"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Monday, January 21, 2008

பெண்மொழி - பெண் வலைப்பதிவர்களின் பார்வையில....


பெண்மொழி - பெண் வலைப்பதிவர்களின் பார்வையில்....


கடந்து மறைந்து போன முற்காலங்களை விட, இன்றைய நாட்களில் பெண்ணியம் அதிகம் பேசப்படுவதாக உணர்கிறேன். அல்லது, முன் சென்ற காலங்களில், எவற்றிலும் ஈடுபடுத்திக் கொள்ளாத தனிமையில் வாழ்ந்து கொண்டிருந்ததால், பெண்ணியம் என்ற தனித்த வடிவம் குறித்து கவனம் கொள்ளாதிருந்திருக்கலாம். எப்பொழுதுமே, ஆண், பெண் என்ற தனிப்பிரிவாக எந்த ஒரு படைப்பையும் அணுகாமல், ஒட்டுமொத்தமாக நல்லதா, கெட்டதா என்ற வகைப்படுத்தலின் உள்ளே அனைவரையும் அடக்க முயற்சித்ததனால் இருக்கலாம். எப்பொழுதுமே, எல்லா தளங்களிலுமே, சிலர் மற்றவர்களை விட கூடுதலான சமன்பாட்டைக் கேட்கின்றனர். பெண்களின் கோரிக்கைகளும் இப்பொழுது அவ்வாறு தான் எனக்குத் தோன்றுகிறது. சமம் என்ற வார்த்தை தரும் பொருளை விட அதிகமாகவே கோருகிறார்கள் என நினைக்கிறேன். இன்னமும், ஒன்றின் சரி, தவறுகளை மட்டுமே நான் கணக்கிடுகிறேன் – செயலின் கர்த்தா ஆணா, பெண்ணா என பார்ப்பதில்லை. பெண்ணியம் கோருவதை முழுவதுமாக ஆதரிக்கவோ, எதிர்க்கவோ செய்யாமல், ஒரு வினையின் தாக்கத்தைப் பற்றி மட்டுமே எனது கருத்துகளை உருவாக்கிக் கொள்கிறேன். Rather, I see the value of an action and its implication, not the actors enacting the act.

லீனா மணிமேகலையின் ‘ஒற்றையிலையென’ என்ற கவிதைப் புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய சுகுமாரன், இவ்வாறு குறிப்பிடுகிறார்.

‘பத்தாண்டுகளுக்கு முன் எழுதி வெளியான கட்டுரையொன்றில் (பெண் கவிதை மொழி – கணையாழி, ஏப்ரல் 1994) புதிய தமிழ்க்கவிதையில் பெண்ணின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்ததாகவோ தீவிரமானதாகவோ இல்லை என்ற தொனியில் எழுதியிருந்தேன். பெண் அனுபவங்களில் அர்த்தம் கொண்டதும் அவளது உணர்வுகளில் ஒலி பெற்றதுமான ஒரு கவிதைமொழி உருவாகவில்லை என்ற புகாரையும், உருவாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் கட்டுரை வெளிப்படுத்தியது. அந்தக் கருத்தை முன்னிறுத்திய தருணத்தில் ‘பெண்ணெழுத்து’ என்ற கருத்துருவம் தமிழில் வலுப் பெற்றிருக்கவில்லை. வெளியாகியிருந்த ஓரிரு பெண் கவிஞர்களின் தொகுப்புகளும் ஒற்றையான உதாரணங்களாக இருந்தனவே தவிர பொதுக் கருத்தாடலுக்கான விரிவு கொண்டிருக்கவில்லை. இந்த நிலைமை முற்றிலும் மாறியுள்ளதை இன்று மகிழ்ச்சியோடு உணர முடிகிறது. தமிழ்க் கவிதையில் இப்ப்போது கேட்கும் அசலானதும் தீவிரமானதுமான குரல்களில் சில பெண்களுடையவை. அவற்றுள் பொருட்படுத்தக் கூடிய ஒன்றாக லீனா மணிமேகலையின் கவிக்குரலையும் காண்கிறேன். படைப்பெழுத்தில் பால் வேற்றுமைக்கு இடமில்லை என்று விசாலமான அர்த்தத்தில் நம்புகிறேன். எனினும் காலமும் சூழலும் பெண்ணெழுத்து என்ற பிரிவினையை யதார்த்தமாக்கியிருக்கிறது. ஆணாதிக்க சிந்தனையே கலாச்சார மதிப்பீடுகளை நிர்ணயிக்கும் அமைப்பில் இந்தப் பாகுபாடு இயல்பானதும் கூட.’

இரண்டு முக்கியமான செய்திகளை இங்கு காணலாம். ஆணாதிக்க சிந்தனைகள் கட்டியெழுப்பும் கலாச்சார மதிப்பீடுகளுக்கு மாற்றான பெண்சிந்தனைகள் எழுந்து கொண்டிருக்கின்றன பெண்களிடமிருந்தே என்பதுவும், அத்தகைய சிந்தனைகளை முன் வைக்கும் ‘பெண் கவிதை மொழி’ அதற்கான அத்தியாவசிய தேவையினால் உருவாகி இருக்கிறதும் என்பது தான். பத்திரிக்கை ஊடகங்களில், இத்தகைய மாற்றங்களைத் தேடி அலையும் ‘பெண் கவிதை மொழியையும்’, ‘சிந்தனையையும்’ தேடாமல், வலைப்பதிவில் மட்டுமே இயங்கும் நமது சகபெண்வலைப்பதிவர்களின் ‘பெண் கவிதை மொழியையும், சிந்தனைகளையையும்’ பார்க்கலாமா?

நிவேதாவின் ரேகுப்தி வலைத் தளத்தில், புகையெனப் படரும் பிணங்களின் வாசம் என்ற இந்த கவிதையை வாசித்து விடுங்கள். பின்னர் கீழே படியுங்கள்.




‘அடக்கியொடுக்கப்பட்டு மரித்துப் போன (பெண்ணின்) தாபங்கள் பிறக்கலாம் மழலையென’ இது தான் பெண்மொழியாக இருக்கின்றது. பெண் தன் தாபங்களை மூன்றாமவர் அறியும் படியாக பேசக் கூடாது என்ற ஆண்சிந்தனை தான் இதுநாள் வரையிலும் பெண்களுக்கான மொழியையும் படைத்து வந்தது. ஆனால், இன்றைய பெண்கள் தங்களின் உணர்வுகளைப் படைப்பதற்கு ஆண்கள் தேவையை நிராகரித்து விட்டு, தங்களின் மொழியைத் தாங்களே பேசத் தொடங்கிவிட்டனர். ‘மூன்றாமவர் என்ன, அனைவரும் அறிந்து கொள்ளுங்கள் எங்களுக்குள்ளும் தாபங்களிருக்கின்றன. காமம் இருக்கின்றன. அவற்றை நெரித்து பிணமாக எங்கள் கருவறைக்குள் தள்ளினீர்களென்றால், அந்தப் பிணங்களே மழலையாக பிறக்கும்’ தங்கள் உணர்வுகளை ஒதுக்கித் தள்ளும் ஆண்கள் பிணங்களைப் பிறப்பிப்பவர்களாக மாறிவிடுகின்றனர் என்பது எத்தனை வலிமையான சாடல்!

சமூக கட்டமைப்புகளைத் தோற்றுவிக்கும் ஆணாதிக்கத்திற்கு எதிராக எழும் பெண்மொழி, ஆணின் வன்மத்தை மறுக்க, தன்னை முன்னிலையில் வைத்து அடையாளப்படுத்துவதற்கு தனது பெண் பாலியியல் அடையாள உறுப்புகளை முன்வைத்து பேசுகையில், ஆணின் வன்மத்தை மறுப்பதற்கு மற்றொரு தளத்திலும் ஒரு மொழி கிளம்பியெழுகிறது. விளிம்பு நிலை மனித குரலாய் ஒலிக்கும் அந்த பெண் மொழியின் கவிதை அடையாளப்படுத்தும் உறுப்பு இருபாலாருக்கும் பொதுவானது என்றாலும், அதன் மீதும் ஆண் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் வக்கிரத்தைச் சாடும் லிவிங் ஸ்மைல் வித்யாவின் - மகளிர் தின சிறப்பு கவிதை என்ற இந்தக் கவிதையைப் படித்து விடுங்கள்.



இவ்வுலக வாழ்க்கையின் தங்கள் மீதுள்ள விசுவாசத்திற்கு பரிசாக மதங்களால் நிர்மாணம் செய்யப்பட்ட மறு உலக சொர்க்கம் கூட ஒரு துர்சொப்பனமாக மாறிவிடுகிறது – மதங்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொண்டு, அதை தங்கள் விருப்பம் போல வளைத்து ஒரு சாரரை அடக்கியொடுக்கும் விதிகள் புகுத்தி பீடத்தில் ஏறி அமர்ந்து கொள்ளும் வர்க்கத்தினால்…

பெண்மொழிகளின் தன்மைகளை உள்ளடக்கிய பெண்ணை அடையாளப்படுத்தி பெரும்பாலும் பரபரப்பூட்டும் தலைப்புகளுடன் எழுதும் மற்றொரு எழுத்து மொழி. தமிழச்சியினுடையது கடைசியாக எழுதிய பத்து பதிவுகள் மட்டுமே இருக்கின்றன. சேமித்து வைக்கப்படும் archieves இல்லாததினால், எதுவும் சுட்டிக்காட்டி எழுத இயலவில்லை. ஆனால், தமிழச்சியின் எழுத்துகள் சுயத்தை அடையாளப்படுத்துவதை விட, சமூக கோபத்தை ஆங்காரத்துடன் இடித்துக் காட்டும் வகையிலே தான் அமைந்திருக்கின்றன. என்றாலும் பெண் மொழியைக் கையாளுகிறார் – அதுவும் பெண்ணின் பிரத்யேக சிந்தனைகளை அல்லது உணர்வுகளை வைக்கவில்லையென்றாலும், சமூக கோபம் அல்லது அதன் போலித் தனங்களை அடையாளப்படுத்தும் ஒரு எழுத்தாக அமைவதால் மட்டுமே அதை இங்கே சுட்டிக் காட்டி இருக்கின்றேன்.

ஆனால், ஆண்களை சாடுவது எப்பொழுதும், எல்லாவிடத்திலும் ஏற்றுக்கொள்ள முடிகிறதா? இல்லையென்றே சொல்வேன். தன்னை அடையாளாப்படுத்தும் பொழுது, அதற்கு எதிர்ப்பதமான ஆண்களைத் திட்டித் தீர்த்தே ஆக வேண்டும் என்ற அவசியம் தேவையற்றது. ஆனால் அவ்வாறு நிகழ்ந்து கொண்டும் இருக்கத் தான் செய்கின்றது. தாங்கள் பேச விரும்பும் ஒரு மொழியை ஒரு ஆணும் பேசினால், அதற்காக கோபம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை தானே? அவ்வாறு கோபம் கொண்டால், வெற்று ஜம்பத்திற்காக பெண்ணியம் பேசுவது ஆகிவிடாதா?

ஆண் என்ற பொதுவை விட, ஒரு ஆண்கவிஞரின் பெயர் குறிப்பிட்டு வக்கிரம் என எழுதப்பட்ட ஒரு சாடலை கீழே உள்ள ஒரு கட்டுரையில் படிக்க நேர்ந்தது. தான்யா எழுதியது. அது, பெண்மொழி மற்றும் சிந்தனையை முன்வைத்து அலசப்பட்ட ஒரு அருமையான கட்டுரை. பல பெண் கவிஞர்களின் கவிதைகளைக் குறிப்பிட்டு எழுதப்பட்ட ஒரு ஆவேசப்பாய்ச்சலை உள்ளடக்கிய இந்தக் கட்டுரையை வாசித்த பொழுது, இவர் மகுடேஸ்வரனைக் குறிப்பிட்டு எழுதியவை சரிதானா என கேள்விகள் எழுகின்றன. தான்யா குறிப்பிடும் அந்த மகுடேஸ்வரனின் கவிதை - 'இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்' நு¡லை முன் வைத்து...
"

அவலட்சணமான
அந்த அறிவுஜீவிப் பெண்ணைப்
புணர்ந்தேன்.
தணிந்தது
அறிவைப் புணரும் வேட்கை

(மகுடேஸ்வரன, யாரோ ஒருத்தியின் நடனம்)

ஒரு ஆண் கவிஞரின் தொகுப்பில், இப்படி ஒரு கவிதை வெளிவந்திருந்தது. இப்படியான வன்முறையான வக்கிரமான ஆணாதிக்க சிந்தனையுள்ள இந்தக் கவிதைகளை எதிர்க்காத இந்தப் படைப்பாளிகள், பெண்கள் தங்கள் உறுப்புக்களைப் பற்றி தாங்களே எழுதும் போது வந்து விடுகிறார்கள். " இது அந்தக் கட்டுரையில் எழுதப்பட்ட விமர்சனம்.


பெண்கள் தங்கள் மனதில் நிகழும் காமத்தை, தங்கள் உறுப்புகளின் மேலேற்றிக் கூறுவதை ஒரு உரிமையாக வைக்கும் பொழுது, ஒரு ஆண், தன் மனதில் நிகழும் கிளர்ச்சியூட்டும் ஒரு உணர்வை கவிதையாக வெளிப்படுத்தியது வக்கிரமா? நிச்சயமாக இல்லை. ‘Intellectual Compatibility ’ is the highesr order of ‘turn on’ for anyone, irrespective of the gender. அறிவுஜீவித்தனம் மற்றெந்த அக, புறப்பண்புகளையும் விட, காமத்தை அதிக கிளர்ச்சியூட்டி உத்வேகம் கொள்ளச் செய்யும். அதைத் தான் மகுடேஸ்வரன் தன் கவிதையில் குறிப்பிட்டிருக்கிறார். அவர் அந்தக் கவிதையை ‘தன்மை’ மொழியில் எழுதி விட்டதனால், அது ஆணின் மொழியாக ஆண் மனநிலை வெளிப்பாடாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. பெண் கவிஞர் ஒருவர் இதையே

அவலட்சணமான
அந்த அறிவுஜீவி ஆணைப்
புணர்ந்தேன்.
தணிந்தது
அறிவைப் புணரும் வேட்கை

என்று எழுதி இருந்தால், அதை ஒரு மகா பெரிய கொண்டாட்டமாக ஆக்கி இருக்க மாட்டார்களா, என்ன? ஆனால், ஒரு ஆண் எழுதி விட்டதால் இது வக்கிரமாகிவிட்டதா, என்ன? இன்னும் சொல்லப் போனால், இது ஆணின் மொழி கூட அல்ல. இந்த கவிதை பெண்களுக்கும் கூடப் பொருந்தும்.

நான் குறிப்பிட்டேன், சமம் என்பது அது தரும் பொருளைவிட, அதிக சமம் என்ற அர்த்தத்திலே தான் எல்லோராலும் கையாளப்படுகிறது. பெண்கள் கூட இப்பொழுது, தன் பெண்மொழியின் வாயிலாக, அந்த அதிக சமன்பாட்டைக் கோருகிறார்களோ என்று? இது சரியா, தவறா என மேலும் விவாதிப்பதை விட, மகிழ்வூட்டுவது என்னவென்றால், ஒதுங்கிப் போகாமல், ஆண்களின் எழுத்துகளையும் எடுத்து விவாதிக்கும் சிந்தனை வலுவைப் பெற்றுவிட்டார்கள் பெண்கள் என்பது தான்.

சரி, இறுதியாக பெண்களைப் பற்றி, நான் எழுதிய நிறையவற்றில் ஒன்றை இங்கே வாசியுங்கள். பின் அதுபற்றி, நீங்கள் தான் கருத்து சொல்ல வேண்டும். சுட்டி 'கனியின் பழங்கதை...'

1 comment:

rahini said...

(ஒதுங்கிப் போகாமல், ஆண்களின் எழுத்துகளையும் எடுத்து விவாதிக்கும் சிந்தனை வலுவைப் பெற்றுவிட்டார்கள் பெண்கள் என்பது தான்.)

unmaithaan nalla padaipukkal

rahini

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்