"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Wednesday, January 02, 2008

வஞ்சிக்கப்பட்டவனின் மரணம்
















நான் சற்று தூங்கிக் கொள்கிறேன்
மரணத்தின் மௌனங்களில்
பெருகி வெளியேறும் உயிரின் திரவச் சூட்டில்
சேமிக்கப்பட்ட நினைவுகளின் மதகுகள்
பெரும் வெடிப்புடன் திறந்துவிட்டன

முந்தைய மரணங்கள் விட்டுச் சென்ற
வெற்றிட வெளிகளின் சூன்யமெங்கும்
நிரவிக் கிடந்த சித்திரப் பாசிகள்
வேரறுந்து வெளியேறுகிறது
நிகழ்ந்து கொண்டிருக்கும்
இந்த மரணத்தின் கனம் தங்க

நான் வெளியேறிய வெறுமையில்
என் பிம்பங்களைச் சுமந்து திரிய
ஒரு மனது உன்னிடத்திலிருக்கிறது

நான் வெளியேயும், மரணம் உள்ளேயும்
இடம் மாறிக் கொள்ளும் வேதனைப்
பகிர்ந்து கொள்ள
பரிவுடன் இடம் கொடுக்கும் மடியுடன்
அருகே நீ இருக்கிறாயா?

மரணத்தின் விழிகளை மூடி
மென்மையாக முத்தமொன்றை பதித்துவிடு
மரணங்கள் அநாதையாக நிகழவேண்டாம்
மரணத்தின் துணையாய் விரித்து வை
நேசம் பொங்கும் உன் மடியை

ஒரு மரணத்தை அமைதி அடையச் செய்ய
அனுமதி வேண்டியதில்லை
உன்னை அடிமைப்படுத்தியவனிடமிருந்து
நான் சற்று தூங்கிக் கொள்கிறேன்
எனது மரணத்தின் மடியில்
நம் உறவை அறிவிப்பாயென்ற அமைதியுடன்

No comments:

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்