"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Thursday, December 20, 2007

இணையத்தளங்களில் இஸ்லாம் - ஓர் அலசல் பகுதி 3

இணையத்தளங்களில் இஸ்லாம் - ஓர் அலசல் பகுதி 3

பகுதி 1: இங்கே வாசியுங்கள்.

பகுதி 2: இங்கே வாசியுங்கள்.



இணையம்: மின்னணு ஊடகம்:



மின்னணு ஊடகம் பன்முனைப் பார்வைகளை சாத்தியப்படுத்துகிறது. இலக்கியம், அசை சித்திரம், ஓசை, கிராபிக்ஸ், என பன்முகப்படுத்தப்பட்ட நுட்பம் ஊடகவியலில் புது எல்லைகளைத் திறந்து வைத்தது. இந்த எல்லைகளைத் தொட்டு, ஒருவரால், எங்கும் பயணிக்க முடியும் - தகவல்களைப் பெற முடியும் - மேலும் தகவல்களைத் தர இயலும் என்ற நிலைமை ஜனநாயகப் பண்புகளை இன்னும் பொதுவாக்கியது. உபயோகிப்பாளனும், உற்பத்தியாளனும் என ஒரே சமயத்தில் நுகர்வோருக்கு சந்தர்ப்பம் வழங்கியது.



இதன் தொழில்நுட்பம் மற்ற ஊடகங்களிலிருந்து பெரிதும் வேறுபட்டது. தலைமை அதிகாரமற்ற எல்லோரும் சமம் என்ற தளத்தில் இயங்கவல்லது. பல்வேறு சம அந்தஸ்துடைய முடிச்சுகள் கொண்ட வலை போன்ற இணைப்பில், தகவல்கள் சிறு சிறு பொட்டலங்களாக, பல முடிச்சுகளின் வழியாக வந்தடைகிறது. அல்லது செல்கிறது. ஒரு முடிச்சு பழுதுபட்டாலும், வேறொன்றின் வழியாகத் தகவல்களைப் பெற முடியும். அவற்றைப் பெறுவதற்கோ அல்லது தருவதற்கோ தேவை ஒரு கணிணியும் இணைய சேவையினரின் ஒரு இணைப்பு மாத்திரமே. மின்னஞ்சல், குழுமங்கள், விவாதக் களங்கள், வலைத்தளங்கள் போன்ற பல்வகை பயன்பாடுகளையும் உள்ளடக்கிய இணையம் தரும் வசதி, எழுதுபவர் அல்லது பயணாளர், தங்களைப் பற்றிய தகவல்களைத் தராமலே கூட தங்கள் கருத்துகளையும் பதிய வைக்க முடியும் - எல்லோரையும் வாசிக்கச் செய்ய இயலும். உங்கள் கருத்தின் மீதான மற்றவர்களின் கருத்தையும் அறியச் செய்ய முடியும்.



தொழில்நுட்பத்தில் மற்ற ஊடகங்களை மிஞ்சும் இந்த இணையம் தனது செயல்பாட்டில் எவ்வாறிருக்கின்றது? இதைச் சொல்வதென்றால் மிகச் சிறப்பாக இருக்கின்றது. மிக மோசமாக இருக்கின்றது. ஆம். இரண்டும் இணைந்தது தான். இங்கும் மற்ற ஊடகங்கள் தங்களுக்கான தளங்களை அமைத்துக் கொண்டுள்ளனர். அது போன்றே தனியார் அமைப்புகள், ஆர்வலர்கள், தனி நபர்கள் என எல்லோருமே ஒரு சிறிய அளவிலான தொகையைச் செலவு செய்து தங்கள் குரலுக்கான, கருத்திற்கான, பார்வைகளுக்கான தளம் அமைத்துக் கொண்டுள்ளனர். உலகின் பல லட்சக்கணக்கான தகவல் தளங்களிடையே, தங்கள் தளத்திற்கான வருகை தருவோரை அதிகரிக்கச் செய்வதன் மூலம் தங்கள் கருத்துகளை விரிவாகக் கொண்டு செல்ல முடியும். பிரபலமானவர்களின் தளங்களுக்குக் கிடைக்கும் வருகை மற்ற சாமான்யர்களின் தளங்களுக்குக் கிடைப்பதில்லை. ஒரு செய்தியை, ஒரு தகவலை முன் எடுத்துச் செல்ல வேண்டுமெனில், பிரபலங்களின் பங்கேற்பும் அவசியமாகிறது. இல்லையென்றால், அந்த கருத்துகள் முடங்கிப் போக வாய்ப்புகளுண்டு. சாமான்யர்கள் தங்கள் தளத்திற்கு வருகை தருபவர்களை அதிகரிக்கச் செய்ய பலப்பல தளங்களுடன் தங்கள் தளங்களையும் இணைத்துக் கொண்டு, நுகர்வோரின் பார்வைகளில் படுமாறு செய்வது தேவையாயிருக்கின்றது. இவ்வாறு ஒரு சங்கிலித் தொடராக இணைப்புகளைப் பார்வையில் படச் செய்ய முயல்கையில், அதுவும் ஒரு எல்லையாக அமைகின்றது - எத்தகையத் தகவல்களைத் தரலாம் - அல்லது எத்தகையத் தகவல்களைப் பெறலாம் என்பதில். ஆக, இங்கும் நிறுவன பலம், பணபலம் ஆட்சி புரிய இயல்கிறது.



வேடிக்கை விநோதங்கள், கல்வி போதிக்கும் தளங்கள், கேளிக்கைகள் போன்றவற்றைத் தரும் தளங்களைத் தவிர்த்து, செய்திகள் தகவல்கள் தரும் தளங்களின் செயல்பாடுகள் மற்ற ஊடகங்களிலிருந்து பெரிய அளவில் வேறுபடவில்லை என்றாலும், ஒரு செய்தியைப் பற்றிய பன்முகப் பார்வை, அதைத் தரும் தளத்தைப் பொறுத்து கிடைக்கிறது. தளத்தின் உரிமையாளரைப் பொறுத்து, கிடைக்கும் தகவல்களின் உள்ளடக்கம் அமைகின்றது. தளங்களின் உரிமையாளாராக இருப்பதற்கென்று எந்த நியதிகளும் இல்லாத பொழுது, எவர் வேண்டுமென்றாலும் தளம் அமைத்துக் கொண்டு, தனக்கு உகந்த கருத்துகளைப் பிரச்சாரம் செய்யலாம் என்ற நிலைமையில், கருத்து சுதந்திரம் என்ற பெயரில், பலரும் உள்நோக்குடன் அவதூறு செய்வதற்கு மிகுந்த வாய்ப்புகளையும் தருகிறது. அதிலும், கணிணி தரும் அநாமதேய அந்தஸ்தைப் பலரும் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. அவ்வாறு செய்யவும் செய்கின்றனர். இந்தப் பின்னணியிலிருந்து ஆய்வு செய்கையிலே, மற்ற ஊடகங்கள் தராத சில சௌகரியங்களையும் இணையம் தருகிறது.



இஸ்லாத்தின் மீதான இணையத் தாக்கம்:



பிற ஊடகங்கள், நிறுவனமாக அரசிடம் பதிவு செய்யப்படவேண்டிய கட்டாயமிருக்கிறது. ஒரு தேசத்தின் சட்ட திட்டங்களுக்குட்பட்டு தனது செய்திகளை அல்லது தகவல்களைப் பிரசுரிக்க வேண்டியதிருக்கிறது. ஆனால், இணையப் பிரசுரங்களுக்கென, பல நாடுகளும் இன்னமும் முழுமையான சட்ட திட்டங்களை இயற்றாத நிலைமையில், எங்கோ ஒரு புள்ளியில் இருந்து கொண்டு, தனது அடையாளங்களை மறைத்துக் கொண்டு, ஒருவரால் செயல்பட இயலும் என்ற நிலை கிடைக்கும் பொழுது, விஷமிகள் அதைப் பயன்படுத்தாமல் இருப்பார்களா? நிச்சயமாகப் பயன்படுத்தத் தான் செய்வார்கள். மற்றைய ஊடகங்களுண்டான தணிக்கைகளிலிருந்து, தப்பித்துக் கொள்ளவும் இயலும். மனசாட்சிக்குட்பட்ட சுய தணிக்கை ஒன்றே இங்கு இருக்கின்றது. மனசாட்சியின் எல்லைகளைக் குறுக்கிக் கொள்ளும் கயமைத் தனத்தை இங்கு சிலரால் வெகு எளிதாக செய்து கொள்ள முடிகிறது.



சேமிப்பதும், அதைத் தேடுவதும் மிக எளிது இணையத்தில் என்னும் பொழுது, இந்த விஷமிகள், இஸ்லாம் பற்றித் தரும் போலித் தகவல்களும் சேமிக்கப்பட்டு விடுகின்றது. இஸ்லாம் பற்றிய செய்திகளுக்காக இணையத் தேடுதலில் ஒருவர் ஈடுபடும் பொழுது, அவர் தான் விரும்பாமலே இத்தகைய தளங்களுக்குள் சென்று தவறான கருத்தாக்கத்திற்கு ஆட்படுத்தப்படலாம். இத்தகைய தளங்கள் அனைத்து மொழிகளிலும் சேமிக்கப்படுகின்றது.


இஸ்லாத்தின் மீதான இந்த தாக்குதல்கள் பலவகைப்பட்டதாக இருக்கின்றன. பிற மத தளங்கள், ஒப்பீட்டு முறையில், மதங்களைப் பற்றிய வாதங்களை வைத்தல் அவற்றில் ஒன்று. இதையே சில இஸ்லாமிய தளங்களும் செய்கின்றன என்பதும் வருத்தமளிக்கக் கூடிய நடைமுறை தான். இத்தகையத் தளங்களில், ஆன்மீக நுணுக்கங்களைப் பற்றிய புரிதல் இல்லாமல், தவறான விளக்கங்களையும், மொழி பெயர்ப்புகளையும் முன் வைக்கின்றனர். ஆனால், இத்தகைய தளங்கள், தங்கள் முகவரியை தங்கள் மதத்தின் பெயராலேயே வைத்திருப்பதால், அதைக் கண்டு விலகிக் கொள்ள முடியும் அல்லது ஒரு அறிதலுக்காக வாசிப்புடன் நிறுத்திக் கொள்ள முடியும். ஆனால், சில தளங்கள் தவறுதலான வழிகாட்டியாக மெனக்கெடுத்து, உள்நோக்குடன் தங்கள் தளங்களை இஸ்லாமிய தளங்கள் போன்று வடிவமைத்துக் கொண்டு, நவீன வடிவ இஸ்லாத்தைப் போன்று ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி அதன் மூலம் விஷமப் பிரச்சாரம் செய்து கொண்டு வருகின்றன.



இஸ்லாத்தின் மீதான ஆக்கப்பூர்வமான விவாதங்களும் நடைபெறத்தான் செய்கின்றன. பல்வேறு நுணுக்கங்களைப் பற்றிய விவாதங்களும் நடைபெறுகின்றன. அவற்றின் மீதான எதிர் வினைகளும் பதிலுக்குத் தரப்படுகின்றன. விவாதிக்கப்படுகின்றன. சில சமயங்களில், இந்த விவாதங்கள் ஒருவர் மீது மற்றவருக்கான அவநம்பிக்கைகளாகக் கூட மாறி விடுகின்றன. ஒரு கருத்தாக்கம் என்ற அளவில் கூட, சில விஷயங்களைப் பற்றி விவாதிக்க மனமில்லாத இஸ்லாமியர்களும் இருக்கின்றனர் என்பதும் தெரிய வருகிறது. இத்தகைய உள்விமர்சனங்களை எதிர்ப்பது, நாம் பின் தங்கி இருக்கின்றோம் என்பதையே உணர்த்துகிறது.



இஸ்லாம் பற்றிய விமர்சனங்களை முன் வைக்கும் இஸ்லாமியர்கள் இரு வகையான கண்ணோட்டங்களை சமாளிக்க வேண்டியதிருக்கிறது - ஒன்று, விமர்சனங்களை, விவாதங்களை ஏற்க விரும்பாத இஸ்லாமிய சகோதரர்கள். மற்றொன்று, இத்தகைய விமர்சனங்களை மாற்று மத விஷமிகள் தங்களுடைய உள்நோக்கத்திற்காகப் பெரிதும் பயன்படுத்திக் கொள்வதை எதிர்த்து நிற்பது.



இத்தகைய விவாதத் தளங்கள் போக, சமீப கால வரவான ப்ளாக்கர்ஸ் எனப்படும் வலைப் பூக்களின் செயல்பாடும் அனைவராலும் கவனிக்கத் தக்கது.



இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் படியுங்கள்.

No comments:

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்