வஞ்சிக்கப்பட்டவனின் மரணம்

நான் சற்று தூங்கிக் கொள்கிறேன்
மரணத்தின் மௌனங்களில்
பெருகி வெளியேறும் உயிரின் திரவச் சூட்டில்
சேமிக்கப்பட்ட நினைவுகளின் மதகுகள்
பெரும் வெடிப்புடன் திறந்துவிட்டன
முந்தைய மரணங்கள் விட்டுச் சென்ற
வெற்றிட வெளிகளின் சூன்யமெங்கும்
நிரவிக் கிடந்த சித்திரப் பாசிகள்
வேரறுந்து வெளியேறுகிறது
நிகழ்ந்து கொண்டிருக்கும்
இந்த மரணத்தின் கனம் தங்க
நான் வெளியேறிய வெறுமையில்
என் பிம்பங்களைச் சுமந்து திரிய
ஒரு மனது உன்னிடத்திலிருக்கிறது
நான் வெளியேயும், மரணம் உள்ளேயும்
இடம் மாறிக் கொள்ளும் வேதனைப்
பகிர்ந்து கொள்ள
பரிவுடன் இடம் கொடுக்கும் மடியுடன்
அருகே நீ இருக்கிறாயா?
மரணத்தின் விழிகளை மூடி
மென்மையாக முத்தமொன்றை பதித்துவிடு
மரணங்கள் அநாதையாக நிகழவேண்டாம்
மரணத்தின் துணையாய் விரித்து வை
நேசம் பொங்கும் உன் மடியை
ஒரு மரணத்தை அமைதி அடையச் செய்ய
அனுமதி வேண்டியதில்லை
உன்னை அடிமைப்படுத்தியவனிடமிருந்து
நான் சற்று தூங்கிக் கொள்கிறேன்
எனது மரணத்தின் மடியில்
நம் உறவை அறிவிப்பாயென்ற அமைதியுடன்







No comments:
Post a Comment