"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Thursday, December 20, 2007

இணையத் தளங்களில் இஸ்லாம் - ஓர் அலசல்

இணையத் தளங்களில் இஸ்லாம் - ஓர் அலசல்



செப்டம்பர் 11 அன்று, சில தீவிரவாதிகள், அமெரிக்காவின் சில முக்கிய அடையாளங்களின் மீது தாக்குதல் நடத்திய பொழுது, உலகமே அதிர்ச்சியடைந்தது. அது வரையிலும் தங்களுக்குக் கற்றுத் தரப்பட்ட பிம்பமான தீயவற்றை எதிர்த்துப் போராடி வெல்லும் அமெரிக்கர்கள் வெறும் கற்பனைப் பாத்திரங்கள் தான்; நடைமுறையில் இந்த சாகசர்கள் மற்றவர்களைப் போல சாதாரணமானவர்கள் தான்; இவர்களையும் மிஞ்சி விடும் எதிரிகளும் இருக்கிறார்கள் என்ற அறிவைப் பெற்ற பொழுது, அனைத்து மக்களின் பார்வையும் இஸ்லாத்தின் மீது திரும்பியது.


சிலருக்கு அச்சம் நிறைந்திருந்தது.

சிலரிடத்தில் வெறுப்பு மிகுந்திருந்தது.

மற்றவர்களுக்கு ஒரு ஆர்வம்.


அதுவரையிலும், அரசியல் அரங்கில் அல்லது மத ஆராய்ச்சியாளர்களிடத்தில் மட்டுமே விவாதப் பொருளாக மேலை நாட்டில் இருந்து வந்த இஸ்லாம், அந்த எல்லைகளைத் தாண்டி, வெகுஜன மக்களைச் சென்றடைந்தது - நல்ல வகையிலோ அல்லது வெறுப்பு நிறைந்த வகையிலோ.

இந்த சென்றடையும் வழிமுறைகளைத் தந்தவை தான் ஊடகம். வெள்ளைதோல் படைத்த மேலை நாட்டினரைப் பெரும் தீரர்களாகவும், ஏனைய மக்களை சோம்பேறிகளாகவும், திருடர்களாகவும், கொலைகாரர்களாகவும், தீவிரவாதிகளாகவும் ஒரு உருமயக்கத்தையும் மாயத் தோற்றத்தையும் ஏற்படுத்தித் தந்தவையும் இந்த ஊடகங்கள் தான். இந்த ஊடகங்களின் வளர்ச்சி, தொழில்நுட்பம் போன்றவற்றை விடுத்து, ஊடகங்களின் செயல்பாடுகளைப் பற்றியும், பின்னர் இணையமும் அது இஸ்லாத்தின் மீது உண்டாக்கும் தாக்கம் மற்றும் தாக்குதல் பற்றியும் பார்ப்போம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஊடகம் வெகுஜன நுகர்பொருளாக மாறத்தொடங்கியது. ஊடகத்தின் பிறவடிவங்களாகிய வானொலி, தொலைகாட்சி, திரைப்படங்கள் ஆகியவற்றிற்கும் ஆய்வு நிலை வடிவங்கள் கிடைத்தன. இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில், இணையம் என்று வழங்கப்படும் internet பயன்பாட்டிற்கு வந்த பொழுது, ஊடக தொழில்நுட்பத்தில் மேலும் ஒரு வடிவம் அறிமுகமாயிற்று. இந்த ஊடக கருவிகளிடையே வடிவ வேறுபாடுகளும், நுகர்வோருக்கு புத்தி புகட்டும் வீச்சில், குறிப்பிடத்தக்க வேக வித்தியாசங்கள் இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்தி செய்திகள், தகவல்கள் தருவோரிடையில், குறிப்பிடத்தக்க இசைவுகளும் உண்டு.

இணையத்தின் தாக்கத்தைப் பற்றிப் பேசுமுன், பொதுவாக ஊடகங்கள் மனிதனைப் பாதிக்கும் வகைகளையும், அவற்றை மனிதன் எவ்வாறு கையாளுகின்றான் என்ற தெளிவும் இருந்தால் மட்டுமே, இணையத்தின் ஆக்கங்களையும் / பாதிப்புகளையும் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும்.


ஊடகங்களின் பொதுத் தன்மை:


1830ல், கார்லைல் குறிப்பிட்டார் - அச்சு ஊடகம் நிலப்பிரபுத்துவமுறையை உடைத்துக் கொண்டு, நவீன உலகம் தோன்ற அடிகோலியதென்று. அதன் அடிப்படையான கொள்கை, பியரி பொர்தியு குறிப்பிடுவது போல் - மனிதன் அவன் வாழும் சமூகப் பண்பாட்டுத் தளத்தின் அடிப்படையில், தட்டி, குழைத்து, கட்டமைக்கப்படும் பண்பைக் கொண்டிருப்பது தான்.


1859ல், சார்ல்ஸ் டார்வின் தனது, "On the Origin of Species" புத்தகத்தை வெளியிட்ட பொழுது, அது முன் வைத்த ஆய்வுக் கொள்கைகளின் புதுமையினால், ஒரே நாளில் விற்றுத் தீர்ந்தது. இறைபயத்தைக் கொண்டு வாழ்ந்த விக்டோரிய காலத்தவர்களிடையில், டார்வினின் புதிய கொள்கைகள் அவனது பயத்தைப் போக்கி, ஒரு பெருவீச்சில், புதிய பார்வைகளைக் கொண்டு வந்தது - ஆன்மீகம், அரசியல், நீதி என்று அனைத்து துறைகளிலும். அத்துடன், தேவாலயங்கள் அதன் எல்கைகளுக்குள் ஒடுக்கப்பட்டு, மேலை உலகம் என்று இன்று சொல்லப்படும் பொருளாதாய சமூகம் உருவாகியது. இன்றைய உலகின் பல மோதல்களும் இதன் அடிப்படையிலே எழ ஆரம்பித்தன. அரசியல் தத்துவவியலாளரான, சாமுவேல். பி. ஹண்டிங்க்டன், தனது புத்தகமான "Clashes of Civilisation"ல் குறிப்பிடுகிறார் - பல்வேறு சமூகங்கள் தங்கள் நாகரீகம்/பண்பாட்டுக் கூறுகளின் அடிப்படையில் மற்ற சமூகத்தின் மீதான மோதல்கள் உடையவாக இருக்கும் என்கிறார். இஸ்லாமிய உலகினுடனான மேலை நாட்டினரின் மோதல், கிறித்துவத்தினால் எழுந்ததல்ல, மாறாக, இறைமறுப்பைக் கொண்டு, கட்டமைக்கப்பட்ட மேலை நாட்டுத் தத்துவங்களால் விழைந்தது என்கிறார்.


இந்த மோதல்களை முன்னெடுத்துச் செல்வதில், தொடர்ந்து, ஒரு வகை எதிர்மறை பிம்பத்தை மற்றைய சமூகத்தின் மீது நிறுவுவதற்கு இன்று அனைத்து இனங்களும் ஊடகங்களைக் கொண்டு தான் இயங்குகின்றன. காரணம் ஊடகங்கள் ஒரு தகவலுக்குத் தரும் வசீகரத் தன்மை. ஊடக நியதிகளில் பல ஆய்வுகளை மேற்கொண்ட மார்ஷல் மெக்லுஹான், ஊடகங்களை, மனிதனின் நீட்சி என்றே குறிப்பிடுகிறார். அவரது கூற்றின்படி, கருத்தின் உள்ளடக்கம் பெருமளவில் வடிவத்தைச் சார்ந்திருக்கிறது. ஊடகங்களின் தொழில்நுட்ப வளர்ச்சி, உணர்ச்சிகளுக்கும், சிந்தனைகளுக்கும், புதிய வடிவங்களை வழங்கி, அவற்றைப் பற்றிய கண்ணோட்டங்களை மாற்றியமைக்கின்றது. வசியப்படுத்துகின்றது. ஊடக நுகர்வில், பங்கேற்கும் மனிதனை அவன் உணராது உள்ளிழுத்துக்கொள்கிறது. ஊடக தொழில்நுட்பத்தின் தாக்கம் நிகழும் தளம் - கருத்துகள், கொள்கைகள் என்ற அளவில் அல்லாது, புலன் உணர்வுகளின் விகிதம் அல்லது கண்ணோட்டத்தின் சக்தியினைத் தொடர்ந்து தாக்கி, எதிர்ப்பின்றி மாற்றமடையச் செய்யும் தளத்தில் இருக்கின்றது.


இந்நிலையில், ஊடகமே தகவல் - " the medium is the message" என்ற கொள்கை உருப்பெறுகிறது. நிஜம் என்று இந்த ஊடகங்கள் வடிவமைப்பதெல்லாம், நிஜத்தினை அவர்கள் விரும்பியவடிவில் உருமாற்றம் செய்யப்பட்டு தரப்படுபவை தான். காட்சியகப்படுத்தப்பட்டு தரப்படுகின்றன. இந்தக் காட்சிகளின் வழியாக அர்த்தப்படுத்திக் கொள்வதே செய்திகளாகின்றன. இவைகள் நிஜத்தின் வடிவத்தினை ஏறக்குறைய ஒத்திருக்கும் வரையில், உண்மையாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இல்லையென்றால், குப்பையாக ஒதுக்கப்படுகிறது. ஆனால், அவற்றின் நம்பகத்தன்மையை அல்லது சார்புத்தன்மையை விளங்கிக் கொள்வது பல பொழுதுகளில் ஒரு தனிமனிதனின் சக்திக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கிறது.


ஊடகங்களின் சார்புத்தன்மை:


வெகுஜன ஊடகங்களின் சார்புத்தன்மையை ஆராய்ந்து, அதன் செயல்பாடுகளின் பின்னணியைக் குறித்து நோம் சோம்ஸ்கி / எட்வர்ட் ஹெர்மான் தங்களது Manufacturing Consent: The Political Economy of the Mass Media, என்ற புத்தகத்தில் தரும் தகவல்கள் இத்தருணத்தில் கவனத்தில் கொள்ளத் தக்கது. ஊடகங்கள் தகவல்களைத் தரும் பின்னணியைக் குறித்து அவர்கள் முன் வைத்த The propaganda model என்ற நியதியின் அடிப்படை, ஐந்து வகை வடிகட்டிகளினுள் ஏதாவது ஒன்றுக்கு உட்படுத்தித் தேர்வு செய்யப்பட்டவையே
ஊடகச் செய்தியாகின்றது என்பதுவே.


அந்த வடிகட்டிகள் வருமாறு:


1. Ownership of the medium - ஊடக உடமையாளர் ( நலன் )

2. Medium's funding sources - ஊடக நிதி வருவாய்

3. Sourcing - தகவல்களின் மூலம்

4. Flak - அச்சுறுத்தல் அல்லது மதிப்பிழக்கச் செய்தல்

5. Anti - ideology - சித்தாந்த எதிர்ப்புகள்

இந்தப் பதிவின் தொடர்ச்சியை அடுத்தப் பதிவில் வாசியுங்கள்

No comments:

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்