி இந்தக் கவிதை என்ன சொல்ல வருகிறது...

இயேசுவை கட்டி வைத்து அடிக்கிறார்கள். தடுக்க முடியவில்லை. கண்ணீர் பெருகுகிறது. கை வலித்து காவலர்களே ஓய்ந்து, சோர்ந்து போகும் நேரம். ரோம் கவர்னரின் மனைவி இரக்கத்துடன் ஒரு துண்டை கொடுக்க அதனைக் கொண்டு சிந்திக்கிடக்கும் ரத்தம் முழுவதையும் துடைத்து எடுக்கிறார். அந்த கணத்தில், அந்தத் தாயின் மனம், பிரார்த்தனையில் ஈடுபடாமலா போயிருக்கும்? நிச்சயமாக ஈடுபட்டிருக்கும். அது போலவே, சிலுவையில் அறையப்பட்டு, தூக்கி நிறுத்தப்பட்ட போதும், சோகமே வடிவமாக, காலடியில் நிற்கின்றார். எத்தனை எத்தனை பிரார்த்தனைகள் மனதில் ஓடியிருக்கும்?


இது பழையது.

அந்தக் கால மனிதர்கள் எல்லோருமே காட்டுமிராண்டிகள் - நாகரீகமற்றவர்கள். அவர்களிடையே, இயேசு போன்ற ஒரு இறைத்தூதர் மாட்டிக் கொண்டது அவஸ்தை தான். ஆனால், இப்பொழுது இயேசு பிறந்திருந்தால், நாமெல்லாம் எப்படி எப்படி நல்லத் தனமாக நடந்து கொண்டிருப்போம்? எத்தனை இனிமையாக நடந்து கொண்டிருப்போம்?

பார்க்கலாமா ?

ஓர் ஓவியர் இயேசு கிறிஸ்துவை ஓவியமாகத் தீட்டினார் - ஆமாம் - நவீன யுகத்து ‘ஹிப்பி’ மாதிரி தலை முடியை பரப்பிக் கொண்டு, சிகரெட் புகைப்பது போன்று, ஒரு குறுநகையுடன் சித்தரிந்திருந்தார். கடும் எதிர்ப்பு கிளம்பிய பொழுது, அது எனது கருத்து சுதந்திரம் - இதில் தலையிட உங்களுக்கு உரிமை கொடுத்தது யார்? என்று பதில் கேள்வி எழுப்பினார். கன்னி மேரி இதைக் கண்டிருந்தால், அவர் நினைத்திருப்பார் முட்கிரீடம் சூட்டிய யூதாக்கள் ஆயிரம் மடங்கு மேல் என்று.

விஞ்ஞானிகள் என்ன சும்மா இருப்பார்களா? Reconstruction of Christ என்று பெயரிட்டு, ஒரு தலையை வடிவமைத்து, எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் கருணை ததும்பும் கண்களைத் தூக்கி தூரப்போட்டு விட்டு, அலை அலையான நீண்ட கேசத்தைத் தூக்கி எறிந்து விட்டு, மந்தமான, பிரகாசமில்லாத ஒரு மனித முகத்தைக் காட்டி, இது தான் இயேசு என்றார்கள். எல்லோர் மனதிலும் அன்பு ததும்பும் கண்களைக் கொண்டு நீங்கா இடம் பெற்ற அந்த நம்பிக்கைச் சித்திரத்தை சிதைக்கும் வன்முறையில் இறங்கியது - விஞ்ஞானம். உண்மையைத் தெளிவிக்கிறோம் (!!??) என்ற பெயரில் நம்பிக்கைகளைச் சிதைப்பது எந்த விதத்திலும் நன்மை பயக்காது. ஆனாலும், அதில் ஒரு உற்சாகம் - ஆனந்தம். குரூர திருப்தி.

கன்னி மேரி என்ன நினைத்திருப்பார்? சிலுவையில் அடிபட்டு சிதைந்தது உடல் மட்டும் தானே என்று...

Dan Brown எழுதிய ‘The Da Vinci Code’ என்ற புனை நாவலின் கதைக்கருவே - இயேசு மரிக்கவில்லை. தப்பிப் பிழைத்தார். மணந்து கொண்டார். சந்ததிகள் உண்டாக்கினார். இன்றளவும் அந்த சந்ததிகள் வாழ்கின்றனர் என்ற ரீதியில் கதை போகும். திகைத்துப் போயின தேவாலயங்கள். நீண்ட மௌனத்திற்குப் பிறகு அறிக்கை வெளியிட்டனர் - புனைந்து எழுதப்பட்ட அந்த புத்தகத்தை வாசிக்க வேண்டாம் என்று. எழுத்து சுதந்திரம் எந்த மட்டுக்கும் நீளலாம் என்று தங்களுக்கென எந்த ஒரு வரைமுறையின்றி இயங்கிக் கொண்டிருக்கும் கதை புனைபவர்கள் ஒரு புறமென்றால், அதை மறுத்து, எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய தேவாலயங்கள் நீண்ட மௌனம் காத்தது பலரது மனதை புண்படுத்தியிருக்கிறதென்றால், பெற்றெடுத்த ஒரு அன்னையின் மனம் எத்தனை தூரம் வேதனைப்பட்டிருக்கும்?

இது இப்படி என்றால், கிறிஸ்துவை அடித்து துவைத்து இம்சப்படுத்துவதை தரமான ஒளி-ஒலி பதிவோடு காட்டி, மக்களின் மனதை உருகச் செய்து, காசு பார்த்தது அதை விட கொடுமையல்லவா? இயேசுவின் வாழ்க்கை சித்திரவதை செய்யப்படுவது மட்டுமா? தன்னுடைய சொந்த வியாபாரத்திற்காக எல்லா மக்களும் மதிக்கும் ஒரு இறை தூதரையா அப்படிக் காட்ட வேண்டும்?
பலபேரால், அடித்து அவமானப்படுத்தப்படும் காட்சியை கண்டு மனம் களிக்கவா செய்யும் - ஒரு தாய்க்கு.? துடிக்க அல்லவா செய்யும்? ஆணி அடித்த வேதனையை விட இது கொடூரம் அல்லவா?

இவையெல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற் போன்று ஒரு ஆராய்ச்சியின் மூலம் புத்தகம் ஒன்று வந்திருக்கிறது - Is Jesus Lived in India என்று. கதையல்ல - நாவலல்ல - ஆராய்ச்சிப் புத்தகம். இயேசு இறக்கவில்லை. கொலைகார பாதகர்களின் கண்ணில் மண்ணைத்தூவி, தன் சீடர்களின் உதவியோடு, இந்தியாவின் காஷ்மீரத்திற்கு ஓடிப்போனார் என்றும், அங்கேயே மரித்துப் போனார் என்றும் அங்கு அவருக்கு கல்லறை இருக்கிறது என்றும் எழுதியுள்ளார். எல்லாம் சரித்திரத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை ஆதாரமாகக் கொண்டு, ஊகம் செய்யப்பட்டவை.

என்ன அவசியம் வந்து விட்டது - ஆராய்ச்சியை உறுதியாக செய்து, இறுதியான தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும் என்ற நிலைக்கு முன்பே அதைப் புத்தகமாகக் கொண்டு வந்து காசு பார்த்து விட வேண்டும் என்று?

இதையெல்லாம் பார்த்த மேரி அன்னை முடிவே கட்டி விட்டார் - அன்று மரண தண்டனை விதித்த யூதர்கள் எத்தனையோ மேல் என்று. இந்த நவீன யுகத்தைக் கண்டு கோபமுற்று இந்த உலகின் அநாகரிகத்தைக் கண்டிக்க முயன்று, கவிதை எழுதியவர் - ஆபாசமாக எழுதுகிறார் என்று சொன்னால், அது அதிசயமாகத் தான் இருக்கிறது.

கவிதையின் சின்ன சின்ன நெளிவுகளைக் கூட காண மறுக்கச் செய்தது எது என்று தான் !? கவிக்கோவின் உண்மை பெயரும் அது சார்ந்த மதமுமா? அப்படி இருக்காது, இருக்கக் கூடாது என்றே பிரார்த்திக்கிறேன். அது உண்மையென்றால், அதனால் சிறுமை கவிக்கோவிற்கு அல்ல.

இதையே வாலி எழுதியிருந்தால் - என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது - வாலி என்ன, யார் எழுதியிருந்தாலும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்து போன, உலகின் மூன்றில் இரண்டு பங்கு மக்களால் மதிக்கபெறும் ஒரு நபரை, நாகரீக உலகின் அனுகூலங்களைக் கொண்டு, அநாகரீகமாக விமர்சித்து அதன் மூலம் சம்பாதனை செய்யும் அவலத்தை சாடுவதற்கு சாதி, மதம் இதெல்லாம் தேவையில்லை அன்பரே...

ஆம், அன்று முட்களாலும் ஆணியாலும் இம்சித்து சிலுவையில் அடித்தார்கள். இன்று நாம் நாகரீகமாக கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், வியாபார உரிமை என்றெல்லாம் கூறி, அவர் நினைவுகளை கண்டம் துண்டமாக வெட்டி கூறு போட்டு விற்கிறோம்.

கன்னி மேரி இன்று நம்மிடையே பிச்சை கேட்டு நிற்கிறார் - தன் கருவிலிருக்கும் இயேசு மிகக் குறந்த துன்பத்துடன் சிலுவையிலே அறையப்படட்டும் - ஆணி , முள் கொடுங்கள் என்று.

நியாயந்தானே?
நட்புடன் நண்பன்
(நன்றி - துவக்கு மின்னிதழ் - http://www.thuvakku.da.ru/)
*********

இனி டா வின்சி கோட் படித்து விட்டு, நான் எழுதிய கவிதை.


ஓர் இறைவனின் சோகம்.(செப்டம்பர் 22, 2005)

இயற்கையேற்க
மறுக்கும் விளக்கத்தில்
சிக்கித் தவிக்கும்
பிறப்பு

இறையேற்க
மறுக்கும் மனிதர்கள்
மத்தியில் வாழ்ந்த
வாழ்க்கை

இரக்கமற்றவர்கள்
மறுத்த நீதியால்
சிதைந்த உடலுகுத்த
உதிரத்தால் மரணம்

வடிந்த ரத்தம் ஏந்தப்பட்டது
ஒரு அன்பான பெண்ணினுடைய
மற்றுமொரு
நம்பிக்கையாளனுடைய கோப்பைகளில்.

புலம் பெயர்ந்த
கோப்பைகள்
நிழலுலகின்
இருண்ட வீதிகளில்
தொலைந்தே போய்விட்டது
நம்பிக்கையாளர்களின்
மீண்டும்
ஒரு தேடலுக்காக.

குறியீடுகளில்
புதைந்து போன
வரலாற்று மோசடிகளில்
அனைத்தையுமிழந்துவிட்டு
நான் மட்டுமே மிஞ்சினேன்
இறைவனாக உயர்த்தப்பட்டு

****

சில சில வித்தியாசங்களில் தான் வேறுபடுகிறார்களே தவிர, ஈசா நபி என்று அழைத்து அன்பொழுக அவரை மதிக்க வேண்டும் என்றே அறிவுறுத்தப்பட்டே வளர்க்கப்படுகின்றனர் - இஸ்லாமியர்கள்.


இனி டென்மார்க் பற்றி சற்று பார்த்து விடலாம்....

டென்மார்க்ல் நிகழ்ந்தது கருத்துச் சுதந்திரம் அல்ல - கலாச்சார தீவிரவாதம்.

அந்த சமயத்திலும் - சுதந்திரம் உரிமை என பொறுப்பின்றி பேசிய டென்மார்க் பிரதமரையும் அந்த பத்திரிக்கையாளர்களையும் வன்மையாக கண்டிக்க வேண்டும். அதே சமயம் இஸ்லாமிய மக்கள் எந்த வன்முறையும் இன்றி, எந்த ஒரு இமாமிடமிருந்தும் எந்த ஒரு பத்வாமுமின்றி, எந்த ஒரு அரசிடமிருந்தும் எந்த ஒரு ஆனையுமின்றி, தாங்களாகவே அமைதியான முறையில் முன் வந்து அந்நாட்டு பொருட்களைப் புறக்கணித்து மிகப் பெரிய அடியைக் கொடுத்துள்ளனர். மக்கள் சக்தியை எளிமையான முறையில் எல்லோருக்கும் காட்டி உள்ளனர். ஜனநாயகம் என்று போலி கூக்குரலிடும் மேலை நாட்டின் பிரதிநிதியான டென்மார்க் பிரதமர் WTO வில் புகார் செய்வோம் சவுதியின் மீது என்று கூறியிருக்கிறார் - அதற்குக் காரணம் - அவர்கள் நாட்டு பொருட்களைப் புறக்கணிக்கிறார்களளென்று... தெருவில் வாழும் ஒரு சாதாரண குடிமகன் - வாங்க மறுத்தால், அது அரசாங்கத்தின் குற்றமா? அரபு நாடுகளில் ஜனநாயகத்தை மக்கள் தானாக திரண்டெழுந்து காட்டியதை உங்களால் தாங்க முடியவில்லை அல்லவா? ஒரு நாளைக்கு இழப்பு - 250 மில்லியன் திர்ஹம். அதாவது இந்திய ரூபாயின் மதிப்பின் படி 300 கோடி ருபாய் ஒரு நாளைக்கு. இது தொடர்ந்தால் - டென்மார்க் நாட்டின் கதி அதோ கதி தான்.

இதில் சிலர் வேறுவகையான மிரட்டல்களை முன் வைக்கின்றனர். இஸ்லாமிய நாடுகளின் பொருட்களை அவர்கள் பகிஷ்கரிப்பார்கள் என்று.

ரொம்ப நல்லது.

செய்யட்டும்.

வெத்து வேட்டு மிரட்டல்கள் இன்னும் எத்தனை நாட்கள்?

இங்கே கவனிக்கப்பட வேண்டிய செய்தி - மக்கள் நடத்திய காட்டிய இந்த அமைதிப் புரட்சி - எந்த ஒரு இயக்கமும் அறை கூவல் விடுத்து நடத்தப்பட்டதில்லை. எந்த ஒரு தீவிரவாதமும் இங்கு நடைபெறவில்லை. வியாபார நிறுவனங்கள் தாங்களாக முன் வந்து, டென்மார்க் பொருட்களைத் தூக்கி கடாசியதோடு மட்டுமல்ல, அதை வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார்கள் - எங்கள் கடைகளில் டென்மார்க் பொருட்கள் எதுவுமில்லை என்று. மக்கள் கருத்தோடு தங்களையும் இணைத்துக் கொள்ள விரும்பியதனால் அவர்களே அந்தப் பொருட்களை நீக்கிக் கொண்டார்கள்.

தங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் தங்கள் நபியின் மாண்பையும், இஸ்லாத்தின் கௌரவத்தையும் காக்க வேண்டுமென்றால் - அதற்கு எந்த தீவிரவாதமும் தேவையில்லை - தங்களின் அமைதியான, சாத்வீகமான எதிர்ப்பே போதும் என்று நிரூபித்துக் காட்டி விட்டார்கள் - ஒரே நாளில். இது தான் இஸ்லாம்.

இஸ்லாமிய தீவிரவாதம் என்று பேசியவர்கள் எல்லாம் இனி, முக்காடும், முகமூடியும் போட்டுக் கொண்டு திரியட்டும்.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்