"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Friday, January 11, 2008

பூக்களில் உறங்கும் மௌனம்


'சீஸேம் கதவைத் திற'வென
திருடர்களின் உலகினுள் அழைத்துச் செல்கிறாய்
குழந்தைகளின் விழிகள் விரிய விரிய
வியப்புகளை நிரப்பிக் கொண்டே

பிரமிட்டாய் எழுந்து நிற்கும் சவக்குழியில்
ஏதோவொரு மன்னனின் பிரேதம் கிடக்கும்
ஒரு மாயாலோகத்தில்
பூக்களில் உறங்கும் மௌனத்தை விழுங்கிய
வனமொன்று காத்துக் கிடக்கின்றது
சில கற்பாளாங்களை நகர்த்தி ஒரு திறப்பினைத் தரும்
'சீஸேம்' போன்ற ஒரு எளிய மந்திர சொல்லிற்கு

பூக்களில் உறங்கும் மௌனத்தை கலைக்கும்
ஓர் ஒற்றைச் சொல்லோடு ஒருத்தி வருவாளென்று
வனம் படைத்த தாவரங்களினடியில்
பதப்படுத்தப்பட்டவனைப் புதைத்துச் சென்ற பூசாரிகள்
சாபவாக்கியமொன்றையும் கீறிவைத்தார்கள்

ஒற்றைச் சொல்லுடன் உன் வருகை குறித்த
எதிர்பார்ப்புகளின் நினைவுகள்
பெயரிடப்படாத காட்டுத்தாவரங்களில்
பூத்துக் கிடக்கின்றன அந்தப்பெருவனத்தினுள்

சிநேகமிகும் தாபங்களின் ஈரப்படுத்தலில்
வாஞ்சையுடன் விரிந்து பரவுகிறது மென்மேலும்
அந்தப் பூக்காடுகளின் பரப்பு

தீப்பிடித்தது போல்
கைக்கெட்டும் சகலத்தையும் ஆக்கிரமிக்கின்றன
உன் பெயரைச் சொல்லும்
பூக்களில் உறங்கும் மௌனங்கள்

தேடித்திரியும் அந்த ஒற்றைச் சொல்
உன் அகராதியின் வார்த்தைத் தொகுப்பிலிருந்து
விட்டு விலகிப் போய்விட்டது
தன்னையறிந்த வெட்கம் கொண்டு

பெயரிடப்படாத காட்டுத் தாவரங்களின்
பூக்களில் உறங்கும் மௌனத்தை
அசைத்துப் போடுவதற்கு கற்றுக் கொள்
பெண்ணே
'சீஸேம்' என்ற மாயச்சொல்லைப் போல்
அந்த ஒற்றைச் சொல்லைப் பேசுவதற்கு

No comments:

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்