"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Thursday, December 06, 2007

டிசம்பர் 6




























கொடி பிடித்து
சாலைகளில் போகின்றன பேரணிகள்
பக்கம் பக்கமாக எழுதித் தள்ளப்பட்ட
வரலாறுகள் நிறைந்து கிடக்கின்றன
செய்தித் தாள்கள் அனைத்தும்.
விவரமறிந்தவனாகக் காட்சியளிப்பவர்களெல்லாம்
கூடிக் கூடி விவாதிக்கின்றார்கள்
காட்சிப் பெட்டிகளில்
'தலை'களின் அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன
பலப்பல உத்தேச கணக்குகளுடன்.


புனித ராஜ்ஜியக் கனவுகளை
விற்றுக் கொண்டிருப்பவன்
புறாக்களின் காப்பாளானாகத்
தன்னை அடையாளப்படுத்துகின்றான்
புறாக்களுக்கானத் தானிய வீச்சின் கரிசனத்துடன்
கனத்த கற்களும் கபடத்தனமாக எறியப்படுகின்றன
வீழ்ந்த புறாக்கள் அடுப்படியில் மணக்கின்றன
தப்பித்துக் கொண்டவைகளில் சில
புனிதனுக்கான குறியீட்டுக் காட்சியாக
எறிந்தவனின் தோளில் நிறுத்தப்பட்டது
புறாவின் அச்சத்தையும் பொருட்படுத்தாது.


கடந்தகால விதைப்புகளின் அறுவடை
மும்முரமாக விரைந்து நடக்கின்றது
முந்தியவனுக்கு நல்ல மகசூல்


எப்பொழுதும் போல்
எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டே
என்னாலியன்ற அனுசரிப்பாக
கறுப்பு உடை உடுத்துகிறேன்


எந்தவொரு நினைவூட்டலுமின்றி
ஒரு பனிசொறியும் குளிர்காலையில்
தன்னை அறிவித்துக் கொள்கிறது
ஒரு மரணதினத்தின் இயல்பாய்


டிசம்பர் 6.

No comments:

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்