"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Sunday, August 28, 2005

தனிமை

ஒராயிரம் மனிதர்கள் மத்தியிலும்
என்னைத் தனித்தவனாக
வேறாருடனும் ஒட்டச் செய்யாமல்
தான் மட்டும் ஒட்டியிருக்கும் உறவு.
ஆளரவமற்ற பெருஞ்சாலைப் பயணத்தில்
ஆயிரமாயிரம் மனிதர்களை
சுற்றிலும் நிற்கவைத்துப் போகும்
புன்னகையுடன்.
எந்தப் பேரங்களுக்குமிடமில்லாது
தன் போக்குக்கு வந்து போகுமதை
இப்பொழுதெல்லாம்
கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டேன்.
அருகில் அது வீற்றிருப்பதைக் காணதவர்கள்
சட்டென்று விரைந்து விலகி
தூரப்போய்த் திரும்பி கலவரப்படும் பொழுது
வீற்றிருக்குமோ அருகே இந்தத் தனிமை?

Friday, August 26, 2005

அடிமையாய்

விலக்கி வைத்த
கனியை உண்ட பாவம்
எல்லைகளற்று
விரிந்து கிடக்கின்றது

கனியைக் காட்டித் தந்த
சர்ப்பமோ
கால்கள் போனாலும்
ஊர்ந்து பிழைக்கும் வலியை
கழட்டிப் போட
கற்றுக் கொண்டு விட்டது

விழுங்குமுன்னே
மாட்டிக் கொண்ட ஆதாம்
தண்ணீர் குடிக்கும் பொழுதெல்லாம்
தொண்டையில்
ஏறி இறங்கிக் கொண்டிருக்கும்
ஒரு ஆப்பிளோடு
தப்பிப் பிழைத்துக் கொண்டார்

விலக்கப்பட்ட கனியும் கூட
விமோசனம் பெற்றுவிட்டது
தினம் தினம்
உண்ணச் சொல்லும்
மருத்துவனின் தயவோடு...

விழுங்கித் தொலைத்த
ஏவாள் மட்டும்,
வயிற்றினுள் திணிக்கப்பட்ட
கர்ப்பப் பையிடம்
இன்றளவும் அடிமையாய்...

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்