"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Monday, January 28, 2008

ஆழ மேயுங்கள்

ஆழ மேயுங்கள்

ஆழ மேயுங்கள்:


எழுத வேண்டுமென்ற ஆர்வமும், முனைப்பும் ஒருவனிடத்தில் தோன்றிவிட்டால், உடன் என்ன செய்கிறார்கள்? கவிதை எழுதுகிறார்கள். கதை எழுதுகிறார்கள். உலக இலக்கியவாதிகளைப் படித்து கொண்டாடுகிறார்கள். சிலாகிக்கிறார்கள். நம் இலக்கியங்கள் எல்லாம் உலகத் தரமானதுதானா என்ற விவாதம் நடத்துகிறார்கள்.

வெகு சிலர் மாத்திரமே, தங்கள் எழுத்தின் வன்மை கொண்டு, தன்னைச் சுற்றி நிகழும் செயல்களைப் பற்றிய விமர்சனங்களை எழுதுகிறார்கள். அப்படி ஒரு விமர்சனத்தை முன் வைப்பதன் மூலம், தான் ஒருசார்பானவன் என முத்திரை குத்தப்படலாம் என்ற அச்சத்தையும் மீறி, எழுதுகிறார்கள். மொழி என்பது அவர்களது பயன்பாட்டினால் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தன்னைச் சுற்றிய சூழலைக் குறித்து அக்கறையற்ற புனனவுகளால் என்றும் ஒரு மொழி வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்க முடியாது.

இத்தகைய மொழி அறிவைத் தங்கள் சமூக அக்கறை மிகும் எழுத்துகளுக்காக அர்ப்பணிக்கும் சில எழுத்துகளைப் பற்றியும் சொல்லி விடலாம். இவர்கள் குறித்து எனக்கு மிக்க மதிப்புண்டு - சமூக அக்கறையும் அதன் விளைவாக எழும் சிந்தனையையும் எழுத்தில் எழுதி வைக்க அசாத்திய துணிவு வேண்டும். எந்த இலக்குமற்ற ஊர்ப்புறணிகளுக்கு கிடைக்கும் வாசிப்பு அளவிற்கு, இந்த பதிவுகளில் வாசகர்கள் வந்து குவிவதில்லை தான். எல்லோரிடத்திலும் நல்ல பெயர் வாங்கி விட வேண்டும் என்று 'பரந்த மனம் உடையவராக' வேஷமிடும் பலரும் இந்த எழுத்துகளிலிருந்து ஒதுங்கியே இருக்கின்றனர் என்பதும் வெளிப்படை. ஆனால், இதையெல்லாவற்றையும் மீறி, இந்த எழுத்துகள் வாழ்ந்திருக்கும் - வாசிக்கப்படும்.

அத்தகைய எழுத்துகளை எழுதிக் கொண்டிருக்கும் சில நண்பர்களைப் பற்றி:

பெண்களின் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளைக் குறித்து எப்பொழுதும் என்னுள்ளே ஒரு தீராத கோபம் உண்டு. ஒரு சமூகமாக ஒரு கூட்டம் கூடி, ஒரு பெண்ணின் மீது வன்முறை நிகழ்த்துவது அநாகரீகம் என்றால், ஒரு அரசே முன்னின்று ஒரு சமூகத்தின் மீது கொடுமை நிகழ்த்த துணை புரிந்த ஒரு செயலைக் கண்டித்து எழுதப்பட்ட அசுரனின் பில்கிஸ் தீர்ப்பு - சிறைச்சாலைக் கம்பிக்கு தெரியுமா எது உள்ளே எது வெளியே என்று? என்ற இந்தப் பதிவைப் படித்தால் தெரியும், நான் சொல்லும் எழுத்தின் பயன்பாடு என்னவென்று. எது தண்டனை என்ற இந்தப் பதிவின் அலசல், நீதியின் ஒரு புதிய பரிமாணத்தை முன் வைக்கிறது. சிறைத் தண்டனை என்பது வர்க்கத்தினால் தீர்மானிக்கப்படுகிறது - அது பாதிக்கப்பட்டவர்களுக்குத் தான் அதிக தண்டனை தருகிறது என்பது நமது நீதி வழங்கும் முறை சரிதானா என்ற புதிய கேள்வியையும் முன் வைக்கிறது. சார்புத் தன்மைகளைத் தாண்டிய ஒரு பார்வையுடையவராகவும், அது குறித்த அக்கறையுள்ளவர்களாகவும் ஒருவர் இருப்பாரென்றால், இந்தப் பதிவைப் படித்து ஒரு வார்த்தையாவது பாராட்டி எழுதியே தீர வேண்டும்.

தன் இனம் அடிபட்டுத் துடிக்கையில் ஆறுதலாக ஒரு கவிதையை எழுதுவது கூட, இறையாண்மைக்குத் துரோகம் என்று பாடம் சொல்லும் நிலத்திலிருந்து பிழைக்கும் ஊடகத்துறையின் கள்ள மௌனத்தைச் சாடும் திரு வின் இந்தப் பதிவு, ஊடகத்துறையின் சில பெரிய பெயர்களின் போலித் தனத்தைச் சுட்டிக் காட்டுகிறது. பத்திரிக்கையாளர் மாலனுக்கு.... என்ற பதிவில் திரு சொல்லியிருக்கும் செய்திகள், எப்படி இந்திய இறையாண்மை என்ற பெயரில், பத்திரிக்கை ஊடகங்கள், சில விருதுதுண்டுகளுக்காக, தன் சொந்த இனத்தை அழிப்பையே வேடிக்கைப் பார்க்கிறது என்பதை வாசிக்க முடியலாம். யாராவது, எழுதக் கூடும், எப்படி, தமிழினம் மாலனுக்கும், ராமிற்கும் சொந்த இனமாக முடியும் என்று எழுதக் கூடும். உண்மை தான். தமிழினம் அவர்களது சொந்த இனமில்லை என்றிருக்கட்டும். ஆனால், அதற்காக, மனசாட்சியின் படி கூடவா செயல்படக்கூடாது?

சில மேலாண்மை மிக்க அரசியல் விளக்கவுரையாளர்கள், தேசபக்தியை ஏகபோகத்துக்கும் குத்தகைக்கு எடுத்துக் கொண்ட சில அறிவுமிக்க இனங்களின் இறையாண்மைகளால் அவ்வப்பொழுது கொட்டப்படுபவர்களாக நாம் அமைந்து விட்டது மற்றொரு துரதிர்ஷ்டம். இலக்கியப் பாத்திரங்களுக்காகப் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நன்மை விளைவிக்கும் நலதிட்டங்கள் முடக்கிப் போடுவதை கண்டித்து மக்கள் போராட்டங்கள் நடத்தினால், அதற்காக அந்த மக்கள் தேர்ந்தெடுந்த அரசு கொட்டப்படும். இந்த மண்ணில் அவர்களுக்குள்ள உரிமையை மறுத்து மற்ற மாநிலங்கள் தங்கள் கதவுகளைச் சார்த்திக் கொள்ளும் பொழுது மௌனம் காக்கும். இந்த வகையைச் சார்ந்து சமீபத்தில் நடந்தது தான் ஜல்லிக்கட்டுக்குத் தடை. பெயர் என்னவோ பிராணிவதை தடுத்தல். வதைத்தல் நிகழ்கிறதா இல்லையா என்பதை முழுமையாக அறியாமலே, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது வழங்கப்பட்ட தீர்ப்பு தான் ஜல்லிக்கட்டிற்குத் தடை. இறுதியாக, தீர்ப்பிற்கு கிளம்பிய எதிர்ப்பும், தனது மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்து, மறுபரிசீலனையைக் கோரிய அரசு, மக்களின் தொடர் உண்ணாவிரதங்கள், கறுப்புக் கொடி, தடை மீறி, ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்ற உறுதி, அத்துடன் சில தனிப்பட்ட மனிதர்களின் ஆர்வம், முயற்சி, இவற்றினாலெல்லாம் இறையாண்மிடருந்து மீண்டது ஜல்லிக்கட்டு. ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள கலாச்சார செயல்பாடுகளுக்கு முழுபாதுகாப்பு என்பதிலிருந்து எத்தனை எளிதாக, இல்லாத வதைத்தலின் பின்பு சென்று நீதி ஒளிந்து கொண்டது? வருத்தமாக இருக்கிறது - சில இனங்கள் மட்டும் தங்களுக்கென்ற அடையாளங்களைப் போராடியே மீட்க வேண்டுமென்ற நிலைமை இருப்பது. ஜல்லிக்கட்டு தடையைப் பற்றிய தகவல்களை பிரபு ராஜதுரையின் மணற்கேணி,
தளத்தில் இருக்கிறது. ஒரு வழக்கைப் பற்றி எழுதும் பொழுது எப்பொழுதுமே ஒரு சுவராசியம் வந்து ஒட்டிக்கொள்ளும். இங்கும் அப்படித்தான். அத்துடன், சல்லிக்கட்டின் உண்மைப்பொருளும் வெளிப்படும் வகையில் எழுதி இருக்கிறார். ஒரு தனிமனிதனின் சுய விருப்பு தவிர்த்து நீதிபதிகள் நடந்து கொள்வது எத்தனை முக்கியமானது என்பதையும் புரிய வைக்கிறது இந்த பதிவு.

இறையாண்மையைப் பற்றிப் பேசும்பொழுது, தேசபக்தியும் உடன் வந்துவிடுகிறது. தேசபக்தி தங்களுக்கு மட்டுமே சொந்தம் என சிலர் உரிமை கொண்டாடுவதும், மற்றவர்கள் எல்லாம் அதை நிரூபணம் செய்து கொண்டே இருக்க வேண்டுமென்று நிர்ப்பந்திப்பதுவும், சில அரசியல் தலைமைகளுக்கு ஒரு ஆயுதமாகவே இருக்கிறது. அதிலும் தோல்வியடைந்து, ஆட்சிக் கட்டிலில் அமர வழியில்லை என்றதும், உடன் கையில் எடுத்துக் கொள்ளும் ஆயுதம் = இங்கு எவருக்கும் தேசபக்தியில்லை என்று கூட்டத்திற்கு கூட்டம் முழங்கித் திரும்புவது தான். இவற்றை நிராகரித்து, தங்கள் இனத்தின் மீதான அக்கறை குறித்துப் பேசுவது எவ்வகையிலும் கருத்துரிமையை மீறுவதில்லையென தொல்.திருமாவளவன் அளித்த இந்திய அரசியலமைப்புச் சட்டம் எமக்கு வழங்கியுள்ள உரிமைகளை வலியுறுத்தவே கருத்துரிமை மீட்பு மாநாடு: தொல். திருமாவளவன் பேட்டியைப் படித்துப் பாருங்கள்.

இனம் என்ற ஒரு பெரிய வட்டத்தினுள் அடைக்கப்பட்டு, மறக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றி பேச பலர் இருந்தாலும், அவர்களாஇப் பற்றிய அறிமுகங்கள் வெளி உலகிற்கு வெகு சொற்பமாகவே கிடைக்கின்றன. சில அரசியல் தலைவர்கள், தங்கள் பொதுவாழ்க்கையின் மேற்பூச்சுக்காக ஒடுக்கப்பட்ட மக்களிடம் தங்களுக்குப் பரிவு இருப்பதாகக் காட்ட முயற்சிப்பதுவும், பரபரப்பு செய்திகள் கிடைத்தால் மட்டுமே அவர்களைப் பற்றிய செய்திகளை வெளியிடுவோம் என்று அடம் பிடிக்கும் வெகு ஜன ஊடகங்களுக்கிடையில், வலைப்பூக்களில் சிலர் முனைப்புடன், தலித் இன அரசியல் எழுச்சி குறித்து எழுதி வருவது பாராட்டுக்குரியது. புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் பேட்டி, ஒரு புதிய தகுதியை வலைப்பூக்களுக்குத் தருகிறது. வலைப்பூக்கள் என்றாலே, பொழுது போக்க எழுதும் இடம் என்ற தளத்திலிருந்து, இன்று அது தீவிரமான சிந்தனைகளையும் முன்வைக்கும் இடமாக மலரும் என்ற நம்பிக்கையைத் தரும் பதிவு இது. ஓசைசெல்லாவின் இந்தப் பதிவும், ஒலி மூலமாக அவர் வழங்கிய பேட்டியும், மீதி தொடர்ச்சியாக தமிழ்வெளித் திரட்டியிலும் காணக்கிடைக்கிறது. அனைவரும் படிக்க, கேட்க வேண்டிய ஒரு பேட்டி. ஓசை செல்லாவின் வலைத்தளத்திற்குச் செல்லுங்கள் பேட்டியைக் கேட்பதற்கு. (தலைப்பு ரொம்ப நீளம்...) மீதி தமிழ்வெளியில் (தமிழ்வெளி திரட்டியாக இருந்தாலும், தொடர்ச்சியாக இருப்பதனால், அதன் சுட்டியும் கொடுத்திருக்கிறேன்...)

தலித் பற்றிப்பேசும் பொழுதே, இட ஒதுக்கீடு அரசியலும் கவனத்திற்கு வந்து விடுகிறது. தருமி எழுதிய இந்தப் பதிவில் இன்னமும், தலித் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமை எந்த விதத்திலும் குறையவில்லை என்பதையும், இட ஒதுக்கீடைக் கண்டு புலம்புபவர்கள், இடஒதுக்கீடை என்றாவது ஒரு நாள் விலக்கிக் கொள்ள உதவும் உரிமைகளை தலித் மக்களுக்கு ஒரு துளியைக் கூட, சமூக தளத்தில் கொடுக்க முன்வரவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. இடஒதுக்கீடு என்பது நிறுத்தப்படவே இயலாத ஒரு அங்கமாக மாறிவிட்டிருக்கிறது நமது சமுதாயத்தில். சமூக அந்தஸ்து சமமாக அனைவரிடமும் ஒன்றென கலந்து மதிப்பும் மரியாதையும் மிகுந்ததாக மனித இனம் மதிக்கப்பட போகிறதோ அன்று தான் இடஒதுக்கீட்டையும் மறு பரீசீலனைக்கு உட்படுத்தும் காலம் வரும் என்ற நிதர்சனத்தையும் எடுத்து வைக்கிறது.


சமூக அக்கறை என்பது எத்தனையோ தளங்களில் இயங்கினாலும், சமூக நீதி என்ற தளத்தில் தான் இன்னமும் ஒவ்வொரு அங்குலத்தையும் போராடிப் பெற வேண்டிய நிலையில் உள்ளது என்பதனால், அவற்றைப் பற்றிப் பேசும் சில கட்டுரைகளை எழுதிய வலைப்பூக்களை இங்கு குறிப்பிட்டு எழுதியுள்ளேன். இன்னும் நிறைய இருக்கலாம். ஆனால், மிக சமீபத்தில் எழுதப்பட்டவை இவை என்பதனால், இந்த கட்டுரைகள். மேலும் நாளை குடியரசு தினமும் கூட. ஆனால், எல்லோருக்கும் இன்னமும் குடியரசின் பலன்கள் போய்ச் சேராத நிலையில், இவை குறித்து இன்னமும் வலுவாகப் பேசப்பட வேண்டும். பேசியாக வேண்டும்.

கதை, கவிதை, இலக்கியம் எல்லாம் குடியரசின் பலன் மக்களிடத்தில் பெருமளவில் போய்ச் சேரும் பொழுது தான் பலன் அளிக்கும். அல்லது அவ்வாறு சேர்ப்பிப்பதற்கான ஆயத்தங்களை முன்னெடுக்க வேண்டும். அது தான் எழுத கற்றதன் பயன். இல்லையென்றால், நுனிப்புல் மேய்ந்து விட்டு, பெரிதாக எழுதி கிழித்து விட்டேன் என்று நம்மை நாமே முதுகில் வருடிக் கொண்டு அடுத்தவர்களிடத்தில் அங்கலாய்த்து அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கலான்.

எழுத்து என்பது சிந்தனையின் வெளிப்பாடு. சிந்தனையற்றவர்கள் எழுதுவதை ஒதுக்கி வைத்துவிட்டு அந்த நேரத்தில் துயில் கொள்ளலாம். ஆரோக்யத்திற்கு நல்லது.

No comments:

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்