"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Friday, December 15, 2006

நெரிசல் மிகும் கரை.

நெரிசல் மிகும் கரை.


மூன்று கடிதங்களைக் கையில் கொடுத்தாள் அம்மா.. ஒரு புகை வலிக்க கழிவறை செல்ல முனையும் பொழுது.

அம்மா அறிவாள் - கழிவறை தான் எனது பிரத்யேக வாசக சாலை என்பதை.

முதல் புகையை வெளி ஊதிவிட்டு, முதல் கடிதத்தின் முகவரி பார்த்தேன்.

சுந்தர்.

நல்ல நண்பன். உதவ முயற்சித்தேன். ஆனால், அனர்த்தமாகி விட்டது. விளக்கிச் சொல்ல முயன்றேன். புரிந்து கொண்டான். பின்னர் சில நாட்கள் இடைவெளி விழுந்து விட்டது.

கடிதம் மிகச் சுருக்கமாகவே எழுதப்பட்டிருக்கிறது.

'அன்பு நண்பனே,

நன்றி.

என் காதலை மெனக்கெட்டு அவளிடம் மன்றாடி சொல்ல முயன்றமைக்கு. எனக்காக நீ எத்தனை வாதாடி இருப்பாய் ஒரு நண்பனாய்? மறுத்து விடுவாள் என்று தெரிந்தும், அவளுடன் உண்டான உன் நட்பை பயன்படுத்திக் கொள்ள முனைந்தமைக்கு மன்னித்து விடு.

அவளின் திருமண நாளைக்கு முந்தைய தினத்தில் என் காதலை அவளிடத்தில் சொல்லி என்ன ஆகப் போகிறது என்றில்லாமல், சொல்லியமைக்கு நன்றி.'

முதல் கடிதம் வாசித்தாயிற்று.

அடுத்த கடிதம் -

மோகன்

யார் இது? அறிமுகமற்ற நபர்? எப்படி என் முகவரி அறிமுகமற்ற நபரிடத்தில் கிடைத்தது?

' நான் சந்த்யாவின் கணவன். என்னைத் தெரியாத உங்களுக்கு கடிதம் எழுதுவது ஒரு உண்மை வேண்டி. நீங்கள் என் மனைவியை எங்கள் திருமணத்திற்கு முந்தைய மாலை சந்தித்திருக்கிறீர்கள். நீண்ட நேர தனிமையில், நீங்கள் என்ன செய்தீர்கள் - உங்களுக்கும் என் மனைவிக்கும் இடையில் என்ன உறவு? கணவனன்றி வேறொருவனுடன் ஒரு பெண் தனித்திருப்பது எதன் காரணமாகவும் ஏற்றுக் கொள்ள இயலாது. அவள் நட்பென்கிறாள். ஆனால், நீங்கள் வாழ்ந்த ஊரோ, படித்த கல்லூரியோ அவ்வாறு சொல்லவில்லை. காதலென்கிறது. உண்மயை சொல்லி பதில் எழுதுங்கள்'

சாறு பிழிந்த எலுமிச்சை போல கசங்கிப் போனது மனது. மனைவியை நம்பவில்லை. நான் மட்டும் சொல்லி நம்பி விடவா போகிறான்.? ஊரும் உலகும் பிரதானமாக சிந்தனையைப் பாதிக்க அனுமதித்து விட்டு, இதென்ன குறுக்கு விசாரணை?

அடுத்த கடிதம் - ஆச்சரியமாக இருந்தது. சாத்தியமா என்ன? சந்த்யாவின் அம்மாவிடமிருந்து. அவள் வீட்டிற்குப் போகும் பொழுதெல்லாம் அதிகம் பேசாமல், ஏதாவது உபசரித்து விட்டு, எங்களைத் தனியே விட்டுவிட்டு, விலகிப் போய்விடும் நாசுக்கான தாய்.

வெகு ஆர்வத்துடன் வாசிக்கத் தொடங்கினேன்

' நீ சந்த்யாவை அவளது திருமண நாளின் முந்தைய தினத்தில் கடற்கரையில் தனித்து சந்தித்தது அவளது கணவன் காதிற்கு வந்துவிட்டது. அது குறித்து உனக்குக் கூட கடிதம் எழுதி இருப்பார். பதில் எழுத வேண்டாம். அவருக்கு மட்டுமல்ல, சந்த்யாவிற்கும் சேர்த்து தான்.. அவரை நாங்கள் சமாதானப்படுத்தி விட்டோம் - இனி எந்தவொரு காலத்திலும் அவளைப் பார்க்கவோ, கடிதம் எழுதவோ செய்ய மாட்டாய் என்று உறுதி மொழி கொடுத்து.

அந்த மாலை நேர சந்திப்பில், நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்கப் போவதில்லை. உன்னை எனக்குத் தெரியும். ஒரு நல்ல மனைவியாக இரு என நல்ல புத்தி சொல்லித்தான் அனுப்பி வைத்திருப்பாய். என்றாலும் எனக்காக அவளை இனி தொடர்பு கொள்வதை நீ தவிர்த்து தான் ஆக வேண்டும்.’

ஒரு மாலை சந்திப்பை காரணம் கொண்டு நட்பை முடித்து வைத்து விட்டார்கள்.

எல்லோரும்.

அந்த மாலை சந்திப்பு

நெரிசல் மிகும் கரை.

அலைகள் தொட்டு விலகி மீண்டொரு தொடுதலுக்குத் தவித்து மீள்வதைப் போல காற்றில் அலையடித்துக் கொண்டிருந்த கூந்தலை அடக்கிக் கொண்டிருந்தாள்,

நீராக தளும்பும் அவள் அருகே கரையாக நான்.

ஒன்றோடொன்று கலக்காமல் ஒட்டியும் விலகியும் ஒன்றின் ஆதாராமாக நிற்கும் மற்றொன்றைப் போன்று அவளும் நானும். உலகம் அறிமுகமாகாத காலத்தே தோன்றிய உறவென்பதால், நட்பாகாவே நீடித்து விட்ட பழக்கம்.
வெகு நேர மௌனத்திற்குப் பின்னர் அவள் சொன்னாள் "நாளைக்கு எனக்குத் திருமணம்"

"தெரியும் "

"நீ என் நண்பனாக எப்பொழுதும் இருப்பாயா?"

"அதிலென்ன சந்தேகம்?"

"என்னைப் பார்க்காத பொழுதும் கூட?"

"எத்தனை காலம் பார்க்காதிருந்தாலும் கூட, நீ என்றுமே எனக்கு நட்பாக இருப்பாய்"

நாங்கள் நண்பர்களென்பதை அறிந்தவர்கள் நானும் அவளும் சில நண்பர்கள் மட்டுமே. புரிந்தவர்கள் புது உறவுகளுக்கு வழி தேடி உதவி கேட்டு அணுகவும் செய்தனர். அப்படி உதவி கோரிய நண்பனின் கடிதம் ஒன்று சட்டைப் பையினுள் - காதல்.

நேரில் சொல்லி பதில் கிட்டாத காதல், நண்பனின் பரிந்துரையின் வலுவில் பதில் கிடைத்துவிடுமென்ற தவிப்பில் எழுதப்பட்ட காதல் சட்டைப்பையினுள் மடிந்து கிடக்கின்றது. எப்பொழுது அதை எடுத்து அவள் கையில் தரலாமென்ற சிந்தனை மௌனத்தினுள் புதைந்து கிடக்கின்றது.

"நாளை நீ இன்னொருத்தரின் மனைவி. என்றாலும், உன்னிடம் கடைசியாக ஒரு கடிதம்.."

வாங்கி அதை மேலும் சிறிதாக மடித்துக் கொண்டே சொன்னாள் "நமக்கான பிரபஞ்ச வெளி நம் நட்பு. அதில் நீயும் நானும் மட்டுமே இருப்போம். வேறெந்த உறவுகளும் வேண்டாமே, என்ன?"

நன்றாக மடிக்கப்பட்ட அந்தக் கடிதத்தை மீண்டும் என் சட்டைப் பையில் சொருகி வைத்து விட்டு எழுந்து கொண்டாள்.

நம் நட்பு
நமக்கான
பிரபஞ்சவெளி.
உனக்கும் எனக்குமான
நட்பிற்கென
விதிக்கப்பட்ட வெளியில்
உறவுகள் உயிரிலிகள்

அவளது சொற்களை கவிதையாக வடிவமைத்துப் பெற்ற தாக்குதலில், நான் அமர்ந்து கிடக்கையில், அவள் விலகி விலகி நடந்து போய் கொண்டிருந்தாள்.

"ஹேய்.. சந்த்யா..." அலைகளின் உற்சாகத்தையும் தாண்டிய என் குரல் அவளை ஒரு நிமிடம் நிறுத்தியது. "உனக்கான வாழ்க்கையை உற்சாகத்துடன் வாழ்ந்து விடு. உன்னைத் தொலைத்து விடாதே - எதன் காரணம் கொண்டும்..."

கடற்கரை முழுவதும் பிரகாசித்த ஒரு புன்னகை.

பின் ஒரு கையசைப்பு.

மீண்டும் திரும்பி நடந்தாள்.

போய்விட்டாள்.

நான் அந்த மூன்று கடிதங்களுக்கும் பதில் எழுதவேயில்லை. அவளையும் அதன் பின் சந்திக்கவேயில்லை.

Friday, November 24, 2006

நேசக்குமாரும் முஸ்லிம் இனத்துரோகிகளும்!


வலைத்தளத்தில் இயங்குவதையும், எழுதுவதையும் விட்டு - கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு மேலாகி விட்டது. ஒரு தனிமை தேவைப்பட்டது என்பதற்காக நிறுத்தியது - பின்னர் அதுவே தொடரவும் செய்தது.

ஆனால். இப்பொழுது இந்த மௌனம் கலையும் நேரம் வந்துவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது. காரணம் இந்தப் பதிவு.

நேசக்குமாரும் முஸ்லிம் இனத்துரோகிகளும்!

http://tmpolitics.blogspot.com/2006/11/blog-post_116385801610657478.html#comments


இஸ்லாமிய அன்பர்களால் தொகுத்து வழங்கப்படும் இந்த வலைப்பதிவில், கொஞ்சம் விசாரித்து விட்டு எழுதி இருக்கலாம். இத்தனைக்கும் இங்கிருந்து இஸ்லாமிய அமைப்புகளில் செயல்படும் அன்பர்களையும் அறிவோம். அல்லது, வலைப்பதிவில் எழுதப்பட்ட விஷயங்களையாவது கொஞ்சம் வாசித்து விட்டு எழுதி இருக்கலாம்.

இது எதுவுமே செய்யாது, நேசக்குமாரைத் திட்டி ஒருவர் எழுதி விட்டார் என்பதால், அதையே ஒரு ஆதாரமாகக் கொண்டு, இங்கு அப்படியே மறுபதிவிட்டதன் மூலம், உங்கள் வலைப்பதிவின் நம்பகத் தன்மையைத் தான் குறைத்துக் கொண்டீர்களே தவிர, எங்கள் தரத்தைப் பற்றியது அல்ல.

உங்கள் தகவல்களுக்காக -

இதுவரையிலும் இந்தியாவில் இருந்து வந்த எந்த ஒரு நபருக்கும் உதவி புரிந்ததில்லை. அந்த எண்ணமும் இல்லை. இங்கு வந்து நிதி திரட்டுவதை - அவர்கள் எத்தகைய நோக்கம் கொண்டுள்ளவர்களாக இருந்தாலும் - கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறோம். சிரமப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் பணத்தை குடும்ப நலனுக்காக மட்டுமே செலவிட வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருப்பதுடன், மற்றவர்களிடத்தில் அத்தகைய பிரச்சாரத்தையும் செய்து கொண்டிருக்கிறோம்.

நேசக்குமாரையோ அல்லது அவர் போன்ற பிறரையோ இணையத்தில் பதிலுக்கு பதில் மல்லுக்கட்டிக் கொண்டு திட்டவில்லை என்பதால் இனத்துரோகி என்று குறிப்பிடுகிறாரா என்று புரியவில்லை.

முதலில் ஒன்று புரிந்து கொள்ளுங்கள் - ஒருவனுக்கு தான் சார்ந்தவற்றின் மீதான நம்பிக்கைகள் மட்டுமே பிரதானமாக இருக்கவேண்டுமே தவிர, பிறரின் நம்பிக்கையின்மையின் மீது போர் தொடுக்க வேண்டும் என்பது அவசியமற்றது.

இதையே குரானில், சூரா 109ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் மார்க்கம் உங்களுக்கு - என் மார்க்கம் எனக்கு.

Unto you your religion, and unto me my religion

.....lakkum theenukkum valiyaththeen.

இதை விட எளிமையாக மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் வார்த்தைகள் இருக்க முடியாது.

அவ்வாறாயின், இஸ்லாமிய காழ்ப்புணர்ச்சியுடையவர்கள் அவர்கள் பாதையில் அவர்கள் விரும்பியவற்றை எழுதுகிறார்கள். அதற்காக அவர்களுக்குப் பதில் சொல்லியே தீர வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அவ்வாறு பதில் சொல்லாததே - அவர்கள் கருத்தின் மீது கொண்ட மறுப்பாகும்.

மற்றபடிக்கு - என் நம்பிக்கைகளும் - நான் வாசிக்கும் குரானை புரிந்து கொள்ள நேரிடையாக நான் எடுக்கும் முயற்சிகளும் மட்டுமே முக்கியமாகப் படுகிறது எனக்கு. பிறர் சொல்லி என் மீது திணிக்க முற்படும் கருத்துகளை என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை. ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை.

அது போலவே, தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் விஞ்ஞான ஆய்வுகளையும், நிரூபணம் செய்யப்பட்ட உண்மைகளையும் மறுக்கப் போவதுமில்லை. தன் படைப்பின் பேரதிசயங்களையும், எல்லைகளையும், அதன் விஸ்தீரணங்களையும் மனிதன் ஆராய்வதை இறைவன் மறுக்கப்போவதில்லை.

மேலும், இந்த ஆய்வுகள், அந்த ஆய்வுகள் தரும் புதிய தோற்றங்கள் எண்ணங்கள் மூலமே இறைவனின் பிரம்மாண்டத்தை மனிதனால் உணர முடியுமே தவிர, நம்பிக்கைகள் மட்டும் கொண்டு, இறைவனின் பிரம்மாண்டத்தை உணர இயலாது.

நம்பிக்கைகள் இறைவனின் இருப்பை மட்டுமே உறுதி செய்கிறதே தவிர, இறைவனின் இயல்பையோ, அவனின் படைப்பின் விரிவையோ உணர்ந்து கொள்ள துணை நிற்பதில்லை. இறைவனின் இயல்பை - அவனது சக்தியின் எல்லைகளை உணர்ந்து கொள்ள தொடர்ந்த ஆய்வுகள் தேவை. அவை தரும் விளக்கங்களை - புதிய எல்லைகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை வேண்டும்.

இந்த மனப்பான்மை இஸ்லாமிய உலகில் இருந்தது - முன்பு. அப்பொழுது இஸ்லாம் சிறந்து விளங்கியது. ஆனால், அந்த மனப்பான்மையிலிருந்து சிறிது சிறிதாக விலகிய பொழுது, நாம் நம் மகோன்னதத்தை இழக்க ஆரம்பித்தோம். அந்த பரந்த மனப்பான்மை இருந்த காலத்திலும் இஸ்லாம் பற்றிய விமர்சனங்கள் இருக்கத் தான் செய்தன. ஆனால், அவை யாரையும் பாதிக்க வில்லை. அந்த மனப்பான்மையை இழந்த காலத்தில், இஸ்லாம் பற்றிய சிறு சிறு விமர்சனம் கூட ஆத்திரம் கொள்ளச் செய்கிறது.

இந்தப் புரிதல்கள் இருப்பதினாலயே, இஸ்லாம் பற்றி எழுதுபவர்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருப்பதில்லை. ஏனென்றால், அது என்னைப் பாதிப்பதில்லை.

மாறாக, சமூக அரசியல் சார்ந்த பிரச்சினைகளை மட்டுமே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தளங்களிலிருக்கும் தவறான அணுகுமுறைகளுக்கு மட்டுமே எதிர்வினை செய்ய வேண்டும் என்பது தான் எனது எண்ணம்.
இதன் தொடர்ச்சியாக, சமூக அரசியல் தளங்களில் எழுச்சி பெற முனைய வேண்டியது அவசியம் - அதன் ஆரம்ப கட்டம் - கல்வி. பெண்கள் உட்பட. பெண்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும். உடைகள் உட்பட. கண்ணியமான உடைகள் என்ற அளவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

Muslims should adopt a modern outlook and acquire a scientific temper.

இது தான் இன்றைய அத்தியாவசியத் தேவை.

இந்தக் கருத்துகளை வெளிப்படையாக பேசவில்லையென்றாலும், துபாயில் சந்தித்த சில நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டது உண்டு.

இத்தகைய கருத்துகள் சிலருக்கு இனத்துரோகமாகப்பட்டால், என் நிலையிலிருந்து பார்க்கும் பொழுது - நீங்களும் அவ்வாறு தான் எனக்குத் தோன்றுகிறீர்கள்.

நல்லது -

புகைப்படம் வெளியிடுவோம் என்ற மிரட்டல் வேண்டாம். முதன் முதலில் புகைப்படம் வைத்து வலைப்பூ அமைத்த சிலருள் நானும் ஒருவன்.

இன்னமும் வேண்டுமென்றால் தருகிறேன்.

ஆப்பு போன்ற ஒருவருக்கு நான் பதில் சொல்ல வேண்டிய கட்டாயமில்லை. ஆனால், தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை என்ற பெயரில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இத்தளத்தை முஸ்லிம்கள் பலரும் வாசிக்கக் கூடும் என்பதால் விளக்கமும் என் எண்ணங்களும்.

என் நம்பிக்கைகளை உங்களிடத்தில் நிரூபிக்க வேண்டிய அவசியமோ தேவையோ எனக்கில்லை. மேலும் என்னைக் குறித்து விமர்சனம் செய்யும் அளவிற்கு உங்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது.

Sunday, March 05, 2006

மீண்டொருமுறை அடங்க மறு....

அனைவருக்கும்,


என் கவிதையில் என்ன புரிந்ததோ புரியவில்லையோ தெரியாது - ஆனால், என் கவிதை எல்லா நேரத்திற்கும் பொருந்துமாறு எழுதப்பட்டுள்ளது என்பது மட்டும் தெளிவு - முகமூடி எடுத்துக் கையாண்டமையே அதற்கு சாட்சி.

இந்தக் கவிதை திருமாவிடம் அதிமுக பக்கம் போகவேண்டாம் என்று சிலர் துபாயில் வைத்து வாதாட முனைந்த பொழுது எழுதப்பட்டது. அதாவது 23-2-06 அன்று. அப்பொழுது பரவலான பேச்சு - பாமக தங்களுக்குக் கிடைத்த தொகுதியில் சிலவற்றை விட்டுக் கொடுத்தாவது விடுதலைச் சிறுத்தைகளை தங்கள் பக்கம் நிறுத்திக் கொள்வார்கள் என்ற பேச்சிருந்தது. வன்னியர் - தலித் நல்லுறவு எக்காரணத்தைக் கொண்டும் முறிந்து விடக்கூடாது - அந்த நட்பு தொடர வேண்டும் என்ற ரீதியில் எல்லோர் சிந்தனையும் இயங்கிக் கொண்டிருக்க, அந்த நட்பைப் பாதுகாக்க திருமா என்ன விலை கொடுக்க வேண்டும்?

பாமக சின்னத்தில் போட்டியிட்டு வெல்வதன் மூலம், பாமகவின் தலித் பிரிவு தலைவராக வேண்டுமானால் திருமாவினால் மின்ன முடியுமே தவிர, விடுதலை சிறுத்தைகள் ஒரு தனி சக்தியாக வலுவாக வடிவெடுக்க முடியாது.

விடுதலைச் சிறுத்தைகளை ஒரு மக்கள் சக்தியாக, அமைப்பாக, அரசியல் கட்சியாக ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கென அங்கீகாரமும் இட ஒதுக்கீடும் செய்து - அதுவும் வென்றாலும் தோற்றாலும் ஒரு குறிப்பிட்ட சதவிகித ஓட்டு வாங்கி, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாக மலர சந்தர்ப்பம் அமைத்துக் கொடுக்கும் ஒரு கூட்டணியாக இருந்தால் மட்டுமே இணைய வேண்டும் - இது தான் அவர்களது குறிக்கோளாக இருந்தது.

எத்தனை காத்திருந்தாலும், திமுக விடுதலைச் சிறுத்தைகளுக்கு இடங்கொடாது என்பது தெளிவானதும், (பாமக - சிறுத்தைகளைப் பிரித்து விட வேண்டும் என்பது கருணாநிதியின் எண்ணமாக இருக்கலாம்) பின்னர் தயங்கி நிற்பதில் எந்தப் புண்ணியமும் இல்லை. சமூக தளத்தில் வேண்டுமானால், தீண்டாமை இருக்கலாமே தவிர, அரசியல் களத்தில் தீண்டாமை கிடையாது.

திருமாவிற்கு இருந்த ஒரே நெருடல் - பாமக தலைவர் மருத்துவர் தான். இறுதியில் பாமக தலைவர் பிரியா விடை கொடுத்தே திருமாவை அனுப்பி இருக்கிறார் என்றே தோன்றுகிறது. (ஊகம் தானோ?)

இது, 24.2.06 அன்று திருமா - ஆற்றிய உரையிலும் தெளிவாகியது. மருத்துவர் தங்களுக்காகப் பேசியதில் மகிழ்ச்சி தெரிவித்த அவர், எப்பாடுபட்டாவது, இந்த இரு சமூகங்களின் நல்லுறவைப் பேணி காப்பேன் என்று உறுதி மொழியே வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்று அதிமுக கூட்டணி பற்றி அறிவிப்பு வெளியிடப்படவில்லை. ஆனால் அவரது துபாய் நண்பர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது - பாமகவை விட்டுப் பிரியாமல் இருப்போம் என்ற எதிர்பார்ப்பு. (இது திமுகவிற்கான ஆதரவு இல்லை) இந்தப் பின்னணி தெரிந்து தான் கவிதை எழுதினேன்.

சிலபல இலவசங்களைத் தந்து
கை கழுவ முனையும்
சில அரசியல் தலைமைகளிடமும்
அடங்க மறு, அத்து மீறு.

- இந்த வரிகளில் நான் குறிப்பிட்ட தலைவர் கருணாநிதி. பாமகவிற்கு ஒதுக்கிய சில இடங்களைக் கொடுத்து, உங்களை சரிக்கட்ட முனைந்தால், ஏற்றுக் கொள்ளாதீர்கள் என்பது தான் இந்த கவிதையின் கோரிக்கையாக இருந்தது.

இறுதியில், அதுவே நிகழவும் செய்தது.

திருமா திமுகவை விட்டு விலக வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பும்.
அது போலவே - வைகோவின் நண்பருடன் ஒரு சந்திப்பு என்ற பேட்டியிலும், நான் குறிப்பிட்டிருந்தேன் - திரு. வா.மா.குலேந்திரன் என்ற லண்டன் நகர வழக்கறிஞர் - ஒரு புத்தகம் அச்சடித்து எடுத்துச் செல்கிறார். கூட்டணி பற்றி முடிவாக அறிவிப்பு வந்ததும் தான் அந்த புத்தகம் வெளியாகும் என்று.

அது வைகோவின் மனநிலை எப்படி செயல்படுகிறது என்ற கணிப்பு. இனி அந்தப் புத்தகம் லண்டனிலிருந்து எங்களுக்கு வரும். வந்ததும் முழு தகவல்.

முஸ்லிம் லீகும் அம்மாவுடன் இணைகிறது. திருப்தி தான். இதயம் கிழிகிற அளவிற்கு எல்லோருக்கும் இடம் கொடுத்து, அங்கு ஒரே நாற்றம். இதயத்திலிருந்து வெளியேறி வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த அரசியல் கூட்டணியால் சில நன்மைகள் கூட விளையக் கூடும். அம்மா தமிழ் மீது சற்றே அதிக அளவு அக்கறை காட்டக் கூடும். என்றாலும் ஜெவின் கடந்த கால செயல்பாடுகள் - தனக்குக் கிடைத்த ஆதாயம் நிறைவு பெற்றதும், மற்றவர்களை கை கழுவி விடும் - அந்த அகம்பாவத்திலிருந்து விடுபட்டு, முழுமையடைந்த தலைவராக மாறிவிட்டாரா என்பது இந்தத் தேர்தலின் முடிவின் போது தான் தெரிய வரும்.

அதுசரி, தமிழ் ஆர்வலர்கள் கருணாநிதிக்கு எதிராக திரும்பி விட்டார்களா என்ற கேள்வி எழுகிறதா? என்றுமே, கருணாநிதியை தமிழ் ஆர்வலர்கள் நம்பியதே இல்லை. தமிழைப் பயன்படுத்தி, ஆசியக் கண்டத்தின் செல்வந்தர் குடும்பங்களில் ஒன்றாக தன் குடும்பத்தை முன்னேற்றி விட்டார் என்பது ஒன்று தான் அவரது சாதனை. அது அவரது குடும்பத்தாருக்கு மட்டுமே உதவுமே தவிர, தமிழ் நாட்டிற்கல்ல. இன்னும் சொல்லப் போனால், மிகுந்த பணபலத்தைக் கொண்டு, ஊடக வன்முறையையும், அநாகரீகத்தையும் அவர்களால் அரங்கேற்ற முடியும்.

கருணாநிதியின் பேனா முனையில் வந்து விழும் நளினமான தமிழுக்கு மயங்கிக் கிடந்த சிலர் - மதிப்பு கொண்டிருந்த சிலர், இன்று அந்த பேனாவின் முனை சிறிது சிறிதாக ஒளி மங்கி, வலுவிழந்து வருவதை சற்று வருத்தத்துடனே பார்க்க வேண்டியிருக்கிறது. தன் மகன் என்ற பாசத்தினால் அறிவுக் கண்ணையும் இழந்த திருதராட்டிரன் போலத் தான் கருணாநிதியின் இன்றைய நிலைமையும் இருக்கிறது. தன் மகனுக்குப் போட்டியாக வருபவர்களை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து அழிக்க முற்படுகிறார் அவர். பாவம் - அதுவே திமுகவின் அழிவாகவும் அமைந்து விடப் போகிறது என்பதை அவருக்குச் சொல்ல அருகில் யாருமில்லை.

Wednesday, March 01, 2006

தை பாருங்கள்.

தை பாருங்கள்.

நன்றாக.

மேதாவித்தனத்தை
நிலைநிறுத்த
எங்கள் காசில்
சிற்றிதழ் நடத்தும்
இலக்கியமேதாவிகளே

தை பாருங்கள்.

எளியவனும்
இனி பேசுவான் தமிழ்
கவிதை கூறும் தமிழுலகம்
இனி இரு கூறாக நிற்கும்.

தமிழுக்காக தை

எதிரில்

எல்லோரும்
ச(ந்)தை விற்பனையில்.

Tuesday, February 28, 2006

அடங்க மறு:::

அடங்க மறு:::
***
திருமா துபாய்க்கு வந்த பொழுது ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் (24/2/06) வாசிக்கப்பட்ட கவிதை.
***
பிச்சைப் பாத்திரத்தில்
பிச்சையிட குனிந்தவன்
இன்னமும் நிமிரவேயில்லை
பிச்சையெடுத்தவன்
ஏறிவிட்டான் முதுகில்.

சுமையென தெரியாமல்
சுமப்பதையே வாழ்வாக்கி
ஒவ்வொரு குழந்தையுடனும்
பிறப்பிக்கிறோம் இன்றும்
சுமைகளை.

எலும்புக் குருத்துகளில்
துளையிட்டு
ரத்த நாளங்களில்
அட்டையாய் ஒட்டி
சிந்தனை செல்களில்
எண்ணங்களாய் மாறி
அடிமையானதை அறிந்தோமா?

நம் எண்ணங்களைக் கொண்டே
நம்மை சொல்ல வைக்க முயற்சிப்பான்
அடிமையென்று.
எதிர்ப்பவர்களுக்குக் காட்டுவான்
காலம் கடந்த சில வேதங்களின்
அர்த்தமற்ற வசனங்களை.

கொஞ்சம் மொழி பெயர்த்தால்
கிழிகிறது நாகரீகம்
நால்வரிடம் கெஞ்சிக் கூத்தாடி
கேட்டுப் பெற வேண்டியிருக்கிறது
தன் மனைவியைக் கூட.
ஒதுக்கி வைப்பதில்
வாழ்வின் பாதி அங்கம்
கூட தப்பவில்லை

ஆண்டவன் பெயரினால்
ஆட்டிப் படைக்க
அவன் படைத்த பிதற்றல்களை
எளிதாக ஏற்றுக் கொண்டார்கள்
தூரதூரமாய் நின்று வணங்கி.
நடுகற்களில் சுமை இறக்கி
இளைப்பாறும் பொழுது கூட
நினைவிற்கு வருவதில்லை
முன்னால் வாழ்ந்து போன
மனிதர்கள் மட்டுமல்ல -
தானமளித்த வாழ்க்கையும் தான்.

நல்லவேளையாக
எழுதப்படாத விதிகளில்
முடங்கிக் கிடந்த மனிதர்கள்
மறக்கவில்லை
தாய் புகட்டிய மொழியை.

சாம்பலினின்றும்
உயிர்த்தெழும் பறவையாக
இன்று
எழுந்து நிற்கிறதொரு குரல்
உரத்து -

அடங்க மறு, அத்து மீறு.

இன்று அடங்க மறுப்பதால்
இன்று அத்து மீற முடிவதால்
அஞ்சியவர்கள் மாற்றுகின்றனர்
யுத்தவிதிகளை.

எதிரே நிற்பவன் எதிரியல்ல
சகோதரனே.
அற்ப அங்கீகாரத்திற்கு
ஆசைப்பட்டவன் கைகளில்
அடுத்தவர் மீது
வாரி வீச மீண்டும் சேறு.
தொழில் அதே தான் -
பெயர் மட்டும்
மாற்றப்பட்டிருக்கிறது
அறிவுஜீவியென.

இந்த அறிவுகொழுந்துகளைத்
தூண்டி விடுபவன்
அறிவித்துக் கொள்கிறான்
தன்னைத் தானே நடுவனாக.

தன் நச்சுத்தலையை
நடுநிலையாகப் பாசாங்கு செய்யும்
நரம்பையே நூலாய் அணிந்த
நண்பர்களுக்குப் பதில் சொல் -
இப்படி -

அடங்க மறு அத்து மீறு

எங்கும் யாரிடமும்
படுத்தெழும் உரிமை கோரும்
கருத்து சுதந்திரத்திடம்.
அடங்க மறு அத்து மீறு

பிறப்பினால் தகுதி குறித்து
கேள்வி எழுப்பும்
தகுதியற்றவனிடத்தில்.
அடங்க மறு அத்து மீறு

அடுத்தவர் கணக்கில்
சிலபல இலவசங்களைத் தந்து
கடமை முடித்து
கை கழுவ முனையும்
சில அரசியல் தலைமையிடம் கூடத் தான்
அடங்க மறு அத்து மீறு.

Sunday, February 26, 2006

பாராட்டுகள் இராமநாதன்

// ஆணிவேர் எங்கேயிருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். பாலஸ்தீனத்திலும், ஆப்கானிலும், ஈராக்கிலும் என்று சொல்லிக்கொண்டே போகலாம். பயனொன்றுமில்லை. அதெல்லாம் உண்மை தான். அமெரிக்கா செய்வது தவறுதான். அதை பல பெரும்பான்மை ஐரோப்பிய, ஆசிய மக்களும் வெகுஜன பத்திரிகைகளும் (அமெரிக்காவில் உட்பட) மிகவும் தீவிரமாக எதிர்த்துவருகின்றன். வலுவான எதிர்ப்பு இருக்கிறது. ஜனநாயக முறையில் அமைதியாக தெரிவிக்கப்படுகின்றது. அதை செவி மடுக்காமல் இருப்பது அமெரிக்காவின் அராஜகம். இதிலெல்லாம் மறுபேச்சே கிடையாது. ஆனால் கேட்டதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? ஏனென்றால் எங்குதான் வறுமையும் சாவும் அடக்குமுறையும் இல்லை? அதற்கு பதிலடியாக கடவுளின் பெயரால் ஆயுதம் தூக்குவது விநோதமாகப் படுவதாலேயே முக்கியத்துவமும் கிடைக்கிறது ஊடகங்களில். //


உங்களின் எழுத்துகளைப் பார்த்ததும் அசந்து போய்விட்டேன். இது நீங்கள் தான் எழுதினதா? அல்லது மிகுந்த உணர்ச்சி வசப்படுதலால், நண்பனை மடக்க வேண்டும் - என்ற ஒரே ஆவல் உந்தித் தள்ள மதி மயக்கத்தில் எழுதி விட்டீர்களோ என்ற சந்தேகம். அதனால தான் உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன்.

// ராமநாதன் - இது நீங்கள் எழுதியது தானே? சந்தேகமில்லையே? எங்கு தான் வறுமையும் சாவும் அடக்குமுறையும் இல்லை? இது நீங்கள் எழுதியது தானே? இது வரையிலும் இது எங்குமே விவாதிக்கப்படாமல், இப்பொழுது எங்கிருந்து வந்தது இது? இதைப் பற்றி விவாதிக்கலாமா? அல்லது நான் வேறு எதையாவது பிடித்துத் தொங்குகிறேன் :-) என்று சொல்வீர்களா? இந்தத் தீவிரவாதிகள், வறுமையினாலும், சாவினாலும், அடக்குமுறையினாலும் தான் போராடுகிறார்கள்என்றா சொல்ல வருகிறீர்கள்? முதலில் அதை சொல்லுங்கள். இது தான் உங்கள் வாதம் என்றால், உங்கள் தீவிரவாதப் பார்வை முற்றிலும் தவறானதாக இருக்கிறது.

பிறகு மீண்டும் நாம் ஆதியிலிருந்து விவாதிக்க வேண்டும் - தீவிரவாதம் என்றால் என்னவென்று. என்ன செய்வது? But no comments on the poor igonorant souls:-) பின்லேடன் வறுமையை எதிர்த்து ஆயுதம் ஏந்துகிறான் என்று சொல்லிய முதல் ஆள் நீங்கள் தான் ராமநாதன். சொல்லுங்கள் - நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று? //

வார இறுதியில் பதில் சொல்வதாகக் கூறி சென்றீர்கள். உங்கள் பதிலைப் பார்த்த பின் தான் வேறு வேலையே செய்வது என்று முடிவு கட்டிக் கொண்டு, எதுவும்செய்யாமல், இரண்டு வாரங்களாகக் காத்திருந்தது தான் மிச்சம்.

அப்பொழுது தான் தோன்றியது.

தான் நம்புவதை உறுதிபட தெரிவிப்பவர் ஏன் மறுக்க வேண்டும்? நான் தான் தவறுதலாகக் காத்துக் கிடக்கிறேனோ?

அட ராமா!!! புரிந்து விட்டது ராமநாதன்.

பாராட்டுகள் ராமநாதன்.

உங்கள் நண்பர்கள் கூறியது தவறு. விவாதமெல்லாம் சரிப்பட்டு வராது உங்களுக்கு என்று உங்கள் நண்பர்கள் கூறியது தவறு.

வறுமையை எதிர்த்து தான் தீவிரவாதிகள் - பின்லேடன் & கோ ஆயுதமேந்துகிறார்கள் என்று கூறிய முதல் ஆள் நீங்கள் தான்.

இத்தனை பெரிய விஷயத்தை நீங்கள் ஏதோ தவறாகக் கூறிவிட்டீர்கள் என்று எண்ணித் தான் திருத்தி விடுங்கள் ராமநாதன் என்று கேட்டுக் கொண்டேன். இரண்டு வாரங்களாகியும் அதை மறுக்க உங்களுக்கு விருப்பமில்லை என்பதை அறிந்து கொண்டதும், உங்கள் வாதத்திறமையின் துணிச்சலைக் கண்டு புளகாங்கிதம் அடைகிறேன். ஏனென்றால் - என்னைப் போன்ற hardcore இஸ்லாமிய நம்பிக்கையாளர்கள் கூட தீவிரவாதி பின்லேடனின் சொல்லையும், செயலையும் ஏற்றுக் கொள்ள மறுக்கும் பொழுது, அந்த எண்ணத்திற்கு முற்றிலும் மாறான ஒரு விஷயத்தை எத்தனை அலட்சியமாக, உறுதியாக கூறிவிட்டீர்கள்.!!!

பாராட்டுகள் !

பாராட்டுகள் !!

பாராட்டுகள் !!!

Monday, February 13, 2006

முகமூடி

முகமூடி







அப்பாவின் அறைக்குள்
நான் நுழைவதில்லை

அன்றொருநாள்
நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே
ஒரு மிருகம் உறுமிக் கொண்டே
ஜன்னல் கம்பிகளினூடாக
அப்பாவின் அறையில் நுழைந்தது.

முடிநிறைந்த தேகம்.
தள்ளாடும் கால்கள்.
மாமிசமும் புகையும் நாறும் வாய்.
கடுகடுக்கும் சிவப்பு கண்கள்.

அன்றிலிருந்து
அப்பாவின் அறைக்குள்
நான் நுழைவதில்லை.

வாசனைமிக்க சோப்பால்
உடல் நாற்றம் போக்கும்.
நறுமணத் தூவாளையை பீச்சியடிக்கும்
நாகரீக உடையின் மேலே.
பின் எடுத்து மாட்டும்
அப்பாவின் முகத்தை.

சீறி சீறிப் பாயும் -
அம்மாவின் மீது.
என்னை மட்டும் பார்த்து புன்னகைக்கும்
நான் அப்பாவின் அறைக்கு
வெளியே நிற்கும் வரைக்கும்
காலையில் போகும் வேட்டைக்கு -
அலுவலகத்தில் புள்ளிமான்கள்
உண்டாம் ஏராளம்.
எதிர்க்க திராணியற்ற பிராணிகள்..

இரவில் வரும் நேரம்
எனக்குத் தெரியும்
என்னை அணைத்துப் படுத்திருக்கும்
அம்மா
தன் ஆத்மாவை என் மீது போர்த்திவிட்டு,
உடலை மட்டும் எடுத்துப்போவாள் -
முகமூடியை கழற்றி வைத்த
அப்பாவின் அறைக்கு.

Friday, February 10, 2006

நண்பனாக அறிமுகப்படுத்து.....

என் தோழியே
என்ன கோபம் உனக்கு?

ஒன்றிரண்டு மின்னஞ்சல்
தவறியதால்
மௌனப் புறக்கணிப்புகள்.

நீ அறியாததா -
மௌனத்திலே
நேசம் வளர்ப்பவன்
நானென்பதை?

சீண்டி விளையாடும்
சிறுபிள்ளை நட்பல்ல
நமது நட்பு.
இந்த மௌனச் சீண்டல்
புதிது தான்;
புரியவில்லை தான்.

இந்த கோபம் வடிந்து
வண்டல் தங்கும்
நிலங்களில்
புதிதாகப் பயிரிடுவேன்
நமது நட்பை.

எத்தனை
கூட்டத்தின் நடுவேயும்
என் மீது
ஒரு கண் வைத்திருப்பாய் -
என் மௌனங்களோடு
நான் பேசாமல்
அமர்ந்திருப்பதைக் கண்டு
புன்னகை பூப்பாய் -
நான் நானாக
இருக்கிறேனென்று.
உன் மௌனம் நடுக்குகிறது -
கரை தொடும் சமுத்திரம்
மௌனம் காப்பதில்லையே..?

உன்னைப் பார்த்த இடைவெளி
அடுத்த குறிஞ்சி மலரும்
காலத்தைத் தொடப்போகிறது.

மௌனம் உடை -
என் மௌனங்களோடு
நான் நானாக இருப்பதற்கு.

நட்பாகிய காதலா..
காதலாகிய நட்பா..
குழம்பித் தவிக்கும் கூட்டத்தில்
உன் இணைப் பிறாவும்
ஒன்றென்பதால்
முகவரி அற்றுப் போன
இந்த நட்பை
இனி நான் என்ன செய்வேன்?

இன்று வளர்ந்து நிற்கும்
உன் நிழலுக்கு
சொல்லியிருப்பாயா -
உனக்கு ஒரு அன்பான
தோழன் ஒருவன் உண்டென்று?
அந்தப் பிள்ளை அறியுமா -
பேசி பேசி அறுக்காத
இந்த நண்பனை?

எப்படி
அறிமுகப் படுத்துவாய்
என்னை?
எந்த உறவாகவும் வேண்டாம் -
நண்பனாகவே அறிமுகப்படுத்து.
ஒரு குழந்தையோடு
என் அறிவாற்றல்
ஒத்துப் போகுமாவென
கவலைப்படாதே -
அறிவாற்றல் அற்றுப்போன
நிலையைத் தான்
தேடியலைகிறேன்.

மௌனத்தைப் பேசுபவனிடம்
அறிவின் உச்சம்
அமைதியாகத் தான்
இருக்கும்.

உன்னிடத்தில் வாங்கிய கடன்
நிறைய உண்டு
திருப்பித் தருவதற்கு -
நட்பு, மதிப்பு, மரியாதையுடன்
நீ குழைத்து தந்த
தயிர்சாதமும் தான்.
வாங்கிய கடனின் முதல்
திருப்பப்படாமலே
போய்விடக்கூடாதென்பதால்
உன் மகளிடம் சொல்லிப் போ -
இந்த நண்பனைப் பற்றி;
இந்த நட்பைப் பற்றி.

வாங்கியதை
திருப்பித் தருவானென்று.

Thursday, February 02, 2006

நண்பர் ஜோவிற்கு அன்புடன் நண்பன்...

அன்புடன் நண்பர் ஜோவிற்கு - நண்பன் எழுதிக் கொள்வது,

இறைநேசன் பதிவில் உங்கள் ஆதங்கம் மிகுந்த கருத்துகளைப் படிக்க நேர்ந்தது. கவலைப்படாதீர்கள். இறைத்தூதர் நபிகளை எத்தனை மதிக்கிறோமோ அத்தனை மதிப்பும் மரியாதையும் இயேசுவின் மீதும் உண்டு.

இறைவனாக மட்டும் இயேசுவை ஏற்பதில்லை. மற்றபடிக்கு, அவருக்கு ஒரு உரிய இடத்தை முஸ்லிம்கள் எப்பொழுதும் கொடுத்தே வந்துள்ளனர். நவீன காலத்தில் கூட, இயேசுவின் மீது கிறித்துவர்களாலயே இழைக்கப்படும் அவதூறுகளை எத்தனை கிறித்துவ கவிஞர்கள் தட்டிக் கேட்டார்கள் என்று தெரியாது. ஆனால், கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தன் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார் - இயேசுவின் மீது இரைக்கப்படும் அவதூறுகளைக் குறித்து மனக்குமுறலுடன் அவர் எழுதிய கவிதையை சடையன் அமானுல்லா, மரத்தடி விவாதக்குழுமத்தில் நண்பர்கள் கவனத்திற்கு எடுத்து வைக்க, வழக்கம் போல, அதை புரிந்து கொள்ள இயலாமல் அவசரகதியில் விமர்சனத்தில் இறங்கிய சில நண்பர்களுக்காக விளக்கம் சொல்லி பதில் எழுத வேண்டியதாயிற்று - படித்துப் பாருங்கள் - இஸ்லாமிய நண்பர்களின் உள்ளம் புரியும்.

அந்தக் கட்டுரைக்குக் கீழே, ஒரு இறைவனின் சோகம் என்ற பெயரில், இயேசு பேசுவது போல நான் எழுதிய கவிதையையும் தந்திருக்கிறேன் - எப்படி ஒரு மனிதனான தன்னை இவர்கள் இறைவனாக்கி, தனிமைப்படுத்தி, துயரத்தில் ஆழ்த்தினார்கள் என்பது. இயேசுவை இறைவனாக மட்டும் தான் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையே தவிர, அவரை ஒரு இறைதூதுவராக, வழிகாட்டியாக, பின்பற்றக் கூடிய மனிதராக ஏற்றுக் கொள்வதில் எங்களுக்கு எந்த வித தயக்கமும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால், எங்களின் இதே கொள்கையைத் தான் Orthodox Christians - பின் பற்றி வருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். கிறித்துவமும், இஸ்லாமும் முரண்படுவது இந்த உருவ வழிபாட்டில் தான்.

//
இதே கோணத்தில் எனது மனதுக்குள் இருக்கும் ஒரு சிறு சந்தேகத்தை சகோதரர் என்ற முறையில் உங்களிடம் கேட்கலாம் என நினைக்கிறேன்.
அல்லாவின் இறைதூதர்களில் ஒருவரும் ,அல்லாவினால் விசேஷமாக ஆசீர்வதிக்கப்பட்டு மரியமினால் பெற்றெடுக்கப்பட்ட ஈசா நபியவர்கள் பற்றி எத்தனையோ திரைப்படங்கள் ,புத்தகங்கள் தாறு மாறாக வெளிவந்திருக்கின்றன .அவை பற்றியெல்லாம் முஸ்லீம் உலகம் கொதித்தெழுவதை விடுங்கள் ,குறைந்த படிசம் முணுமுணுப்பாவது வந்திருக்கிறதா ? //


கன்னி மேரியும், கவிக்கோவும் - ஒரு பார்வை...
(ஜூன் 11, 2005.)

சமீபத்தில் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்த பொழுது, மரத்தடி யாஹு மடலாடற் குழுவில் நடக்கும் சில விவாதங்களை வாசிக்க நேர்ந்தது. அதில் கவிக்கோ அவர்கள் எழுதிய கஜல் கவிதைகள் என்ற தொகுதியிலிருந்து ஒரு கவிதையை எடுத்து சடையன் சாபு மரத்தடி நண்பர்களின் இலக்கிய ரசனைக்கு வைக்க, விளைவு எதிர்பார்த்ததற்கு நேரிடையானது.

அந்தக் கவிதையை சொற்குவை என்றும், ஆபாசமானது என்றும், ரசனையற்றது என்றும் விமர்சித்தனர் மரத்தடி நண்பர்களுள் சிலர். கவிதையைப் புரிந்து கொள்ள மறுத்து அல்லது இயலாது - குறுகிய உள்நோக்கோடும், நேர்மையற்ற முறையிலும் விவரித்து எழுதிய நண்பர்களுக்கு விளக்கம் அளிப்பது தமிழ்க் கவிதைகளின் ஆர்வலன் என்ற முறையில் எனது மற்றும் கவிதை நேச நெஞ்சங்களின் கடமையும் ஆகிறது.

மரத்தடி நண்பர்களுக்காக எழுதிய விரிவான விளக்கம், மரத்தடியிலே முடங்கிப் போய்விடக் கூடாது என்பதனால், துவக்கு வாசகர்களுக்காக கீழே தருகிறோம்...

(துவக்கு இதழ் ஆசிரியரின் அனுமதியோடு.....)

ஐயா! ஆணி, முள்
ஏதாவது பிச்சை போடுங்கள்
கர்ப்பமாயிருக்கிறேன்
என்ற குரல் கேட்டது
வெளியே வந்து பார்த்தேன்
கன்னி மேரி !
*******************

இது தான் அந்தக் கவிதை....

இனி இந்தக் கவிதை என்ன சொல்ல வருகிறது...

இயேசுவை கட்டி வைத்து அடிக்கிறார்கள். தடுக்க முடியவில்லை. கண்ணீர் பெருகுகிறது. கை வலித்து காவலர்களே ஓய்ந்து, சோர்ந்து போகும் நேரம். ரோம் கவர்னரின் மனைவி இரக்கத்துடன் ஒரு துண்டை கொடுக்க அதனைக் கொண்டு சிந்திக்கிடக்கும் ரத்தம் முழுவதையும் துடைத்து எடுக்கிறார். அந்த கணத்தில், அந்தத் தாயின் மனம், பிரார்த்தனையில் ஈடுபடாமலா போயிருக்கும்? நிச்சயமாக ஈடுபட்டிருக்கும். அது போலவே, சிலுவையில் அறையப்பட்டு, தூக்கி நிறுத்தப்பட்ட போதும், சோகமே வடிவமாக, காலடியில் நிற்கின்றார். எத்தனை எத்தனை பிரார்த்தனைகள் மனதில் ஓடியிருக்கும்?


இது பழையது.

அந்தக் கால மனிதர்கள் எல்லோருமே காட்டுமிராண்டிகள் - நாகரீகமற்றவர்கள். அவர்களிடையே, இயேசு போன்ற ஒரு இறைத்தூதர் மாட்டிக் கொண்டது அவஸ்தை தான். ஆனால், இப்பொழுது இயேசு பிறந்திருந்தால், நாமெல்லாம் எப்படி எப்படி நல்லத் தனமாக நடந்து கொண்டிருப்போம்? எத்தனை இனிமையாக நடந்து கொண்டிருப்போம்?

பார்க்கலாமா ?

ஓர் ஓவியர் இயேசு கிறிஸ்துவை ஓவியமாகத் தீட்டினார் - ஆமாம் - நவீன யுகத்து ‘ஹிப்பி’ மாதிரி தலை முடியை பரப்பிக் கொண்டு, சிகரெட் புகைப்பது போன்று, ஒரு குறுநகையுடன் சித்தரிந்திருந்தார். கடும் எதிர்ப்பு கிளம்பிய பொழுது, அது எனது கருத்து சுதந்திரம் - இதில் தலையிட உங்களுக்கு உரிமை கொடுத்தது யார்? என்று பதில் கேள்வி எழுப்பினார். கன்னி மேரி இதைக் கண்டிருந்தால், அவர் நினைத்திருப்பார் முட்கிரீடம் சூட்டிய யூதாக்கள் ஆயிரம் மடங்கு மேல் என்று.

விஞ்ஞானிகள் என்ன சும்மா இருப்பார்களா? Reconstruction of Christ என்று பெயரிட்டு, ஒரு தலையை வடிவமைத்து, எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் கருணை ததும்பும் கண்களைத் தூக்கி தூரப்போட்டு விட்டு, அலை அலையான நீண்ட கேசத்தைத் தூக்கி எறிந்து விட்டு, மந்தமான, பிரகாசமில்லாத ஒரு மனித முகத்தைக் காட்டி, இது தான் இயேசு என்றார்கள். எல்லோர் மனதிலும் அன்பு ததும்பும் கண்களைக் கொண்டு நீங்கா இடம் பெற்ற அந்த நம்பிக்கைச் சித்திரத்தை சிதைக்கும் வன்முறையில் இறங்கியது - விஞ்ஞானம். உண்மையைத் தெளிவிக்கிறோம் (!!??) என்ற பெயரில் நம்பிக்கைகளைச் சிதைப்பது எந்த விதத்திலும் நன்மை பயக்காது. ஆனாலும், அதில் ஒரு உற்சாகம் - ஆனந்தம். குரூர திருப்தி.

கன்னி மேரி என்ன நினைத்திருப்பார்? சிலுவையில் அடிபட்டு சிதைந்தது உடல் மட்டும் தானே என்று...

Dan Brown எழுதிய ‘The Da Vinci Code’ என்ற புனை நாவலின் கதைக்கருவே - இயேசு மரிக்கவில்லை. தப்பிப் பிழைத்தார். மணந்து கொண்டார். சந்ததிகள் உண்டாக்கினார். இன்றளவும் அந்த சந்ததிகள் வாழ்கின்றனர் என்ற ரீதியில் கதை போகும். திகைத்துப் போயின தேவாலயங்கள். நீண்ட மௌனத்திற்குப் பிறகு அறிக்கை வெளியிட்டனர் - புனைந்து எழுதப்பட்ட அந்த புத்தகத்தை வாசிக்க வேண்டாம் என்று. எழுத்து சுதந்திரம் எந்த மட்டுக்கும் நீளலாம் என்று தங்களுக்கென எந்த ஒரு வரைமுறையின்றி இயங்கிக் கொண்டிருக்கும் கதை புனைபவர்கள் ஒரு புறமென்றால், அதை மறுத்து, எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய தேவாலயங்கள் நீண்ட மௌனம் காத்தது பலரது மனதை புண்படுத்தியிருக்கிறதென்றால், பெற்றெடுத்த ஒரு அன்னையின் மனம் எத்தனை தூரம் வேதனைப்பட்டிருக்கும்?

இது இப்படி என்றால், கிறிஸ்துவை அடித்து துவைத்து இம்சப்படுத்துவதை தரமான ஒளி-ஒலி பதிவோடு காட்டி, மக்களின் மனதை உருகச் செய்து, காசு பார்த்தது அதை விட கொடுமையல்லவா? இயேசுவின் வாழ்க்கை சித்திரவதை செய்யப்படுவது மட்டுமா? தன்னுடைய சொந்த வியாபாரத்திற்காக எல்லா மக்களும் மதிக்கும் ஒரு இறை தூதரையா அப்படிக் காட்ட வேண்டும்?
பலபேரால், அடித்து அவமானப்படுத்தப்படும் காட்சியை கண்டு மனம் களிக்கவா செய்யும் - ஒரு தாய்க்கு.? துடிக்க அல்லவா செய்யும்? ஆணி அடித்த வேதனையை விட இது கொடூரம் அல்லவா?

இவையெல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற் போன்று ஒரு ஆராய்ச்சியின் மூலம் புத்தகம் ஒன்று வந்திருக்கிறது - Is Jesus Lived in India என்று. கதையல்ல - நாவலல்ல - ஆராய்ச்சிப் புத்தகம். இயேசு இறக்கவில்லை. கொலைகார பாதகர்களின் கண்ணில் மண்ணைத்தூவி, தன் சீடர்களின் உதவியோடு, இந்தியாவின் காஷ்மீரத்திற்கு ஓடிப்போனார் என்றும், அங்கேயே மரித்துப் போனார் என்றும் அங்கு அவருக்கு கல்லறை இருக்கிறது என்றும் எழுதியுள்ளார். எல்லாம் சரித்திரத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை ஆதாரமாகக் கொண்டு, ஊகம் செய்யப்பட்டவை.

என்ன அவசியம் வந்து விட்டது - ஆராய்ச்சியை உறுதியாக செய்து, இறுதியான தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும் என்ற நிலைக்கு முன்பே அதைப் புத்தகமாகக் கொண்டு வந்து காசு பார்த்து விட வேண்டும் என்று?

இதையெல்லாம் பார்த்த மேரி அன்னை முடிவே கட்டி விட்டார் - அன்று மரண தண்டனை விதித்த யூதர்கள் எத்தனையோ மேல் என்று. இந்த நவீன யுகத்தைக் கண்டு கோபமுற்று இந்த உலகின் அநாகரிகத்தைக் கண்டிக்க முயன்று, கவிதை எழுதியவர் - ஆபாசமாக எழுதுகிறார் என்று சொன்னால், அது அதிசயமாகத் தான் இருக்கிறது.

கவிதையின் சின்ன சின்ன நெளிவுகளைக் கூட காண மறுக்கச் செய்தது எது என்று தான் !? கவிக்கோவின் உண்மை பெயரும் அது சார்ந்த மதமுமா? அப்படி இருக்காது, இருக்கக் கூடாது என்றே பிரார்த்திக்கிறேன். அது உண்மையென்றால், அதனால் சிறுமை கவிக்கோவிற்கு அல்ல.

இதையே வாலி எழுதியிருந்தால் - என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது - வாலி என்ன, யார் எழுதியிருந்தாலும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்து போன, உலகின் மூன்றில் இரண்டு பங்கு மக்களால் மதிக்கபெறும் ஒரு நபரை, நாகரீக உலகின் அனுகூலங்களைக் கொண்டு, அநாகரீகமாக விமர்சித்து அதன் மூலம் சம்பாதனை செய்யும் அவலத்தை சாடுவதற்கு சாதி, மதம் இதெல்லாம் தேவையில்லை அன்பரே...

ஆம், அன்று முட்களாலும் ஆணியாலும் இம்சித்து சிலுவையில் அடித்தார்கள். இன்று நாம் நாகரீகமாக கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், வியாபார உரிமை என்றெல்லாம் கூறி, அவர் நினைவுகளை கண்டம் துண்டமாக வெட்டி கூறு போட்டு விற்கிறோம்.

கன்னி மேரி இன்று நம்மிடையே பிச்சை கேட்டு நிற்கிறார் - தன் கருவிலிருக்கும் இயேசு மிகக் குறந்த துன்பத்துடன் சிலுவையிலே அறையப்படட்டும் - ஆணி , முள் கொடுங்கள் என்று.

நியாயந்தானே?
நட்புடன் நண்பன்
(நன்றி - துவக்கு மின்னிதழ் - http://www.thuvakku.da.ru/)
*********

இனி டா வின்சி கோட் படித்து விட்டு, நான் எழுதிய கவிதை.


ஓர் இறைவனின் சோகம்.(செப்டம்பர் 22, 2005)

இயற்கையேற்க
மறுக்கும் விளக்கத்தில்
சிக்கித் தவிக்கும்
பிறப்பு

இறையேற்க
மறுக்கும் மனிதர்கள்
மத்தியில் வாழ்ந்த
வாழ்க்கை

இரக்கமற்றவர்கள்
மறுத்த நீதியால்
சிதைந்த உடலுகுத்த
உதிரத்தால் மரணம்

வடிந்த ரத்தம் ஏந்தப்பட்டது
ஒரு அன்பான பெண்ணினுடைய
மற்றுமொரு
நம்பிக்கையாளனுடைய கோப்பைகளில்.

புலம் பெயர்ந்த
கோப்பைகள்
நிழலுலகின்
இருண்ட வீதிகளில்
தொலைந்தே போய்விட்டது
நம்பிக்கையாளர்களின்
மீண்டும்
ஒரு தேடலுக்காக.

குறியீடுகளில்
புதைந்து போன
வரலாற்று மோசடிகளில்
அனைத்தையுமிழந்துவிட்டு
நான் மட்டுமே மிஞ்சினேன்
இறைவனாக உயர்த்தப்பட்டு

****

சில சில வித்தியாசங்களில் தான் வேறுபடுகிறார்களே தவிர, ஈசா நபி என்று அழைத்து அன்பொழுக அவரை மதிக்க வேண்டும் என்றே அறிவுறுத்தப்பட்டே வளர்க்கப்படுகின்றனர் - இஸ்லாமியர்கள்.


இனி டென்மார்க் பற்றி சற்று பார்த்து விடலாம்....

டென்மார்க்ல் நிகழ்ந்தது கருத்துச் சுதந்திரம் அல்ல - கலாச்சார தீவிரவாதம்.

அந்த சமயத்திலும் - சுதந்திரம் உரிமை என பொறுப்பின்றி பேசிய டென்மார்க் பிரதமரையும் அந்த பத்திரிக்கையாளர்களையும் வன்மையாக கண்டிக்க வேண்டும். அதே சமயம் இஸ்லாமிய மக்கள் எந்த வன்முறையும் இன்றி, எந்த ஒரு இமாமிடமிருந்தும் எந்த ஒரு பத்வாமுமின்றி, எந்த ஒரு அரசிடமிருந்தும் எந்த ஒரு ஆனையுமின்றி, தாங்களாகவே அமைதியான முறையில் முன் வந்து அந்நாட்டு பொருட்களைப் புறக்கணித்து மிகப் பெரிய அடியைக் கொடுத்துள்ளனர். மக்கள் சக்தியை எளிமையான முறையில் எல்லோருக்கும் காட்டி உள்ளனர். ஜனநாயகம் என்று போலி கூக்குரலிடும் மேலை நாட்டின் பிரதிநிதியான டென்மார்க் பிரதமர் WTO வில் புகார் செய்வோம் சவுதியின் மீது என்று கூறியிருக்கிறார் - அதற்குக் காரணம் - அவர்கள் நாட்டு பொருட்களைப் புறக்கணிக்கிறார்களளென்று... தெருவில் வாழும் ஒரு சாதாரண குடிமகன் - வாங்க மறுத்தால், அது அரசாங்கத்தின் குற்றமா? அரபு நாடுகளில் ஜனநாயகத்தை மக்கள் தானாக திரண்டெழுந்து காட்டியதை உங்களால் தாங்க முடியவில்லை அல்லவா? ஒரு நாளைக்கு இழப்பு - 250 மில்லியன் திர்ஹம். அதாவது இந்திய ரூபாயின் மதிப்பின் படி 300 கோடி ருபாய் ஒரு நாளைக்கு. இது தொடர்ந்தால் - டென்மார்க் நாட்டின் கதி அதோ கதி தான்.

இதில் சிலர் வேறுவகையான மிரட்டல்களை முன் வைக்கின்றனர். இஸ்லாமிய நாடுகளின் பொருட்களை அவர்கள் பகிஷ்கரிப்பார்கள் என்று.

ரொம்ப நல்லது.

செய்யட்டும்.

வெத்து வேட்டு மிரட்டல்கள் இன்னும் எத்தனை நாட்கள்?

இங்கே கவனிக்கப்பட வேண்டிய செய்தி - மக்கள் நடத்திய காட்டிய இந்த அமைதிப் புரட்சி - எந்த ஒரு இயக்கமும் அறை கூவல் விடுத்து நடத்தப்பட்டதில்லை. எந்த ஒரு தீவிரவாதமும் இங்கு நடைபெறவில்லை. வியாபார நிறுவனங்கள் தாங்களாக முன் வந்து, டென்மார்க் பொருட்களைத் தூக்கி கடாசியதோடு மட்டுமல்ல, அதை வெளிப்படையாக அறிவிக்கவும் செய்தார்கள் - எங்கள் கடைகளில் டென்மார்க் பொருட்கள் எதுவுமில்லை என்று. மக்கள் கருத்தோடு தங்களையும் இணைத்துக் கொள்ள விரும்பியதனால் அவர்களே அந்தப் பொருட்களை நீக்கிக் கொண்டார்கள்.

தங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் தங்கள் நபியின் மாண்பையும், இஸ்லாத்தின் கௌரவத்தையும் காக்க வேண்டுமென்றால் - அதற்கு எந்த தீவிரவாதமும் தேவையில்லை - தங்களின் அமைதியான, சாத்வீகமான எதிர்ப்பே போதும் என்று நிரூபித்துக் காட்டி விட்டார்கள் - ஒரே நாளில். இது தான் இஸ்லாம்.

இஸ்லாமிய தீவிரவாதம் என்று பேசியவர்கள் எல்லாம் இனி, முக்காடும், முகமூடியும் போட்டுக் கொண்டு திரியட்டும்.

Sunday, January 29, 2006

வை.கோ.வின் நண்பருடன் ஒரு சந்திப்பு.

வை.கோ.வின் நண்பருடன் ஒரு சந்திப்பு.

இந்த வருடம் துபாயில் நிகழ்ந்த எதிர்பாராத சோகத்தினால், மிகவும் பாதிக்கப்பட்டது துவக்கு இலக்கிய அமைப்பின் வழியாகவும், தாய்மண் வாசகர் வட்டம் சார்பாகவும் ஏற்பாடு செய்திருந்த பல நிகழ்வுகள் தான்.

விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் அவர்கள் வருவதாக இருந்த ஜனவரி 6ம் தேதிக்கு இரண்டு தினங்கள் முன்பாக துபாயின் ஆட்சியாளர் மரணமடைந்து விட, அவர் வருகை தள்ளிப் போய்விட்டது - பிப்ருவரி 24ம் தேதிக்கு.

அடுத்து கவிஞர், பாடலாசிரியர் நா.முத்துகுமார் அவர்களின் திட்டமிட்ட வருகையையும் தள்ளிப் போட வேண்டியதாயிற்று. அவரது சமீபத்திய மூன்று நூல்கள் மற்றும் கவிதைக்காக அண்ணன் அறிவுமதியால் தொடங்கப்பெற்ற ‘தை’ கவிதை இதழையும் துபாயில் அறிமுகப் படுத்தி வெளியிடும் விழாவும் பிப்ருவரி இறுதிக்கு தள்ளிப் போட வேண்டியதாயிற்று.

இவ்வாறு சோர்வு தரும் வண்ணமாக அமைந்து விட்ட இந்த ஜனவரியை வெறும் நண்பர்கள் கூடிப் பேசியும், எங்களது கவிதைகளை வாசித்து திருத்தி அச்சுக்குத் தயார் செய்து கொண்டும் மட்டுமே காலத்தைப் போக்கிக் கொண்டிருந்த பொழுது, கடந்த வாரம் ஒரு தொலைபேசி.

பேசியவர் - திரு. வ.மா.குலேந்திரன் அவர்கள். இவரை இங்கிலாந்தில் அகதிகளாக குடியேற்ற உரிமைக்காகப் போராடும் இலங்கைத் தமிழர்கள் அதிகமாக அறிந்திருக்கக் கூடும் - ஒரு வழக்கறிஞராக.

அந்த வழக்குரைக்கும் தொழிலுக்குப் பின் அவருக்கென ஒரு இலக்கிய முகமும் உண்டு என்று எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புண்டா என்று தெரியவில்லை.

அவர், சென்ற முறை துபாய் வந்த பொழுது, அவருக்கு ஒரு சிறிய வரவேற்பு அளித்திருந்தோம். அதன் பின் அவர் நண்பர் இசாக்குடன் தொடர்பு வைத்திருந்தார். எப்பொழுது வந்தாலும் எங்களை சந்தியாது செல்லக் கூடாது என்று கட்டளை இட்டிருந்தோம் என்றே சொல்ல வேண்டும்.

அவர், இந்தியா வந்து, நெடுமாறன், சுபவீ, வைகோ அவர்களை சந்தித்து விட்டு, பின்னர் லண்டன் செல்லும் வழியில், துபாயில் எங்களைச் சந்திப்பதற்காக நான்கு நாட்கள் பயணத்தில் விடுப்பு விட்டிருந்தார். அவர், அவரது துணைவியார், மற்றும் மாமியார் ஆகியவர்களுடன் வந்திருந்தார்.

துக்கம் அனுஷ்டிப்பின் போது, விழாவாக கொண்டாட கூடாதென்பதால், ஒரு கலந்துரையாடல் அமர்வாக அந்த நிகழ்ச்சியை அமைத்தோம். அவர் தங்கி இருந்த விடுதியில் இருந்து நண்பர் தமிழன்பு அவர்களை அழைத்து வந்தார் தெய்ராவிற்கு.

தமிழ் உணவகத்தின் மாடியில் அமர்ந்து அவரது கவிதைத் தொகுதியைப் பற்றிய ஆய்வாகத் தொடங்கினோம் அண்ணன் செ.ரா.பட்டணம் மணி அவர்கள் தலைமையில்.

அவரது அகராதி கவிதைகள் என்ற குறுங்கவிதைகளிலிருந்து நண்பர்கள் குழாமின் ஒவ்வொருவரும் வாசித்து தங்கள் எண்ணங்களை வெளியிட்டனர்.

சில கவிதைகள் மிக விரிவான விவாதத்திற்கு இட்டு சென்றன என்றால் மிகையாகாது. சில எளிய கவிதைகள் சிந்தனைக்கு மிகப் பெரிய சவாலாகவும் இருந்தது.

கீழ்க்கண்ட ஒரு கவிதையைப் பாருங்கள்:

கருணாநிதி.

தமிழும் பணம் சேர்க்கும்
அமிழ்தம் என்று
உலகிற்கு அறிவித்த - சிறந்த
கலைஞர் இவர்.

தமிழ் மீது கொண்ட பற்றை மிகத் திறம்பட இவர் பயன்படுத்திக் கொண்டதை வேறு எந்த தமிழகக் கவிஞர்களாவது சொல்லி இருப்பார்களா என தெரியவில்லை. சந்தேகம் தான். ஆனால், ஈழக்கவிஞர்களுக்கு அத்தகைய சிக்கல்கள் எதுவுமில்லை என்றே சொல்ல வேண்டும். எளிதாக சொல்லி விட்டார்.

இந்தக் கவிதையை ஒட்டிய சிந்தனையாக அன்று காலையில் தான் வாசித்துக் கொண்டிருந்த ஒரு சிறுகதையும் எண்ணத்தில் எழுந்தது. அது மாலன் சிறுகதைகள் என்ற புத்தகத்தில் ‘இதெல்லாம் யாருடைய தப்பு’ என்ற சிறுகதை தான்.

ஒரு பெண் - தமிழ் சிரியரால் உந்தப் பெற்று, தமிழார்வம் கொண்டு, தமிழ் கற்று, வேசமும், விசையும் பெற்றவளாய் கல்வி கற்று வெளி வருகிறாள். அந்தப் பெண்ணிற்கு வேலையே கிடைக்கவில்லை. அதற்கு மாற்றாக சாதாரண அறிவுள்ள தங்கை பாத்திரம் ஒன்று படைக்கப் பெற்று வாழ்க்கையில் ஜெயிப்பதாகக் கதை போகிறது.

எப்படி?

// நான் எம்.ஏ முடித்தபோது திலகவதி டிகிரி வாங்கினாள். காலையில் ஜெர்மன், மாலையில் டிராவல் ஏஜென்சி என்று ஏதேதோ படித்து, கூடவே இரண்டு மூன்று சர்டிபிகேட்டுகள் வாங்கினாள் //

இந்தக் கதை குமுதம் இதழில் வெளியாகி இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கின்றனர்.

சரி, இப்போது கேள்வி.

படிப்பு என்பது வேலைக்குப் போவதற்காகத் தானா? சிந்தனைத் தெளிவைத் தர, பகுத்தறிவைப் பெற என எந்த ஒரு தகுதியையும் கல்வி நமக்கு அளிப்பதில்லையா? தமிழ் கற்றால் வேலை தரப்பட்டே ஆக வேண்டும் என்ற கட்டாய எதிர்பார்ப்புகளை ஏன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்? ஜெர்மன் கற்றால், அல்லது வேற்று மொழி கற்றால் வேலை வாய்ப்புகள் உறுதி என்பது நிஜம்மா அல்லது மாயையா? மாலன் எதனால் கல்வி பெறுவதையும் வேலை வாய்ப்பு பெறுவதையும் ஒரு தட்டில் வைத்து எடை போட முயற்சிக்கிறார் என்று தெரியவில்லை. அப்படி செய்வது கூடாது என்பது என் எண்ணம். கல்வி வேலை வாய்ப்பு பெற்றுத் தர வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கப்பட கூடாது.

ஆனால், இங்கே விவாதம் - எப்படி சிலர் தமிழால் பிழைத்தார்கள் - செல்வந்தர்கள் ஆனார்கள் என்பது தான். தமிழ் மொழி கற்பது உதவாது என்பது மாலன் வாதமானால், அதற்கு நேர் மாறான, தமிழால் வெற்றி பெற்றவர்களையும் காட்ட முடியும்.

ஏன், மாலனின் வெற்றி கூட அவருடைய தமிழ் தான்.

இன்று புத்தக கண்காட்சியில், பல மக்களும் வரிசையில் நிற்கின்றனர் - உள் நுழைவதற்கு என்னும் பொழுது இனி தமிழில் எழுதுபவர்களுக்கும் - தமிழால் பிழைக்கும் ஒரு வழி இருக்கிறது என்று தெளிவாக, உறுதியாக சொல்ல வைக்கிறது தானே?

மாலனின் இன்றைய சிந்தனைகள் எவ்வாறு இருக்கின்றன இதில் என்பதை அறிய ஆவல் தான் - மாலன் தன் எண்ணங்களை மீண்டும் ஒரு முறை சொல்வாரா?

தமிழால் பணம் சேர்க்க முடியும் என்பதன் மீதான தன் எண்ணங்களை.!!!

ஒரு சின்ன கவிதை தான் - ‘அகராதி’ கவிதை தான். ஆனால், அந்த தொடர்புகள் வழியாகப் பயணித்தால், எத்தனை சிந்தனைகள் விரிகின்றன.!

இந்த சிந்தனை தொடர்புகள் வழியாக மேலும் ஒரு கவிதையையும் சொல்லத் தான் வேண்டும். அது அப்துல் ஹமீத் பற்றியது:

அப்துல் ஹமீத்

உலகத் தமிழர்
அறிவர் இவரை
இவர் தமிழால்.

அப்துல் ஹமீதை அறியாதவர் யாரும் இருக்க முடியாது. கடந்த 30.05.05 அன்று துபாய் வந்திருந்தார். அவருக்கு தமிழிணைய நண்பர்கள் சார்பாக ஒரு வரவேற்பு வழங்கப்பட்டது. அப்பொழுது அவர் சிறப்புரை ஆற்றினார். அவருடயை இனிய எளிய தமிழை கேட்க ஆவலுடன் காத்திருந்த எங்களுக்கு சற்று ஏமாற்றமே மிஞ்சியது.

யாரோ ஒருவர் அப்படி பேசியிருந்தால் அது வருத்தத்திற்குரியதாக இருந்திருக்காது. ஆனால், பலரது அபிமானத்தையும், அன்பையும் தமிழால் பெற்ற அப்துல் ஹமீது அவர்கள், அன்று பேசிய பேச்சு, தமிழ் ஆங்கிலக் கலப்பிற்கு வக்காலத்து வாங்குவதாகவே இருந்தது. விருந்தினராக வந்தவரை விமர்சிக்க வேண்டாம் என்று அமைதியாக இருந்து விட்டோம். பின்னர் விழாவில் முக்கியப் பங்கு வகித்த நண்பரிடம் அது குறித்து வருத்தம் தெரிவித்தோம்.
இதையும் இந்தக் கலந்துரையாடலில் குறிப்பிட்டோம். தமிழால், பிழைக்க முடியாது என்று பேசுபவர்கள் - இந்த இருவரையும் மறந்து விடக் கூடாது என்றே வலியுறுத்தினார்கள் அனைவரும்.


இது மாதிரி, நிறைய கவிதைகள் - அதைத் தொடர்ந்த அனுபவங்கள் - இவற்றையெல்லாம் பகிர்ந்து கொண்டு இருக்கையிலே பேச்சு மற்றவற்றைப் பற்றியும் திரும்பியது. இலங்கை அரசியல் - இந்திய அரசியல் என்றெல்லாம் திரும்பியது. ராஜபக்ஷவைப் பற்றி குறிப்பிட்டு, எதனால் ஜெ அவரை சந்திக்க மறுத்தார் என்பது குறித்த அவரது கருத்தைக் கேட்டோம். அவர் சொன்ன பதில் - தமிழக தேர்தலைக் குறித்தான கவலை கொண்டுள்ள ஜெ, தன் அணிக்கு இரு நபர்களை எதிர்பார்த்தார். ஒருவர் பாமகவின் ராமதாசு மற்றவர் மதிமுக வைகோ. இருவருக்குமே ராஜபக்ஷவின் சந்திப்பு வேம்பாக இருக்குமென்பதால், அந்த சந்திப்பைத் தவிர்த்தார் என்றும் மற்றபடிக்கு அவர் தன் நிலைபாட்டை மாற்றிக் கொண்டிருப்பார் என்று நம்பத் தகுந்த ஆதாரங்கள் எதுவுமில்லை என்றும் தெரிவித்தார்.

வைகோவை அவர் சந்தித்தது பற்றி கேட்டோம் - மிக குறைந்த நேரமே அவருடன் உரையாட முடிந்தது. தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக நம்பப்பட்டதால், பலரையும் நேரிலே பார்த்துப் பேசுவதாக ஏற்பாடு. அதனால், ஒவ்வொருவருக்கும் மிகக் குறைந்த நேரமே. மேலும், வீட்டைச் சுற்றிலும், ரகசிய ஒற்றர்கள் வேறு. வருகை தருபவர்களைப் பற்றிய குறிப்புகளும் தொகுக்கப்படுகின்றன என்பதால், அவருடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை என்றார். (2.1/2 மணி நேரம் மட்டுமே) அந்த குறைந்த நேரத்திலும், அவர் வீட்டிலிருந்து, தட்டச்சு செய்து வைக்கப்பட்டிருந்த பெரியார் திடலில் ஈழத்தமிழர் தரவு மாநாட்டில் வை.கோ ஆற்றிய உரையின் தொகுப்பையும், அவர் பிரதமருக்கு எழுதிய கடிதங்கள் சிலவற்றையும் தொகுத்துப் புத்தகமாக்கிக் கொண்டு வந்திருந்தார்.

‘ஈழத்தமிழரைக் காப்போம்’ என்ற புத்தகம் அந்த வகையில் மிகக் குறைந்த காலத்தில் புத்தகமாக்கப்பட்டது என்றே சொல்ல வேண்டும். வைகோவின் மற்றுமொரு புத்தகத்தையும் எடுத்து வந்திருப்பதாகவும் - கூட்டணி தெளிவாக அமைக்கப்பட்டவுடன் மட்டுமே அதை நண்பர்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று வைகோ கூறியிருக்கிறார் என்ற தகவலையும் தெரிவித்தார். அந்தப் புத்தகம் லண்டன் சென்று அங்கிருந்து தான் வரவேண்டும் போலிருக்கிறது.

கூட்டணி பற்றி என்ன மனநிலையில் இருக்கிறார்?

கருணாநிதி தான் தீர்மானிக்க வேண்டும்.

இந்தத் தேர்தலில் தன் கட்சிக்காரர்களுக்குக் கணிசமான அளவு தொகுதி வைகோ எதிர்பார்க்கிறார்.

ஜெயுடன் இணைவது பற்றி எந்த மனநிலையில் இருக்கிறார்?

தன் மனநிலையை விடவும் - தன் கட்சிக்காரர்களின் மனநிலையைத் தான் இந்த முறை முக்கியத்துவப் படுத்துவேன் என்கின்றார் வைகோ.

அப்படியானால் ஜெவுடன் உறவு வைத்துக் கொள்ள அவர் தயாராகிவிட்டாரா?

அதை கருணாநிதி தான் தீர்மானிப்பார்.

குழப்பமான பதில் தான். என்றாலும் அதற்கு மேலாக அவரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அந்தப் புத்தகத்தைப் பற்றிக் கேட்டோம். அது வைகோவின் மனம் திறந்த கடிதம் தான். இப்பொழுது அதை வெளியிடுவது உசிதமல்ல - ஆனால், கூட்டணி முடிவானதும், அந்தப் புத்தகத்தை அனுப்பித் தருவேன் என்று உறுதி கூறினார்.

பின்னர் வழக்கமான தமிழக தலைவர்கள் பற்றிய விசாரிப்புகள். அப்பொழுது தான் தகவல் சொன்னார் - சுபவீ விபத்துக்குள்ளான செய்தியை. தற்போது மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி ஓய்வில் இருக்கிறார் என்று குறிப்பிட்ட அவர், தொலைபேசியில் தொல்லை தர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். என்றாலும், அனைவர் சார்பிலும், சுபவீயிடம் இசாக் நலம் விசாரித்தார்.

நெடுமாறன் ஐயா அவர்களைச் சந்தித்ததைக் குறிப்பிட்டு, அவர் மிகவும் மெலிந்து காணப்பட்டது கண்டு தன் வருத்தத்தையும் தெரிவித்தார்.

பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபாலையும் சந்தித்தார். நக்கீரன் இதழில் தொடராக வந்த ‘இந்துமதம் எங்கே போகிறது’ என்ற புத்தகம் புத்தகக் கண்காட்சியில் மிக அதிகமாக விற்பனையான புத்தகங்களில் ஒன்றாக இருப்பது குறித்து நக்கீரன் கோபால் தன் மகிழ்வை தன்னிடம் பகிர்ந்து கொண்டதை தெரிவித்தார்.

பின்னர் துவக்கு இலக்கிய அமைப்பின் சார்பாக நடைபெற இருக்கும் நிகழ்வுகளைக் குறிப்பிட்டோம். கவிதைப் போட்டிக்கு கிட்டத்தட்ட 800 கவிதைகள் வந்து சேர்ந்திருப்பதையும், நடுவர்களுக்கு அதைத் தெரியப்படுத்தி விட்டதையும் அறிவித்தோம். இப்பொழுது, அந்தக் கவிதைகளுக்கு எண்களிட்டு, அந்த எண்களையும் பெயர்களையும் தனியாக எடுத்து விட்டு, கவிதைகளை மட்டும் திரட்டி, மூன்று பிரதிகள் எடுத்து, நடுவர்களுக்கு அனுப்பி வைக்கும் வேலை நடைபெறுவதையும் குறிப்பிட்டோம்.

துபாயில் இருந்து எழுத்துலகில் இயங்கி வரும் ஐந்து நண்பர்களின் புத்தகங்களை இந்த ஏப்ரல் / மே மாத வாக்கில் வெளியிட முனைந்திருப்பதையும், அவ்விழாவிற்கு துபாய்க்கு கவிக்கோ, இன்குலாப், மேத்தா, அண்ணன் அறிவுமதி அவர்கள் அனைவரையும் அழைத்து வர ஏற்பாடுகள் செய்ய முனைந்திருக்கிறோம் என்பதையும் தெரிவித்தோம்.

எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டுமென்றால், பெரும் பொருட் செலவு ஆக கூடும். எவ்வளவு முடியும் என்று தெரியாது. ஆனால், இதுவரையிலும் விரும்பியவற்றை நிறைவேற்றிக் கொள்ள எங்களால் முடிந்திருக்கிறது என்ற அனுபவமே துணையாகி இருக்கிறது.

அனுபவ பகிர்வாகவும், அரசியல் விமர்சனமாகவும், உலக நடப்பாகவும், கவிதை விமர்சனமாகவும் என்று பல தளங்களில் இயங்கிய இந்த கலந்துரையாடலை மாலை 6.30 மணி அளவில் முடித்துக் கொண்டோம். கிட்டத்தட்ட 2.30 மணி நேரம் போனதே தெரியவில்லை.

அவர் எழுதிய புத்தகம் - அகராதிக் கவிதைகள். மணிமேகலைப் பிரசுரம். விலை ரூ.25.

Thursday, January 26, 2006

தியானம்

தியானம்


ஒன்று... இரண்டு... மூன்று...

கடன் அட்டைக்கு
பணம் அனுப்பி விட்டாயா...?

நான்கு... ஐந்து... ஆறு...

காலை சந்திப்புக்கு
அறிக்கை தட்டச்சு ஆகியிருக்குமா...?

ஏழு... எட்டு... ஒன்பது...

பையன் பள்ளியில்
முதலாவது இடத்தை
தக்க வைப்பானா...?

பத்து...

போதும் தியானம்
எழுந்திருப்போம்...

முட்டி மோதி
வாகனங்கள் அலையும்
சாலையில்
மறந்தே போனேன்
எண்ணுவதற்கு...

ஒன்று, இரண்டு, மூன்றென...

மனம் சாலையில்
குவிந்து நின்ற தருணத்தில்...

Monday, January 23, 2006

நேர்மையே உன் விலை என்ன?

எக்ஸிஸ்டென்ஷியலிசம்-எஸ்.வி.ராஜதுரை- ஒரு பதில்

இந்தப் பதிவை இப்பொழுது தான் பார்க்கின்றேன். தலைப்பிலே இதைப் பற்றி கொஞ்சமாவது ஒரு குறிப்பு கொடுத்திருந்தால், உடனே பார்வையில் பட்டிருக்கும். ஆனால், நண்பனின் பார்வையில் படவேண்டாம் என்று நினைத்து விட்டீர்கள் போலிருக்கிறது. ரகசியமாக உள்ளே கிசுகிசுப்பாய் பேசிக் கொண்டால் யாருக்குத் தெரியும்?

ரவி இன்று ( 22/01/06) கொடுத்திருந்த, அல்-கொய்தா, உலகமயமாதல், இஸ்லாம் என்ற தலைப்பின் வெளியான கட்டுரையைப் படிக்கும் ஆவலில் உள்ளே நுழைந்த பொழுது, எக்ஸிஸ்டென்ஷியலிசம்-எஸ்.வி.ராஜதுரை- ஒரு பதில் என்பதைப் படித்து ஒரு கவிதை அல்லது ஓவிய விமர்சனம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்களாக்கும் என்று எதேச்சையாக உள்ளே நுழைந்தால் என்னைப் பற்றிய பேச்சு தான்.... எத்தனை நேர்மை!!! பேசப்படுபவனுக்கு ஒரு தகவலும் சொல்லாமல், தாங்களாகவே பேசிக்கொள்வது.!!!

இது குறித்து ஏற்கனவே என்னுடைய பதிவிலே குறிப்பிட்டுவிட்டேன் - என்னைப் பற்றிய விமர்சனங்களாக இருந்தால் ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள் ஐயா - உங்களுக்குப் பதில் சொல்வதற்கு ஏதுவாக இருக்குமென்று. இதிலேயே தெரிகிறது - யாருடைய நேர்மை எத்தகையது என்று!!!

சரி போகட்டும் - தகுதியைப் பற்றி ரோஸா வஸந்த் பேசுகிறார். தகுதி எதுவாம்? அவர்(நண்பன்) இணையத்தில் இயங்காத பொழுதே நாங்கள் இருக்கிறோம் - ஐயோ, இது தான் தகுதியா? ரவி ஸ்ரீநிவாஸ் இதற்கு முன் எத்தனை பேருடன் சண்டை போட்டிருக்கிறார் தெரியுமா? அதனால் நீ எப்படி விமர்சிக்கலாம்? என்று கேட்கிறார், ரோஸா - அவர் நேற்று என்னவாக இருந்தார், நாளை என்னவாக இருப்பார் என்பதெல்லாம் எனக்குத் தேவையில்லாத சமாச்சாரம். இன்று அவர் யார் - அவர் சிந்தனை என்ன? எப்படி இயங்குகிறார் என்பதைக் கொண்டு தான் என்னால் விமர்சிக்க இயலுமே தவிர, நேற்று அவர் புனிதராக இருந்தார் என்பதனால், நாளை அவர் நல்லவராக இருப்பார் என்ற அனுமானங்களைக் கொண்டு விமர்சகன் இயங்குவதில்லை. இன்று ரவி என்னவாக இருக்கிறார்? அவர் (ரவி) சிந்தனை எந்த தரத்தில் இருக்கிறது? அவரின்(ரவியின்) படைப்பின் லட்சணம் என்ன? இவை பற்றி தான் விமர்சிக்க முடியுமே தவிர, சம்பந்தமற்ற பதிவுகளைக் கொண்டல்ல.

இதிலே நேர்மையற்ற தனம் எங்கிருந்து வந்தது?

// இந்த பின்னூட்டத்தை இங்கே எழுதுவதன் முக்கிய காரணம் நண்பனின் நேர்மையற்ற தாக்குதலுக்கும், ரவியின் கருத்தை நேர்மையாய் எதிர் கொள்ளாதற்கும் (அதை நீக்கியதற்கும்) எதிராக ரவிக்கு ஆதரவாக எழுதுவது மட்டுமே.//

ரவிக்கு ஆதரவாக நீங்கள் வரிந்து கட்டிக்கொண்டு வருவதைப்பற்றிய கவலை எனக்கில்லை. ஆனால், உண்மை என்னவென்று தெரியாமல், எத்தனை காலம் இயங்கி என்ன பயன்? நேர்மையற்ற தாக்குதல் என்று கூறிவிட்டு, நீங்கள் என்ன எழுதி இருக்கிறீர்கள்?

// ஆனாலும் கூட ரவியின் மேற்படி (iisc தாக்குதலை முன்வைத்த) பதிவு மோசமானது. இந்தியா இஸ்ரேலிடம் இருந்து பாடம் கற்கவேண்டும் என்ற தொனிப்பட எழுதியுள்ளது, ஒரு தீவிரவாத தாக்குதலை மட்டும் முன்வைத்து, அவசர குடுக்கைதனமாய் எழுதியுள்ள, ஒரு பொதுபுத்தி சார்ந்த ஒரு எதிர்வினை மட்டுமே. அதில் விவேகமோ, அரசியல் நேர்மையோ கூட இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இது தவிரவும் முழுமையாய் வேறுபட்டு அந்த பதிவு மீது கடுமையான விமர்சனம் எனக்கு உண்டு.//

ஆக, நீங்கள் (ரோஸா) மோசம் என்று சொல்லலாம் - ஆனால், நான்(நண்பன்) சொன்னால் அது நேர்மையற்றது. காரணம் - ரவி இதற்கு முன் வேறாக இருந்தார்.

ரோஸா விமர்சிக்க முற்பட்டது ரவியைத் தெரியும் என்பதால்.

நான் விமர்சிக்க முற்பட்டது, ரவியின் எழுத்துகளில் இருந்த எதிர்மறை உணர்வுகளை. தீவிரவாதத்தை எதிர்த்து நிற்பதற்கு யாருக்கும் நான் சளைத்தவனல்ல - ஆனால், தீவிரவாதம் என்றால், அது அனைத்து வகை தீவிரவாதங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று உரத்து குரல் எழுப்பியதால், அது நேர்மையற்ற தனம் என்றால், ரோஸா, உங்களுடைய நேர்மை, சந்தையில் கிலோ என்ன விலை?

// ரவியின் கருத்தை நேர்மையாய் எதிர்கொள்ளாததற்கும் (அதை நீக்கியதற்கும்)//

மீண்டும் கேட்கிறேன் - உங்கள் நேர்மை கிலோ என்ன விலை?

ரவி அனுப்பிய கருத்து, ஹோலோகாஸ்ட் என்ற தலைப்பில் வந்த பதிவிற்கு எழுதியிருந்தார். எங்கு? பாக்கிஸ்தானுக்குப் போவோம் - சமுத்ராக்களுடன் என்ற பதிவிற்கு!!! எந்த பதிவிற்கு எந்த கருத்தை எழுத வேண்டும் என்ற அடிப்படை கூட இல்லாமல் ஒருவர் இயங்குவார். அந்த திசை திருப்புதல் நியாயம் ஆகிவிடுகிறது. ஆனால், திசை திருப்பும் விதமாக வரும் பதிவை பதிப்பிக்காமல் விட்டால், அவர் நேர்மையை சந்தேகிப்பீர்கள் இல்லையா?

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், எதையும் வாசிக்க வேண்டாம் - தங்கள் கருத்திற்கு எதிரான தளத்தில் நிற்பவன் தானே - அவனைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதிவிடலாம் என்று தான். ரொம்ப உயர்ந்த உள்ளம் ஐயா - உம்முடையது!? அப்படி இருந்தும், ரவிக்கு, மிக மென்மையாகப் பதில் சொல்லியிருந்தேன் - கீழே உள்ளேது - இது இன்னமும் பாக்கிஸ்தான் போவோம் என்ற என் பதிவில் உள்ளது. படிக்க நேரமற்றவர்கள் -மெல்லமாக நேரம் கிடைக்கும் பொழுது படித்துத் தெளிவாகிக் கொள்ளுங்கள்.


//ரவி ஸ்ரீநிவாஸ்

உங்கள் பதிவு கிடைத்தது. பதிந்து நீக்கி விட்டேன்.

மீண்டும்,

உங்களுக்கு holocaust பற்றி விவாதிக்க விருப்பமென்றால் அங்கு இந்தப் பதிவை இடவும்.

இங்கு பேசப்படும் பொருளை பற்றி மட்டும் எழுதவும்.

பதிந்து நீக்குவதற்குக் காரணம் - to acknowledge your time and effort you are spending on my posts and also to keep the post alive on top for many to read. Thank you and continue to read my posts.

No hard feelings!!!Bye, Bye!!! //

அந்தப் பதிவை சரியான இடத்தில், சரியான தளத்தில் விவாதிப்போம் என்று அன்புடன் கூறி அழைத்ததைப் புறக்கணித்து ஓடி விட்டு, மறைவிடத்தில் நின்று அடிபட்டகாயங்களை சொறிந்து கொண்டிருப்பது தான் - உண்மையை நிரூபிக்கும் முறை என்பதை பிறருக்கு சொல்லிக் கொள்ள 'தகுதி' இருக்கிறது - ரவிக்கு.

நான் முந்தி வந்துட்டேன் - அதனால எனக்கு அதிக தகுதி இருக்கிறது என்று புலம்புபவர்களுக்கு -

தகுதியை நிர்ணயிக்கத் தகுதி யாருக்கும் இல்லை.

அது அவரவர் கையில் இருக்கிறது. இன்னும் யாராவது தங்களுக்குத் தான் தகுதி இருக்கிறது - அடுத்தவர் தகுதியை நிர்ணயிக்க என்று முனகினால், அவர்களை ஒரு மருத்துவமனையில் தான் சேர்க்கவேண்டுமேயன்றி, வாதம் புரியும் இடத்தில் வைத்துக் கொள்வது நல்லது அல்ல.

ரோஸா, நன்றி.

யார், எப்படிப்பட்டவர் என்பதை நான் அறிந்து கொள்ள தாங்களாகவே முன்வந்து தங்கள் 'தகுதி'யை நிரூபித்துக் காட்டிக் கொண்டமைக்காக.

neo,

// அந்த 'இஸ்ரேல்' போன்ற எதிர்வினை செய்யவேண்டும் இந்தியா என்கிற கருத்தைத்தான் நான் ஆதரிக்கவில்லை. //

அன்பின் நியோ,

உங்கள் எழுத்தின் தரம் என்னவென்று எனக்குத் தெரியும்.

பதற்றப்படவேண்டாம் -

யாரிடமும் சொல்ல மாட்டேன்.

thangamani

// I completly agree with Rosavasanth. Thanks. //

arul. // he should first realise that a stand against nationwide majority terror will naturally translate as opposition to other global terror networks.//

ரோஸா வசந்த் சொன்னது தெய்வ வாக்காக இருக்கலாம் நண்பர் தங்கமணி. ஆனால், சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் திறன் என்று ஒன்று உண்டு. அது ஒன்றே மதிக்கப்படும்.

அருள், வாசித்து விட்டு பதில் சொல்லுங்கள் - கிழிந்து போன முகத்திரைகளை ஒட்டுப் போடும் வேலையை விட்டுவிட்டு, நேர்மையாக பார்த்து பதில் எழுதுங்கள்.

இறுதியாக,

நண்பர்களே - உங்களுக்கு ரவியின் மீது அளவு கடந்த பற்றுதல் இருக்கலாம். கடந்த காலத்தில் அவர் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம். ஆனால், இன்றுஅவர் மாறிவிட்டார் என்ற நிஜத்தைத் தான் நான் தொட்டிருக்கின்றனே தவிர, கடந்த கால அவர் முகத்தை அல்ல. அதனால், எதைப் பேசுகிறோமோ அதைப் பற்றி மட்டுமே - பேசுங்கள். அவ்வாறு பேசியவற்றில் நியாயம் இருக்குறதா என்பதைப் பாருங்கள்.

விமர்சனம் செய்ய எங்களுக்குத் தான் தகுதி இருக்கிறது என்று இறுமாப்பு கொள்ள வேண்டாம்.

தகுதிகளைத் தேடி அலைய வேண்டிய கட்டாயத்தில் இல்லை நான். அது என்னுடைய பிறப்பிலே என்னிடத்தில் இருக்கிறது. எவரிடத்திலிருந்தும் அங்கீகாரம் வாங்கித் தான் என்னுடைய சிந்தனைகளை புனிதப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்திலோ, கட்டாயத்திலோ நான் இல்லை.

நன்றி.

Friday, January 20, 2006

பாதுகாப்பு - ஒரு பெண்ணின் பார்வையில்.

ஜனவரி திசைகள் இதழ் துபாய் சிறப்பிதழ் போல் மின்னியது என்றே சொல்ல வேண்டும். எனக்குத் தெரிந்து மூன்று துபாய் கவிஞர்களின் கவிதைகள் வெளியாகி இருந்தன. அதில் பாதுகாப்பு என்ற தலைப்பில் சகோதரி ஜெஸிலா ரியாஸ் அவர்கள் எழுதிய கவிதை பளிச்சென்று மனதைத் தொட்டது. எது பாதுகாப்பு என்பது குறித்த தீர்க்கமான சிந்தனை இங்கே பலரும் அறிய வேண்டிய செய்தி.

இனி கவிதைக்கு -

பாதுகாப்பு
***
ஜெஸிலா ரியாஸ்
***
அமீரகம்
***

துபாய் நிலா வெளிச்சத்தில்
நள்ளிரவில்
துணையின்றி
பூச்சிகளின் ஒலிகளுக்கு நடுவே
மூடிய கடைகளை பார்த்தபடி
எங்கோ கேட்கும்
வாகன சத்தத்தை உணர்ந்தபடி
தெரு விளக்கின்
பிரகாசத்தை இரசித்தப்படி
சுத்தமான அகல தெருவில்
நிமிர்ந்த நடையுடனும்
நேர் கொண்ட பார்வையுடனும்
காசு நிறைந்த கைப்பையுடனும்
விலைமதிப்புள்ள பொருட்களுடனும்
விலைமதிப்பில்லா கற்புடனும்
சின்ன சீண்டலுக்கும் கிண்டலுக்கும்
சிக்காமல்
வீடு திரும்பும் போது
ஆதங்கம் தொட்டது
எப்போது விடியும்
என் தேசம் இப்படியென்று!

தன்னைத் தானே எழுதிக் கொள்ளாத கவிதை...

தன்னைத் தானே
எழுதிக் கொள்ளத் தெரியாத கவிதைகள் பல
என்னை நெருக்கிக் கொண்டிருக்கிறது
எழுதித் தொலை என்னையென்று
பிதுங்கி பிதுங்கி வழியும்
இந்தக் கவிதைகள்
கவனச் சிதறலைத் தந்து
தவறாது தங்களிருப்பை நினைவூட்டுகின்றன.
இவைகளை எழுதித் தொலைத்து விட
எல்லா நாட்களிலும் பொழுது கிடைப்பதில்லை.
கிடைக்கும் நாட்களில் கூட
தடதடவென வந்து நிற்பதில்லை.

மிகுந்த பிணக்குடனும் நாணத்துடனும்
மெல்ல மெல்ல அவைகளை
இழுத்து வரவேண்டியதிருக்கிறது சிரமத்துடன்.
வரமறுக்கும் இடைப்பட்ட வேளையில்
மனவெற்றிடத்தின் விருப்பவடிவமாக
தட்டித்தட்டிப் பார்த்த சொற்கூடுகளை
பின்னர் கண்டித்து வெளியேற்றும் சிரமத்தை
சுயம்புவாக எஔழுந்துவிடும் கவிதைகள் அறிவதில்லை.

கூடிக்கூடிப் பிரித்து கீழாக மேலாக நகர்த்தி
குயவனின் வட்டுச்சுழற்சியில் உயரும் பானையாக
மெல்ல மெல்ல வடிவம் பெற்று வருகையிலே
சட்டென்று சிதைந்து போய்விடும் துயரத்தை
தானாக வடியும் கவிதைகள் தருவதில்லை.
அலுத்து சலித்து விலக நினைக்கும் தருணத்தில்
கடைசியாக ஒருமுறையென்ற இறுதிப்போரில்
மெல்ல மெல்ல உதித்து விடக்கூடும்
இந்தக் கவிதைகள்.

எத்தனையோ இரவுப் பொழுதுகளைப் பாழாக்கி
எத்தனையோ காகிதங்களைக் குப்பையாக்கி
எப்படியோ தட்டுத் தடுமாறி முட்டி மோதி
எழுதி முடித்த கவிதை தந்து விடுகிறது
மலையுச்சியேறிய இன்பத்தை இறுதியாக.

ஒரு அதிகாலையில் நீ வந்தாயா?

சிலநாட்களின் அதிகாலைகள்
உன்னைக் கொண்டு வந்து
அருகே கிடத்தி விழிப்பூட்டுகின்றன

உண்மையிலேயே அருகே கிடக்கிறாயோவென
கைகள் தனியாய் அலைகின்றன.
காலியாய்க் கிடக்கும் படுக்கை
தடவி ஏமாற்றமுற்று ஓய்ந்து
கனவென உணருமுன் ஓடிப்போய்விடுகின்றன
உன் உருவம் தாங்கிய நினைவுகள்

விழித்துக் கொண்ட பின்னும்
உணர மறுக்கிற புலன்கள்
உன்னை உண்மையிலேயே உணர்ந்த
தருணங்களைப் பேசுகின்றன.
இதயம் தான் அதிகமாக துடித்ததைச் சொல்லுகிறது
இன்னும் உன் வருகையை படுகையினடியில் ஓடும்
நதியாய் உருவகித்துப் பிரவாகிக்கிறது.

உன் வருகையைப் பற்றிய
தர்க்கங்கள் நிகழ்கின்றன என்னுள்
நீ வந்தாயா இல்லையாவென

நீ வந்தாதாகவும் வரவில்லையாகவும்
என்னுள்ளே பிரிந்து கிடக்கும் நான்
மீண்டும் ஒன்றாகி என்னை உயிர்ப்பிக்க
வருகை தர வேண்டியவளாயிருக்கிறாய் நீ.

உன் வருகை நிகழும் போதிலே
உதிர்ந்த ஒன்றிரண்டு கேசங்கள்
வெண்மை கசங்கிய மல்லிகைகள்
கூடவே சிணுங்க சிறுதுண்டு வளையல் கூட்டங்கள்
இவையெல்லாவற்றையும் விட்டுச் செல்
வாழ்ந்தேன் உன்னுடன் என்பதற்கான சாட்சியாய்

Tuesday, January 17, 2006

வாழ்க்கை

அவர்கள் எல்லோரும்
ஆத்திரத்துடன் இருக்கிறார்கள்
தங்கள் உருவத்தைப் பற்றிய
என்னுடைய கண்ணோட்டத்தின் மீது

அவர்களது உருவின்
இளமை முதுமைகளைப் பற்றிய
எந்த அபிப்பிராயமும் என்னிடம் கிடையாது

அவர்களது உருவத்தை
பிறர் சகிக்கவேண்டி தடவிக் கொள்ளும்
ஆர்ப்பாட்டமான அத்தர் வகையறாக்களும்
அவசியமற்றவையெனக்கு

தங்களது உருவை மூடிக்கொள்ள
அவர்களுடுத்தும் ஆடையணிகளைப் பற்றிய
விமர்சனங்களும் என்னிடத்தில் இல்லை.

அவர்களிடத்தில் அச்சமிருக்கிறது
தங்களைப் பற்றிய முழுமையான செய்திகளும்
என்னிடத்த்லிருக்கிறதென்ற அச்சம்.

இந்த அச்சத்தைக் கொண்டு
எந்தவொரு பயன்பாடும் இல்லையெனக்கென
எத்தனை சொல்ல முயற்சித்தும்
வெருண்டோடும் பசுவாய் புழுதி கிளப்பி
நதியின் கரை பிடித்து ஓடுகின்றனர்.

ஓடியாடி நதியோடு சமுத்திரத்தில் வீழ்ந்தாலும்
இவர்களைப் பிழைப்பூட்டியெடுத்து வர
யாரும் காத்திருக்கப் போவதில்லையென்றாலும்
நீந்தி நீந்தி நானில்லாத சமுத்திரத்தின்
அக்கறையேறிவிடாலாமென்ற நப்பாசையுமிருக்கிறது.

இவர்கள் அறிவதில்லை என்றென்றும்
பிழைத்தெழுந்து கடல் தாண்டினாலும்
அங்கும் நானிருப்பேன் இவர்களறியா வகையில்
அப்பொழுது
புதிதாக என்னைப் பார்ப்பார்கள்
புதிதாக என்னைச் சலித்துக் கொள்ளுவார்கள்
புதிதாக என்னால் நிம்மதியிழப்பார்கள்
நேருக்கு நேராக மட்டும்
ஏறெடுத்தும் பார்க்கவியலாத
அச்சத்தைக் கையில் வைத்துக் கொண்டு
கண்டம் விட்டு கண்டம் சிதறி
தேடிக் கொண்டிருக்கிறார்கள் தீர்வை.

Sunday, January 15, 2006

மீட்டெடுக்கக் காத்திருத்தல்....

வீழ்ந்துவிட்ட தங்கள் நிழலை
மீட்டெடுத்து கடைத்தேற்றும் முனைப்பில்
பிணந்தின்னிப் பறவைகள் தலைசாய்த்து
தன் இறக்கையின் ஈறும் பேனும் உண்டு
விழும் பிணம் தூக்க காத்திருக்கின்றன.

ஆளரவமற்ற நாட்களின் உரிமையோடு
பறந்து திரிந்த ஆகாயத்தில்
இன்று அச்சமூட்டும் இடிமுழக்கங்களும்
கண்ணொளி பறிக்கும் மின்னொளிகளும்
நிற்கவொட்டாது விரட்டியடிக்கின்றன.

தங்கள் கழிவுகளால் நாற்றமடிக்கும்
இருண்ட குகைகளிலும்
செங்குத்துப் பாறைச்சரிவுகளிலும்
ஒளிந்து ஒளிந்து நோட்டமிடுகின்றன
இடியொலியெழுப்புபவனும்
மின்கதிர் வீசி எரிதழல் மூட்டுபவனும்
மறைந்தொழிந்தார்களாவென
மகோன்னதமிக்க மந்திரங்களைப் பேசி
மடக்கிடலாம் மந்தைமந்தையாய் மனிதனையென
காலம் பார்த்து காத்துக் கிடக்கின்றன

விரிந்த வானம் விலக்கி இருள்குகை புகுந்ததால்
நிழலிழந்தோமென்றறிதலில்லாமல்
விழிப்புற்றவனைக் கண்டஞ்சி
வீழ்ச்சிக்காய்க் காத்திருக்கின்றன
கண்காணாத முகடுகளில் காய்ச்சலோடு

மனிதன் மட்டுமென்னவோ
இன்னமும் தன்மீது ஆதிக்கம் புரியும் நிழலொன்று
தன்னையறியாமலே படிகிறதென்ற பதட்டத்தில்
பக்கத்து வீட்டு மனிதனை
கண்காணித்துக் கொண்டிருக்கிறான்
மரணம் தொட நீளும் ஒரு கலவரத்திற்காக.

Friday, January 13, 2006

நண்பனின் அமெரிக்க எதிர்ப்பும், முகமூடிக்கு ஒரு பதிலும்.....

சமீபத்திய ஒரு விவாதத்தில் என்னைப் பற்றிய இருவர் விமர்சனங்கள் வைத்தனர். வழக்கம் போல அவர்களுக்கு அதே தளத்தில் நின்று பதில் சொல்லி அந்த விவாதத்தை திசை திருப்ப விரும்பாததால், இந்த தனி பதிவு. இதில் நண்பர்கள் சன்னாசி, முகமூடி இருவருக்கும் பதில் சொன்னதோடு, அமெரிக்கர்கள் மீதான என் கடுமையான விமர்சனங்களுக்குக் காரணம் என்ன என்பதையும், இஸ்லாமிய தீவிரவாதம் என்று எழுதப்படுவது குறித்தும் என் கண்டனங்களையும் எழுதி இருக்கிறேன். இனி வாசிக்கலாம்....


சன்னாசி,

உங்களின் நீண்ட பதிவிற்கு மிக்க நன்றி.

திசை திருப்பக் கூடாதென்பதால், பெரும்பாலான கருத்துகளுக்கு நன்றி. பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதினால்.

அகராதி என்று எழுதிய பொழுது, பக்கத்திலே சூட்டைத் தணிக்க ஒரு ஸ்மைலி போட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி போடாமல் விட்டது என் தவறு தான். நம்மிடையே நடக்கும் பனிப்போரை அறியாதவர் என்னைப் பற்றித் தவறாக நினைக்கத் தூண்டும் - அதை ஒரு தனிமனித தாக்குதலாகக் கூட கருத வாய்ப்புண்டு என்ற புரிதல் வந்த பொழுது, அது பதிவாகி விட்டது. சிரமம் பாராது அதை அழித்துவிட்டு, புதிதாகவே எழுதி இருக்க வேண்டும். பிறருக்கு வலிக்கும் வகையாக எழுத வேண்டுமென்று நினைத்தால் கூட, தனிமனித தாக்குதலாக போய்விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். நீங்கள் இப்பொழுது அதைப் பற்றிக் குறிப்பிட்டதில், அது நகைச்சுவையாக ஏற்கப்படவில்லை - மனம் புண்படும் வகையாகவந்து விட்டது அறிந்து வருந்துகிறேன். மற்றபடிக்கு, உங்கள் விமர்சனங்களைப் புரிந்து தான் இருக்கிறேன். கள்ளன் போலிஸ் என்று குறிப்பிட்டது ஒரு வகை விமர்சனமே தவிர, வேறு அர்த்தம் இல்லை. எப்படி நீங்கள் டிக்ஷனரி விமர்சனங்களைக் கருதுகிறீர்களோ அதே போலத் தான் இதுவும். ஆனால், இதற்காக (கள்ளன் போலிஸ்) நான் வருந்தவில்லை.

முகமூடி,

//மத்த fill in the blanksக்கு உங்கள் அஞ்சறை பெட்டியை திறந்து சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, தமிழ், மதம், ஜாதி எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தூவி ஒரு பதிவு பல பின்னூட்டங்கள் என்று சம்பந்தமில்லா இடங்களில் எல்லாம் எழுதி வருகிறீர்கள் என்பதே...//

முதன்முறையாக உங்களிடமிருந்து விமர்சனம் - நன்றி.

என் பெயரை உபயோகப்படுத்தியதற்காக நான் பதில் எழுதுவது அல்ல. மாறாக என் பெயரோடு சேர்க்கப்படும் அடை மொழிகளுக்குத் தான் பதில் சொல்கிறேன். நிறைய இடங்களில் அல்ல - இரண்டே இடங்களில் தான்.

நண்பன் என்ற ஷாஜஹான். ஆரோக்யம் எழுதியது.

அவரது பதிவுகள் தமிழ் மணத்தில் இடம் பெற வில்லையென்பதால், அவருக்குப் பதிலாக ஒரு பதிவை என் வலைப்பூவில் எழுதினேன். ஆரோக்கியத்திற்குப் பதில் எழுதியது தவறென நீங்கள் குறிப்பிடுவதாக இருந்தால், பின்னர் உங்களின் அடிப்படை நேர்மையையே நான் சந்தேகிக்க வேண்டி வரும். சரிதானே?

நண்பன் போன்ற அற்புதமான நண்பர்கள் - அடைமொழியுடன் பத்ரி எழுதிய பொழுது, அதே வார்த்தைகளைக் கையாண்டு ஒரு பதில். ஏனென்றால், இந்த 'அற்புதமான' என்ற வார்த்தையில் ஒரு விஷேசம் இருக்கிறது. என்னைப் பற்றிய எந்த அறிமுகமும் இல்லாதவர், கொடுத்த அடைமொழி. அவருடைய பதிவை அதுவரையிலும் நான் வாசித்திருக்கவில்லை. அவரும் எங்கும் என் பதிவில் பின்னூட்டமிடவில்லை. அப்படியிருக்க அவர் உபயோகித்த அந்த அடைமொழி எந்த வித நியாயமோ?

பின்னர் எங்கிருந்து இந்த அடைமொழி வந்தது? எந்தப் பதிவிலிருந்து அவர் இந்த அடைமொழியை எடுத்துக் கொண்டார்? ஆயிஷா என்ற பதிவிலிருந்து தானே? அவர் என்னை ஷாஜஹான் என்று அடையாளம் கண்டு கொண்ட மாதிரி, நான் அவரை பத்ரி என அடையாளம் கண்டு கொண்டதில் என்ன தவறு இருக்கிறது?. அந்த அடையாளங்களைச் சொல்லி, நான் ஏதாவது தவறாகப் பேசி இருந்தால் சொல்லுங்கள் - திருத்திக் கொள்கிறேன்.

இங்கே - நான்காவது முறையாக - Let some one tell them that secularism is not a premise for denying the identity of a human - but, it’s a doctrine that accept others with different identities, as equal while you keep your identity. இது ஜனவரி 7ம் தேதியன்று ஸ்ரீகாந்தின் மனம் ஒரு குரங்கு என்ற பதிவில், எழுதினேன். தன் அடையாளங்களை மறைத்து விட்டு, மத ஒருங்கிணைப்பு என்று பம்மாத்து செய்வதை விட்டுவிட்டு, அவரவர் மத அடையாளங்களுடன் நல்லிணக்கத்திற்கு முயற்சி செய்வோம் என்று. இப்பொழுதும் என் கருத்தில் ஏதும் மாற்றமில்லை. இப்பொழுது ஞாபகத்திற்கு வருகிறது. இந்த ஒரு வாக்கியத்தைத் தான் பல்வேறு இடங்களில் எழுதி இருக்கிறேன். இது உங்களுக்கு சம்பந்தம் சம்பந்தமில்லாமல் எழுதுவதாக தோன்றுகிறதா? உங்களைப் போன்றவர்களுக்கும் இது சம்பந்தமில்லாமல் தோன்றியது குறித்து நான் வருத்தமடையப் போவதில்லை.

இங்கு நான் தெளிவு படுத்தி விடுகிறேன் - அற்புதமான நண்பர்கள் என்று விளித்ததில் வருத்தமில்லை. ஆனால், அடைமொழிகளை எப்பொழுதும் நான் விரும்புவதில்லை. அதுவும் அறிமுகமற்ற நிலையில். அது என்னை தர்ம சங்கடத்தில் ஆழ்த்துகிறது என்பதால் அதை தவிர்க்கவே முயல்கிறேன். ஆனால், மத அடையாளங்களை மறைத்து முகமூடி போட்டுக் கொண்டு சமத்துவம் பேசுவது எந்த விதத்தில் நியாயம்.? (முகமூடி - வாசிக்க :: முகத்திரை. உங்க பேரை நீங்க இப்படி வச்சுக்கிட்டா நான் என்ன பண்ணுவது :-) )

//இந்த பதிவை first person முறையில் எழுதவில்லை என்று என் சிற்றறிவுக்கு நான் புரிந்து கொள்கிறேன். மூன்றாம் மனிதரின் பார்வையில் எழுதப்பட்ட பதிவில்// முகமூடி உங்கள் தமிழ் சற்று தகராறு பிடித்தது போல் தெரிகிறது. Context என்று ஒன்றுண்டு. அதாவது, இடஞ்சுட்டி பொருள் விளக்குக என்று கேள்வி எழுப்புவார்கள் அல்லவா? அதைப் போலத் தான். சரியாக இடம் சுட்டி பொருள் விளங்கிக் கொள்ள வேண்டும். எந்த இடம் சுட்டப்பட்டதென்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். வெறுமனே first person பற்றி மட்டும் பேசக்கூடாது. பேசப்படும் பொருளாக அங்கிருந்தது - பிராமிணர்கள். அவர்களைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கையில், நான் அந்த வரிகளை எழுதினேன். நன்றாகத்தானே இருக்கிறீர்கள் - நீங்கள் என்று. பேசு பொருளாக இருந்த பொருளைக் குறித்து கேள்வி ஒன்று வைத்தேன் - பிராமிணர்கள் என்பதை குறிப்பிடாமல், ''நீங்கள்'' என்று சொன்னேன். இந்த நீங்கள் - பத்ரியை சுட்டுகிறது என்று நீங்களாக நினைத்துக் கொண்டீர்கள். என் எண்ணம் அதுவல்ல. சுட்டு பொருளாக நிற்பது பிராமிணர்கள் தான். என்றாலும் உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். பொதுவான pronounsஐ உபயோகிப்பதை இனி தவிர்த்துக் கொள்கிறேன். யாரை குறித்துகேள்வி கேட்கிறேமோ, அவர்களின் பெயர்களையும் எழுதி விடுகிறேன். அது அத்தனை எளிதல்ல. மாறாக வேறு வகையான சங்கடங்களையும் உண்டாக்கும். எப்படி என்பதை கீழே படித்து தெரிந்து கொள்ளவும்.


மேலும்

மசாலா சேர்த்து எழுதுகிறேன் என்று நீங்கள் சொன்னதற்கு நன்றி. என் சமையல் நன்றாகத் தான் இருக்கும் - சமைக்க (எழுதத்) தெரியுமென்பதால்.

தமிழ் மொழி பற்றி இதுவரையிலும் ஒரு பதிவு கூட எழுத ஆரம்பிக்கவில்லை. ஏன் திராவிட சிந்தனை குறித்தும் கூட நான் இன்னமும் எங்கும் எழுதவில்லை. ஆகையினால், உங்களது இந்த விமர்சனம் நேர்மையற்றது.
சுபவீ, அறிவுமதி, பாமரன் படங்கள் வைத்திருப்பதால், உடனே நான் தமிழ் பற்றி, திராவிடம் பற்றி எழுதி விட்டேன் என்று நீங்கள் கூப்பாடு போட்டால் அது உங்கள் தவறு. சொல்லுங்கள் - நான் இதைப்பற்றியெல்லாம் எங்கே எழுதி இருக்கிறேன் என்று. நான் இதுவரையிலும் எழுதாத ஒன்றை நான் எழுதுகிறேன் என்று கூப்பாடு போடுவதிலிருந்தே தெரிகிறது - சும்மா குன்ஸா ஒரு கமெண்ட் வைப்போம் - என்ன ஆகிறது என்று பார்ப்போம் என்று. அல்லது இத்தனை படங்களை வைத்துக் கொண்டு இயங்குவதால், கண்டிப்பாக எழுதி இருப்பான் என்று அனுமானித்து அதன் மூலம் இந்த விமர்சனத்தை அச்சமில்லாமல் வைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் இயங்கினால், அது உங்கள் தவறு தானே தவிர, என் மீதான நேர்மையான விமர்சனமாகாது.

மதம் பற்றி எழுதுவது, யாரையும் திட்டவோ, பரிகசிக்கவோ இல்லை. என் மதத்தின் மேன்மையை மட்டும் தான் நான் எடுத்துரைத்தேன். அதிலும் சிலர் இஸ்லாம் பற்றி வைக்கும் விமர்சனங்களுக்குப் பதிலாக. அதில் என்ன தவறு இருக்கப் போகிறது.? நீங்கள் பிராமினிசம் காக்க முன் வந்தால், நான் அதை தவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால், அங்கு உங்கள் சம்பந்தப்பட்ட விமர்சனங்களுக்குப் பதில் வைக்காமல், என் நம்பிக்கை சரியா, அடுத்தவர் நம்பிக்கை சரியா என்று தர்க்கங்களுக்குப் போய் விமர்சனங்களை வீசும் பொழுது - பதிலுரைக்க வேண்டி வருகிறது. (நான் இதுவரையிலும், பிற மதங்களைப் பற்றிய விமர்சனத்தில் இறங்கியதில்லை. இனியும் இறங்கப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். )

முகமூடி, தயவு செய்து, மீண்டும் ஒருமுறை என்னுடைய பதிவுகளைப் படித்துப் பார்த்து விட்டு, பொறுப்போடு விமர்சனம் வையுங்கள்.

நான் மிக அதிக பதிவுகள் போட்டது அமெரிக்காவின் உலக / இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல் - அது பற்றி ஒரு வார்த்தை கூட உங்களால் பேச இயலவில்லை - ஏன்? உங்களுக்கே தெரியும் அதில் உள்ள நியாயங்கள். சிலருக்கு நான் அமெரிக்காவைப் பற்றி எழுதியதுமே கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. உங்கள் பக்கத்து நியாயமாக அமெரிக்காவில் கிடைக்கும் - (மீண்டும் - இங்கு உங்கள் என்பது முகமூடி அல்ல. மாறாக அமெரிக்காவைப் பாதுகாக்க நினைக்கும் அங்கு வாழும் அமெரிக்கார்களைப் பற்றியதானது இந்த 'உங்கள்' இப்பொழுதாவது புரிகிறதா - என்னுடைய பாணி என்னவென்று) அதிகப்படியான வசதிகள் கொண்ட வாழ்க்கை - சம்பளம் - என்று நியாயங்கள் இருக்கலாம். அதனால், என்னை எதிர்ப்பதும் கடமையாகிறது அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு. ஒன்று செய்யட்டுமே - அமெரிக்க வாழ் இந்தியர்கள் (பாருங்கள் - எல்லோரும் அடிக்க வரப்போகிறார்கள் - ஏன் எப்பொழுதும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் என்றே எழுதிக்கொண்டிருக்கிறான் - Tell him to use a pronoun - shorter one என்று குரல் கொடுக்கப் போகிறார்கள் - ) எல்லோரும் பதிலுக்கு அமெரிக்க செய்யும் நல்ல காரியங்களைப் பற்றி எழுதட்டுமே - அப்படி ஒன்று இருந்தால் - நாங்களும் தான் தெரிந்து கொள்கிறோம்.?

அமெரிக்கர்களைப் பற்றிய என் பக்கத்து தரப்பு நியாயங்களும் உண்டு.

இந்த அமெரிக்கர்களின் கொள்கைகளோடு நேரடியாக அனுபவம் உண்டு. பிஜேபி ஆட்சியில் அணுகுண்டு வெடித்ததும், ஒரு தடை போட்டார்கள் - அதாவது, இந்தியாவின் அணுத் துறைக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது. தேவைப்படும் தொழில் நுட்பங்கள் - பொருட்கள் எதுவும் கிடைக்கக் கூடாது என்று ஒரு தடை விதித்தார்கள். அதாவது நம் அணுத்துறையையே அடக்கி மண்டி வைத்து விடவேண்டும் என்று. ஆனால், அதன் பின்னால் இருந்த hidden agenda - அணுத்துறை மட்டுமல்ல - சகல விஞ்ஞான துறைகளையும் முடக்கிப் போட வேண்டும் என்பது இந்த துறைகளோடு சம்பந்தப் பட்டவர்களுக்கு நன்கு தெரியும். நான் இந்த துறைகளில் நேரிடையாக சம்பந்தப் படாவிட்டாலும் - இவர்களுக்கெல்லாம் தேவைப்படும் தொழிலில் இருக்கிறேன். நான் ஒரு Air conditioning Engineer. அமெரிக்கா இந்த ஏர்கண்டிஷனர்களுக்குக் கூட தடை விதித்தது என்பது உங்களுக்கெல்லாம் தெரியுமா? இந்த ஏர் கண்டிஷனர்களால் - ஒரு ராக்கெட்டைப் பறக்க வைத்து விடலாம் என்றோ, அல்லது அணு உலையை ஓட்டி விடலாம் என்றோ யாரும் நம்பப் போவதில்லை. இந்த ஏர்கண்டிஷனர்களால் ஆகக் கூடிய ஒரே காரியம் - குளிர்ந்த நீரை உற்பத்தி செய்து தர முடியும் - 5 டிகிரி செல்சியஸ்ற்கு. பிறகு அதை கொண்டு, AHU மூலமாகக் காற்றைக் குளிர்விக்க வேண்டும்.

இதில் என்ன பெரிய காரியம்? இந்த மெஷின்களை ஏன் தடை செய்ய வேண்டும்.?

விஞ்ஞானிகள் குளுகுளு சூழலில் உட்கார்ந்து வேலை செய்து, அணு உலை தயாரிக்கப் போகிறார்கள் என்றா?

அந்தப் பொழுதில் இந்தியாவில் இருந்த பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்தும் - Trane, Carrier, etc உட்பட, எவருமே இந்த எந்திரங்கள் இந்தியாவிற்கு தரும் பொழுது ஒரு உறுதி மொழிப் பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொண்டு தான் தருவார்கள் - அந்தப் பத்திரம் என்ன தெரியுமா? எங்களிடம் வாங்கப் படும் இந்த இயந்திரங்கள் - ஏர்கண்டிஷனர்கள் - இந்தியாவின் அரசு தொடர்புடைய எந்த நிறுவனத்திற்காகவும் வாங்கப்படவில்லை. மாறாக எங்கள் சொந்த உபயோகத்திற்காக வாங்குகிறோம் என்ற வகையில் எழுதித் தர வேண்டும். எதற்கு? வெறுமனே குளிர்ந்த நீரை உண்டாக்கவா?

நீங்கள் ( இது இவ்வலைப்பதிவை படித்துக் கொண்டிருக்கும் அன்பர்களைப் பார்த்து) இப்பொழுதும், போய் பாருங்கள் - ISRO, GTRE, அணுத்துறை மற்றும் அரசு சார்ந்த துறைகளில் - எங்காவது அமெரிக்காவில் இருந்து, வரவழைக்கப்பட்ட எந்திரங்கள் இருக்கிறதா என்று.? அங்கு நீங்கள் பார்ப்பதெல்லாம் வெறுமனே - Kirloskar, Voltas, Bluestar, Batliboi போன்ற இந்திய நிறுவனங்கள் தயாரித்த out-dated என்று சொல்லத்தக்க reciprocating machinesஐ வைத்துத் தான் காலம் தள்ளுகின்றன. இது 2003 வரையிலும் உள்ள நிலைமை.

இந்த reciprocating இயந்திரங்களில் உபயோகப்படுத்துவது - R22 என்று சொல்லப்படும் தடை செய்யப்பட்ட halo-carbon குடும்பத்தைச் சார்ந்த freon என்னும் குளிர்விப்பான். இந்த வகை வாயு, 2020 ல் இந்தியாவில் தடை செய்யப்படும். அந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டு உள்ளது. அதாவது இன்று ஓடிக்கொண்டிருக்கும் இந்த அனைத்து வகை குளிர்மி-களையும் நாம் நிறுத்தியாக வேண்டும். அதற்குள்ளாக, மாற்று freonகளைக் கொண்டு இயங்கும் இயந்திரங்களை நிறுவாவிட்டால், அப்புறம் நமது விஞ்ஞான நிறுவனங்கள் எல்லாம் அம்பேல் தான். அப்படியில்லையென்றால், ஒசோன் வட்டத்தைத் துளையிடாத freonகளால் இயங்கக் கூடிய வகையில், இந்த அரதப் பழசான எந்திரங்களைக் கழற்றி கடாசி விட்டு, புது எந்திரங்களை வடிவமைத்து நிறுவ வேண்டும். எப்படி என்றாலும், நமக்கு பெரும் செலவு. அதை இப்பொழுதிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக செய்து கொண்டால் நலம். அதற்குத் தடையாக இருப்பது அமெரிக்கா. மாறி விட்ட சூழ்நிலையில், இந்த தடை நீக்கப்பட்டதா, நமக்கு இந்த எந்திரங்கள் எல்லாம் கொடுக்கிறார்களா என்பதை இனி தான் விசாரிக்க வேண்டும்.

இந்த நேரிடையான அனுபவம் தான் அமெரிக்காவின் அனைத்து செயல்களிலும் என்ன உள்குத்து வேலை இருக்கிறது என்பதை ஆராயத் தூண்டுகிறது. இங்கு சிலர் (இந்த சிலர் தான் இனி வரக்கூடிய நீங்கள் என்ற சுட்டிக்கு அர்த்தம்), அமெரிக்காவும் இந்தியப் பாதுகாப்பும் என்று எழுதும் பொழுது, சிரிப்பு பொத்துக் கொண்டு வருகிறது. இத்தகைய அறிவிலிகளும் இருக்கத்தானே செய்கிறார்கள் என்று. அதிலும் அவர்கள் (அந்த சிலர்) - என்னைப் போன்றவர்களை கேள்வி வேறு கேட்கிறார்கள் - தேச பக்தி இருக்கிறதா என்று. என் நாட்டிற்கு, விஞ்ஞான துறையுடன் சம்பந்தப்படாத பொருட்களைக் கொடுக்கக் கூட தடைவிதித்த செய்கையால் அமெரிக்காவை எப்பொழுதும் கண்டித்துக் கொண்டிருக்கும் என்னையெல்லாம் நிரூபிக்கச் சொல்வார்கள் - தேச பக்தியை - தங்கள் தேசபக்தியை அடகு வைத்தவர்கள்.

அணுத்துறை சார்பாக சமீபத்தில் பல முன்னேற்றங்கள் - அமெரிக்கா நமக்கு உதவப் போகிறது என்றெல்லாம் பேச்சு. அது சரி, இந்த 25 வருடங்களாக நம்மை நசுக்கனும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த அமெரிக்கா -இப்பொழுது உதவ முன் வந்த காரணம்? சில உள்குத்து வேலைகள் இருக்கத் தானே செய்யும்? எனக்குத் தெரிந்த ஒன்று - நாம் நம் அணுக்கூடங்களை - civilian என்று அறிவிக்கப்பட்ட உலைகளை - சர்வதேச கண்காணிப்பாளார்கள் வரும் பொழுது திறந்து விடவேண்டும். அந்த உலைக்கூடங்களை எக்காரணம் கொண்டும் ராணுவ பயன்பாட்டிற்கு உகந்ததாக மாற்றக் கூடாது என்ற நிபந்தனை. இது போதுமே - ராணுவத்திற்கென தனியாக நாம் வைத்துக் கொள்ளலாமே என்று நினைக்கக் கூடும்.

இந்த நிபந்தனையின்படி, இந்திய அரசு - எது சிவிலியன் - எது ராணுவ உலை என்று தங்களைத் தேர்ந்தெடுக்கும் மக்களுக்கு அறிவித்திருக்கிறதா? நம் ராணுவம் தனக்குத் தேவையான அணுகுண்டுகளைத் தயாரித்துக் கொள்ள, போதுமான உலைகள் இருக்கிறதா என்று மக்களுக்கு உறுதிமொழி கொடுக்கப்பட்டிருக்கிறதா? (ராணுவ ரகசியங்கள் முன்னிட்டு, இடங்களைக் குறிப்பிடாவிட்டாலும், ஒரு உறுதிமொழியாக, ஊக்கமொழியாக அறிவித்திருக்கிறதா? சந்தேகம் தான். ஆனால், இதே சரத்தை அணுகுண்டு வல்லரசுகளாக அறிவிக்கப்பட்ட நாடுகள் எப்படி கையெழுத்திட்டிருக்கின்றன?

'தேவைப்பட்டால், சிவிலியன் உலைக்கூடத்தை ராணுவ உலையாக மாற்றுவோம் - எந்த முன்னறிவிப்புமின்றி.' இது சீனாவுக்கும் பொருந்தும்.

போதுமா? அமெரிக்காவின் நரித்தனம்?

'சோழியன் குடுமி சும்மா ஆடாது' என்பார்கள். அமெரிக்காவின் குடுமி மட்டும் சும்மா ஆடும் என்று எதிர்பார்க்க முடியுமா? நாம் நம்ப வேண்டும் - அமெரிக்கர்கள் பொறுப்பானவர்கள் என்று! ஆனால் அவர்கள் நம் நாட்டை ஒரு பொறுப்பான நாடு என்று நம்ப மாட்டார்கள். பாக்கிஸ்தான், வியட்நாம், லிபியா போன்ற சண்டிய நாடுகள் என்ற நிலையில் தான் வைத்துப் பார்ப்பார்கள். (இந்த ரோக் ஸ்டேட்ஸ் என்று குறிப்பிட்டது அமெரிக்கர்களின் பார்வையில். என் கண்ணோட்டம் அதுவல்ல. அந்த நாடுகளுக்கு என்று நியாயங்கள் இருக்கக்கூடும். அமெரிக்கர்களுக்கென்று நியாயம் எதுவுமில்லையா என்று கேட்காதீர்கள் - அவர்களுக்கு உள்ள பயங்களை - அராபியாவில் அம்மா முலையில் பால் குடிக்கும் குழந்தை கூட நம்மை அழித்து விடும் என்ற அதீத பயத்தைப் போக்க எத்தனை முயன்றாலும் அவர்களால் அந்த பயத்தை துறந்து, நிம்மதியாக இருக்க முடியாது. இது இறைவன் அவர்களுக்குக் கொடுத்த சாபம். யாரும் இதில் எதுவும் செய்வதற்கில்லை.)

இது தான் அமெரிக்கர்கள் நமக்குக் கொடுக்கும் மரியாதை. இதை சரி என்பவர்களைக் குறித்து எனக்கு எந்த கருத்தும் இல்லை. ஒன்றைத் தவிர - தேசபக்தியின் ஏகபோக குத்தகையாளர் நாங்கள் என்று பேசுவதை விட்டுவிடுங்கள்.

முகமூடி

இந்தப் பதிவே உங்களுக்கு ஒரு பாடமாக (பாடமாக:: படிக்க - விளக்கமாக) அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் எழுதுகிறேன். அதனால் தான் வேண்டுமென்றே இந்த திசை திருப்பல் - அமெரிக்காவைப் பார்த்து. இப்பொழுது சொல்லுங்கள் - இங்கு நான் சிலர் என்று குறிப்பிட்டு பேசுவதை என்னவென்று? நன்றாகத் தெரியும் - இது உங்களை நோக்கி வைக்கப்பட்ட கேள்வி அல்ல என்று. (தேச பக்தியின் ஏக போக உரிமையாளர் என்ற சொற்றோடர்) ஆனால் மேலே உங்கள் பெயரை எழுதிவிட்டதால், எழுதப்படும் அனைத்தும் தன்னைத் தான் குறிக்கிறது என்று நினைத்துக் கொண்டால், அது உங்கள் மொழி ஆளுமையின் குறை பாடே தவிர என்னுடையது அல்ல. (உங்கள் தெளிவிற்காக, தேச பக்தியைப் பற்றி நான் குறிப்பிட்டது - கேள்வி எழுப்பியது - சமுத்ராவை நோக்கி. தொடர்ந்து நீங்கள் என் எழுத்துகளைப் படித்துக் கொண்டிருந்தால், உங்களுக்கு தெளிவு கிடைத்திருக்கும். ஆனால், முன்னரே சொன்னது போல, நிதானமாக வாசித்துப் பதில் எழுதும் பொறுமை இல்லாத நீங்கள் என் வலைத்தளத்தில் இருக்கும் படங்களைக் கொண்டு எழுந்த அனுமானத்தில் உண்டாக்கிக் கொண்ட சித்திரங்கள் தானே? அப்படி இல்லையென்றால், மிக்க மகிழ்ச்சி.)

முகமூடி, (சீக்கிரமே பேரை மாத்துங்க நன்பரே - அழைப்பதற்கு சிறிது தயக்கமாக இருக்கிறது. :-) )

சம்பந்தமில்லா இடங்கள் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் - நீங்கள் தான் சொல்ல வேண்டும். பின்னூட்டங்கள் எல்லோருக்கும் உரியன. நான் பின்னூட்டம் எழுதுவது மட்டும் சம்பந்தமில்லா இடங்களில் என்று ஆகிவிடுமா என்ன? இப்படியான விமர்சனம் இதுதான் முதல் முறை. நான் எழுதிய வலைப்பூக்காரர்கள் இதுவரையிலும் இப்படி சொன்னதேயில்லை. உங்கள் தளத்தில் ஒன்று கூட நான் எழுதியதில்லை. நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். என்ன சொல்வது? தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறி கட்டுமாம்!

மேலும், இந்த சம்பந்தமில்லாமல் எழுதப்படும் எழுத்துகள் எப்படி இருக்கும் தெரியுமா? சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் தான். எப்படி மேலெழுந்தவாரியாக எழுதிக் கொண்டே போகிறார்? அந்த ஸ்டைல் தான் சம்பந்தா சம்பந்தமில்லாமல் எழுதுவது என்பது. ஏன்? நினைவிற்கு வரவர எழுதிக்கொண்டே இருக்கலாம். பலருக்கும் ஒரே இடத்தில் பதில் சொல்லலாம். மேலும் தீவிரமாக ஒரு கருத்தை எழுத வேண்டியதில்லை. கலவையாக கதம்பமாக பதில் எழுதி விடலாம். இது எத்தனை விதத்தில் வசதியாக இருக்கிறது தெரியுமா, சுஜாதாவிற்கு? ஆனால் என்னுடைய பாணி அதுவல்ல என்று இப்பொழுது தெரிந்திருக்கும் - இல்லையா?

// இப்போது உங்கள் பாணியில் பேசினால், //

என் பாணி என்ன என்று உங்களால் விளங்கிக் கொள்ள இயலவில்லை இதுவரையிலும். இப்பொழுது தான் கொஞ்சம் உணர்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். என்றாலும் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள், உங்கள் அனுமானம் என்ன என்றும் தான் பார்ப்போமே!.

// உங்கள் மதம் எனக்கு தெரியும் என்ற காரணத்தால், IISCல் நடந்த தாக்குதல்களை குறித்து உங்களிடம் விவாதித்தால் நீங்கள் ஏன் இப்படியெல்லாம் காட்டுமிராண்டித்தனமாக செயல்படுகிறீர்கள் என்று கேட்டால் ஓகேவா? //
முதலில் நான் இதுகுறித்து மேலே ஒரு பெரிய விளக்கம் கொடுத்து விட்டேன். மீண்டும் ஒரு முறை விளக்குகிறேன். நீங்கள் (முகமூடி) என்னிடம் நீங்கள் இப்படி செய்கிறார்களே இது சரியா என்று கேட்டால், தீவிரவாதத்தில் நம்பிக்கை உள்ள அந்த இளைஞர்களைப் பற்றித் தான் கேள்வி எழுப்புகிறீர்கள் என்பதை புரிந்து கொண்டு அவர்கள் (தீவிரவாதிகள்) செய்வது தவறு தான் என்று பதில் சொல்வேன். ஆனால், நீங்கள் (சில வலைப்பதிவாளர்கள் - தினசரிகள். இந்த சில வலைப்பதிவாளர்களில் நீங்கள் இருக்கிறீர்களா, இல்லையா என்று எனக்குத் தெரியாது. ) எழுதும் பொழுது எவ்வாறு என்று எழுதுகிறீர்கள் - இஸ்லாமிய தீவிரவாதி என்றல்லவா? இங்கு தன்மை, முன்னிலை, படர்க்கை என்றெல்லாம் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாமல், தெளிவாக இஸ்லாம் என்று குறிப்பிட்டு, எழுதுவதைத் தான் கேள்வி எழுப்புகிறோம். தீவிரவாதிகள் அனைத்து மதத்திலும் இருக்கையிலே அவர்கள் எல்லாம் மதம் சாராத குற்றவாளிகளாகவும், இஸ்லாமியனாக இருந்தால், அவனை மதத்தோடு இணைத்து விடுவது மட்டும் எந்த விதத்தில் நியாயம் என்று தான் கேள்வி கேட்கிறோம். இந்த தெளிவு என்னிடமிருக்கிறது. ஆனால், உங்களிடம் இல்லாத பொழுது, அதை நான் என்னவென்று சொல்வது? தீவிரவாதத்தைக் கண்டிப்பதில் அனைவரும் முன்வரவேண்டும் - அது எம்மதத்தைச் சார்ந்ததாகவும் இருந்து விட்டுப் போகட்டும். ஏன் இதை கருத்தில் வைக்க மாட்டேனென்கிறீர்கள்? உங்களுடையது எந்த விதத்தில் நேர்மையானது சொல்லுங்கள் பார்ப்போம்.?


மேலும் இப்படியெல்லாம் எழுதவில்லை என்று யார் சொன்னது? விழித்துக் கொண்டு உலகில் என்ன நிகழ்கிறது என்று பாருங்கள் நண்பரே -

எழுதத் தான் செய்கிறார்கள்.

நீங்கள் எழுதவே இல்லை இதுவரை என்று சொன்னால் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் - நியாயமாக நடந்து கொள்ளும் ஒரு மாற்று மத சகோதரர் இருக்கிறார் என்று.

உங்களைப் போன்ற அன்பர்களையும் அழைக்கிறோம் - அத்தகைய தவறான எண்ண ஓட்டத்தில் இருந்து மற்றவர்களையும் வெளிக் கொண்டு வர துணை புரியுங்கள். செய்தீர்கள் என்றால் நல்லது - இல்லையென்றால், அதனால் வருத்தமில்லை. தொடர்ந்து, பொய் பிரச்சாரங்களை எதிர்த்து எழுதுவோம்.

// மதக்கோட்பாடு எந்த சிந்தாந்தத்தில் எழுப்பப்பட்டாலும் கிறிஸ்துவ தீவிரவாதம் என்ற சொல் இல்லாத நிலையில் இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்வதும் முறையற்றது என்று வாதிடுபவன் நான். //

உங்கள் எண்ணத்திற்கு மிக்க நன்றி. இத்தகைய சிந்தனைகள் வளர வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை.

மிக்க மகிழ்ச்சி, முகமூடி.

இதே அலைவரிசையில் விவாதங்கள் தொடரும் என்றால்.

அன்புடன்
நண்பன்

Thursday, January 12, 2006

வாழ்க்கை இனிப்பாகத்தான் இருக்கிறது.

பிறந்த நாளன்று, பெங்களூரில் இருக்கும் மனைவி, மகன், மகளுக்கு ஒரு இனிய கடிதம். என் பெயரைப் பார்த்ததுமே நெகட்டீவ் ஓட்டு குத்தணும்னு கை நமநமக்கிறவங்கல்லாம் கொஞ்சம் பொறுமை காத்து அடுத்த பதிவில் போடுங்க. ரைட்?

****




அன்பின்
அன்பான மனைவியே
இரண்டாவதாகப் பிரிந்ததும் தான்
உணர்கிறேன்
உன்னை எத்தனை தூரம்
காதலிக்கிறேனென்று.

முதல் பிரிவின்
வலியைத் துடைக்க வந்து
வலி கூடிப்போய்த் திரும்பினேன்.

உன்னை மீண்டும் பார்க்க
இன்னும் வெகுதொலைவு
நடக்க வேண்டுமென்ற புரிதலில்
கூடிப்போன வலியை
சுமந்து திரிகிறேன்.

பிரிவின் நடுவேயும்
வாழ்ந்த ஒருமாத வாழ்க்கை
இன்றும் பசுமையாய் இருக்கிறது
கடலில் மிதக்கும்
ஒரு குட்டித் தீவைப் போல.

நீயும் நானுமாய்
தனித்திருக்குமிடத்தில்
பாலையும் பசுமையாயிருக்கும்.

இங்கெல்லாம்
எனக்குப் பசுமையாய்த்
தானிருக்கிறது.
உனக்கென
நான் விரித்து வைத்த
வானத்தில்
தன்னந்தனியாய்
உன் நினைவுகள்
பறந்து கொண்டேயிருப்பதால்

இன்னும் ஒரு வருடம் வாழ
போதுமான வாழ்க்கையை
எடுத்து வந்திருக்கிறேன்
மனதின்
ஏதோ ஒரு மூலையில்
மறைத்து வைத்து.

யாரும் அறியாத சமயத்திலே
நான் மீண்டும் வாழ்வேன் -
மனதின்
மறைவிடங்களின் தனிமையில்.

உன் மூச்சுக் காற்று
என் நுரையீரலில்
மோதப்போவதில்லை தான்.

நடுநிசிக் குளிரில்
இருளைத் துழாவி
உன் போர்வைக்குள்
வந்துவிட முடியாது தான்.

எந்த ஒரு கைப்பக்குவமும்
உன் சமையலின்
சுவையைத்
தந்துவிட முடியாது தான்.

என்றாலும்
இந்த நினைவுகளாலும்
தரமுடிந்தது ஒன்றுண்டு -
இத்தனை
வருடங்கள் கழித்தும்
நம்மிடையே காதல்
பூத்த தினத்தின் மலர்ச்சியோடு
இருக்கிறதென்ற உணர்வு தான்.

நடுநடுவே
வந்து போன சண்டைகளில்
காதல் தொலைந்து போனதாக
வந்த நினைப்புகள்
ஆவியாகிப் போனதே
இந்த பிரிவின் பரிசானது.


சிறுவனாய்
நான் விட்டு வந்த
நம் மகன்
இன்று
உனக்கு நண்பனாய்
வளர்ந்து விட்டது
ரசிப்பதாயிருக்கிறது.

அழாமலிருப்பேனென்று
அழுது கொண்டே
சொன்ன மகள்
தன்னைத் தானே
கவனித்துக் கொள்ளும்
ஆளாகி விட்டதை
அருகேயிருந்து
பார்த்து வியக்கவியலாத துயரம்
வற்றா நதியாய்
ஓடிக்கொண்டேயிருக்கிறது.

நானில்லாத வாழ்க்கையை
வாழக்கற்றுக் கொண்ட
உங்கள் வாழ்வில்
உள்ளே நுழையாது
விலகி நின்று பார்த்தால்
வாழ்க்கை
இனிப்பாகத்தான் இருக்கிறது

Wednesday, January 11, 2006

BOSLAN

போஸ்லான்


முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும்

முன்னம்
பக்கத்து நாடுகள் விழுங்கி
யூனியன் ஆகி
சமத்துவம் வளர்த்தது.

ரொட்டித் துண்டுகளின்
வினியோக வரிசையில்
உணவிற்கு உரிமைகள்
பண்டபரிமாற்றம்.

உண்ணத் திறக்கும்
வாயைக்கூட
அளந்தே திறக்க வேண்டும்.
ரகசிய உளவாளிகள்
நாடெங்குமுண்டு.

மீறித்திமிறும் குரல்கள்
சைபீரியப் பனிப்பாலையில்
உறைய வைக்கபடும்.

தேவாலய மணிக்கூண்டுகள்
ஊனமானது.
மசூதியின் அழைப்போசை
ஊமையானது.

அடக்கி ஒடுக்கப்பட்ட
நம்பிக்கைகள்
ஆங்கோர் அக்னிக்குஞ்சாய்
மனத்திடை மறைந்து கனன்றது.

வேடிக்கை காட்சிகள்
விண்ணிலும், மண்ணிலும்
தொடர்ந்தன.
நிலவைத் தொட்ட
ஆசையடங்குமுன்னே
ஆஃப்கன் அணங்குகளின் மீதும்
செங்கரம் நீண்டது.

பிணம் தின்னும் கழுகுகளும்
களம் புகுந்தது -
பனிப்போரின் ஆடுகளமாக
ஆஃப்கன் ஆகிப்போனது.

முரட்டுப் பத்தான்கள்
முஜாஹிதீன்கள் ஆனார்கள்
முனைந்து நடத்திய யுத்தத்தில்
மூக்குடைபட்டுப் போனது
வல்லரசுவும்

ஆயுதம், மனோதிடம் -
எந்த நாட்டையும்
உலுக்கிவிடலாம்
ஆஃப்கனில் உருவானது

வளர்த்த இரு நாடுகளும்
கூவிக்கூவி அழைக்கின்றன
அனைத்து நாடுகளையும் -
அடக்கி விடுவோம்
தீவிரவாதத்தை.

வினையின் எதிர்வினை
என்றறியாமலே
மக்கள் போராட்டங்கள்
தீவிரவாதமாயின.

சிறு குழுக்கள்
குண்டு போட்டால்
தீவிரவாதம்
பெரும் நாடுகள்
மனிதனை அம்மணமாக்கினால்
விசாரணை யுக்தி.

பயங்கரவாதமடக்க
சேனைகள் தேடித்துழாவின
கன்னிகளின் கர்ப்பக் குழிகளை.

வீசிய குண்டுகளில்
மலர்களின் மகரந்தம்
சாம்பல் துகள்களாக -
மலராத மொட்டுகளில்
புதைக்கப்பட்டது
ஆணவ விந்தணுக்கள்.

யுத்தத்தில் கொடியது -
எதிரியின்
பண்பாட்டு சின்னங்களை
சிதைத்து விடும் சிறுமை -
எத்தனை உயரம் போனாலும்
யுத்ததந்திரம் மட்டும்
ஆதிகால வாசனையைத்தான்
முகரும்.

பண்பாட்டுச் சின்னங்கள் -
வணங்கும் தலங்கள்
இசைக்கும் இசை
உண்ணும் உணவு
நாற்றங்காலில் பயிராகும்
குழந்தைகள் -
இத்துடன் பெண்ணின் பெருமிதம்

கட்டுக்கோப்பான சீருடைகள்
எதிரியின் பெண்களை
ருசிக்கையிலே
குருடாகிப் போன அரசுகள்
பாண்டவர் காலம் தொட்டு
இராக் வரையிலுமுண்டு

‘யுத்தங்களை எடுத்துச் செல்
எதிரியின் மண்ணிற்கு -
நம் பெண்கள்
நம் குழந்தைகள்
நம் வீடுகள்
அழியாதிருக்க...’

அவரவர் நியாயம்
அவரவர்க்கு...

‘ஒரு கன்னத்தில் அடித்தால்
இரு மடங்கு பலத்துடன்
மறுகன்னத்தில் அடித்து விடு’
தீவிர வாதிகள்
புதுவேதம் ஓதினார்கள்.

புதுவேதம் புரியாதவர்கள்
எதிர்வினைக்கு தொடர்வினையாக,
மயக்க மருந்துகளின் வலுவில்
மறந்து விட்டனர் -
சமரசம்
பேசுவதெப்படியென்பதை!

குரல்வளையைத் திருகியே
பழகிய தலைமை
புஜ வலிமைக் காட்டியே
காரியம் சாதிக்க நினைக்கிறது.

யார், எவரையும் விட
பாடம் கற்பதில்
உருமாறிக் கொள்வதில்
புது இடத்திற்கு
இணங்கிப் போவதில்
தீவிரவாதிகளின் வேகம்
வியப்பானது

வேகத்தைக் கணிக்க
அரசு எந்திரத்திடம்
மனம் இல்லை -
மனிதம் இல்லை.

அன்று
நீ என்னையடித்தாய் -
இன்று
நானுன்னை அடித்துவிட்டேன்
தொடரும் தீவிரவாதம்
அரசு அமைப்பிலிருந்தும்
போராடும் குழுக்களிலிருந்தும்

யுத்தவாதிகளே...!
எதை வேண்டுமானாலும்
அழியுங்கள் -
எத்தனை முறை வேண்டுமானாலும்
அழியுங்கள்
அல்லது
அழிந்தொழியுங்கள்


யுத்தங்களை மட்டும்
உங்களையொத்த
வயதுடைய வீரர்களோடு
நிறுத்திக் கொள்ளுங்கள்

உங்கள் யுத்தம்
குழந்தைகளோடும்
குழந்தைகள் துயிலும்
கர்ப்பப் பைகளோடும்
மட்டும் வேண்டாம்

Tuesday, January 10, 2006

திசைகள் இதழில்....

திசைகள் இதழில் குஷ்பு / சுஹாசினி மற்றும் அவர்களது ஆதரவாளர்களை விமர்சித்து எழுதிய கவிதை இது.

http://www.thisaigal.com/jan06/PoemShajahan.htm

பதிப்பித்த ஆசிரியர் மாலனுக்கும் அவரது குழுவிற்கும் நன்றி.

புதிதாக ஆசிரியர் பொறுப்பேற்க இருக்கும் அருணா ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

பத்ரிக்கு ஒரு பதில்....

பத்ரி,

// "நண்பன்" போன்ற அற்புதமான நண்பர்கள், சிலருடைய பெயர்களைப் பார்த்ததுமே அவர்கள் தவறு செய்யக்கூடியவர்கள்தான் என்று முன்முடிவு செய்துவிடுகிறார்கள் அல்லவா, அவர்களுக்கும் முழுவிவரங்கள் தேவை.//

மிக்க நன்றி.

என்னைப் போன்ற "நண்பர்களுக்கும்" தெளிவளிக்கக் கூடிய விளக்கம் தர வேண்டும் என நீங்கள் முனைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

நீங்கள் குறிப்பிட்டது போல பெயர்களைப் பார்த்ததும், அவர்களைப் பற்றிய குணநலன்களை புட்டு புட்டு வைக்கும் அளவிற்குஎனக்கு 'ஜாதகம்' பார்க்கத் தெரியாது. பெயர்களின் பின்னால் நூலிழையாக ஓடக் கூடிய வரலாறுகளை அறிந்திருக்கும் புலமை - கலை கை வரவில்லை. ஒரு பெயர் என்பது இன்னமும் எந்த மொழியைச் சார்ந்த பெயர் என்பதை கூட, அவர்களாக விளக்கம் சொன்னாலன்றி எனக்குப் புரியாது. நீங்கள் சொன்னவாறு அர்த்தம் செய்து கொள்ள இனி தான் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தில் இந்த பெயர்கள் மீதான என்னுடைய பலவீனமான புரிதல்களை நானே கிண்டல் செய்து எழுதிய இந்தக் கவிதையைப் படித்து பாருங்கள்.

****
http://nanbanshaji.blogspot.com/2005_07_01_nanbanshaji_archive.html

ஞானம்.

***
எனக்கு
எல்லா முகங்களும்
தெரியும்.

எனக்கு
எல்லா பெயர்களும்
தெரியும்.

ஆனாலும்
எல்லோரையும்
'நண்பனே' என்றுதான்
விளிக்கிறேன்.

மரியாதையின்
பொருட்டு மட்டுமே
அல்ல.

எந்தப் பெயருக்கு
எந்த முகம் என்ற
ஞானம்
இல்லாததினாலும் தான்.....

****
ஆமாம் - இத்தனை தான் என்னால், ஒருவரின் பெயரைப் பார்த்து புரிந்து கொள்ள முடியும். இந்தக் கவிதைக்கு இந்த கிண்டல் தொனியைத்தாண்டி வேறு ஒரு ஆழமான பொருளும் உண்டு. விளக்கம் எல்லாம் தந்து கொண்டிருப்பது என் வேலையல்ல.

இத்தருணத்தில், நான் மீண்டும் சொல்கிறேன் - Let some one tell them that secularism is not a premise for denying the identity of a human - but, it’s a doctrine that accept others with different identities, as equal while you keep your identity.

இந்த விவாதத்தில் நான் குறிப்பிட விரும்பியது, வெற்றி பெற வேண்டும் என நினைப்பவர்கள், அதற்கான தங்கள் தகுதிகளை வளர்த்து கொள்ள வேண்டும் - அதை விட்டு விட்டு, அதே போட்டியில் இருக்கும் மற்றவர்களே அதையும் நமக்கு சொல்லித் தர வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் ஏமாற்றமுறுவதாய் புலம்புவதும் நம்முடைய தகுதியின்மையே தவிர வேறல்ல என்ற வகையில் தான். அதை கொஞ்சம் வலிக்கும்படியாகவே சொல்லி இருக்கிறேன். பின்னே அது கூட இல்லையென்றால், எப்படிங்க?

இதில் நீங்கள் வருத்தப்படுவதற்கு ஏதுமில்லை.

நண்பன் சொன்னதால், அது உங்களுக்கு வித்தியாசமாகத் தோன்றுகிறது என்றால் நீங்கள் தான் அதை விளக்க வேண்டும்.

// இந்த வாக்கெடுப்பு பற்றி நான் என் வலைப்பதிவில் குறிப்பிட்டிருக்கலாம். செய்யவில்லை. அதற்கு உங்களிடமும் பிற தமிழ் வலைப்பதிவர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.//

நீங்கள் மன்னிப்பு கேட்டுக் கொண்டதாய் எழுதி இருக்க வேண்டிய அளவிற்கு அவசியமில்லை. அவ்வாறு கேட்டுக் கொண்டதாய் சொன்ன பொழுது அதை எல்லோரிடமும் மனப்பூர்வமாய் கேட்டுக் கொண்டதாய் தான் கருதினேன். இல்லை நீங்கள் சுந்தர வடிவேலுவிற்கு மட்டும் தனிப்பட்ட முறையில் சொன்னதாக நினைத்தீர்களென்றால் - வருந்துகிறேன். ஏதோ நானும் ஒரு சக வலைப்பூக்காரன் என்பதால், என்னிடமும் கேட்டுக் கொண்டதாகக் கருதி, குறுக்கே புகுந்து என் மன்னிப்பை வழங்கியதற்காக.

நண்பன் போன்ற நண்பர்கள் -

நீங்கள் ஒரு பொதுமைப்படுத்திய கூறிய கூற்றிற்கு நண்பன் என்ற என் புனை பெயர் உங்களுக்குத் துணை நின்றது குறித்து மிக்க மகிழ்ச்சி. நண்பன் தானே நட்பிற்கு உரிய ஆளுமை உடைய ஆள்.

நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் - நண்பன் என்ற மனிதன் நிச்சயமாக அற்புதமான மனிதன் தான். ஒரு எழுத்தாளானாக வளரவேண்டும் என்ற ஆவல் உடையவன் நான் - ஒரு புத்தக பதிப்பகத்தாராக நீங்கள் - என்றாவது ஒரு நாள் - ஒரு புள்ளியில் சந்திக்காமாலா போய்விடுவோம்?

அப்பொழுது உணர்வீர்கள் - நண்பன் என்ற மனிதனைப் பற்றி. மாற்று கருத்துகளை மதிக்கும் பண்புடையவன் என்று.

அதே சமயம், என்னுடைய கருத்துகளை வலிமையாக ஆழமாக வலிக்கும் படியாக எடுத்து வைப்பவன் என்றும்.

புத்தகங்கள் தேர்வு செய்வதற்காக, Anyindian. com ல் தேடுவதும், கிழக்குப் புத்தகத்தார் என்ன புத்தகம் புதியதாகப் போட்டிருக்கிறார்கள் என்று தேடும் பொழுதெல்லாம் - கிழக்கு பத்ரிக்குச் சொந்தமானது, எனி இந்தியன். காம் PKSக்கு சொந்தமானது - அதனால் இங்கே எல்லாம் வாங்க கூடாது, உயிர்மையில் தான் வாங்க வேண்டும் என்றெல்லாம் நான் கணக்குப் போட்டதில்லை. ஏனென்றால் ஷாஜஹான் என்பது எப்படி ஒரு மனிதனைக் குறிக்கும் ஒரு அடையாளமோ, அப்படித்தான் பத்ரியும், PKSம். ஒரு மனிதனை குறிக்கும் ஒரு சொல் - ஒரு அடையாளம் என்பதைத் தவிர, வேறெதையும் தோண்டுவதில்லை.

இல்லையென்றால், என் நூல் நிலையத்தில் குறிப்பிடத்தக்க அளவிற்கு கிழக்குப் புத்தகங்கள் இருக்காது. நாகூர் ரூமியின் இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம் என்ற புத்தகம் உட்பட.

ஆகையால், பத்ரி அவர்களே மன அழுத்தம் தவிருங்கள்.

திசைகள் மாலனுக்கு ஒரு கவிதை அனுப்பினேன் - பின்நவீனத்துவம் என்ற பெயரில். புது வருட இதழில் வெளியாகி உள்ளது. குஷ்பு விவகாரத்தில், மாலனுடைய நிலை என்னவென்று, எல்லோருக்கும் தெரியும். அவருக்கு அந்த கவிதையுடன் ஒரு குறிப்பும் அனுப்பினேன். அதில், குறிப்பிட்டது, மாலன், உங்கள் நிலைக்கு எதிரான கருத்து கொண்ட கவிதை இது. உங்கள் கருத்தை முற்றிலுமாக எதிர்க்கும் கவிதை இது. எப்படி ஆதரிப்பதுஉங்கள் கருத்து சுதந்திரமாகிறதோ, அதே போல ஆதரிப்பது என்னுடைய கருத்து சுதந்திரம். மாற்று கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்பளித்து பிரசுரிப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று எழுதி அனுப்பினேன். அந்த கவிதை வெளி வந்த பொழுது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. திசையில் என் கவிதை வருவது இது முதல்முறை அல்ல. மாற்று கருத்தாக இருந்தாலும் மாலன் அதை வெளியிட்டது தான் மகிழ்ச்சிக்குக் காரணம். மற்றபடி பல இணைய இதழ்களில் என் கவிதைகள் வரத்தான் செய்கின்றன.

அதுபோலத்தான் - உங்கள் நண்பர்களின் கருத்தை முற்றிலுமாக எதிர்த்து எழுதுகிறேன். ஆனால், அதற்காக பெயர் நோக்கி அரசியல் செய்பவன் அல்ல.

நன்றி....

Monday, January 09, 2006

வாய் சொல் வீரனடி - கிளியே....

//என்னமோ போங்க, நான் கூட அமீரகத்துல தான் இருக்கிறேன்.என்னுடைய பதிவுக்கு வருவாங்க, பின்னூட்டம் போடுவாங்க.ஆனா மறந்தும் + குத்திடமாட்டாங்க. இதுவரை இரண்டே இரண்டு பதிவுகள் "நட்சத்திர அந்தஸ்து" பெற்றிருக்கின்றன. அதுல ஒண்ணு அல்பாயிசு. மறுநாள் பார்த்தால் காணவில்லை. அடுத்த ஒன்று வெற்றிக்கரமான நாலாவது நாள். இருங்க இன்றைக்கு இருக்கிறதா என்று இன்னும் பார்க்கவில்லை :-)//

பூங்குழலியின் பதிவு ஒன்றில் பின்னூட்டமிட்டிருக்கிறார் சகோதரி, உஷா.

சகோதரி ராமச்சந்திரன் உஷா,

நானும் கவிதைகள், கதை, இலக்கியக் கட்டுரைகள் எல்லாம் எழுதித் தான் பார்த்தேன் - பார்க்க பழம் பெரு ஆரம்ப காலப் பதிவுகளை.
என்றாலும் ஒருவர் கூட வந்து எட்டிப் பார்க்கவில்லை. ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. என்றாலும் சரி அப்படியே இருக்கட்டும் என விட்டுவிட்டேன்.

அப்பொழுது தான் ஆயிஷா என்ற அற்புதம் தலைப்பில் எழுதினேன் - மிகுந்த வரவேற்பு. தொடர்ந்து இஸ்லாத்தின் மீதான தாக்குதலுக்கு எதிரான பதிவுகள் அனைத்திற்குமே மிகுந்த வரவேற்பு இருந்தது.

தங்களுக்கு மட்டுமே தேசமும், பக்தியும், சொந்தம் என நினைக்கும் சில தேசபக்தர்களின் முகத் திரையைக் கிழிந்தெறிந்த அந்தக் கடைசிப் பதிவிற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்வு தருகிறது. அதிலும் கனிசமான அளவிற்கு மைனஸ் குத்தத் தான் செய்திருக்கிறார்கள். அதாவது எங்களுக்கும் இந்த தேசம் உரிமை உடையது. எங்களுக்கும் இந்த தேச பக்தி எல்லாம் இருக்கிறது. தீவிர வாதிகள் என நீங்கள் சொல்லும் இனம் எல்லா மதத்திலும் இருக்கிறது. அதை எல்லாம் கண்டிக்க உங்களுக்குத் தான் திராணியில்லை என்று ஒரு இஸ்லாமியன் சொன்ன போது அதை அனைவரும் எதிர்ப்பின்றி வரவேற்றிருக்க வேண்டும்.

ஆனால், அதிலும் மைனஸ் குத்திய வக்கிரம் பிடித்த மனதுடைய உயர்தரங்கள் தங்கள் மனதின் ஊனத்தைத் தான் வெளிப்படுத்திக் கொண்டார்கள்.
மேலும் இங்கு புலம்பும் வாய்ச்சொல்வீரன் - வீரன் என்ற பெயர் வைத்துக் கொண்டு பேடி போல ஒளிந்து வாழும் இந்த மனிதன் - புலம்புகிறார் - அமீரகத்தில் தான் அறிவுள்ளவர்கள் இருக்கிறார்கள் என்று. நீர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அறிவுஜீவித்தனம் கல்வி கற்றறிந்த அனைவருக்கும் பொதுவானது தான். கல்வி, அறிவு என்பதெல்லாம் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என உரிமை கொண்டாட இனி யாராலும் முடியாது. அதற்குப் போட்டியாக இன்று பலரும் கிளம்பி விட்டனர். இந்த உண்மை தாங்காமல், இன்று அழுது அரற்றிப் புலம்பும் வாய் சொல் வீரனைப் பார்த்து கொஞ்சம் பரிதாபமாகத் தான் இருக்கிறது.

உஷா, அமீரகத்தில் இருப்பதால் மட்டும் அறிவுஜீவி என்று ஒருவர் சொன்னால் அதை அப்படியே ஏற்றுக் கொண்டதை நினத்து மனம் வருந்துகிறேன். அந்தப் பதிவில் அனைவருக்கும் உடன்பாடிருந்திருக்கிறது. இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, பிற மதத்தினர் உட்பட. ஒரு சிலரைத் தவிர அனைவருக்கும் அந்தப் பதிவில் உடன்பாடே. அதனால் மட்டுமே அத்தனைப் பதிவுகளைப் பெற்றது. இரவு ஒரு மணி தாண்டியும், சில சமயங்களில் - எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் - பார்த்தால், என் பதிவை வாசித்துக் கொண்டிருப்பார்கள் - அமெரிக்காவில் இருந்து. எனக்குத் தெரிந்து பெரும்பாலான சமயங்களில் இந்த மேலை நாட்டு நண்பர்களின் உலாவுதல் தான் அதிகமே தவிர, இஸ்லாமிய நண்பர்கள் மட்டுமே அல்ல.

அதற்கு காரணமென்ன?

தெளிவான கருத்துகள், விளக்கம் கொடுக்க முடிகின்ற தெம்பு, இயல்பான நடை, இத்துடன் இனப்பாதுகாப்பில் உறுதியுடன் நிற்பது. வாதத்தில் மாற்று மதத்தினரை இழிவு செய்யாதிருப்பது - எங்காவது ஒரு பதிவை சுட்டிக்காட்டுங்கள் பார்ப்போம் - இந்து மதத்தைப் பற்றியோ, அல்லது, பிற மதங்களைப் பற்றியோ இழித்தோ, பழித்தோ பேசியிருக்கிறேனா என்று. கிடையாது. என் மதத்தைப் பற்றிய குற்றச்சாட்டிற்கு மட்டுமே பதில் சொல்கிறேன். நீ என்னை இழிவு செய்தால், பதிலுக்கு உன்னை இழிவு செய்வேன் என்று எங்குமே நான் செயல்பட்டதில்லை. இழிவு செய்தவர்களைக் கூட பதிலுக்கு நியாயமான முறையிலே தான் அழைக்கிறேன். வெறுப்பு உமிழும் மொழியால் அல்ல. அதனால், மற்றவர்களும் மரியாதையுடன் நடந்து கொள்ளவே செய்கின்றனர். இந்த மரியாதையோடு விலகி நிற்பதை விட்டு விட்டு, விவாதங்களில் கலந்து கொள்வது எல்லாருக்குமே நன்மை பயக்கும்

எப்பொழுது மதிப்பிழந்து போவார்கள்?

பிற மதத்தினரைப் பார்த்து ஏதாவது குறை சொல்லி எழுதுவதும், பின்னர் ஜகா வாங்குவதும், எழுதும் விஷயங்களைப் பற்றிய முழுமையான ஞானம் இல்லாது இகழ்வதும், பின்னர் மற்றவர்கள் வந்து, விளக்கம் கொடுக்கும் பொழுது தனது கருத்தை மாற்றிக் கொள்வதும் வாசிப்பவர்கள் மத்தியில் நம்பிக்கையின்மையைத் தான் வளர்க்கும்.

கதைகள் மட்டும் எழுதி விட்டு, அதை மற்றவர்களுக்கு பரிந்துரைக்கவில்லையே என்றால் என்ன செய்வது? பரிந்துரைக்க வேண்டுமென்றால், அதில் ஏதாவது விஷயமிருக்க வேண்டும் இல்லையா? அப்படி இல்லையென்றால், அதைப் பரிந்துரைத்து என்ன லாபம்?

பரிந்துரைகள் கிட்டாததினால் வருத்தமடையும் நீங்கள் - எத்தனை பேருடைய கதை கவிதைகளைக் குறித்து விமர்சித்து இருக்கிறீர்கள்?

வாய்ச்சொல் வீரனின் புலம்பலுக்கு இத்தனை மெனக்கெடும் நீங்கள் - மற்ற கதை கவிதை எழுதும் அன்பர்களின் தளத்திற்குப் போய் உங்கள் விமர்சனத்தையும் பரிந்துரைத்தலையும் வையுங்கள் - பின்னர் அனைவரும் உங்கள் படைப்பிலக்கியத்தின் மீதும் கவனம் கொள்வார்கள். ஏன் உங்களுக்குத் தெரியுமா - வெறும் கவிதைகள் எழுதத் தான் நான் வலைப்பூவிற்கே வந்தேன் என்று?

பிறரை மதிக்கும் பொழுது, நம்மையும் பிறர் மதிப்பர்.

முடிக்கும் முன், ஸ்ரீகாந்த் மீனாட்சி எழுதிய சுஜாதவைப் பற்றிய பதிவுக்கு எழுதிய பின்னூட்டத்தின் கடைசி சில வரிகளை இங்கு வைத்து விடுகிறேன் உங்கள் பார்வைக்கு -

// He (சுஜதா) did not have any other option to get recognised other than by his own community and he grabbed the opportunity as it had come. Still, he was better than S.V.Shekhar and Cho.Ramasamy - who abstained for their own motives.
After all, Sujatha had gathered enough guts to show his true color whereas still lot of human (சோ மற்றும் எஸ்வி சேகர்) around try to prove that they are secular by staying away from their own people.

Let some one tell them that secularism is not a premise for denying the identity of a human - but, it’s a doctrine that accept others with different identities, as equal while you keep your identity.

Thanks and best wishes for the New Year.//

ஆம் - உங்களை உங்கள் அடையாளங்களுடன் சேர்த்தே மதிப்பு கொடுப்பேன். அதனால் பயப்படாமல் உங்கள் கருத்துகளை எழுதுங்கள். எழுதியவற்றை நீக்கவோ மறுக்கவோ வேண்டாம்.

''நான் அப்படியெல்லாம் இல்லையாக்கும்'' - என்று மறுக்க வேண்டாம்.

இல்லையென்றால் - நண்பர் ஆசிஃப் மீரானிடம் புகார் சொல்லியிருப்பீர்களா - நண்பன் ரொம்ப காட்டமா எப்பவும் பதில் சொல்றார் என்று???

(வருத்தமில்லை - ஆனால், புன்னகைக்கத் தோன்றுகிறது.)

சரி - இந்த பதிவு எதற்கு என்று கேட்கிறீர்களா? வாய் சொல் வீரனுக்கு நீங்கள் கொடுத்த முக்கியத்துவம் - போலி பெயர்களில் வருபவரின் கூற்றை இத்தனை சிரமேற் கொள்ள வேண்டுமா என்ற கேள்வி தான்.

மற்றவை - உங்கள் மனசாட்சிக்கு. ( பலரின் மனசாட்சிகளை கூர்ந்து அணுகி ஆராய்ந்து கதை எழுதும் சகோதரிக்கு தன்னுடைய மனசாட்சியை கூர் பிரித்து நோக்குவதற்கு நான் சொல்லித் தர வேண்டுமா என்ன?)

நன்றி,

அன்புடன்
நண்பன் என்ற ஷாஜஹான்.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்