"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Monday, January 07, 2008

அநாநியின் அழகிய பஞ்சவர்ணக்கிளி



நீங்கள் இந்தப் பதிவின் பின்னூட்டங்களை முழுமையாகப் படிக்கவில்லையென்றால், எதைப் பற்றி இத்தனை தீவிரமாக எழுதுகிறான் என்ற புரிதல் உங்களுக்குக் கிட்டாது.













டியர் அநாநி,





இறுதியாகத் தீர்ப்பு வழங்கி விட்டீர்கள்.

எதிர்பார்த்தது தான்.

தீர்ப்பு வழங்க உங்களுக்கு அருகதை வழங்கியவர்கள் யார் என்ற கேள்விகளை எழுப்பப் போவதில்லை. இதுமாதிரி, சுயதகுதி பெற்ற நீதிபதிகள் பலர் இருப்பதை அறிந்து கொண்டு தான் நாங்களும் இயங்குகிறோம் என்பதை நீங்கள் அறிந்திராமல் இருக்க முடியாது

என்றாலும், உங்களுடனே இருக்கும் அல்லது பிறவிக்குணமாய் ஒட்டிக்கொண்டிருக்கும் முரண்களைச் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது.

// I am not going to do any guess work about your intention as you have done now. Because, I feel guessing intention denotes the guilty mind. //

ஊகிப்பது குற்றமுள்ள மனதைக் குறிக்கிறது என்று எழுதிவிட்டு, நான் செய்யக் கூடாதென நீங்கள் அறிவுறுத்திய அதே செயலைக் கொண்டு தான் நீங்கள் என் நோக்கத்தைப் பற்றி ஊகித்து உங்கள் தீர்ப்பை எழுதி இருக்கிறீர்கள் என்று உங்களுக்குப் புரியவில்லையா

// இன்றிலிருந்து இரண்டாண்டுகளில் "ஜன கன மன" பாடுவது இஸ்லாமியர்களை அவமதிக்கும் செயல் என்று நீங்கள் எழுதப்போகும் கட்டுரையை படிக்கத்தான் போகிறோம். //


எதைக் கொண்டு இதை ஊகித்தீர்கள்? அநாநியாக வந்து கருத்து சொல்லும் உங்கள் தீரம் நான் சொல்லாததை சொல்வதாக ஊகிப்பதற்கு அதிகாரம் வழங்கி விட்டதா? திருப்பிப் படித்துப் பாருங்கள் - ஆங்கிலத்தில் எழுதினால், அந்த எழுத்துகளுக்கு ஒரு அங்கீகாரம் கிட்டிவிடும் என்று நீங்களாக நினைத்துக் கொண்டீர்களானால், அது உங்களின் பலவீனம் தானே தவிர, என்னுடையது அல்ல.

நீங்களும், நானும் எழுதியதை மீண்டும் வாசித்துப் பாருங்கள். உங்களுடைய கேள்விகள் உள்நோக்கம் நிறைந்தது என்று நான் எழுதியதைத் தான் இறுதியில் உங்களின் எழுத்துகள் நிரூபித்திருக்கின்றன.

/// ஒவ்வொரு காரியம் ஒவ்வொரு மாதிரியாகப் பார்க்கப் படுகிறது. விவாதிக்கப் படுகிறது. அதனாலயே, அந்தக் காரியத்தில் ஈடுபட்டவர், தேச விரோதியாகப் பார்க்கப் பட வேண்டிய அவசியமில்லை. ///

நான் மேலே சொல்லியதை நீங்கள் நேர்மையாக எடுத்துக் கையாளவில்லை. Reading in between the lines? நான் இதை சொல்லிய சூழ்நிலையை தவிர்த்து விட்டு, நடுவிலிருந்து சில வரிகளை உருவியெடுத்துக் கொண்டு வந்து, அதை என்னுடைய கருத்தாக மாற்ற முயற்சித்துக் கொண்டு இருக்கிறீர்கள். நான் சொன்ன முழுமையையும் படித்துப் பார்க்கவில்லை. அல்லது உங்களுக்குப் புரியவில்லை.

நான் எழுதிய முழுமையான பின்னூட்டம் இதோ:

// இவர்கள் பாடுவார்களா, அவர்கள் பாடுவார்களா என்பதை இஸ்லாமியர்களைக் குறித்து மட்டும் எழுப்ப வேண்டிய கேள்வியாக இருக்கக் கூடாது. சமீபத்தில் ஒரு சர்ச்சை எழுந்தது. இந்தியாவின் ஜனாதியாகத் தகுதியுடையவர் என்று கருதப்பட்ட திரு. நாராயணமூர்த்தி அவர்கள் கூட, இந்திய தேசிய கீதத்தை இசைப்பது மட்டுமே போதுமானது. பாடவேண்டும் என்று வற்புறுத்த வேண்டாமே என்று ஒரு கருத்தை முன்வைத்தார்.

இது போல, தேசியகீதம் குறித்து அவ்வப்போது பலவித சர்ச்சைகள் எழுகின்றது. விவாதங்கள் நடக்கின்றன. இதெல்லாம் தேசவிரோதமாக பார்க்கப்படவில்லை. ஆனால், இஸ்லாமியர்கள் இது இணைவைத்தலாகிவிடுமோ என்ற மனசஞ்சலத்துடன், அதுகுறித்த விளக்கங்களைத் தேடினால், உடன் அது சந்தேகத்துடன் பார்க்கப்படவேண்டிய அவசியமென்ன வந்து விட்டது? //


இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தி கூட தேசியவிவாதம் எழுப்பினார் - ஆனால், அது தேசவிரோதமாகப் பார்க்கப்படவில்லை. அதுபோலவே, தேசபக்தியோடு சம்பந்தப்படுத்தப்படுபவற்றைக் குறித்து ஐயப்பாடு எழுப்பினார்கள் என்றால் அவர்களை உடனே தேசவிரோதிகளாக சித்தரிக்கவில்லை என்று சொன்னதில் என்ன தவறு இருக்கப் போகிறது?
இதுவரையிலும் இஸ்லாமியர்கள் தேசியகீதம் குறித்து எந்தவித கேள்விகளும் எழுப்பவில்லை என்று ஒப்புக் கொண்டுவிட்டு, பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து நீ எழுதப் போகிறாய் என்பது உங்கள் போன்ற ஊனமுற்ற மனதிலிருந்து தான் சிந்தனைகளாக வெளிப்பட முடியும்.

தேசபக்தியை ஏகபோக குத்தகைக்கு எடுத்துக் கொண்டதாக வேஷம் போடுபவர்கள் தான் இதுவரையிலும் தேசபக்தி சம்பந்தப்பட்ட அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார்கள். இன்று புழக்கத்திலிருக்கும் 'ஜணகணமண..' கீதத்தை 'வந்தே மாதரமாக' மாற்ற வேண்டும் என்ற சிந்தனையை வைத்து அரசியல் பண்ணிக் கொண்டிருக்கும் சங் பரிவார்களைப் பற்றி நீங்கள் கூறி இருக்க வேண்டும் - இவர்கள் தேச விரோத சக்தி என்று. தேசியகொடியின் மையத்தில் இருக்கும் அசோக சக்கரம் பௌத்தத்தைக் குறிக்கிறது - அதை நீக்க வேண்டும்; தேசியகொடியில் இருக்கும் பச்சை இஸ்லாமியர்களின் அடையாளம் - என தேசிய கொடியின் நிறத்தை மாற்ற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தவர்கள் தான் இந்துத்வா வாதிகள். இத்தனை சிந்தனைகளும் தர்க்கத்திற்குட்படுத்தப்பட்டே வந்திருக்கின்றன. தேசியகீதமும், தேசிய கொடியும் வழக்கத்திலிருக்கும் பொழுதுதான் இவையனைத்தும் விவாதிக்கப்பட்டது. அப்பொழுது யாரும் யாரையும் தேசவிரோதிகளாகப் பார்க்கவில்லை. அதை ஒரு விவாதத்துக்குரிய பொருளாகவே எடுத்துக் கொண்டு விவாதித்தனர். அதன் அடிப்படையிலே விவாதம் என்று ஒன்று வந்தால், விவாதிக்கத் தவற கூடாது - அது எவராக இருந்தாலும் என்று எழுதினேன்.

உங்கள் நியாயப்படி, சுதந்திரமான சிந்தனைகளை ஒரு இஸ்லாமியர் அல்லாதவர் முன் வைத்தால் அதை விவாதிப்போம். ஆனால், இஸ்லாமியர் ஒருவர் ஒரு சிந்தனையை முன்வைத்தால் - அதை விவாதிக்க மாட்டோம் - மாறாக, அந்த சிந்தனையை முன்வைத்தவரை தேசவிரோதி என பிரகடனப்படுத்துவோம் என அறிவிப்பது - நீங்கள் எந்த அடிப்படைவாதத்தை கையில் எடுத்துக் கொண்டு அலைகிறீர்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

அநாநி என்பது ஒரு பெயராக இருக்கலாம் - அதை ஒரே ஒருவர் மட்டும் வைத்துக் கொண்டால் அது ஒருவரின் பெயராக இருக்கும். முகவரியற்ற அனைவரும் அந்த பெயரின் பின்னே ஒளிந்து கொள்ளும் பொழுது, அதை ஒரு பெயராக எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவ்வாறு 'புத்திசாலித்தனம்' மிக்க வாதங்களை வைக்க வேண்டாம். படிப்பவர்கள் சிரிக்கப் போகிறார்கள். மற்றபடி அநாநி வசதியை உபயோகிப்பேன் என அடம்பிடிப்பது உங்கள் விருப்பம். முதுகெலும்பு இல்லாத ஒருவனை நிமிர்ந்து நில் என்று சொல்வது தன்னைத் தானே முட்டாளாக்கிக் கொள்வதாகும், இல்லையா? நான் முட்டாளில்லை.

இறுதியாக, எந்த ஒரு மனிதனிடமும், என் தேசபக்தியை நிரூபிக்க வேண்டிய அவசியத்திற்குட்படுத்திக் கொள்ள மாட்டேன். அதிலும், தன்னை வெளிக்காட்டிக் கொள்ள திராணியற்ற ஒரு அல்பத்திடம் கண்டிப்பாக நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.


பின், நீங்கள் பிரம்மாஸ்திரமாக எண்ணிக் கொண்டிருக்கும் உங்களுடைய மற்றொரு பின்னூட்டம் -


// A very important factor which is making it almost impossible for Hindu-Muslim unity to become an accomplished fact is that the Muslims cannot confine their patriotism to any one country. I had frankly asked many Muslims whether, in the event of any Mohammedan power invading India, they would stand side by side with their Hindu neighbours to defend their common land. I was not satisfied with the reply I got from them.

Gurudev Rabindranath Tagore //

குருதேவ் ரபீந்தரநாத் தாகூர் கூறிய கூற்றாக (!!??) நீங்கள் முன் வைக்கும் வாதம் முற்றிலும் தவறானது.


இந்தியா பாக்கிஸ்தானுடன் நடந்த யுத்தங்களில், பல இஸ்லாமியர்களும் கலந்து கொண்டிருக்கின்றனர் - அவற்றைப் பாடப்புத்தகங்களிலே கூட வைத்திருந்தனர் - 30 வருடங்களுக்கு முன்பே நானே படித்திருக்கிறேன். இன்று இஸ்லாமியர்களுக்கு ராணுவத்தில் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது என்பது தான் உண்மையே தவிர, அவர்கள் முன்வரவில்லை என்பது அப்பட்டமான பொய்.

இஸ்லாமியர்களுடைய தேசபக்தி பூகோள எல்லைகளைக் கடந்திருக்கின்றன என்பது தவறான கண்ணோட்டம். இதற்கு மாற்றான கருத்துகளை உலக வரலாற்றிலிருந்து எத்தனை எத்தனையோ உதாரணங்களைக் கொண்டு கூற முடியும் - ஓட்டமான் ஒரு இஸ்லாமியப் பேரரசு தான். ஆனாலும், அவர்களுக்குக் கீழ் இணங்கி இருக்க - அராபியர்கள் விரும்பவில்லை. தனி நாட்டுக்காகப் போராடி பெற்றுக் கொண்டார்கள் - சவுதி அரேபியாவை. எகிப்து, சிரியா, ஜோர்டான், லெபனான், பாலஸ்தீனம் என்று எண்ணற்ற நாடுகள் சிறிது சிறிதாக ஓட்டமான் பேரரசிலிருந்து பிய்த்துக் கொண்டு வந்தவை தாம்.


இஸ்லாம் மனிதர்களை ஒரு ஆன்மீகத் தளத்தில் தான் இணைத்ததே தவிர, பூகோள எல்லைகளைத் தாண்டிய ஒரு இசைவை உண்டாக்க முடியவில்லை. என் வீட்டில் நான்; உன் வீட்டில் நீ; ஒருவரின் இருப்பிடத்தை மற்றொருவர் மதித்து வசிக்கும் பொழுது, சகோதரராக இருப்போம் - எல்லை மீறினால் வெட்டு, குத்து தான் என்று தான் இன்னமும் இவர்கள் வாழ்கிறார்கள்.


அதை விடுங்கள் - சமீபத்திய உதாரணம் - ஈராக். ஒரே நாடாக, சதாமின் கீழ் அடக்கப்பட்டிருந்த நாடு, இன்று அரபு முஸ்லிம், ஷியா முஸ்லிம், குர்து முஸ்லிம் என மூன்று துண்டுகளாக உடையக் காத்துக் கொண்டிருக்கிறது. இஸ்லாம் என்ற பொதுமைப் பண்பு இணைப்புக்கு வழி வகுக்காது. வழி வகுக்கக் கூடாது. ஒருவனுக்கு பல அடையாளங்கள் இருக்கின்றது. ஒற்றை அடையாளத்துடன் ஒரு மனிதன் இயங்குகிறான் என்பது எந்த விதத்திலும் சாத்தியமில்லை. ஒருவனுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அடையாளங்கள் இருக்கின்றன. இருக்க வேண்டும். அந்த அடையாளங்கள் அனைத்தையும் மதித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் - அதன் அடிப்படையிலே தான் சமத்துவமும், சகோதரத்துவமும் ஏற்படும் என்பது தான் இஸ்லாத்தின் அடிப்படை. மாறாக இஸ்லாமே அடையாளங்களை அழித்து மனிதர்களை ஒன்றாக்கி விடலாம் என்ற கோட்பாட்டை முன் வைக்கவில்லை. உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், நபிகள் பெருமானார் அவர்களின் இறுதி உரையைப் படித்துப் பாருங்கள். இன்றைய ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பிரகடன சாசனத்திற்கு அது ஒரு முன்னுரை போன்று அமையும்.


மனிதனின் விடுதலை வேட்கையை எந்த ஒரு ஒற்றை அடையாளமும் தனித்து நின்று தீர்மானிப்பதில்லை. நீங்கள் முன் வைத்த (தாகூரின்?) கூற்று தவறான அனுமானங்களால் கட்டமைக்கப்பட்டதே அன்றி, யதார்த்தத்தை ஒட்டியதில்லை.


நம் துணைக்கண்டத்திலே, மொழி உணர்வு, மத உணர்வுகளையும் மீறி பிளவு உண்டாக்கக் கூடும் என்ற நிகழ்வை, அவர் அறிந்திருக்க நியாயமில்லை. வங்க தேசம் கிழக்கு பாக்கிஸ்தானிலிருந்து தன் ஆத்மாவைத் தேடி எடுத்துக் கொண்ட பொழுது, இஸ்லாம் என்ற உணர்வையும் மீறி, உருது, வங்கம் என்ற மொழியுணர்வின் அடிப்படையிலே போரிட்டதனால் தான் சாத்தியமாற்று வங்க மொழி முஸ்லிம்களுக்கு ஒரு தனி நாடு.

சமூக ரீதியாக அந்நியப்படுத்தும் போக்கு குறித்து தான் இஸ்லாமியர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்களே தவிர, தேசத்தை எதிர்த்து அல்ல.


இந்துத்வா தான் இந்தியா என்ற தவறான - எவருமே ஏற்றுக் கொள்ளாத தத்துவத்தை தான் எதிர்க்கிறோமே தவிர, இந்திய இறையாண்மையை அல்ல. இந்துத்வாவை எதிர்ப்பதில் நாட்டிலே பாதிக்கு மேல் மத அடையாளங்களைத் தாண்டிய பல மக்களும் இணைந்து கொள்ளும் பொழுது, ஒரு சிறுபான்மை குழு தேசபக்தி தரக்கட்டுப்பாடு அலுவலராக தங்களைத் தாங்களே நியமித்துக் கொள்வதைத் தான் எதிர்க்கிறோம். எதிர்ப்போம் தொடர்ந்து.


// உங்களைப்போன்றவர்களின் இக்கருத்தை எதிர்க்கும் இஸ்லாமியர்களும் உண்டு. அவர்களாலேயே இஸ்லாம் புனிதமான மதமாக வாழ்கிறது //

முகவரியற்ற தத்துவங்களைப் பேசுபவர்களின் வீட்டுக் கொட்டடியில், தங்கக் கூண்டில், ஒரு சில வாக்கியங்களை மிமிக்ரி செய்யும் பஞ்சவர்ணக்கிளியின் அழகு வடிவம் போன்று இருப்பவர்களை நீங்கள் சிலாகிப்பதைக் குறித்து எனக்கு எந்த அக்கறையுமில்லை. என் உரிமைகளையும், என் கருத்துகளைப் பேசும் விடுதலை உணர்வையும் மதிக்கும் நல்ல நண்பர்களிடையே தான் நான் 'இந்தியன்' எனப் பெயர் பெற விரும்புகிறேனே தவிர, 'செல்லப் பிராணிகளை' கூண்டில் வளர்த்து தங்கள் ஜீவகாருண்யத்தைப் பறை சாற்றும் சாயம் தீட்டிய போலிகளிடமிருந்து அல்ல. என் தேசபக்தியை மெச்ச வேண்டுமென உங்களைப் போன்ற தெளிவின்மை மிக்க (இந்து)த்துவவாதிகளிடம் கோரி நிற்கப் போவதில்லை.

நன்றி - குறைந்தபட்சமாக வார்த்தைகளில் நாகரீகம் காட்டிப் பேசியமைக்கு, எண்ணங்களில் தேளின் விஷக் கொடுக்கு கொட்டுவதற்குத் துடித்துக் கொண்டேயிருந்தாலும்..




No comments:

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்