"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Tuesday, January 29, 2008

விடை பெறும் முன் துபாய் பதிவர்கள் பற்றி...

விடை பெறும் முன் துபாய் பதிவர்கள் பற்றி...


ஒரே வாரத்தில் இத்தனை அதிகமாக எழுதியதில்லை. எழுதினால் வாசிப்பதில்லை. வாசித்தால் எழுத நேரமில்லை என்று போய்க்கொண்டிருக்ககயில், வாசித்து வாசித்து எழுத வேண்டிய இந்த வாய்ப்பு மிக்க மகிழ்வாக இருந்தது என்பது உண்மை. எதிர்பாராத சில தொல்லைகள் குறுக்கிட்டன. மூன்று நாட்களாக மின்சாரமும், நீரும் துண்டிக்கப்பட்டுவிட்ட நிலையில், இத்தனை எழுதியதே வியப்பாக இருக்கிறது. முன் கூட்டிய தயாரித்தல் ஏதுமின்றி தோன்றிய பொழுதும் வழக்கமுள்ள நான், இப்பொழுதும் அதையே பின்பற்றினேன். ஒவ்வொரு பதிவிற்கும் ஒரு மணி நேரத்திற்கு முன் தான், எதைப் பற்றி எழுதுவது என முடிவு செய்து கொண்டு, பின் அது குறித்த தேடுதலைத் தொடங்கினேன் என்பதும் உண்மை. அரசியல் குறித்தான பதிவுகள் மட்டுமே தொடர்ந்து நான் வாசித்து வந்தவை. மீதியெல்லாம், அந்த நேரத்தில் தோன்றியவை மட்டுமே.

விடை பெறும் முன், துபாய் பதிவர்களின் பதிவுகளைப் பற்றிய ஒரு இடுகையுடன் முடித்துக் கொள்ளலாம் என்று ஒரு ஆவல். இவர்களில் கிட்டத்தட்ட அனைவரையும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சந்தித்திருக்கிறேன். சிலரை அடிக்கடி. மேலும் சிலருடன் இணைந்தே வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதுவும் உண்மை. தனித்தனி பார்வைகளுக்குக் கீழே படியுங்கள்:

ஜெஸீலா பெண்கள் போகப் பொருளா என்ன என்ற கட்டுரையின் ஆதங்கம் அவரது சிந்தனை போக்கைச் சொல்லும். கலகலப்பாகவும், தீவிரமாகவும் ஒரே சமயத்தில் எழுதப்பட்ட படைப்புகளின் சொந்தக்காரர். அவரைப் போலவே அவரது எழுத்துகளும் இனிமையாகப் புன்னகை பூக்கும்.

ஆசிப்
எல்லாவித பிரச்சினைகள் பற்றியும் ஒரு மெல்லிய நகைச்சுவை உணர்வுடன், பிறர் மனம் புண்படாதபடி, தான் சொல்ல விரும்பியதைச் சொல்லிவிடக்கூடிய லாகவம் மிக்க எழுத்துகளைக் கொண்டிருப்பவர். சிறுகதைகள், கவுஜைகள், பொதுப்பிரச்சினைகள் என்று எல்லாமுமாக அலசிக் கொண்டிருப்பவர். நடுநடுவே திரண்ட அனுபவம் கொண்ட தந்தையின் கட்டுரையும் கூட வரும். முளைவிடும் பையனின் திரைவிமர்சனம் ஒன்றும் வந்திருக்கிறது. எனக்குத் தெரிந்து மூன்று தலைமுறைகளாக ஒரே தளத்தில் எழுதுகிற வலைப்பூக்கள் இல்லை என்றே சொல்லலாம்.

முத்துகுமரன் ஆரம்பகாலக் காதல் கவிதைகளை இப்பொழுது சற்று மெருகேறிய நடையில் எழுதி வரும் நண்பர் - அறைத்தோழர். பெரியார் கருத்தியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பெரியாரைப் பற்றிய புத்தகங்களைத் தேடித்தேடி வாசித்துக் கொண்டிருக்கிறார். சிறுகதைகள் எழுதினாலும், இன்னும் 'சொல்வதைத்' தவிர்த்து விட்டு, கதையை நிகழ்த்திக் காட்டுங்கள் என்று விமர்சிக்கும் அளவில் இருக்கிறது. இன்னும் மெருகேற காலமிருக்கிறது. சிறப்பான எழுத்துகளையும், சமூக சிந்தனைகளையும் முன்வைத்து இன்னும் சிறப்பாக எழுதுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இசாக் ஒரு நல்ல உழைப்பாளி. மிக அதிகமாக செய்யும் வேலையே காலத்தை உறிஞ்சிக் கொள்ள, மீதி கிடைக்கும் நேரங்களில், எவ்வாறு இத்தனை செயல்பட முடிகிறது என வியக்க வைப்பவர். கவிதைகள் எழுதும் இவர், தன் கவிதைகளில் பலவற்றைப் புத்தகங்களாக கொண்டு வந்திருப்பவர். சமீபத்திய சாதனை, குறும்படம் ஒன்றை இயக்கி வெளியிட்டது தான். அண்ணன் அறிவுமதியுடன் நெருங்கிய தொடர்பிலும் இருப்பவர். அரசியல் ஈடுபாடுமுள்ளவர்.

கவிமதி
பெரியாரின் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பவர். கவிதைகள் இவரது முக்கிய மொழி. கவிதைத் தொகுதிகளும் வெளியிட்டிருக்கிறார். சிறுகதைகளும் எழுதி அதை ஒரு புத்தகமாகக் கொண்டு வரும் முயற்சிலும் இருக்கிறார்.

தம்பி பேரன்புகள் எப்பொழுதுமே கிடத்தப்பட்ட நீண்ட மௌனத்துள் சிக்குண்டு அலையும் என்பது எனது அனுமானம். ஏனென்றால் நான் அப்படித்தான் இருக்கிறேன். 'பேரன்பும், பேரன்பு மட்டுமே கொண்டவன்' என தம்பி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். நேரிலே காணும் பொழுது மிக நீண்ட மௌனத்தின் சொந்தக் காரர். கொஞ்சம் அறிமுகம் ஆனதும் பேசுகிறார் தேவைக்கேற்ப. அவர் அழகாக, வாசித்து ஈடுபட வைக்கும் ஒரு நடையில் எழுதுவார் என்பதே தெரியாதிருந்தது. அப்பொழுது தான், ஆசிப் தம்பியைப் பற்றி எழுதிய ஒரு சிறுபதிவை படிக்க நேர்ந்தது. ஆசிப் தன் ஆசான் என்று தம்பி குறிப்பிடுகிறார். ஆசிப், தம்பியின் எழுத்துகள் வாசிப்பதற்கு அலாதியானவை; அரிதானவை என எழுதுகிறார். அதை வாசித்த நான் பதில் எழுதிவைத்தேன் - 'Indulging in mutual back scratching' என்று. ஆனால், பின்னர் தம்பியின் சிறுகதைகளைப் படித்த பின் தான் தெரிந்தது - அவருடைய எழுத்துகள் செறிவும், வளமையும், புனைவும் மிக்கது என்று. 'back scratching' என்று எழுதியதற்கு இதுவரையிலும் வருத்தம் தெரிவிக்கவில்லை. வெறும் வார்த்தைகளால் சொன்னால் ஆகாது. சரியான சந்தர்ப்பத்தில், சரியான தளத்தில் வருத்தம் தெரிவிக்க வேண்டுமென்று காத்திருந்தேன். இது தான் சமயமென்று நினைக்கிறேன். - 'Asif & Thambi - My heartfelt apologies to you, both'

அய்யனார் எழுதுவதற்கு, தனக்கென ஒரு தனி நடை வைத்திருக்கும், அய்யனாரின் எழுத்துகளைப் பற்றிய அறிமுகமா? அனைவருக்கும் தெரியும் தானே? ஏற்கனவே அவரது பதிவுகளைப் பற்றிய ஒரு பார்வையை திரைப்படங்கள் குறித்த ஒரு தேடுதல் என்ற தலைப்பிலே எழுதிவிட்டேன். அதனால், அடுத்தவர்களைப் பற்றி...

குசும்பனின்
படிக்கலாம் வாங்க - போட்டோஷாப் உபயோகிப்பதைப் பற்றிச் சொல்லித் தருகிறார். அதிலும், கறுப்பு வண்ண படங்களை எப்படி வண்ணப் படமாக மாற்றுவது என்பது குறித்த அவரது பதிவு அருமை. எல்லோருக்கும் பயன்படும் வகையில் அமையும். அதிலும் குறிப்பாக புகைப்பட கலைஞர்களாக வலம் வர விரும்புபவர்களுக்கு, அல்லது புகைப்பட தொழில் செய்ய முனைவோருக்கு உதவிகரமாக அமையும். தொடர்ந்து எழுதுவார் என்று எதிர்ப்பார்க்கிறோம்.

சுல்தான் மிக மென்மையாகவும், அமைதியாகவும் இயங்குபவர். நகைச்சுவை உணர்வும் உடையவர். வாகன ஓட்டிகளைப் பற்றிய அவரது பதிவே அதற்குச் சான்று. என்றாலும், ஏதோ எண்ணிக் கொண்டு, வளைகுடா நாடு வந்து, பின்னர் வேறு எதுவாகவோ மாறிப் போகும் நண்பர்களைப் பற்றிய ஒரு கார்ட்டூன் அட்டகாசம். Just arrived என்பதில் தொடங்கி, இறுதியாக Got converted என்று முடித்திருக்கும் வரையிலும் அருமை என்றாலும், இறுதியாக converted to what? என்று எழுதாது ஒரு குறை தான். அதுபோல அவரது நாட்டுப்புறப் பாடல்கள், சிலேடை, என்ற இலக்கிய ஆர்வத்தையும் தெரிந்து கொள்ள முடிந்தது. தொடர்ந்து தனது ஆர்வத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதுவார் எழுத வேண்டுமென்று விரும்புகிறேன்.

கோபிநாத், அபிஅப்பா, சென்ஷி இவர்களைப் பற்றிய நேரிடையான அறிமுகம் இல்லை. வல்லிசிம்ஹன் அவர்கள் துபாய் வந்த பொழுது, பார்த்திருக்கிறேன். ஆனால், அதிகம் பேசியதாக நினைவில்லை. துபாய் பதிவர்கள் பற்றிய ஒரு இடுகை செய்யலாமென்று தோன்றிய பொழுது தான் இவர்களைத் தேடிப்பிடித்துப் படித்தேன். சிநேகத்தை மட்டுமே பேசுவேன் என்று அடம் பிடிக்கும் எழுத்துகள் இவை. வெகு தீவிரமாக விவாதங்கள் புரிந்து, என்ன சாதித்தோமென்று எப்போதாவது சில சமயங்களில் ஒரு சலிப்புத் தோன்றும் பொழுது, இவர்களைப் போலவே, சிநேகம் மட்டுமே பேசி, மனதை எப்பொழுதும் இலகுவாக வைத்துக் கொண்டால் என்ன என்று தோன்றும். ஆனால், அத்தகைய பாதைக்குத் திரும்பவும் செல்ல முடியுமா என்பது சந்தேகமே.

பெனாத்தல் சுரேஷ் நகைச்சுவை தான் பிரதானமென்றாலும், அவ்வப்பொழுது விவாதத்தைக் கிளப்பும் பதிவுகளையும் இட்டு விடுகிறார். அப்படியான சமீபத்திய ஒரு பதிவு தான் இது. புது வருடத்தைக் கொண்டாடுபவர்கள் தான் இது குறித்து கவலை கொள்ள வேண்டும், நேற்றைய கவலைகளுக்காக நொந்து கொள்வது, நாளைய தினத்துக்காக அச்சம் கொள்வது என இன்றைய தினத்தை ரசிப்பதை இழந்து கொண்டிருப்பவர்கள் கூடி விவாதிக்க வேண்டிய ஒரு சமாச்சாரமிது - ஒரு வருடத்தின் முதல் நாள் குறித்த விவாதங்கள். அது போகட்டும் - அவ்வப்பொழுது அவர் எழுதும் நகைச்சுவைகள் - அதுபோலவே நேரிலும் அவரது நகைச்சுவை ததும்பும் பேச்சுகள் பிடிக்கும். அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தொலைபேசியில் நீண்ட உரையாடல்களை நிகழ்த்தும் சாமர்த்தியம் இல்லையென்பதால், பெரும்பாலும் தொலைபேசிகளைத் தவிர்த்து விடுகிறேன் - வாய்ப்புகள் கிடைத்தால் சந்திக்கலாம் நண்பரே.

லொடுக்கு கிரிக்கெட் பற்றி எழுதும் பொழுது கட்டாயம் வந்து பின்னூட்டமிட்டுச் செல்வார். அவருடைய ஆர்வம் கிரிக்கெட் நுணுக்கம் சார்ந்தது. என்னுடையது கிரிக்கெட்டின் அரசியல் பற்றியது. சென்னை ரசிகர்கள் பற்றி அவர் எழுதியது நிஜமாகவே நம்மைப் பெருமையடைய வைக்கும். என்றாலும் லொடுக்கு என்ற பெயர் ஏன்? அவரிடம் நான் கேட்கவில்லை. அவராக சொன்னால் சொல்லட்டுமே!

No comments:

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்