"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Friday, December 07, 2007

இஸ்லாமும் இணையமும்....

இஸ்லாமும் இணையமும் -

கடந்த முறை விடுமுறையில், இந்தியாவுக்குச் சென்றிருந்த பொழுது, இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கலந்து கொள்வேன் என்று சொல்லி இருந்தேன். கலந்து கொண்டேன்.

இஸ்லாத்தின் மீது நேர்மையான விமர்சனங்களுக்கப்பாற்பட்டு, தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளின் புறவடிவமாக எத்தகைய அவதூறுகளை, இட்டுக்கட்டிய ஆபாசங்களை வாரி இறைக்கிறார்கள் என்பது பற்றி பல்வேறு அமைப்புகளுடன் கலந்து பேசுவேன் என்று சொல்லி இருந்தேன். அதன் எதிர்விளைவுகள் எத்தகையதாக இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

அவ்வாறு செய்வதற்கு ஆதரவு அளித்தவர்களை விட, 'வேண்டாம் - விட்டுவிடுங்கள்' என்று அன்புடன் அறிவுறுத்தியவர்களே ஏராளம். தொலைபேசியின் மூலம் - மின்னஞ்சல் மூலம். மற்றும் நேரில். இந்தியாவிற்கு விமானம் ஏறுமுன்னே என் முடிவுகளை மாற்றிக் கொண்டேன். எந்த ஒரு காரியத்திலும், முடிவு தனதாக இருந்தாலும், சுற்றியிருக்கும் ஆதரவு தளம் முழுமனதுடன் தன் ஆதரவு கரங்களை நீட்டும் பொழுது தான், செயலில் இறங்க முடியும்.

அடையாளமற்று, மறைந்திருந்து மட்டுமே இயங்க இயலும் மனித நேயமற்ற போலிகளுடனும், தகுதியற்ற அற்பர்களுடனும் வீண் போராட்டத்தில் இறங்குவதன் மூலம், நாம் நம் மதிப்பையும், தகுதியையும் குறைத்துக் கொண்டு, கால விரயத்தில் ஈடுபடுவது தேவையற்றது என்ற சில நண்பர்களின் அறிவுறுத்தலால், முடிவுகளை மாற்றிக் கொண்டேன். உண்மை தான். ஆனால், முற்றிலுமாக தவிர்த்து விடவில்லை.

நான் அமைப்பு சார்பாக என்றுமே இயங்கியவன் அல்ல. இணையத்தில் கூட எந்த ஒரு அமைப்பையும் சார்ந்து இயங்குபவன் அல்ல. அமைப்புகளும் என்னைத் தங்களோடு இணைத்துக் கொள்வதில் அத்தனை ஆர்வம் காட்டுவதில்லை. காரணம், அமைப்புகளின் கோட்பாடுகளை ஏற்க மறுப்பதோடு மட்டுமல்லாமல், நிறைய சமயங்களில் அவற்றோடு முரண்படவும் செய்கிறேன். சுயமாக சிந்திப்பதுவும், எழுதுவதும் மட்டும் தான் என் விருப்பமாக இருந்தது. அமைப்புகளின் செயல்பாடுகளில் பல, சுயசிந்தனைகளை பின் தள்ளி விட்டு, அமைப்பின் சிந்தனையைத் தத்தெடுத்து, அதை மட்டுமே பிரதானமாகக் கொண்டு இயங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் நிறைந்தவையாகத் தானிருக்கின்றனவே தவிர, சுயஆளுமைகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் பெற்றவையாக இருப்பதில்லை. ஆக, அமைப்புகளை அணுகுவதில்லை என்ற முடிவை எடுப்பதில் எந்த தயக்கமும் இருக்கவில்லை.

அதே வேளை, என் மனநிலையை பொதுவாக வெளியிடுவதற்கும், விவாதிப்பதற்கும் தயங்கியதில்லை. ஆக, அமைப்புகளை அணுகுவதில்லை - அதே சமயம், சுயசிந்தனையுடன் இயங்கும் பிறருடன் பேச தயங்குவதில்லை. அது போன்று தான், இணைய நிகழ்வுகளை எந்த அமைப்பிடமும் முறையிடவில்லை. ஆனால், அதற்கும் மேலான தளத்தில் முறையிடுவது என்று முடிவு செய்தேன். அமைப்புகளற்ற சமதளத்தில் இயங்கும் நண்பர்களின் வாசிப்புக்கு விட்டுவிடுவது என்று முடிவு செய்தேன்.

சென்னையில் நடந்த இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில், ஊடகத் துறை பற்றிய ஒரு அமர்வில், அந்தக் கட்டுரையை வாசித்தேன். பெரும்பாலும் பத்திரிக்கைத் துறையைச் சார்ந்தவர்கள் மட்டுமே அமர்ந்திருந்த அன்றைய தினத்தில் எல்லோரும் கவனத்துடன் கேட்டனர். மொத்தம் எட்டு கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. இறுதியாக தலைமை தாங்கியவர் அன்றைய அரங்கின் பரிந்துரையாக, இஸ்லாத்தின் மீது புனைந்து பரப்பப்படும் அவதூறுகளையும், ஆபாசங்களையும் கண்காணிக்க தேவையான அமைப்பொன்றை ஏற்படுத்த கோரிக்கை வைப்பதாக மாநாட்டு நிர்வாகிக்களுக்கு, ஆய்வரங்கின் முடிவை எழுதி வாசித்தார்.

பின்னர் சமநிலை சமுதாய ஆசிரியருடன் தொடர்பு கொண்டு, கட்டுரையைப் பிரசுரிக்க கேட்டுக் கொண்டேன். கட்டுரையை முழுவதுமாக வாசித்து விட்டு, கண்டிப்பாகப் பிரசுரிக்கிறேன் - அதுவரையிலும் வேறு எங்கும் பிரசுரத்திற்குத் தர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அதனாலயே - இதுவரையிலும் வேறெதுவும் எழுதவில்லை. வலைப்பூவில் வெளியிடுவதைக் கூட, பத்திரிக்கையில் வந்த பின் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டதினால், நீண்ட இடைவெளிக்குப் பின் இப்பொழுது தான் அது பற்றி பேசுகிறேன். அக்டோபர் மாத இதழில் அந்தக் கட்டுரை வெளிவந்தது. பலரும் வாசித்திருக்கக் கூடும். என்றாலும் எனக்கு அந்த இதழ் கிடைக்கவே இல்லை. அது எப்படி வந்திருக்கிறது - எங்காவது குறைத்திருக்கிறார்களா - நீளம் கருதி என்று பார்த்த பின்னே வெளியிடலாம் என்று காத்திருந்ததில் இத்தனை தாமதம். என்றாலும், ஒரு வார்த்தையைக் கூட ஆசிரியர் குறைத்து விடவில்லை என்பதில் ஒரு திருப்தி. அதை இனி நீங்களும் வாசிக்கலாம்.

இன்றைய ஊடகங்கள் தங்கள் கருத்தியல் பலாத்காரத்தை பிறர் மீது எவ்வாறு திணிக்கின்றார்கள் - ஊடக உரிமையாளார்கள் எவ்வாறு ஒரு செய்தியைப் பார்க்கின்றனர் - எப்படி வடிகட்டுகின்றனர் என்ற பொதுமைத்தன்மையை எழுதி விட்டு, பின்னர் இந்த ஊடக வரிசையில் எப்படி இணைய ஊடகங்கள் இணைந்து கொள்கின்றன என்பது வரையிலும் ஒரு நீண்ட விரிவான கட்டுரை. ஒரு தேவையின் பொருட்டு, இஸ்லாம் என்று எழுதினேனே தவிர, இந்தக் கட்டுரை, அடக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் ஊடகப் பார்வைகளுக்கும் பொருந்துவதாகவே இருக்கும். தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்ற குறையுள்ள அனைத்து நண்பர்களும் இதை வாசிக்கலாம்.

இனி கட்டுரை அடுத்த பதிவில் :

No comments:

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்