"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Monday, January 28, 2008

ஆளுமைகளின் முதுகுப்புறத்தில்.....

ஆளுமைகளின் முதுகுப்புறத்தில்.....

ஒரு தீவில் தனித்து விடப்படும் தனிமை கிடைத்தால் அதை எவ்வாறு கொண்டாடுவாய் என்று ஒரு கேள்வி கேட்கப்படுமென்றால், 'வாசித்து' கொண்டாடுவேன் என்று தான் சொல்வேன். வாசிப்பு என்பது அத்தனை வசீகரமானது. எதை வாசிக்கிறோம் என்பது வேறுபடலாம். ஆனால் வாசித்தல் தரும் இன்பம் அனைவருக்கும் பொதுவானவை. வெறுமனே வாசித்தல் என்பது ஒரு வகை என்றால், வாசிப்பைத் தந்தவர்களைப் பற்றிய அறிமுகங்களைத் தரும் வாசிப்பும் மிக அலாதியானது. சுவராஸ்யமானது. வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்படும் புத்தகங்களையும் தீர்மானிக்கக் கூட, இந்த இலக்கியச் சண்டைகள் ஒருவகையில் உதவலாம்.

பல காலங்களாக, அரசியல் வாசிப்பில் திளைத்திருந்த பொழுதும், அவ்வப்பொழுது இலக்கியங்கள் பக்கமும் திரும்பும். சமீபத்தில், இலக்கியமும் அரசியலும் கலந்த ஒரு வாசிப்பைத் தேடிய பொழுது சிக்கியது தான் இந்த இலக்கியச் சண்டைகள் பற்றிய பதிவுகள். இந்த அரசியல் வழியாக அறியக் கிடைப்பது - ஒருவருக்கு மறுபக்கம் என்று ஒன்றும் உண்டு. ஒரு வழியாகவே பயணப்படும் நமது பார்வைகளை அந்த படைப்பாளியின் மறுபக்கத்தையும், அதன் போலித் தனங்களையும் சுட்டிக் காட்டும் பொழுது, இலக்கியம் படைப்பவர்கள் எப்படி அவர்களது படைப்பிற்கு எதிராகவும் இருக்கிறார்கள் - இயங்குகிறார்கள் என்ற புரிதலையும் தருகிறது. அது மட்டுமல்ல, ஒரு படைப்பின் நோக்கம், அதற்கான உன்னதம் - சொல்லப்பட்டவற்றிலிருந்தும் மாறுபாடும் கொண்டுள்ளது என்பதை அறிய முடிகிறது. இலக்கியம் வாயிலாக தாங்கள் முன்வைக்கும் பார்வைகளின் பின்னால், உள்ளார்ந்த அர்த்தத்துடன், அவர்கள் பதிவு செய்யும் சுயவிருப்பு வெறுப்புகளையும் வெளிக்கொண்டு வருகிறது இந்த இலக்கிய சச்சரவுகள். அந்த வகையில், இலக்கியம் படிப்பதானால் கிடைக்கும் பார்வைகளைப் போன்றே, இலக்கியம் படைப்பவர்கள் நம்மிடையே இருந்து மறைக்க விரும்பும் பார்வைகள் வழியாகவும் நிறைய அறிந்து கொள்கிறோம். வாசிப்பு இன்பத்திற்காக தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தாலும், அந்த எழுத்துகளில் முற்றிலுமாக மயங்கி விடாமல், நம்மை மீட்டுக் கொள்ளவும், இந்த மறுபார்வைகள், விமர்சனங்கள் நம்மைத் தயார் செய்து வைக்கின்றன. இந்த வகையில், இலக்கிய அரசியலும் சுவராசியமானது. அந்த அரசியல் பற்றிய ஒரு பதிவு Dispassionated DJவில்...

இலக்கிய அரசியல் பேச ஆரம்பித்தால், அதில் பீடங்களில் எழுந்தருளும் ஆளுமைகளைக் கண்டு கொள்ளாமல் போக முடியாது. சமீப காலங்களில் தமிழகத்தில், இலக்கிய பீடமொன்று அமைக்கப்பட்டு வருகிறது - அதில் ஏற்றி வைக்கப்படாத பாடு படுகிறார்கள் - சுரா என்ற மனிதரை. இது குறித்த நகைச்சுவை கலந்த பதிவு ஒன்றைப் படியுங்கள், சுகுணா திவாகர் எழுதிய இந்தப் பதிவில்... எப்பொழுதுமே, ஒரு மனிதனை, அவனது தகுதிக்கும் மீறிய ஒரு புனித பிம்பமாக அறிவிக்கப்படாத கடவுளாக மாற்ற முனையும் பொழுது தான், அந்த ஆளுமையின் மறுபக்கம் குறித்தும் செய்திகள் வருகின்றன. அந்த எழுத்தாளர்களை அப்படியே விட்டுவிட்டால் கூட, அவர்கள் தங்கள் சொந்த எழுத்துகளின் பலத்தால், ஒரு காலத்தில் நிஜமாகவே எழுந்து நின்று விடக் கூடும் தான். ஆனால், பாவம், இவர்கள் முட்டுக் கொடுத்துத் தூக்கி நிறுத்த முனையும் பொழுது தான், முட்டுக் கம்பை எவராவது பறித்து விடுகின்றனர். பின் என்ன, வெறுமனே ஒரு வடிவத்தைத் தாங்கி நின்று செயலிழந்து கிடப்பதை விட, ஒரு ஆடு மேய்ப்பவனுக்கு தனது ஆடுகளிடையே ஒர் கட்டுப்பாட்டை உருவாக்கப் பயன்படுமென்றால், அதல்லவா, முக்கியமான பயன்பாடு அந்த முட்டுக் கம்பிற்கு!

இலக்கியச் சண்டைகள், சில சமயம் இலக்கிய வட்டத்தையும் தாண்டிப் போய்விடும். வேறு எல்லைகளுக்குள்ளும் நுழைந்து, விமர்சகர், விமர்சிக்கப்பட்டவர் என்ற இருவரையும் பற்றிய பல பரிமாணங்களையும் எடுத்து வைக்கும். அதுவே, போதுமானதாக இருக்கும் - அந்த இருவரைப் பற்றியும் அறியவும். மிக கவனமாக, ஒரு ஆளுமையைத் தனக்காகக் கட்டிக் காத்து வருகையிலே, தன்னையுமறியாமல எங்காவது ஓரிடத்தில், தன் அடையாளத்தை வெளிப்படுத்தி விடக்கூடும் இந்த சச்சரவுகள். பின் தான் கட்டியெழுப்பிய கடந்த கால பிம்பங்களைத் தூக்கிக் காட்டி என்னையா இப்படி சொல்கிறீர்கள் என்பது தொட்டு, தான் விமர்சித்தவர், எப்படிப்பட்டவர் பார் - அவர் செயல்பாடுகள் எத்தனை தவறானவை என்பது வரை பேச ஆரம்பித்து விடுவோம். ஆனால், விமர்சனத்திற்குட்படுத்தப்பட்ட ஒரு செயலை மறந்து விட்டு, அந்த செயலின் உரிமையாளரின் பிற செயல்களின் நியாய அநியாயங்கள் முன்னுக்கு வந்து விடும். என்றாலும், பெரும்பாலானவர்கள் ஒரு நிலை எடுக்க, அதற்கு முற்றிலும் மாறான ஒரு நிலை எடுத்து, அங்கிருந்து தன் நியாய வாதங்களை பதட்டமின்றி, அடுத்தவர் மீதான குற்றச்சாட்டாக இல்லாமல், ஒரு சிறந்த விளக்கமாக முன் வைக்கும் இந்த சற்று காலம் முன்னே நடந்தேறிய கலைஞர் - ஞாநி சண்டை பற்றிய இந்தப் பதிவைப் படியுங்கள். செல்வநாயகியின் இலக்கிய வாதிகள் குறித்த அரசியல் என்ற வகையில் தான் இந்த சுட்டி. செல்வநாயகியின் இந்தச் சுட்டி சிறப்பான எழுத்துகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஒன்றே ஒன்றை மட்டும் சுட்டவில்லை. ஞாநி - கலைஞருக்கு மட்டுமே அறிவுரை கூறினார். அவர் தன் அறிவுரையை இன்னும் ஓர் பரந்த தளத்தில் வாஜ்பேய், அத்வானி, பால் தாக்கரே, தொடரும் மரபான வயது கடந்த இந்திய முதல் குடிமகன்கள், என்று இந்தியாவில் அதிகார மேடையேறும் ஆசையுடன் கூடிய அனைத்து அரசியல்வாதிகளுக்கும் பொதுவான ஒரு அறிவுரையாக அவர் பேசி இருக்க வேண்டும். ஆனால், கலைஞர் ஒருவர் மட்டுமே வயது கடந்த பின்னும் அதிகாரத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார் என்று ஞாநி எண்ணியதில் தான் அனைவரும் அவரது சட்டைக்குள் நெளியும் பூணூலைக் கண்டு கொண்டார்கள் என்றே சொல்ல வேண்டும். வெறுமனே சுஜாதாவைச் சாடியதால், அவர் சமயச் சார்பற்றவர் என்பதெல்லாம் கொஞ்சம் அதிகப்படியான நேசம் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், இப்படி எழுதினார், அப்படி எழுதினார் என்பதில் வாழ்க்கை இல்லை. வாழ்வதில் தான் வாழ்க்கை இருக்கிறது. வாழும் பொழுது பேசும் பேச்சுக்கும், பிறரைப் பிரமிக்க வைக்க - தனது புலமையை பிறருக்குக் காட்சிப்படுத்த, எழுத்து தரும் போதை என்று ஒருவர் எழுதுவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கும். பெரும் இலக்கியகர்த்தாக்களில் பலர் தங்கள் எழுத்துகளை எங்கோ ஒரு தளத்தில் வைத்து விட்டு, அதற்கு முற்றிலும் மாறான வாழ்க்கையில் இயங்கத் தான் செய்கின்றனர். ஒருவர் பிரமாதமாக எழுதி விட்டதினாலே, அவர் அப்படியாக்கும் என்று முடிவு கட்டி விட வேண்டியதில்லை.

இந்த இலக்கிய சச்சரவுகள் எல்லாம் ஒரு சிறுதுளியாக ஒரு அறிமுகம் மாத்திரமே - ஒரு மனிதனை விளங்கிக்கொள்வது அவனது இலக்கியத்தில் பாதியைப் புரிந்து கொள்வதாகும். அடுத்த முறை, ஒரு புத்தகம் வாங்கும் பொழுது, அதன் ஆசிரியனையும் கொஞ்சம் தெரிந்து கொண்டு வாங்குங்கள். அவனைப் பற்றித் தெரிந்து கொள்ள, கொஞ்சம் கவனமாகப் பாருங்கள் - நிறைய இலக்கிய சண்டைகள் நடக்கின்றன. தெரியவரும்.

தயவு செய்து முதுகு சொறியும் அறிமுகங்களை விட்டு விலகி நின்று கவனியுங்கள்.

No comments:

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்